
WRITTEN BY S NAGARAJAN
Post No. 11,483
Date uploaded in London – – 29 November 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
ராமாயண வழிகாட்டி
ராமாயணத்தில் நதிகள் – 4
ச.நாகராஜன்
கம்ப ராமாயணத்தில் கம்பன் காட்டும் நதிகளைப் பார்க்க அவன் பின் தொடர்வோம்:
2. கௌசிகி
கௌசிகி நதி பற்றிய பாடல்கள் சில பிரதிகளில் இல்ல. வை,மு. கோபாலகிருஷ்ணமாசார்யர் பதிப்பில் பால காண்டத்தில், 8வது படலமாக அமையும் வேள்விப் படலத்தில் கௌசிகி நதியின் வரலாறு 10 பாடல்களில் சொல்லப்படுகிறது.
ஆனால் மர்ரே அண்டு கம்பெனி சென்னை -1 – 1958 பதிப்பிலோ இந்தப் பாடல்கள் மிகைப் பாடல்களாகத் தரப்படுகின்றன.
கௌசிகி நதியின் வரலாறைப் பார்ப்போம்.
‘சுரர் தொழுது இறைஞ்சற்கு ஒத்த தூ நதி யாவது?’ – தேவர்கள் வணங்கித் துதிக்கத் தக்க பரிசுத்தி உடைய இந்த நதி எத்தன்மையது?’ – என்று ராமர் விஸ்வாமித்திரரைப் பார்த்துக் கேட்க அவர் கௌசிகி நதியின் வரலாறை விரிவாகச் சொல்கிறார்.
குசன் என்ற அரசனுக்கு அவன் பத்தினியிடத்தில் நான்கு பிள்ளைகள் பிறந்தனர். குசன், குசநாபன், ஆதூர்த்தன், வசு என்பது இவர்கள் பெயர்கள். குசநாபனுக்கு நூறு பெண்கள் பிறந்தனர். அவர்கள் ஒரு நாள் சோலையில் சென்று விளையாடினர். அச்சமயம் அவர்களை வாயுதேவன் பார்த்தான். அவர்களால் கவரப்பட்டான். தன்னை மணந்து கொள்ளும்படி வாயுதேவன் கூற கன்னியரோ எனது தந்தையிடம் சொல்க என்றனர். இதனால் கோபித்த வாயுதேவன் அவர்களின் முதுகுகளைக் கூனாகும்படி ஒடித்தான். கன்னியர் நடந்த விஷயத்தைத் தந்தையிடம் கூறினர்.
குசநாபன் தனது மந்திரிகளுடன் ஆலோசித்து அவர்களை சூளி என்னும் மஹரிஷியின் புத்திரனான பிரமதத்தன் என்பவனுக்கு, கன்னிகாதானம் செய்து மணம் முடித்து வைத்தான்.
பிரமதத்தன் அந்த கன்னியரின் கரங்களைத் தொட அவர்கள் கூன் நிமிர்ந்து தங்கள் பழைய அழகைப் பெற்றனர்.
இதனால் மனம் மிக மகிழ்ந்தான் குசநாபன். ஆனால் தனக்கு மகன் ஒருவன் இல்லையே என்ற எண்ணம் தோன்ற அவன் புத்திரகாம யாகம் ஒன்றைச் செய்தான். அந்த அக்கினியிலிருந்து காதி என்பவன் தோன்றினான்.
குசநாபன் தன் மகனான காதிக்கு முடிசூட்டி, பின்னர் சுவர்க்க லோகம் அடைந்தான்.
காதிக்கு, கௌசிகி என்னும் பெண்ணும் விஸ்வாமித்திரரும் பிறந்தனர்.
பிருகு முனிவரின் மகனான ரிசீகன் கௌசிகியை மணந்தான்.
மேன்மையான தவத்தைச் செய்த ரிசீகன் பிரமலோகம் செல்ல ஆரம்பித்தான்.
தனது கணவனான ரிசீகன் ஆகாயமார்க்கமாகச் செல்வதைக் கண்ட கௌசிகி அதைப் பொறுக்க மாட்டாமல் ஒரு நதியின் ரூபம் தரித்து அவனைப் பின் தொடர்ந்தாள்.
