Post No. 11,164
Date uploaded in London – 4 AUGUST 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
மஹாபாரதத்தில் கிருஷ்ணர் அருளிய பகவத் கீதை பற்றி ஆயிரக்கணக்கான நூல்கள் நூற்றுக் கணக்கான மொழிகளில் வெளியாகியுள்ளன ; இன்னும் வெளியாகி வருகின்றன. ஆனால் பகவத் கீதையின் பெருமையைக் கூறும் ஸ்ரீமத் பகவத் கீதா மஹாத்ம்யம் பற்றி பலருக்கும் தெரியாது. அதில் கீதையின் பெருமையைச் சொல்லும் அருமையான ஸ்லோகங்கள் இருக்கின்றன . சில சுவையான விஷயங்களை மட்டும் காண்போம்.
பகவத் கீதை ஒரு கப்பல்
ஸம்ஸார ஸாகரம் கோரம் தர்த்துமிச்சதி யோ நரஹ
கீதானாவும் ஸமாஸாத்ய பாரம் யா து ஸுகேன ஸஹ
பொருள்
பயங்கரமான சம்சார சாகரத்தை எந்த மனிதன் கடக்க விரும்புகிறானோ அவன் கீதையாகிய கப்பலில் ஏறிச் சுகமாக அக்கரை சேரலாம் .
திருவள்ளுவரும் இதே கருத்தை பத்தாவது குறளில் சொல்கிறார்.-
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடி சேராதார்
வள்ளுவர் பார்த்த கடல் ஏரி போல் உள்ள வங்காள விரிகுடாதான் . ஆகையால் அவர் நீச்சல் பற்றிப் பாடுகிறார்.ஆனால் மஹா பாரதம் எழுதிய வியாசரோ பசிபிக், அட்லாண்டிக் , இந்து மஹா சமுத்திரம் அனைத்தையும் கண்டவர்; அறிந்தவர் ; பூகோள மன்னன்; ஆகையால்தான் கோரம்/ பயங்கரமான என்ற அதை மொழியைப் போட்டு சம்சார சாகரம் என்ற சொல்லைப் பிரயோகிக்கிறார்.
வியாஸருடைய கடல் பற்றிய அறிவை பகவத் கீதை 2-70 லு ம் காண்கிறோம் ,
आपूर्यमाणमचलप्रतिष्ठं समुद्रमापः प्रविशन्ति यद्वत्।
तद्वत्कामा यं प्रविशन्ति सर्वे स शान्तिमाप्नोति न कामकामी॥७०॥
ஆபூர்யமாணமசலப்ரதிஷ்ட²ம் ஸமுத்³ரமாப: ப்ரவிஸ²ந்தி யத்³வத்|
தத்³வத்காமா யம் ப்ரவிஸ²ந்தி ஸர்வே ஸ ஸா²ந்திமாப்நோதி ந காமகாமீ ||2-70||
யத்³வத் = எவ்விதம்
ஆப: ப்ரவிஸ²ந்தி = நீர்த் தொகுதிகள் வந்து விழுகையில்
ஆபூர்யமாணம் அசலப்ரதிஷ்ட²ம் ஸமுத்³ரம் = நிறைந்து இருந்து அசையா நிலைகொண்டிருக்கும் கடல்
தத்³வத் = அதே விதமாக
யம் காமா: ப்ரவிஸ²ந்தி = எவன் விருப்பங்கள் தன்னுள்ளே புகும்போது (கடலைப் போல இருக்கிறானோ)
ஸ ஸா²ந்திம் ஆப்நோதி = அவன் சாந்தியடைகிறான்
காமகாமீ ந = விருப்பங்களை விரும்புவோன் அதனை அடையான்
கடலில் நீர்த் தொகுதிகள் வந்து விழுகையில் அது மேன்மேலும் நிரப்புதற்குரியதாய் அசையா நிலைகொண்டிருப்பது போலே விருப்பங்கள் தன்னுள்ளே புகும்போது இயல்வான் எவனோ அவன் சாந்தியடைகிறான். விருப்பங்களை விரும்புவோன் அதனை அடையான்.
Gita sloka taken from sangatham.com; thanks.
சுவையான விஷயங்கள்
ஆன்மீகத்தைக் கொஞ்சம் ஒதுக்கிவைத்துவிட்டு , வேறு சில அறிவியல் , மொழி இயல் விஷயங்களை அலசுவோம்.
புத்தரும், மகாவீரரும் கடல் கரையைக் காணாத நேபாளம், பீஹார் பகுதியில் சுற்றியவர்கள் அதிகபட்சம் உத்தரப் பிரதேசம் வரை வந்தவர்களே. ஆகையால் கடல் பற்றிப் பேசுவதில்லை மேலும் இந்தப் பிறவி என்பது கடல்போலப் பெருகியது, அதைக் கடப்பது எளிதல்ல என்ற உவமையும் இந்தியாவில் பிறந்த மதங்களில் மட்டுமே காணக்கூடியது.
கீதா மஹாத்ம்யத்தில் வரும் நாவம் என்ற சொல்லில் இருந்து நேவி NAVY போன்ற ஆங்கிலச் சொற்கள் வந்ததையும் உலகம் அறியும். அது மட்டும் அல்ல ; கடலில் எத்தனை நதிகள் கோடிக்கணக்கான டன் நீரைக் கொண்டு கொட்டினாலும் அது நிரம்புவதில்லை என்ற உவமையை வேதத்திலும், சங்க இலக்கியத்தில் பரணர் எழுதிய பாடலிலும் காணலாம்.
