
Post No. 11,135
Date uploaded in London – – 25 JULY 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com
பெண் விஞ்ஞானி எல்லன் ஸ்வாலோ ரிச்சர்ட்ஸ்
ச.நாகராஜன்
அறிவியல் துறையில் பெண்கள் அரும்பாடு பட்டுத் தான் முன்னேறினர்.
மஹாகவி பாரதியார் பெண் விடுதலை கேட்டு இந்தியாவில் முழக்கமிட்ட அதே வேளையில், அதே காலத்தில் அமெரிக்காவிலும் பெண்கள் படிக்கத் தடை தான் இருந்தது.
இந்தத் தடையை உடைக்க முனைந்தவர் எல்லன் ஸ்வாலோ ரிச்சர்ட்ஸ் (Ellen Swallow Richards – தோற்றம்3-12-1842 – மறைவு 30-3-1911).
அறிவியலை அனைத்துத் துறைகளுக்கும் கொண்டு செல்லலாம் என்றும் பெண்கள் இதில் இணைய வேண்டும் என்றும் வாழ்நாள் முழுவதும் அவர் பாடுபட்டார்.
அமெரிக்காவில் மசாசூசெட்ஸில் டன்ஸ்டேபிள் (Dunstable, Massachusetts) என்ற இடத்தில் பிறந்த எல்லனுக்கு கல்வியின் மீது அளவற்ற ஆர்வம் இருந்தது. எதையும் கற்க வேண்டும் என்ற துடிப்பால் அவர்
மசாசூசெட்ஸில் எம் ஐ டியில் (MIT) சேர விண்ணப்பித்தார். மசாசூசெட்ஸ் பல்கலைக் கழகத்தில் 1870இல் முதன் முதலாக அனுமதிக்கப்பட்ட பெண்மணி என்ற பெருமையையும் பெற்றார்.
ஆனால் பெண்களை பல்கலைக் கழகத்தில் நுழைய விடத் தயக்கம் காட்டிய பல்கலைக் கழக நிர்வாகம், அவரது பல்கலைக் கழக கட்டணத்தை ஒரு இன்ஷூரன்ஸ் பாலிஸியாக எடுத்துக் கொண்டது.
யாராவது ஒருவர் ஒரு பெண் எப்படி இங்கு படிக்கலாம் என்று கேட்டால் அது முறையான் அட்மிஷன் இல்லை என்று தப்பித்துக் கொள்ளவே இந்த முறையை நிர்வாகம் கடைப்பிடித்தது.
தனது நகரத்தில் விநியோகிக்கப்படும் தண்ணீர் மிகவும் அசுத்தமாக இருப்பதைக் கண்டு வேதனைப் பட்டார் எல்லன்.
அறிவியல் மூலம் இந்த நிலையைப் போக்க முடியும் என்ற உத்வேகத்தால் தனக்கு என ஒரு சிறு சோதனைச் சாலையை அமைத்துக் கொண்டார்.
சுமார் 20000 நீர் மாதிரிகளை அவர் சோதனை செய்து பார்த்தார்.
நீரை எப்படி சுத்தம் செய்வது என்பதை ஆராய்ந்து கண்டு பிடித்தார்.
அவரது பெரு முயற்சியின் காரணமாக மக்கள் சுத்தமான நீரைப் பெற முடிந்தது.
அத்துடன் அவர் நிற்கவில்லை, பெண்களின் படிப்புரிமைக்காகப் பாடுபட ஆரம்பித்தார்.
தபால் மூலம் பெண்கள் கல்வி கற்கலாம் என்ற ஒரு புது வழிமுறையைத் தோற்றுவித்தார்.
அதிகம் வீட்டு வேலை பார்த்துக் கொண்டே படிப்பதால் ஆரோக்கியம் சீர் கெடுவதாக பெண்களிடம் ஒரு பிரச்சினை எழுந்தது. உடனே பெண்களின் ஆரோக்கிய மேம்பாட்டிற்கான வழிமுறைகளை அவர் ஆராயலானார்.
அவரது பெருமுயற்சியின் காரணமாக ஏற்பட்ட விழிப்புணர்ச்சியைத் தொடர்ந்து முதன் முதலாக பெண்கள் பல்கலைக்கழகத்தில் அனுமதிக்கப்படலாயினர்.
பள்ளிக் குழந்தைகளுக்கு சத்துணவு கொடுக்க வேண்டும் என்று முதலில் முழங்கியவர் அவர்.
ஆனால் 1890இல் அவர் ஆரம்பித்த இந்த முயற்சி 116 ஆண்டுகளுக்குப் பின்னர் ஒபாமாவின் மனைவி மிசெல் ஒபாமாவின் மூலம் வெற்றி அடைந்தது. அவர் ஆரோக்கியமான பள்ளிக்குழந்தை உணவை அறிமுகப்படுத்தினார்.
எல்லன் பல்வேறு துறைகளில் தன் முத்திரையைப் பதித்தார்.
