
WRITTEN BY S NAGARAJAN
Post No. 11,274
Date uploaded in London – – 18 SEPTEMBER 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
மானேஜ்மெண்ட் வழிகள்!
மற்றவரை உனக்காக வேலை செய்ய விடு! புகழை உனக்கு வரச் செய்!
ச.நாகராஜன்
நவீன மேலாண்மை நிர்வாகம் பல யுக்திகளைக் கொண்டது.
அதில் ஒன்று : மற்றவரை உனக்காக வேலை செய்ய விடு! புகழை உனக்கு வரச் செய்! – என்பதாகும்.
இதை விளக்க ஒரு குட்டிக் கதை உண்டு.
அது இதோ:
குட்டி ஆமை ஒன்று மலை மீதும், சமவெளி மீதும், அதில் அருகில் பாய்கின்ற நதியிலும் விளையாடுவது வழக்கம்.
நல்ல புத்திசாலி ஆமை அது.
ஒரு நாள் அந்த ஆமை மலையிலிருந்து கீழே வந்த போது யானை ஒன்று எதிர்த்தாற் போல வந்தது.
ஆமையைப் பார்த்துப் பரிதாபப்பட்ட அந்த யானை, “குட்டி ஆமையே, வழியிலே வராதே. என் காலில் அகப்பட்டால் நீ மிதிபட்டுச் சாவாய்” என்று கூறியது.
“ஊம். உனக்கு எவ்வளவு பலம் உண்டோ அவ்வளவு பலம் எனக்கும் உண்டு” என்று கூறியது ஆமை.
யானை சிரித்தது. “போ, போ” என்று கூறி விட்டுத் தன் வழியே சென்றது.
அடுத்த நாளும் யானை வந்தது. ஆமையைப் பார்த்தது. பரிதாப்பப்படு தான் முந்தைய நாள் சொன்னதையே திருப்பிச் சொன்னது.
ஆமையும் பதிலுக்கும். “நானும் உன் அளவு வலிமை பெற்றவன் தான்.
சந்தேகம் இருந்தால் நாளைக்கு இதே நேரம் ஒரு போட்டி வைத்துக் கொள்வோம். அப்போது உனக்குத் தெரியும், எனது வலிமை பற்றி” என்றது.
யானை சிரித்தது. போட்டிக்கு மறு நாள் வர ஒத்துக் கொண்டது.
யானை அங்கிருந்து தன் வழியே சென்றதும் ஆமை ஒரு நீளமான கயிறைத் தயார் செய்தது.
அருகிலிருந்த ஆற்றுக்குள் பாய்ந்தது. அதிலிருந்த நீர் யானை அலறியது.
“என் கிட்டே வராதே! நசுங்கிச் சாவாய்” என்றது அது.
ஆமை உடனே, “உனக்கு எவ்வளவு பலம் உண்டோ அவ்வளவு பலம் எனக்கும் உண்டு. வேண்டுமானால் நாளைக்கு ஒரு போட்டி வைத்துக் கொள்ளலாம். இதோ பார், ஒரு கயிறு! இதை உன் வாயில் வைத்துக் கொள். நான் ரெடி என்று சொன்னவுடன் நீ இழு! அப்போது என் வலிமை உனக்குத் தெரியும்” என்றது.
நீர் யானை சிரித்தது.
“சரி, நாளை பார்ப்போம். நான் ரெடி” என்றது.
மறு நாள் குறிப்பிட்ட நேரத்திற்கு யானை வந்தது. அதை மலைக்கு மேலே தன் இருப்பிடத்திற்கு வருமாறு ஆமை அழைத்தது.
யானை மலை உச்சிக்கு ஆமை இருந்த இடத்திற்குச் சென்றது.
ஆமை கயிறின் ஒரு முனையை யானையிடம் கொடுத்து, “நான் ரெடி என்று சொன்னவுடன், நீ கயிறை இழு! யார் வலிமை என்பது தெரியும்” என்றது.
யானை தன் மனதில் இந்த ஆமைக்கு எவ்வளவு தைரியம் என்று நினைத்துக் கொண்டே கயிறை வாங்கித் தன் வாயில் வைத்துக் கொண்டது.
குடுகுடுவென்று மலையை விட்டு இறங்கிய ஆமை நதிக்குள் சென்று அங்கு காத்துக் கொண்டிருந்த நீர் யானையிடன் கயிறின் இன்னொரு
முனையைக் கொடுத்தது.
