
Post No. 11,279
Date uploaded in London – – 20 SEPTEMBER 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
அறிவியல் அறிஞர் வாழ்வில் – 9
ச.நாகராஜன்
17
இன்ஃபைனைட் ஹோட்டல்!
டேவிட் ஹில்பெர்ட் (David Hilbert பிறப்பு : 23-1-1862 மறைவு :14-2-1943) ஜெர்மனியைச் சேர்ந்த ஒரு கணித மேதை.உலகின் அனைத்து கணித மேதைகளாலும் மதிக்கப்பட்டவர். இன்ஃபினிடி செட் (Infinity Set) என்பதை விளக்கும் விதமாக அவர் ஒரு சிந்தனை சோதனையைச் (Thought Experiment) செய்தார். அதன் பெயர் இன்ஃபைனைட் ஹோட்டல் அல்லது ஹில்பர்ட் ஹோட்டல் என்பதாகும். அது அனைவரையும் கவர்ந்த ஒன்று. இன்ஃபினிடி என்பது எல்லையற்ற கணக்கற்ற ஒன்று.
அவரது சிந்தனை சோதனை இது தான்!
மிக நீண்ட ஒரு விமானப் பயணத்தை மேற்கொண்டு அலுத்து களைத்து அவ்வளவாகத் தெரியாத ஒரு பெரிய நகரத்திற்கு நீங்கள் வருகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். உங்களுக்குத் திகைப்பைத் தரும் வண்ணம் அங்கு ஒரு ஹோட்டலிலும் உங்களுக்குத் தங்க அறை கிடைக்கவில்லை. கடைசியாக அங்கு ஒரு மிகப்பெரிய ஹோட்டல் இருப்பதை நீங்கள் அறிகிறீர்கள்.
அதன் பெயர் இன்ஃபைனைட் ஹோட்டல். அங்காவது ஒரு அறை கிடைக்காதா என்று அங்கு நீங்கள் விரைகிறீர்கள்.
பெயருக்குத் தகுந்தாற் போல எண்ணிக்கை கடந்த அறைகள் அங்கு இருக்க வேண்டுமல்லவா!
அங்கு வரவேற்பு டெஸ்கில் இருந்த ரிஸப்ஷனிஸ்டைப் பார்த்து எனக்கு ஒரு அறை வேண்டும் என்கிறீர்கள்.
அவர் சற்று தலையை ஆட்டியவாறே, “மன்னிக்க வேண்டும், எல்லா அறைகளும் புக் செய்யப்பட்டு விட்டன” என்கிறார்!
“என்ன, இது இன்ஃபைனைட் ஹோட்டல் ஆயிற்றே” என்கிறீர்கள்.
“ஆமாம்! அது உண்மை தான்! ஆனால் அறைகள் அனைத்தும் புக் செய்யப்பட்டு விட்டன” என்கிறார் அவர்.
சற்று யோசித்துப் பார்த்த உங்களுக்கு ஒரு அருமையான யோசனை உதிக்கிறது.
“எனக்கு நிச்சயமாக ஒரு அறை வேண்டும். நீண்ட பயணத்திற்குப் பிறகு களைத்துப் போய் இங்கு வந்திருக்கிறேன். எனக்கு நீங்கள் ஒரு உதவி செய்ய வேண்டும்!” என்கிறீர்கள்.
உங்களைப் பார்த்த அவர், “நிச்சயமாக, சொல்லுங்கள் என்ன உதவி?” என்கிறார்.
“ஹோட்டலிலோ எண்ணிக்கை அற்ற அறைகள் இருக்கின்றன. முதலாம் அறையில் இருப்பவரை அடுத்த அறைக்கு மாற்றுங்கள். அடுத்த அறையில் இருப்பவரை அதற்கு அடுத்த அறைக்கு மாற்றுங்கள். காலியாக இருக்கும் முதல் ரூமை எனக்குத் தந்து விடுங்கள். இப்படி மொத்த பேரையும் அடுத்தடுத்த அறைக்கு மாற்றி விட்டீர்கள் என்றால் முதலில் எத்தனை அறைகள் ஒதுக்கி இருந்தீர்களோ அதே எண்ணிக்கையில் தானே மாற்றப்பட்டவர்களின் எண்ணிக்கையும் இருக்கும். எல்லோருக்கும் அறை உண்டு; எனக்கும் உண்டே!” –
என்று முடிக்கிறீர்கள் நீங்கள்!
உங்களது இந்த யோசனை எப்படி?
இது இன்ஃபினிடி என்ற வார்த்தையின் அர்த்தத்தை முழுவதுமாக விளக்குகிறதல்லவா!
