
Post No. 11,206
Date uploaded in London – 19 AUGUST 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx

புறநானூற்றின் பாடல்கள் 246, 247 பெருங்கோப்பெண்டு உடன்கட்டை ஏறி இறந்ததை வர்ணிப்பது போல மற்ற பாடல்கள் விரிவாகப் பேசுவதில்லை. காரணம். எல்லோருக்கும் தெரிந்த அளவுக்குத் தமிழ் நாட்டில் இது பரவி இருந்ததே .
புறம் பாடல் 256, கணவனுடன் உயிருடன் புதைக்கப்படும் வழக்கத்தையும் காட்டுகிறது; பாடியவர் பெயரோ, பாடப்பட்டவர் பெயரோ இல்லை. கணவனை இழந்த ஒரு பெண் என்னையும் சேர்த்து தாழியில் புதைத்துவிடு என்று பாடுகிறாள்
கலம் செய் கோவே கலம் செய் கோவே
அச்சுடைச் சாகாட்டு ஆரம் பொருந்திய
சிறு வெண் பல்லி போலத் தன்னொடு
சுரம் பல வந்த எமக்கும் அருளி,
வியல் மலர் அகன் பொழில் ஈமத் தாழி
அகலிது ஆக வனைமோ”
நனந்தலை மூதூர்க் கலம் செய் கோவே
இதே போல ஒரு பாடல் புறம் 226-லும் இருப்பதை ஒப்பிட்டால் வளவனின் மனைவிதான் இதைப் பாடினாளோ என்று எண்ண வேண்டியுள்ளது.
XXX
குறைந்தது 7 மன்னர்களின் மனைவியர், கணவன் இறந்தவுடன் நாணத்தால் இறந்த செய்தியை புறப்பாடல் 78 பாடுகிறது . இதைப் பாடியவர் இடைக்குன்றுர் கிழார். இளம் வயதில் அரசுக்கட்டில் ஏறிய பாண்டியன் நெடுஞ்செழியனைத் தோற்கடிக்க வந்த அந்த மன்னர்கள் போரில் இறந்துபட்டனர்.அதன்பின்னர் மனைவியர் இறந்தனர் என்பது சதி முறையில்தான் நிகழ முடியும் .அவர்கள் தற்கொலை செய்துகொண்டனர் என்று கவி பாடவில்லை.
78. தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன்
தலையாலங்கானத்துச் செருவில் பாண்டியன் நெடுஞ்செழியனைப் போரெதிர்ந்த பகைவேந்தர் எழுவர் புறங்கொடுத் தோடுமாறு வென்றதனோடமையாத எங்கள் இறைவனான செழியன் அவர்தம் மகளிர் நாணமுற்று உயிர் விடுமாறு அவர்கட்குத் தொன்றுதொட்டுரிய ஊர்கட்கும் சென்று ஆங்கே அவ் வேந்தர்களைக் கொன்றழித்தான்” என்று பாடிக் காட்டுகின்றார்.