அதுமட்டுமல்ல ; இன்றும் பிராமணர்கள் மூன்று வேளை செய்யும் சந்தியா வந்தனத்தில் இந்த உவமையை தினமும் சொல்கின்றனர். ஆகாஸாத் பதிதம் தோயம்…………………………… வானிலிருந்து விழும் மழைத்துளிகள் (நதியாக) கடலை நோக்கிச் செல்லுவது போல என் பிரார்த்தனை அனைத்தும் கேசவனை நோக்கிச் செல்லட்டும் என்று சொல்கிறார்கள்.
.Xxx
கீதா மஹாத்ம்யத்தில் உள்ள இன்னும் ஒரு ஸ்லோகத்தைக் காண்போம்
கீதா கங்கா ச காயத்ரீ கோவிந்தேதி ஹ்ருதி ஸ்திதே
சதுர் ககார ஸம்யுக்தே புனர் ஜன்ம ந வித்யதே
பொருள்
கீதை, கங்கை, காயத்ரீ, கோவிந்தன் என்ற நான்கு க-கார நாமங்கள் இருதயத்தில் நிலை பெற்றுவிட்டால் புனர் ஜென்மம் இல்லை . இந்த ஸ்லோகம் மஹா பாரத த்தில் உள்ளது.
இதிலுள்ள சுவையான விஷயங்களைச் சொல்கிறேன்
மேற்கூறிய நான்கில் ஓன்று நம் வாழ்க்கையில் அமைந்து விட்டாலேயே நமக்கு முக்தி கிட்டும் என்பது இந்துக்களின் நம்பிக்கை .கங்கை நதி பற்றி ரிக் வேதத்திலும் உள்ளது. சங்கத் தமிழ் பாடல்களிலும் உள்ளது. சேரன் செங்குட்டுவன் , தன்னுடைய தாயாரை கங்கையில் குளிப்பதற்கு அழைத்துச் சென்ற செய்தியும், மற்றும் ஒரு முறை இமயத்தில் கல் எடுத்து புனித கங்கையில் நீராட்டி பத்தினித் தெய்வமான கண்ணகிக்குச் சிலை எடுத்த செய்தியும் சிலப்பதிகாரத்தில் உள்ளது. அவர்களுக்குப் பின்னர் வந்த அப்பர் சுவாமிகளும் கங்கையின் பெருமையைப் பாடுகிறார்..
2000 ஆண்டுகளுக்கு முன்னர் உலகிலேயே பெரிய நாடு இந்தியாதான். இப்போதுள்ள ஏழு நாடுகளை உள்ளடக்கியது. அவர்கள் அனைவரும் கங்கையைப் பாடிப் பரவியதிலிருந்து இந்துமதம், எப்படி பிரம்மாண்ட மான தேசத்தைக் கட்டிக்க காத்தது என்பதை அறிகிறோம்.
ஏனைய மூன்று “க” பற்றி , கீதையின், காயத்ரீயின், கோவிந்தனின் பெருமையை நாம் நன்கு அறிவோம் ..
Xxx
கீதை புஸ்தகம் வீட்டில் இருந்தால்
லண்டனில் என்னுடைய வீட்டின் மேஜையின் மீது எப்போதும் பகவத் கீதை, திருக்குறள், பாரதியார் பாடல் புஸ்தகங்கள் இருக்கும். இப்படி இருப்பதால் திடீரென்று எதையோ ஒரு விஷயத்தை ஒப்பிட்டுப் பார்க்க முடிகிறது. நேரம் கிடைக்கையில் ஏதோ ஒரு பக்கத்தைப் புரட்டிப் படித்தாலும் புதிய கருத்து உதயமாகும். உடனே பென்சிலைக் கொண்டு மார்ஜினில் குறிப்பு எழுதுவேன். இதை ஆதரிக்கும் ஸ்லோகம் இதோ —
கீதாயாஹா புஸ்தகம் யத்ர நித்ய- பாடச்ச வர்த்ததே
தத்ர ஸ ர்வாணி தீர்த்தானி ப்ரயாகாதீனி பூதலே
பொருள்
எவ்விடத்தில் கீதை புஸ்தகம் இருக்கிறதோ , எங்கே கீதா பாடம் நிகழ்கிறதோ , அவ்விடத்தில் இவ்வுலகிலுள்ள பிரயாகை முதலிய ஸகல தீர்த்தங்களும் எப்போதும் உறைகின்றன .
ஆகவே எல்லோரும் சித்பவானந்தர் எழுதிய பகவத் கீதை புஸ்தகத்தையோ அல்லது சென்னை மைலாப்பூர் ராமகிருஷ்ண மடத்தின் அறிஞர் அண்ணா அவர்கள் உரை எழுதிய கீதை புஸ்தகத்தையோ மேஜையின் மீது வைத்துக்கொள்ளுங்கள். அட்டை முதல் அட்டை வரை படிக்க முடியாவிட்டாலும் ஏதோ ஒரு பக்கத்தைத் திறந்து படியுங்கள் . பின்னர் நீங்களும் என்னைப் போல பாரதீய வித்யா அவன் நடத்தும் 5 பகவத் கீதை தேர்வுகளிலும் எளிதில் தேர்ச்சி அடையலாம்.
வாழ்க பகவத் கீதை ! வளர்க்க இந்து மதம் !!
Xxx subham xxxx
Tags- கீதை, கப்பல், பிறவி, பெருங்கடல் 4 க-காரம் , புஸ்தகம், பிரயாகை