அனைவரும் இதைக் கேட்டு ரசித்தனர்; இன்றளவும் ரசித்துக் கொண்டு இருக்கின்றனர்!
18
டெஸ்கார்டஸின் கடவுள்!

டெஸ்கார்டெஸ் (Descartes) பிரான்ஸின் பணக்கார குடும்பம் ஒன்றில் பிறந்தவர். (பிறப்பு 31-3-1596 மறைவு 11-2-1650).தெய்வ நம்பிக்கை உள்ள கத்தோலிக்கர். ராணுவத்தில் தன்னார்வல படை வீரராக அவர் சேர்ந்தார். ப்ராடஸ்டெண்டுகள் கத்தோலிக்கர்களுடன் சண்டையிட்ட 30 வருட ப்ரேக் (Siege of Prague) முற்றுகையிலும் அவர் கலந்து கொண்டார்.
ஒரு சமயம் தெற்கு ஜெர்மனியில் பயணம் செய்கையில் அவர் பிரபல கணித மேதையும் விஞ்ஞானியுமான ஜோஹன் ஃபால்ஹேபரைச் (Johann Faulhaber) சந்தித்தார். ஜோஹன் விஞ்ஞானி மட்டுமல்லாமல் ஒரு தெய்வீக யோகியும் கூட. அவர் கணிதத்திலும் தெய்வீக யோகத்திலும் தனது சில கொள்கைகளை டெஸ்கார்டஸுக்குக் கற்பித்தார். அதிலிருந்து டெஸ்கார்டஸுக்கு அவற்றில் அதிக ஆர்வம் பிறந்தது.
அவருக்கு கணித மேதையான ப்லெய்ஸ் பாஸ்கல் (Blaise Pascal) சிறந்த நண்பராக விளங்கினார்.
பாஸ்கல் தான் தியரி ஆஃப் பிராபபலிடியைக் (Theroy of Probability) கண்டவர்.
அவருக்கும் தெய்வ நம்பிக்கை உண்டு.
“கடவுளை நம்பு. அவரை நம்பினால் இறப்பிற்கு பின் அவர் நம்மைக் காப்பார்; ஒருவேளை கடவுள் இல்லை என்றாலும் நமக்கு ஒரு நஷ்டமும் இல்லை; ஆனால் நம்பாமல் இருந்தாலோ நரகத்திற்கு அல்லவா போக வேண்டி இருக்கும் “ என்றார் அவர்.
டெஸ்கார்டஸ் 1628இல் ஹாலந்து சென்றார். 1637ஆம் ஆண்டு தனது பிரசித்தமான “The Discourse on the Method” என்ற நூலை வெளியிட்டார்.அவரது இந்த புத்தகம் ப்ராடஸ்டெண்டுகளுக்கு ஆத்திரத்தைத் தந்தது. அவரை மன்னிப்புக் கடிதம் எழுதுமாறு அவர்கள் வற்புறுத்தினர். இதனால் மனம் வருந்தி அவர் ஸ்வீடனுக்குக் கிளம்பினார். ஆனால் 1650ஆண்டு ப்ளூவினால் பாதிக்கப்பட்டு இறந்தார். ஆனால் அவரது மரணம் பற்றிய மர்மம் இன்றளவும் விவாதிக்கப்பட்டு வருகிறது.
தெய்வ நம்பிக்கைக்கும் அறிவியலுக்கும் முரண்பாடு இல்லை ஏ என்ற கொள்கையை அவர் கொண்டிருந்தார். இதனால் அனைவராலும் அவர் மதிக்கப்படுகிறார்.
***
புத்தக அறிமுகம் – 62
சம்ஸ்கிருத இலக்கியத்தில் சில புதிர்க்கவிதைகளும் அறிவுரைகளும்!

பொருளடக்கம்
1. மான் விழியாளுக்கு எது ஆபரணம்?
2. ஆறு கேள்விகளுக்கு பதில் தரும் ஒரு சொற்றொடர்!
3. ஹா, ராம, ஹா, தேவர், தாத, மாதா!
4. கணவனைப் பிரிந்த சீதை எப்படி மகிழ்ச்சியுடன் இருந்தாள்?
5. மீன்களுக்குப் பிடிக்காத நீர்நிலை எது? எதனால்?
6. கேள்வி பதிலாக உள்ள சில புதிர்க் கவிதைகள்!
7. வளமாக இருக்கும் போது பரிதாபத்திற்குரியது எது?
8. கேசவர், த்ரோணர், கௌரவரை வைத்து ஒரு புதிர்!
9. கையெழுத்து முதல் தலையெழுத்து வரை!
10. கேள்விகள் பல; பதிலோ ஒரு வார்த்தையில்!
11. சிவனின் உடல் எப்படி இருக்கிறது?
