
Post No. 11,224
Date uploaded in London – 29 AUGUST 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
ராமாயணத்தைப் போற்றும் பல பாடல்கள் உண்டு. அதில் ஒரு பாடல், இந்தப் பூமியில் சூரிய சந்திரர்கள் பிரகாசிக்கும் வரை ராமாயணத்துக்கு – ராம கதைக்கு –அழிவே கிடையாது என்று கூறும்
காரணம் என்ன?
காம, க்ரோத, லோபம் என்ற மூன்று தீய குணங்கள் உடைய எவரும் எப்படி முடிவெடுப்பரோ அதற்கு நேர் மாறாக முடிவு எடுக்கின்றனர் ராமாயண கதாபாத்திரங்கள். இதைவிட ஒரு நல்ல குடும்பம் இருக்கவே முடியாது என்னும் அளவுக்குச் செயல்படும் பல கட்டங்களைக் காண்கிறோம்.
இந்தப் பூவுலகில் எல்லா நல்ல குணங்களும் நிரம்பிய நல்ல மனிதர் எவரேனும் உண்டா? என்று நாரதரிடம் வால்மீகி முனிவர் கேட்டபோது, நாரதர் ராமரின் குணாதிசயங்களை விவரித்து நீண்ட பதில் தருகிறார். பலரும் கேட்ட விஷயங்களே அவைகள் . பின்னர் நாரதர் விடைபெற்றுச் செல்கிறார். வால்மீகி முனிவர் தமஸா நதிக்கரையை நோக்கிச் செல்கிறார். அங்கு தினசரி நடை பெறும் காட்சிதான் நடக்கிறது அதாவது ஒரு வேடன் பறவைகளை நோக்கி அம்பு எய்கிறான். அவை செத்து விழுகின்றன. அதைப் பார்த்த வால்மீகிக்கு சோகம் மிக்க உணர்ச்சிக் கொந்தளிப்பு ஏற்படுகிறது. அதன் வாயிலாக நமக்கு ராமாயணம் கிடைக்கிறது. ஆனால் அதற்கு முன்னர் ஒரு அற்புதமான வருணனை வருகிறது.
இதோ சில அரிய எடுத்துக் காட்டுகள்:-
வால்மீகி முனிவர் தமஸா நதியைச் சுற்றுமுற்றும் பார்க்கிறார் . அற்புதமான, அமைதியான அழகுமிக்க பரத்வாஜ ஆஸ்ரமம் தெரிகிறது .அதைச்சொற்களில் வடிக்கும் போது நாம் சித்திரத்தில் கண்ட காட்சி போல அமைகிறது அந்தச் சொற்சித்திரம் :-
(1)
அகர்தமமிதம் தீர்த்தம் பரத்வாஜ நிசாமய
ரமணீயம் ப்ரசன்னாம்பு ஸன்மனுஷ்ய மனோ ததா
பொருள்
பரத்வாஜரே இந்த தண்ணீரைப் பாருங்கள் ! ஸ்படிகம் போல தெள்ளத் தெளிவாக இருக்கிறது; பார்க்கவே மனதிற்கு இன்பம் தருகிறது; நேர்மையான மனிதனின் மனதுபோல களங்கமற்று இருக்கிறது.
நேர்மையான மனிதனின் மனதுபோல தெளிந்த நீரோட்டம் உடையது அந்த ஆறு. நல்ல உவமை. ரமணீயம் , ப்ரசன்ன , சன் மனுஷ்ய மனஹ (நல்ல மனிதனின் மனது) என்ற சொற்கள் கவனிக்க வேண்டிய சொற்கள்.
இப்படிப்பட்ட நல்ல மனிதர்களின் மனதுதான் அற்புதங்களைச் செய்யும். முத்து சுவாமி தீக்ஷிதர் அமிர்த வர்ஷனி ராகம் பாடினால் மழை பெய்யும் ; ஆதிசங்கரர் கனக தாரா தோத்திரம் பாடினால் தங்க நெல்லிக்காய் மழை பெய்யும். ஞான சம்பந்தர் தேவாரம் பாடினால் அஸ்திச் சாம்பலிலிருந்து பூம்பாவை உயிர்பெற்று எழுவாள்; கூன் பாண்டியன் நின்ற சீர் நெடுமாறனாகக் காட்சி தருவார். இதெல்லாம் தெளிந்த நீரோடை போன்ற மனது உடையோர் சாதிக்கக் கூடிய காரியம். நமக்கும் அப்படி இருக்குமானால் அற்புதங்களை சாதிக்கலாம்.
