
Post No. 11,326
Date uploaded in London – 5 OCTOBER 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx
மொகலாய சக்ரவர்த்திகளில் மிகவும் கொடுமைக்காரன் என்றும் மத வெறியன் என்றும் வருணிக்கப்படுபவர் அவுரங்கசீப். இந்துக்களுக்கு ஏராளமான தீங்கிழைத்தவர்.முனைவர் சிவ . பாலகடாட்சம் எழுதிய நூலில் அவர் பற்றிய சுவையான ஒரு விஷயத்தை ஆங்கில நூல் ஒன்றிலிருந்து மேற்கோள் காட்டுகிறார். இதோ அதன் விவரம் –
பஞ்சாப் மாநிலத்தில் வாழ்ந்த ஆனந்த நாதர் என்னும் சித்தர் ஒருவருக்கு 1661 அல்லது 1662ல் மொகலாய பேரரசர் அவுரங்கசீப் எழுதிய கடிதம் ஒன்று கிடைத்துள்ளது. 89 வயது வரை வாழ்ந்த மன்னர், தனது 43 ஆவது வயதில் எழுதி அனுப்பிவைத்த கடிதம் இது.
“வணக்கத்துக்குரிய தங்களின் கடிதமும் கூடவே தாங்கள் அனுப்பிவைத்த இரண்டு தோலா பாதரசமும் கிடைக்கப்பெற்றேன் . எனினும் தாங்கள் எங்களுக்கு விளங்கவைத்த அளவுக்கு இம்மருந்து மிகச் சிறந்ததாயில்லை. தாங்கள் இன்னும் ஒரு முறை மிகக் கவனமுடன் சுத்தி செய்யப்பட பாதரசத்தைத் தயாரித்து தாமதமின்றி அனுப்பிவைப்பது விரும்பத் தக்கது. தங்களது மே லாடைக்குத் தேவையான அளவு துணியும் இருபத்தைந்து ரூபாய் பணமும் காணிக்கையாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது அத்துடன் தங்களது பாதுகாப்பை எப்பொழுதும் உறுதிப்படுத்துவது குறித்து வீரமிக்க பாற்றே சந்துக்கு (Fath Chnad) எழுதப்பட்டுமுள்ளது “.
இந்துக்களை மிகவும் கொடுமைப்படுத்தியதாக குற்றம் சாட்டப்படுபவரும் இஸ்லாத்தில் தீவிர பற்றுடையவருமான அவுரங்கசீப், ஒரு சித்தருக்கு எழுதிய கடிதம் இது என்பதை நம்புவது கடினமாகத்தான் இருக்கும். எனினும் அதுவே உண்மை.பேரரசராலேயே மதிக்கப்பட்ட இந்த சித்தருக்கு பொது மக்களிடம் எவ்வளவு செல்வாக்கு இருந்திரு க்கும் என்பதை ஊகிப்பது கடினமன்று .
xxx
இத்தாலிய யாத்ரீகர் மார்க்கோ போலோ , (Marco Polo) பிரான்ஸ் நாட்டின் மருத்துவர் பிரான்ஸ்வா பெர்னியர் (Francois Bernier) ஆகியோர் எழுதிய சுவையான விஷயங்களையும் ஆசிரியர் தந்துள்ளார்.
அக்காலத்தில் இரும்பு, ஈயம், செம்பு முதலியவற்றைத் தங்கமாக மாற்றும் ரஸவாதத்திலும், என்றும் சாகாமல் இருக்கச்செய்யும் காயகல்ப மூலிகையிலும் மக்களுக்கு எவ்வளவு நமபிக்கை இருந்தது என்பதற்கு 18-ம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்த தாயுமானவர் பாடலையும் தந்துள்ளார் சிவ பால கடாட்சம். தாயுமானவர் இதிலுள்ள பேராசையைக் கடிந்துரைக்கின்றார் :-
ஆசைக்கோர் அளவில்லை அகிலமெல்லாம் கட்டி
ஆளினும் கடல் மீதிலே
ஆணை செலவே நினைவர் அளகேசன் நிகராக
அம்பொன் மிக வைத்த பேரும்
நேசித்து ரசவாத வித்தைக் கலைந்திடுவர்
நெடுநாளிருந்த பேரும்
நிலையாக வேயினுங் காயகற்பந்தேடி
நெஞ்சு புண்ணானவர் எல்லாம்
பொருள்:-
“ஆசைக்கு ஓர் அளவில்லை. உலகில் உள்ள நாடுகள் அனைத்தையும் கட்டி ஆண்டபோதும் கடலிலும் தமது ஆணையே செல்லவேண்டும் என்று நினைப்பார்கள். குபேரனுக்கு நிகராகப் பொன்னைக் குவித்து வைத்திருப்போரும் (செம்பைப் பொன்னாக்கும்) இரசவாத வித்தையை அறிந்துகொள்ள அலைவார்கள் . மிகவும் நீண்ட காலம் உயிர் வாழ்ந்துவிட்டோரும் , இன்னும் இறவாமல் இருக்க சாவா மருந்தாகிய காயகல்பத்தைத் தேடித் தேடி அது கிடைக்காமல் மனம் வருந்துவர்” என்பது இப்பாடலின் பொருள்.
நூலின் பெயர் தமிழர் மருத்துவம்
ஒரு வரலாற்றுப் பார்வை
ஆசிரியர் -முனைவர் பால .சிவ கடாட்சம்
முதல் பதிப்பு – டிசம்பர் 2021
பக்கங்கள் 224, விலை 250 ரூபாய்
வெளியீட்டாளர் – பட்டினம்
SALES OFFICE:- AAZHI PUBLISHERS,
5, K K SALAI, KAVERI RANGAN NAGAR,
SALIGRAMAM , CHENNAI 600 093
—subham—
Tags- அவுரங்க சீப், சித்த வைத்தியர், கடிதம், ஆனந்த நாதர்,