12. 14 கேள்விகளுக்கு ஒரு சொற்றொடரில் பதில்! சம்ஸ்கிருத விந்தை!!
13. நையாண்டிப் பாடல்கள் – சம்ஸ்கிருதத்தில்!
15. கவலையை அகற்றும் ஏழு விஷயங்கள்!
17. மேலானவன் யார்? மேதாவி யார்?
18. புண்ணியம் செய்தோருக்குக் கிடைக்கும் 13 நல்ல விஷயங்களும் சந்தோஷத்தை தரும் எட்டு விஷயங்களும்!
19. வாழ்க்கையையே நஷ்டமாக்கிக் கொள்பவர்கள்!
22. காளிதாஸன் மீது போஜனின் நட்பு!
26. சிறந்த தானம் மூன்று, விடக் கூடாதவர்கள் மூவர், மதிப்பு போடவே முடியாதவர் மூவர்!
27. பேராசை பெரு நஷ்டம் – மூன்று சுபாஷிதங்கள்!
28. பெண் அக்னி போல; ஆண் குடத்து நெய் போல!
29. கவிஞர்களின் பார்வையில் சீதை, ராமர், சுக்ரீவன்!
30. வாழ்த்துவதிலும் ஒரு அழகு, முறை, ஆசீர்வாதம்!
*
நூலில் நான் வழங்கிய என்னுரை இது :
என்னுரை
பாரதத்தின் அற்புதமான அறிவுச் செல்வத்தைக் கொண்டிருக்கும் மொழிகளில் தலையாய இரு மொழிகள் தமிழும் சம்ஸ்கிருதமுமே.
இந்த மொழிகளில் உள்ள ஒரு கோடி கைபிரதிகள் இன்னும் படிக்கப்படவில்லை என்பது அதிர்ச்சியூட்டும் ஒரு உண்மை.
உலகில் உள்ள பல்வேறு நாடுகளில் இந்த நூல்கள் ஓலைச் சுவடிகளாக உள்ளன; பாரதத்திலேயே கல்வெட்டுக்களில் இலக்கியச் செல்வம் பொதிந்திருக்கிறது. இன்னும் முறையாக அவை தொகுக்கப்படவில்லை.
சம்ஸ்கிருத இலக்கியமோ ஒரு பெருங் கடல். அதில் தனி ஒரு இடத்தை சுபாஷிதங்கள் பெறுகின்றன.
பல தனிப்பாடல்களைத் தொகுத்து உள்ள தொகுப்பு நூல்களும் ஏராளமாக உள்ளன.
இந்தக் கடலில் சில முத்துக்களை தேர்ந்தெடுத்து அவ்வப்பொழுது தமிழில் கட்டுரைகளாக எழுதி வந்தேன்.
அவற்றை நூலாக வெளியிடும் முயற்சியில் சம்ஸ்கிருதச் செல்வம், சம்ஸ்கிருதச் செல்வம் – 132 நியாயங்கள் பற்றிய விளக்கம், சம்ஸ்கிருத சுபாஷிதங்கள் 200 ஆகிய மூன்று நூல்களை அடுத்து இந்த நூல் வெளியாகிறது.
கட்டுரைகளாக வெளி வந்த போது பாராட்டி ஊக்கம் கொடுத்த அனைவருக்கும் எனது நன்றி.
இவற்றை www.tamilandvedas.com ப்ளாக்கில் வெளியிட்ட லண்டன் திரு எஸ். சுவாமிநாதன் அவர்களுக்கு எனது நன்றி உரித்தாகுக.
அழகிய முறையில் இதை நூலாக வெளியிட முன் வந்த Pustaka Digital Mediaவின் உரிமையாளர் திரு ராஜேஷ் தேவதாஸ் அவர்களுக்கு எனது நன்றி உரித்தாகுக.
நன்றி
சான்பிரான்ஸிஸ்கோ ச.நாகராஜன்
10-9-2022
*
நூலாக வெளியிடவேண்டுமென்று விரும்பிய அன்பர்களின் விருப்பம் இப்போது நிறைவேறி விட்டது.
இதை 1) படிப்பதற்காகவும் 2) மின் நூலாகப் பெறவும் 3) அச்சுப்பதிப்பாகப் பெறவும் என இப்படி மூன்று திட்டங்களை www.pustaka.co.in அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் உரிமையாளர் திரு டாக்டர் ராஜேஷ் தேவதாஸ் P.Hd அவர்கள்.
சந்தா விவரங்களையும் நூல் விலை விவரத்தையும் admin@pustaka.co.in
என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு பெறலாம்
தொடர்புக்கான தொலைபேசி எண் : 9980387852
**