வணங்குதொடைப் பொலிந்த வலிகெழு நோன்றாள்
அணங்கருங் கடுந்திற லென்னை முணங்குநிமிர்ந்
தளைச்செறி யுழுவை யிரைக்குவந் தன்ன
மலைப்பரு மகல மதியார் சிலைத்தெழுந்து
விழுமியம் பெரியம் யாமே நம்மிற் 5
பொருநனு மிளையன் கொண்டியும் பெரிதென
எள்ளி வந்த வம்ப மள்ளர்
புல்லென் கண்ணர் புறத்திற் பெயர
ஈண்டவ ரடுதலு மொல்லா னாண்டவர்
மாணிழை மகளிர் நாணினர் கழியத் 10
தந்தை தம்மூ ராங்கண்
தெண்கிணை கறங்கச்சென் றாண்டட் டனனே. (78)
https://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0494_02.html
XXX
புறநானூறு பாடல் 280- பாடியவர் மாறோக்கத்து நப்பசலையார். கணவனை இழந்த ஒரு பெண் நான் உயிர் வாழ்தல் அரிதினும் அரிது. விதவை வாழ்க்கையை நான் வாழ மாட்டேன் என்கிறார். சிலர் விதவைகளாக வாழ்வதும் விருப்படுவோர் கணவனுடன் இறப்பதையும் இது காட்டுகிறது கெட்ட சகுனங்கள் பற்றியும் இப்பாடல் தெரிவிக்கிறது: விளக்கு அணைதல் , ஆந்தை குரல் கேட்டல், குறி சொல்லும் பெண்கள் நல்லதைச் சொல்லாமை, உறக்கம் வராமல் தவிப்பது ஆகியன கெட்ட நிமித்தங்கள்
என்னை மார்பிற் புண்ணும் வெய்ய
நடுநாள் வந்து தும்பியுந் துவைக்கும்
நெடுநகர் வரைப்பின் விளக்கு நில்லா
துஞ்சாக் கண்ணே துயிலும் வேட்கும்
அஞ்சுவரு குராஅற் குரலுந் தூற்றும்
நென்னீ ரெறிந்து விரிச்சி யோர்க்கும்
செம்முது பெண்டின் சொல்லு நிரம்பா
துடிய பாண பாடுவல் விறலி
என்னா குவிர்கொ லளியிர் நுமக்கும்
இவணுறை வாழ்க்கையோ வரிதே யானும்
மண்ணுறு மழித்தலைத் தெண்ணீர் வாரத்
தொன்றுதா முடுத்த வம்பகைத் தெரியற்
சிறுவெள் ளாம்ப லல்லி யுண்ணும்
கழிகல மகளிர் போல
வழிநினைந் திருத்த லதனினு மரிதே.
XXX
குறுந்தொகையில் ஒரு குரங்கு கூட , கணவன் இறந்ததைப் பொறுக்க மாட்டாது இறந்ததை பாடல் 69 காட்டுகிறது.
குட்டியை வேறு ஒருவர் பொறுப்பில் விட்டுவிட்டு தற்கொலை செய்து கொண்டதைக் காண்கிறோம்
குறுந்தொகை பாடல் 69
கருங்கண் தாக்கலை பெரும்பிறி துற்றெனக்
கைம்மை உய்யாக் காமர் மந்தி
கல்லா வன்பறழ் கிளைமுதற் சேர்த்தி
ஓங்குவரை அடுக்கத்துப் பாய்ந்துயிர் செகுக்கும்
சாரல் நாட நடுநாள் 5
வாரல் வாழியோ வருந்துதும் யாமே.
– கடுந்தோட் கரவீரனார்
கரிய கண்ணையும் தாவுதலையும் உடைய ஆண்குரங்கு இறந்தவுடன், கைம்மைத் துன்பத்தை விரும்பாத பெண்குரங்கானது மரமேறுதல் முதலிய தம் தொழிலைக் கல்லாத வலிய குட்டியை, சுற்றத்தினிடத்து கையடையாக ஒப்படைத்துவிட்டு, ஓங்கிய மலைப் பக்கத்தில் தாவி உயிரை மாய்த்துக் கொள்ளும் சாரலையுடைய நாட்டுக்குத் தலைவனே! நள்ளிரவில் வரவேண்டாம் ; அங்ஙனம் நீவரின் நினக்குத் தீங்குண்டா மென்றெண்ணி நாம் வருந்துவோம் நீ தீங்கின்றி வாழ்வாயாக!
XXX
சிலப்பதிகாரம், மணிமேகலையில் ‘சதி’
இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனும் சோழ மன்னனும் போட்ட சண்டையில் இருவரும் உயிர்துறந்தனர். உடனே அவர்களுடைய மனைவியர் தீயில் பாய்ந்து இறந்தனர் என்பதை பழைய சிலப்பதிகார உரைகளில் காண்கிறோம்.அப்படிப்பட்ட தருணங்களில் மஹா சதிக் கல் நிறுவுவார்கள். இதைப் பேச்சு வழக்கில் மாஸ்திக்கல் என்பர். தொல்காப்பியம் இதிலுள்ள ஆறு கட்டங்களை விரிவாகப் பேசுகிறது சேரன் செங்குட்டுவன் முதல் தடவை இமய மலைக்குச் சென்று நடு கல் கொண்டுவந்தான்.. இரண்டாம் முறை கண்ணகிக்கு நடு கல் கொண்டுவந்தான் .
