
WRITTEN BY S NAGARAJAN
Post No. 11,523
Date uploaded in London – 9 December 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
அருள்வாயே! – 7
ச.நாகராஜன்
அருணகிரிநாதர் ‘அருள்’ என்ற சொல்லைத் திருப்புகழில் ஆண்ட இடங்கள் ஏராளம்.
அவர் அருள்வாயே என்று கூறும் இடங்களின் நீண்ட தொகுப்பு இது:
படித்து மகிழ்வோம்; பாடிப் பரவுவோம்!
55) திருத்தணிகை
சேவற்கொடி யொடுசி கண்டியின்
மீதுற்றறி ஞோர்புகழ் பொங்கிய
தேசுக்கதிர் கோடியெ னும்பத மருள்வாயே
பாடல் எண் 300 – ‘வார் உற்று எழும்’ எனத் தொடங்கும் பாடல்
பொருள் : சேவல் கொடியோடு, மயிலின் மீது நீ ஆரோகணித்து, அறிஞர்கள் பாடிய உனது திருப்புகழ் நிறைந்துள்ள ஒளி ஜோதி கோடி என்னும்படி வீசுகின்ற திருவடியை அருள்வாயாக!
56) குன்றுதோறாடல்
உன்
அபயம் புகுவ தென்று நிலைகாண
இதயந் தனிலி ருந்து க்ருபையாகி
இடர்சங் கைகள்க லங்க அருள்வாயே
பாடல் எண் 303 – ‘அதிருங் கழல் பணிந்து’ எனத் தொடங்கும் பாடல்
பொருள் : நீயே புகலிடம் என்று மெய் நிலையைக் காணுமாறு எனது உள்ளத்தில் வீற்றிருந்து கருணை புரிந்து துன்பங்களும், சந்தேகங்களும் கலங்கி ஒழிய அருள்வாயாக!
57) குன்றுதோறாடல்
செந்தமிழ் நாளு மோதி உய்ந்திட ஞானமூறு
செங்கனி வாயி லோர்சொ லருள்வாயே
பாடல் எண் 306 – ‘வஞ்சக லோப மூடர்’ எனத் தொடங்கும் பாடல்
பொருள் : செழுமையான தமிழ்ப் பாட்டுக்களால் தினமும் பாடி வாழ்வுற ஞானம் சுரக்கும் சிவந்த கோவைக்கனி போன்ற திருவாயால் ஒரு திருமொழியை அருள்வாயாக!
58) ஆறு திருப்பதி
கனதன முலைமேல்விழு கபடனை நிருமூடனை
கழலிணை பெறவேயினி யருள்வாயே
பாடல் எண் 307 – ‘அலைகடல் நிகராகிய’ எனத் தொடங்கும் பாடல்
பொருள் : பொதுமகளிருடன் இன்பமாகக் கூடி அவர்களுடைய பாரமான மார்பங்கங்கள் மேல் விழும் வஞ்சகனும் முழு மூடனுமான என்னை உனது திருவடி இணையினைப் பெறுமாறு இனி அருள்வாயாக!
59) காஞ்சீபுரம்
திசைதொறுங் கற்பிக் கைக்கினி யற்பந்
திருவுளம் பற்றிச் செச்சைம ணக்குஞ்
சிறுசதங் கைப்பொற் பத்மமெ னக்கென் றருள்வாயே
பாடல் எண் 314 – ‘புன மடந்தைக்கு’ எனத் தொடங்கும் பாடல்
பொருள் : திக்குகள் தோறும் உள்ள யாவருக்கும் எடுத்து உபதேசிக்க, இனிமேல் நீ சற்று தயை கூர்ந்து வெட்சி மாலை மணம் வீசும் சிறிய சதங்கை அணிந்துள்ல உன் அழகிய திருவடித் தாமரையை எனக்கு எப்போது தந்து அருள்வாய்?