XXX
(2)
சீதா தேவி ஓராண்டுக் காலத்துக்கு ராவணனால் சிறைவைக்கப்பட்டு அசோக வனத்தில் வாடுகிறாள். உயிர்விட எண்ணிய தருணத்தில் ராமனின் கணையாழியுடன் வந்து காட்சி தருகிறான் அனுமன். இருண்ட வானத்தில் ஒரு ஒளிக்கீற்று தோன்றுகிறது. ராம- ராவண யுத்தம் முடிந்த பின்னர் மீண்டும் வெற்றிச் செய்தியுடன் சீதையை சந்திக்க அனுமன் வருகிறான்.
“தாயே உங்களுக்குத் தீங்கு விளைவித்த அசோக வன ராட்சச , ராட்சசிக்களை ஒழித்துக்கட்டவா?” என்று கேட்கிறான் . பகைவனுக்கும் அருள்வாய் நன்நெஞ்சே என்ற பாரதியின் வாக்கிற்கு இணங்க கருணையே வடிவான ஸீதை சொல்கிறாள் :-
பாபானாம் வா சுபானாம் வா வதார்ஹானாம் ப்லவங்கம
கார்யம் கருணமார்யேண ந கஸ்சின்னா பராத்யதி

சீதை சொல்கிறாள் –
“இது போன்ற சிறியோர் மீது நாம் பழிவாங்குதல் அழகல்ல. அவர்களுடைய அரசர் சொன்னதையே அவர்கள் செய்தார்கள். உலக மக்கள் அனைவருக்கும் பொருந்தும் குணம் கருணையே ; அவர்கள் நல்லவர்களா கெட்டவர்களோ, தீய குணங்களை உடையோரை தண்டித்தல் சரியாக இருக்கலாம்; ஆயினும் எப்படி ஒரு மனிதன், மற்றொரு மனிதனை எடைபோட முடியும் முடியும்?”
XXX
(3)
வால்மீகி , மனிதர்களை வருணிப்பதோடு இயற்கையையும் அற்புதமாக வருணிக்கிறார். காட்டில் இரவு நேரம் எப்படி இருக்கும்?
“மரங்கள் எல்லாம் அசைவற்று நிற்கின்றன. பிராணிகளும் பறவைகளும் அங்கே மறைந்து நிற்கின்றன. மெதுவாக மாலை நேரம் விடை பெற்றுப் புறப்படுகிறது . வானத்தில் கண்கள் (நட்சத்திரங்கள்) முளைக்கின்றன. எங்கு நோக்கினும் நட்சத்திரங்களும் ராசி மண்டங்களும் பிரகாசிக்கின்றன அப்போது குளிர்ந்த கிரணங்களை வீசும் சந்திரன் உதயமாகி இருளை விரட்டுகிறான். பூமியில் வாழும் உயிரிங்களின் உள்ளங்களில் மகிழ்ச்சி பொங்குகிறது. இரவுநேரத்தில் வலம் வரும் ஜந்துக்கள் நகரத் துவங்குகின்றன. பிற பிராணிகள் கொன்ற எச்ச சொச்சங்களைத் தின்னும் நரிகளும் யக்ஷ ராக்ஷசர்களும் நடைபோடுகின்றன”.
இது பாலகாண்டத்தில் வரும் வர்ணனை ; ராமனுக்குச் சொல்லப்படும் விஷயம். ஒரு சிறுவனுக்கு எவ்வளவு திகிலும், பின்னர் அச்சம் நீங்கிய உணர்வும் ஏற்பட்ட வேண்டுமோ அப்படி வால்மீகி அமைத்துள்ள சொற்றொடர்கள் இங்கே உள்ளன
இப்படி நிறைய செய்திகளை நாம் பல்வேறு கோணங்களில் காணலாம் . அப்போதுதான் வால்மீகியின் பெருமையை நாம் உணரமுடியும். இவைதான் எத்தனை முறை படித்தாலும் எத்தனை முறை கேட்டாலும் ராமாயணத்தை அலுக்காமல் கேட்க வைக்கிறது.

காலத்தால் அழியாத, அழிக்க முடியாத காவியம் ராமாயணம்!
–சுபம்—
TAGS- ராமாயணம், வால்மீகி , உதாரணம், அழியாது