அவளைக் கண்ட ரிசீகன், “உலக ஜனங்களின் துன்பங்கள் அனைத்தும் உன்னிடத்தில் மூழ்கும் போது ஒழிந்து போகும். இதே ஆற்றின் ரூபமாகவே பூலோகம் செல்வாயாக” என்று கூறினான். பின்னர் ரிசீகன் பிரமலோகம் சென்றான்.
இந்த வரலாறைச் சொன்ன விஸ்வாமித்திரர், ‘சுவர்க்கத்திலிருந்து மீண்ட கௌசிகி இமயமலையிலிருந்து பெரும் நதியாகப் பெருக, அவளது உடன் பிறந்த தொடர்பால் நான் அந்த மலையில் வசிப்பவன் ஆனேன். இப்போது வேள்விக்காக சித்தாஸ்ரமத்திற்கு வந்துள்ளேன்’ என்று கூறி முடித்தார்.
‘எம் முனாள் நங்கை இந்த இரு நதி ஆயினாள்’ – எனக்கு முன் பிறந்தவளாகிய பெண்களில் சிறந்த கௌசிகி என்பவள் இந்தப் பெரிய ஆற்றின் வடிவமாக ஆயினாள் – என்று விஸ்வாமித்திரர் முடிக்க அதைக் கேட்ட ராமர் ‘அதிசயம் மிகவும் தோன்ற’ – மனதிலே மிகவும் வியப்பு உண்டாக – மேலே லட்சுமணனுடன் நடக்கலானார்.
அற்புதமான இந்த கௌசிகி நதியின் வரலாறு அனைவரும் அறிய வேண்டிய ஒன்றாகும்.
இந்த நதி நேபாளத்தின் முக்கிய நதியாகத் திகழ்கிறது. நேபாளத்தில் மட்டும் 6000 நதிகள் ஓடுகின்றன.’
கௌசிகி என்னும் புனித நதியையும் கொண்டு, நீர் வளத்தில் உலகின் இரண்டாவது பெரும் நாடாகத் திகழும் நேபாளத்தைப் போற்றுவோம்.
*
புத்தக அறிமுகம் 126
அறிவியல் துளிகள் – பாகம் 18
பொருளடக்கம்
என்னுரை அத்தியாயங்கள் 443) அறிவியல் வியக்கும் யோகா! 444) சாடலைட்டுகளையும் ஹாக் செய்யும் அபாயம்! 445) வாபி சாபி – வாழ்க்கைக்கு அவசியமான ஒன்றைக் கற்றுக்
கொள்வோம்! 446) அறிவியலில் சாதனை புரிந்த அபூர்வப் பெண்மணிகள்! 447. கொரோனா பற்றி அறிவியல் புனைகதைகள் முன்பே சொல்லி
விட்டனவா?! 448. ப்ரூஸ் லீயின் பத்துக் கட்டளைகள்! 449. ட்ரோன் காட்டும் எதிர்கால உலகம்! 450. ISBN அதிசயம் 451. விண்வெளிச் சாலை மற்றும் சந்திரன் பற்றிய திரைப்படங்கள்! – 1 452. விண்வெளிச் சாலை மற்றும் சந்திரன் பற்றிய திரைப்படங்கள்! – 2 453. விண்வெளிச் சாலை மற்றும் சந்திரன் பற்றிய திரைப்படங்கள்! – 3 454. விண்வெளிச் சாலை மற்றும் சந்திரன் பற்றிய திரைப்படங்கள்! – 4 455. விண்வெளிச் சாலை மற்றும் சந்திரன் பற்றிய திரைப்படங்கள்! – 5 456. விண்வெளிச் சாலை மற்றும் சந்திரன் பற்றிய திரைப்படங்கள்! – 6
457. விண்வெளிச் சாலை மற்றும் சந்திரன் பற்றிய திரைப்படங்கள்! – 7 458. விண்வெளிச் சாலை மற்றும் சந்திரன் பற்றிய திரைப்படங்கள்! – 8
459. பெண் விஞ்ஞானி எல்லன் ஸ்வாலோ ரிச்சர்ட்ஸ் 460. கீமோதெராபியைக் கண்டுபிடித்தவர் – ஜேன் குக் ரைட்! 461.ஒலி ஏற்படுத்தும் அதிர்வுகளை விளக்கிய சோபி ஜெர்மெய்ன்! 462. ஃபெர்மி பாரடாக்ஸ்! ரஸ்ஸல் பாரடாக்ஸ்!! 463. விண்வெளி நிலையத்தில் வீரர்களின் வாழ்வில்! 464. விண்வெளி ஏகு முன் ரஷிய விண்வெளி வீரர்கள் கடைப்பிடிக்கும்
சில பாரம்பரியப் பழக்கங்கள்!