மணிமேகலையில் ஆதிரை ‘சதி‘
மணிமேகலை என்னும் காப்பியத்தில் கப்பல் விபத்தில் “கணவன் சாதுவன் இறந்ததை” அறிந்தவுடன் ஆதிரை என்பவள் தீப்பாய்ந்து இறக்க முயற்சிப்பதைக் காணலாம். அத்தகைய பெண் எப்படி அதற்குத் தயார் செய்கிறாள் என்பதும் விரிவாகவே உள்ளது .
ஆனால் ஆதிரையின் கணவன் உண்மையில் இறக்காததால் ஆதிரை உடலை அக்கினி எரிக்கவில்லை . பின்னர் இருவரும் சேர்ந்து வாழ்ந்தனர் என்று கதை தொடர்ந்தாலும், புத்தமத நூல்களும் இதை ஆதரித்தன என்பதை உணரலாம். இதோ ஆதிரை பற்றிய பகுதி :-
இடை இருள் யாமத்து எறி திரைப் பெருங் கடல்
உடை கலப் பட்டு ஆங்கு ஒழிந்தோர் தம்முடன் 16-020
சாதுவன் தானும் சாவுற்றான்” என
ஆதிரை நல்லாள் ஆங்கு அது தான் கேட்டு
“ஊரீரேயோ! ஒள் அழல் ஈமம்
தாரீரோ?” எனச் சாற்றினள் கழறி
சுடலைக் கானில் தொடு குழிப்படுத்து
முடலை விறகின் முளி எரி பொத்தி
“மிக்க என் கணவன் வினைப் பயன் உய்ப்பப்
புக்குழிப் புகுவேன்” என்று அவள் புகுதலும்
படுத்து உடன் வைத்த பாயல் பள்ளியும்
உடுத்த கூறையும் ஒள் எரி உறா அது 16-030
ஆடிய சாந்தமும் அசைந்த கூந்தலில்
சூடிய மாலையும் தொல் நிறம் வழாது
விரை மலர்த் தாமரை ஒரு தனி இருந்த
திருவின் செய்யோள் போன்று இனிது இருப்பத்
“தீயும் கொல்லாத் தீவினையாட்டியேன்
யாது செய்கேன்?” என்று அவள் ஏங்கலும்
“ஆதிரை! கேள் உன் அரும் பெறல் கணவனை
ஊர் திரை கொண்டு ஆங்கு உய்ப்பப் போகி
நக்க சாரணர் நாகர் வாழ் மலைப்
பக்கம் சேர்ந்தனன் பல் யாண்டு இராஅன் 16-040
சந்திரதத்தன் எனும் ஓர் வாணிகன்
வங்கம் தன்னொடும் வந்தனன் தோன்றும்
நின் பெருந் துன்பம் ஒழிவாய் நீ” என
அந்தரம் தோன்றி அசரீரி அறைதலும்”
XXXX
தர்ம சாஸ்திரங்களிலோ, அர்த்த சாஸ்திரத்திலோ இதுபற்றிய குறிப்புகள் இல்லாததால் இது பொதுவாகப் பின்பற்றப்படவில்லை என்று தெரிகிறது.
கணவன் இறந்ததை அறிந்த உடனே கணவனுடன் தீப்பாய்ந்த ஒரு வகையினரையும், அதற்குப்பின்னர் தீ மூட்டி இறந்த ஒரு வகையினரையும் காண்கிறோம். இன்னும் சிலர், பிள்ளைகளை வளர்த்து ஆளாக்குவதற்காக கைம்மை நோன்புடன் உயிர் வாழ்ந்ததையும் பார்க்கிறோம். சதி என்பது கட்டாயம் ஆக்கப்படவில்லை .
–SUBHAM —
Tags- ஆதிரை, சதி , உடன்கட்டை ஏறுதல் , நெடுஞ்சேரலாதன் , தீப்பாய்தல்