ஹோம் எகனாமிக்ஸ் மூவ்மெண்ட் எனப்படும் ‘இல்ல பொருளாதார இயக்கத்தை’ நிறுவியவரும் அவரே. துப்புரவுத் துறையில் (Sanitary) மகத்தான சாதனையை அவர் படைத்தார்.
தனது கணவரின் துணையோடு வருடத்திற்கு ஆயிரம் டாலரை மசாசூசெட்ஸ் பல்கலைக் கழகத்திற்கு, பெண்கள் பரிசோதனைச்சாலைக்காக அவர் வழங்கி வந்தார்.
1911 மார்ச் 30ஆம் நாள் இதயவலியால் மூச்சு முட்டல் (angina) ஏற்பட்டு அவர் மறைந்தார்.
பெண் கல்வி, துப்புரவு, குழந்தைகளுக்கான சத்துணவுத் திட்டம் என இப்படிப் பல துறைகளிலும் முன்னோடியாக நின்ற அவரை உலகம் மறக்காது.
***
புத்தக அறிமுகம் – 8
தமிழ் என்னும் விந்தையில்
(வி) சித்திர கவி விளக்கம்
பாகம் – 2
பொருளடக்கம்
6. முதல் எழுத்து அலங்காரம் – 1
7. முதல் எழுத்து அலங்காரம் – 2
21. ஒரு வெண்பாவில் மூன்று வெண்பாக்கள் – திரிபங்கி!
22. ஒரு பாடலில் ஏழு பாடல்கள் – சப்தபங்கி!
23. ஒரு பாடலில் ஒன்பது பாடல்கள் – நவ பங்கி!
24. தமிழில் உள்ள யமகப் பாடல்கள்!
25. திருச்செந்தில் நிரோட்டக யமக அந்தாதி!
புத்தகத்தில் என்னுரையாக நான் தந்திருப்பது இது:
என்னுரை
தமிழ் என்னும் விந்தையில் (வி)சித்திர கவி விளக்கம் என்ற தலைப்பில் 27 அத்தியாயங்கள் அடங்கிய எனது நூல் 2022 ஜனவரியில் வெளியிடப்பட்டது.
நூலுக்கு முனைவர் எம்.எஸ். ஸ்ரீலக்ஷ்மி, மேனாள் விரிவுரையாளர் (பணிநிறைவு), சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகம் அணிந்துரை தந்து என்னைக் கௌரவித்தார்.
அதில் சதுரங்க பந்தம், சருப்பதோ பத்திரம், கூட சதுர்த்தம், கோ மூத்திரி, மாலை மாற்று, சுழிகுளம், திரிபங்கி ஆகிய தமிழ் கவிதா விசித்திரங்கள் விளக்கப்பட்டிருந்தன.
அதைத் தொடர்ந்து இரண்டாம் பாகமாக இந்த நூல் மலர்கிறது.
இதில் வல்லின எழுத்துப் பாட்டு, மெல்லின எழுத்துப் பாட்டு, இடையின எழுத்துப் பாட்டு உள்ளிட்ட பல தமிழ் கவிதா விந்தைகள் விளக்கப்பட்டுள்ளன.
இந்தக் கட்டுரைகள் அனைத்தும் www.tamilandvedas.com இல் தொடர்ந்து வெளியிடப்பட்டன. இதை வெளியிட்ட லண்டன் திரு ச. சுவாமிநாதன் அவர்களுக்கும் எனது நன்றி.
இந்த நூலை டிஜிடல் வடிவமாக வெளியிட முன் வந்த PUSTAKA DIGITAL MEDIAவின் உரிமையாளர் திரு ராஜேஷ் தேவராஜ்அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இதைப் படித்து என்னை ஊக்குவித்த அனைத்துத் தமிழ் அன்பர்களுக்கும் எனது நன்றி.
புத்தகமாக வெளியிட வேண்டுமென்று கேட்டுக் கொண்டவர்களின் விருப்பம் இதை வெளியிடுவதன் மூலம் நிறைவேறியுள்ளது.
தமிழ், அளக்கமுடியா ஒரு மாபெரும் கடல். அதில் உள்ள விந்தைகள் ஏராளம். அவற்றில் இன்னும் பலவற்றை அடுத்த பாகத்தில் காணலாம்.
நன்றி.
சான்பிரான்ஸிஸ்கோ
18-7-2022
ச.நாகராஜன்
*
நூலாக வெளியிடவேண்டுமென்று விரும்பிய அன்பர்களின் விருப்பம் இப்போது நிறைவேறி விட்டது.
இதை 1) படிப்பதற்காகவும் 2) மின் நூலாகப் பெறவும் 3) அச்சுப்பதிப்பாகப் பெறவும் என இப்படி மூன்று திட்டங்களை www.pustaka.co.in அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் உரிமையாளர் திரு டாக்டர் ராஜேஷ் தேவதாஸ் P.Hd அவர்கள்.
சந்தா விவரங்களையும் நூல் விலை விவரத்தையும் admin@pustaka.co.in
என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு பெறலாம்
தொடர்புக்கான தொலைபேசி எண் : 9980387852