465. விண்கலம் ஏகும் போது அமெரிக்க வீரர்களின் பாரம்பரியப்
பழக்கங்கள்! 466. 100 வழிகளில் மூளை ஆற்றலைக் கூட்டலாம்! – 1 467. 100 வழிகளில் மூளை ஆற்றலைக் கூட்டலாம்! – 2 468. 100 வழிகளில் மூளை ஆற்றலைக் கூட்டலாம்! – 3 469. 100 வழிகளில் மூளை ஆற்றலைக் கூட்டலாம்! – 4 470. மரணத்தை வெல்லும் மனித குலம்! – விஞ்ஞானியின் இன்ப
அதிர்ச்சிக் கணிப்பு!!
என்னுரை
அறிவியல் துளிகள் வரிசையில் இறுதி பாகமாக அமையும் இந்த பதினெட்டாம் பாகத்தை தமிழ் உலகிற்குச் சமர்ப்பிக்கிறேன்..
அறிவியல் கடலில் சில துளிகளை சுட்டிக் காட்டியதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
கடந்த முன்னூறு ஆண்டு வரலாற்றைப் பார்க்கும் போது அறிவியலின் வளர்ச்சி பிரமிக்க வைக்கும் ஒன்றாக அமைகிறது.
962 அறிஞர்கள் 1901ஆம் ஆண்டு முதல் 2020 முடிய நோபல் பரிசைப் பெற்றிருக்கின்றனர்.
அமெரிக்காவில் மட்டும் அமெரிக்க பேடண்ட் அலுவலகம் 3,75,000 விண்ணப்பங்களை வருடம் தோறும் பெறுகிறது! 20 லட்சம் ஆவணங்களை வருடம் தோறும் பெறுகிறது;
1883ஆம் ஆண்டு தொடங்கி 2008ஆம் ஆண்டு முடிய உள்ள 126 ஆண்டுகளில் சுமார் 71,76,477 அமெரிக்க பேடண்டுகள் வழங்கப்பட்டுள்ளன!
அறிவியலில் எத்தனை கிளைகள் உள்ளன என்று பார்த்தால் மலைக்க வைக்கும் எழுநூறுக்கும் மேற்பட்ட துறைகளை இணையதளத்தில் பார்க்க முடிகிறது.
இந்த விஞ்ஞான வளர்ச்சியில் 90 சதவிகிதம் சமீப காலத்தில் தான் ஏற்பட்டுள்ளது என்பதையும் நாம் அறிகிறோம்.
இது அறிவு சார்ந்த ஒரு புதிய உலகத்தில் நாம் வாழ்வதைக் காட்டுகிறது.
P.Hd பட்டம் பெற்றவர்கள் உலகளாவிய விதத்தில் எத்தனை பேர் என்ற கேள்விக்கு பதில் அளிப்பது மிகவும் கடினமான ஒரு விஷயமாக ஆகி விட்டது. என்றாலும் கூட ஃபெர்மி மதிப்பீட்டின் படி (Fermi Estimate) பத்து லட்சம் பேர்கள் இந்த உயரிய ஆய்வுப் பட்டத்தை இப்போது பெற்றுள்ளனர் என்பதை இணையதளம் வாயிலாக அறிய முடிகிறது.