சரியாக யானைக்கும் நீர் யானைக்கும் சமதூரத்தில் வந்து நின்ற ஆமை, “ரெடி! இழுக்கலாம்!” என்றது.
யானை இழுக்க, நீர் யானை இழுக்க இரண்டினாலும் நகரவே முடியவில்லை.
சமபலம் கொண்டிருந்ததால் நெடு நேரம் இழுத்தது தான் மிச்சம்.
“போதும்” என்று கூவிய ஆமை நீர் யானையைப் பார்த்து, “என்ன, என் பலம் புரிந்ததா?” என்றது.
நீர் யானை வியப்புடன் தலையை ஆட்டி விட்டு நதிக்குள் சென்று மறைந்தது.
மலை மேலிருந்து அப்போது இறங்கி வந்த யானை கயிறின் இன்னொரு முனையை வாயில் கவ்விக் கொண்டிருந்த ஆமையை வியப்புடன் பார்த்தது.
“என்ன, என் பலம் புரிந்ததா?” என்றது ஆமை.
வியப்புடன் ஆமையைப் பார்த்த யானை, “ஆஹா! நீ சொல்வது உண்மை தான்! என்னளவு பலம், ஏன், என்னை விட கூடவே பலம் வாய்ந்தவன் நீ” என்று பாராட்டி விட்டுத் தன் வழியே சென்றது.
சரி, கதையின் நீதி என்ன?
மற்றவரை உனக்காக வேலை செய்ய விடு! புகழை உனக்கு வரச் செய்!
இது தான் இன்றைய மானேஜ்மெண்ட் யுக்தி!
இது ஜைரியன் நீதிக் கதைகளுள் (Zairean Fables) ஒன்று.
‘THE 48 LAWS OF POWER’ என்ற தனது புத்தகத்தில் Robert Greene இதை ஒரு உதாரணமாக எடுத்துக் காட்டுகிறார்! (464 பக்கங்கள்)
Get others to do the work for you, but always take the credit! இது தான் அவர் கூறும் ஏழாவது விதி!
புத்தக அறிமுகம் – 60
பொன்னொளிர் பாரதம்!

பொருளடக்கம்
1. வியட்நாமில் வீர சிவாஜிக்கு சிலை!
2. சத்ரபதி சிவாஜியின் நமஸ்காரம்! – ஸ்ரீ சத்ய சாயிபாபாவின் அருளுரை!
3. குரு தேக் பகதூரின் ஒப்பற்ற தியாகம்!
4. போர்த்துகீசியரை அலற அடித்த மஹாராணி அப்பக்கா சௌதா!
5. ஜகாரியா கானை எதிர்த்த சீக்கியர்களின் வீரம்!
6. மேவார் வீரன் ராணா சங்ராம் சிங் – || : சுவையான சம்பவங்கள்
7. டச்சுக்காரர்களைத் துரத்தி அடித்த மார்த்தாண்ட வர்மாவின் சாகஸம்!
8. சித்தீ! கவலைப்படாதே! சித்தப்பாவின் உடலை
9. மார்வார் ராணியைக் காப்பாற்றிய மாவீரன் துர்காதாஸ் ரதௌவ்ரா!
10. ரஜபுதனத்து துர்காதாஸ் இஸ்லாமிய ராஜகுமாரியிடம் காட்டிய அன்பு!
11. சித்தூரின் வரலாறு : சந்தாவின் பீஷ்ம பிரதிக்ஞை!
12. கோமாதாவும் குலமகளிரின் கண்ணாடி மோதிரமும்!
13. மஹாராஜா ரஞ்சித் சிங்கின் பதில்!
14. அயோத்யா – சில உண்மைகள்! – 1
15. அயோத்யா – சில உண்மைகள்! – 2
16. அயோத்யா – சில உண்மைகள்! – 3
17. அயோத்யா – சில உண்மைகள்! – 4
18. வேதம் கூறும் ஸ்ரீ ராம ஜென்ம பூமி இடம்!
19. அதிசய மேதை ஸ்ரீ சுப்பராய சாஸ்திரி! – பகுதி 1.
20. அதிசய மேதை சுப்பராய சாஸ்திரி! பகுதி – 2
22. ஜோத்பூர் கோட்டையில் உள்ள சக்ரங்கள் அடங்கிய பட மர்மம்!