ஆகவே வளர்ந்து விட்ட ஒரு மாபெரும் அறிவியல் உலகில் நாமும் தொழில்நுட்பத்தின் வேகத்திற்கேற்ப வளர வேண்டி இருக்கிறது. இந்த அதி நவீன தொழில்நுட்ப அம்சங்களில் முக்கியமானவற்றை கவனக்குறைவினாலோ, அசட்டையாலோ, வேண்டுமென்றோ ஒதுக்கினால் நாம் நடைமுறை உலகியலிலிருந்து ஒதுக்கப்பட்டவர்களாவோம். முன்னேறுவது கஷ்டம்!
அனைத்தையும் அறிதல் முடியாது என்றாலும் கூட குறைந்தபட்சமாக அடிப்படையான விவரங்களை அறிதல் இன்றியமையாதது.
அந்த வகையில் அறிவியல் துளிகளின் 18 பாகங்களும் பல முக்கிய விஷயங்களைத் தருவதோடு அறிவியலில் ஒரு ஆர்வத்தைத் தூண்டி மேலும் பல புதிய விஷயங்களை அறிய அனைவரையும் தூண்டும் என நம்புகிறேன்.
எனது அறிவியல் கட்டுரைகளத் தொடர்ந்து வெளியிட்ட, டைரக்டரும் பாக்யா இதழ் ஆசிரியருமான திரு கே.பாக்யராஜ் அவர்களுக்கு எனது உளமார்ந்த நன்றியை இங்கு பதிவு செய்கிறேன்.
அத்துடன் ஹெல்த்கேர், முதல் ஓசை, கோகுலம் கதிர் உள்ளிட்ட பல பத்திரிகைகளும் எனது அறிவியல் கட்டுரைகளை வெளியிட்டுள்ளன.
திரு ஆர்.சி. ராஜா (ஹெல்த்கேர்), முதல் ஓசை (திரு தென்னவன் பாலு), திருமதி கமலி ஶ்ரீபால் (கோகுலம் கதிர்) ஆகியோருக்கு எனது உளம் கனிந்த நன்றி உரித்தாகுக.
தொடர்ந்து எனது அறிவியல் கட்டுரைகளை www.tamilandvedas.comஇல் வெளியிட்டு வரும் லண்டன் திரு ச.சுவாமிநாதன் அவர்களுக்கு எனது நன்றி.
அறிவியல் துளிகள் முதல் பாகத்திற்கு அணிந்துரை நல்கிய நம் நாட்டின் தலை சிறந்த விஞ்ஞானிகளுள் ஒருவரான திரு கே.ஜி.நாராயணன் அவர்களுக்கு எனது நன்றி.
பல வருடங்களாக பல்லாயிரக்கணக்கான வாசகர்கள் தொடர்ந்து தந்த ஆதரவினாலும், வாழ்த்துக்களாலும் உத்வேகம் பெற்று இந்த பதினெட்டு பாகங்களைப் படைக்க முடிந்தது. என்னை ஊக்குவித்த அனைவருக்கும் எனது நன்றி.
அழகிய முறையில்இதை நூலாக வெளியிட முன் வந்த Pustaka Digital Mediaவின் உரிமையாளர் திரு ராஜேஷ் தேவதாஸ் அவர்களுக்கு எனது நன்றி உரித்தாகுக.
நன்றி.
சான்பிரான்ஸிஸ்கோ ச.நாகராஜன் 21-9-2022
·
நூலாக வெளியிடவேண்டுமென்று விரும்பிய அன்பர்களின் விருப்பம் இப்போது நிறைவேறி விட்டது.
இதை 1) படிப்பதற்காகவும் 2) மின் நூலாகப் பெறவும் 3) அச்சுப்பதிப்பாகப் பெறவும் என இப்படி மூன்று திட்டங்களை www.pustaka.co.in அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன் உரிமையாளர் திரு டாக்டர் ராஜேஷ் தேவதாஸ் P.Hd அவர்கள்.
சந்தா விவரங்களையும் நூல் விலை விவரத்தையும் admin@pustaka.co.in
என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு பெறலாம்
தொடர்புக்கான தொலைபேசி எண் : 9980387852
**