23. மாயச் சதுர மர்மத்தைச் சுவடிகளிலிருந்து விளக்கும் தமிழ்ப் பெண்மணி தஞ்சாவூர் சத்தியபாமா! – 1
24. மாயச் சதுர மர்மத்தைச் சுவடிகளிலிருந்து விளக்கும் தமிழ்ப் பெண்மணி தஞ்சாவூர் சத்தியபாமா! – 2
25. ஹர் பிலாஸ் சர்தா – ஹிந்து நாகரிக மேன்மையை எழுதியவர்!
26. அதிசய வரலாற்று ஆய்வாளர் பி.என்.ஓக்!
27. ஆலயம் காக்க அனைவரையும் அன்றே வணங்கிய பாண்டிய மன்னன் பராக்ரம பாண்டியன்! – 1
28. ஆலயம் காக்க அனைவரையும் அன்றே வணங்கிய பாண்டிய மன்னன் பராக்ரம பாண்டியன்! – 2
30. வெள்ளையன் ஹாலிடே வியந்த சதி!
31. மெழுகுவர்த்தியில் பிறந்த அக்னி – || ஏவுகணை!
32. ஹிந்து முஸ்லீம் ஒற்றுமை : தெய்வ தேசத்தின் கலாசாரம்!
33. உலகின் தாயகம் இந்தியா! அறியுங்கள்! நேசியுங்கள்!!
*
நூலில் நான் வழங்கிய என்னுரை இது :
என்னுரை
‘இது தான் இந்தியா’ என்ற எனது நூலை அடுத்து பொன்னொளிர் பாரதம் என்ற இந்த நூல் வெளியாகிறது.
இந்தியாவின் அறப்பண்புகளையும், சிறப்பு அம்சங்களையும் நாம் தெரிந்து கொண்ட வேளையில் ஒரு முக்கியமான சந்தேகம் எழுவது இயல்பு.
இப்படிப்பட்ட அரும் தேசம் எதனால் பல நூற்றாண்டுகள் அன்னியர் பலரின் ஆளுகைக்கு உட்பட்டிருந்தது என்பதே அது. கலைகளில்
சிறந்தது, அறப் பண்புகளில் சிறந்தது, வீரத்தில் சிறந்தது ஏன் வீழ்ந்து பட்டிருக்க வேண்டும்?
இதற்கான பல காரணங்களில் தலையாய காரணங்களாக நம் முன் இரண்டு காரணங்கள் அறியப்படுகின்றன.
ஒன்று நம்மிடையே ஒற்றுமை இல்லை.
இரண்டாவது வீரத்தையும் பொறுமையையும் பிரிக்கும் எல்லைக் கோட்டை அறிந்து கொள்ளத் தவறி, அறப்பண்புகளையே முற்றிலுமாகக் கடைப்பிடித்து எல்லையற்ற சகிப்புத்தன்மையை மேற்கொண்டது தான்!
இந்த சகிப்புத்தன்மையை ஆக்கிரமிப்பாளர்கள் நன்கு பயன்படுத்திக் கொண்டதோடு தங்களது அரக்க குணங்களுக்கேற்ப பிரித்தாளும் சூழ்ச்சி, சிரித்துப் பேசியவாறே முதுகில் குத்தச் செய்வது, நம்பிக்கை துரோகம் உள்ளிட்ட எண்ணற்ற வழிகளைக் கையாண்டு நம்மை அடிமைப் படுத்தினர்; சுரண்டினர். என்றாலும் கூட அறப்பண்புகள் ஒரு நாளும் அதைக் கடைப்பிடித்தோரை கை விடாது என்பதை அறிவிக்கும் வண்ணம் நம் நாடு சுதந்திரம் பெற்றது; இப்போது வலிமையான நாடாக, உலகிற்கு பண்டைய காலம் போல வழி காட்டும் தேசமாக ஆகி வருகிறது.
கடந்த பல நூற்றாண்டுகள் நமக்குக் கற்றுக் கொடுக்கும் பாடங்கள் பல.
அவற்றில் முக்கியமானவை ஒற்றுமையாக இருக்க வேண்டும் மற்றும் சகிப்புத்தன்மையை எல்லை மீறி கடைப்பிடித்து நம்மை கோழைகளாக வெளி உலகம் கருதும் அளவு நடப்பது கூடாது என்பவையே அவை கடந்த காலத்தில் ஆங்காங்கே தேசம் முழுவதும் ஏராளமான வீரர்கள் அந்தந்தப் பகுதிகளைப் பாதுகாத்து வந்ததை நமது சரித்திரம் கொண்டிருந்தாலும் ‘மெக்காலே படிப்பால்’ அவை மறைக்கப்பட்டு விட்டன. ஆகவே மறக்கப்பட்டு வருகின்றன.
அவற்றை வெளிக் கொணர்ந்து அதிலிருந்து உத்வேகத்தை நமது நாட்டு இளம் தலைமுறையினர் பெற வேண்டும். அதற்கான ஆரம்ப முயற்சியில் ஒரு சிறு துளியே இந்த நூலாக அமைகிறது.
இதில் நமது வீரர்களின் வீரம், ஆக்கிரமிப்பாளர்களது தாய்க்குலத்தை நாம் போற்றும் பண்பு, இதர நாட்டினர் நம்மை வியந்து போற்றும் பாங்கு, நமது அபூர்வமான கலைகள் உள்ளிட்டவை சித்தரிக்கப்படுகிறது.
இன்னும் இது போன்ற ஆயிரக் கணக்கான கட்டுரைகள் வெளி வந்து அவை ஒரு கலைக் களஞ்சியமாகத் தொகுக்கப்பட வேண்டும்.
பொன்னொளிர் பாரதத்தின் உண்மையான வரலாறு உள்ளது உள்ளபடி எழுதப்பட வேண்டும்.
இந்தக் கட்டுரைகளில் சில கட்டுரைகள், ஞான ஆலயம், ஶ்ரீ ஜோஸியம் பத்திரிகைகள் மற்றும் www.tamilandvedas.com ப்ளாக்கில் பிரசுரிக்கப்பட்டவை. இதை வெளியிட்ட ஞான ஆலயம் ஆசிரியர் திருமதி மஞ்சுளா ரமேஷ் மற்றும் லண்டன் திரு ச.சுவாமிநாதன் ஆகியோருக்கு எனது உளம் கனிந்த நன்றி உரித்தாகுக,
கட்டுரைகளில் பெரும்பாலானவை கொல்கத்தாவிலிருந்து வெளி வரும் ஆங்கில வார இதழான ட்ரூத் இதழில் ஆங்கிலத்தில் வெளி வந்தவை.
அவற்றைத் தமிழில் மொழி பெயர்த்து வெளியிட்டு வந்தேன்.
ட்ரூத்(TRUTH – www.sdpsorg.com இதழ் சாஸ்திர தர்ம பிரசார சபாவினால் கடந்த 90 ஆண்டுகளாக வாரம் தோறும் தவறாமல் வெளியிடப்பட்டு வருகிறது.
அதில் வெளியாகும் அருமையான கட்டுரைகள் நமக்கு உற்சாகமும் ஊக்கமும் அளிப்பவை.
அதன் ஆசிரியர் டாக்டர் திரு ஷிப் நாராயண் சென் அவர்கள் எனது உற்ற நண்பர். எனது இந்தப் பணியில் ஊக்கம் தருபவர்.
அவருக்கு எனது மனமார்ந்த நன்றியை இங்கு தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த நூலை அழகுற வெளியிட முன் வந்த பெங்களூர் நிறுவனமான PUSTAKA DIGITAL MEDIAவின் உரிமையாளர் திரு ராஜேஷ் தேவராஜ் அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கட்டுரைகள் வெளியான போது அவ்வப்பொழுது பாராட்டி எனக்கு ஊக்கமளித்த அனைவருக்கும் எனது நன்றி உரித்தாகுக.
நன்றி.
சான்பிரான்ஸிஸ்கோ ச. நாகராஜன்
5-9-2022
*
நூலாக வெளியிடவேண்டுமென்று விரும்பிய அன்பர்களின் விருப்பம் இப்போது நிறைவேறி விட்டது.
இதை 1) படிப்பதற்காகவும் 2) மின் நூலாகப் பெறவும் 3) அச்சுப்பதிப்பாகப் பெறவும் என இப்படி மூன்று திட்டங்களை www.pustaka.co.in அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் உரிமையாளர் திரு டாக்டர் ராஜேஷ் தேவதாஸ் P.Hd அவர்கள்.
சந்தா விவரங்களையும் நூல் விலை விவரத்தையும் admin@pustaka.co.in
என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு பெறலாம்
தொடர்புக்கான தொலைபேசி எண் : 9980387852
**