60) காஞ்சீபுரம்
பெருமானென்
றவிழுமன் புற்றுக் கற்றும னத்தின்
செயலொழிந் தெட்டப் பட்டத னைச்சென்
றடைதரும் பக்வத் தைத்தமி யெற்கென் றருள்வாயே
பாடல் எண் 316 – ‘செறி தரும் செப்பத்து’ எனத் தொடங்கும் பாடல்
பொருள் : காஞ்சீபுரத்தில் நின்று அருளும் பெருமா நீ என்றும், நெகிழ்ந்து உருகும் அன்பின் வசமாகி, திருவருள் நெறியைப் பயின்று மனத்தின் செயல் எல்லாம் நீங்கப் பெற்று அந்த நிலையில் எட்டப்படுவதான பொருளைச் சென்று அடைகின்ற மனப் பக்குவத்தை அடியேனுக்கு என்றைக்குத் தந்தருள்வாயோ?!
61) காஞ்சீபுரம்
மற்றவருநிந் திக்கத் தக்கபி றப்பிங்
கலமலஞ் செச்சைச் சித்ரம ணித்தண்
டையரவிந் தத்திற் புக்கடை தற்கென் றருள்வாயே
பாடல் எண் 319 – ‘தசைதுறுந் தொக்கு’ எனத் தொடங்கும் பாடல்
பொருள் : பிறர் யாவரும் இகழும் படியான இந்தப் பிறப்பு இங்கு போதும் போதும். வெட்சி மலர் அணிந்ததும் அழகிய ரத்தின மணிகள் அணிந்ததும், தாமரை போன்றதுமான உன் திருவடியைப் பற்றிச் சேர்வதற்கு எப்போது எனக்கு அருள்வாய்?!
62) காஞ்சீபுரம்
இனிவிட வேதாந்தப ரமசுக வீடாம்பொருள்
இதவிய பாதாம்புய மருள்வாயே
பாடல் எண் 338 – ‘கமலரு சோகாம்பர’ எனத் தொடங்கும் பாடல்
பொருள் : (பெண் மீது மோகம் மிக்கு எழும் இன்ப நுகர்ச்சியை) இனி விட்டு ஒழிப்பதற்கு வேத முடிவான, பரம சுகம் தருவதான, முக்திப் பொருளாகிய, இன்பம் தருவதான பாதத் தாமரைகளைத் தந்து அருள்வாயாக!
63) காஞ்சீபுரம்
பார டைக்கலக் கோல மாமெனத்
தாப ரித்துநித் தார மீதெனப்
பாத பத்மநற் போதை யே தருத் தருள்வாயே
பாடல் எண் 343 – ‘சீசி முப்புரக் காடு’ எனத் தொடங்கும் பாடல்
பொருள் : உலகில் எனக்குப் புகலிடமாக இருக்கும் தோற்றத்தைக் காண்பித்து, ஆதரவுடன் யான் நித்தியமான ஓர் ஆபரணத்தை அணிவதற்காக உன் திருவடியாகிய நற் கமல மலரை என் மீது தரிக்கச் செய்து அருள்வாயாக!
64) காஞ்சீபுரம்
விரகு கெட்டரு நரகு விட்டிரு
வினைய றப்பத மருள்வாயே
பாடல் எண் 345 – ‘படிறொழுக்கமும்’ எனத் தொடங்கும் பாடல்
பொருள் : (அந்த) கேவலமான வாழ்வு நீங்கி, அரிய நரகத்தில் நான் விழுவது விலகி, நல்வினை, தீவினை என்ற எனது இரு வினைகளும் ஒழிய, உனது திருவடிகளைத் தந்தருள்வாயாக!
குறிப்பு & நன்றி : https://www.kaumaram.com தளத்தில் உள்ளபடி பாடல் எண் தரப்பட்டுள்ளது. முழுத் திருப்புகழ்ப் பாடலையும் அதன் விளக்கத்தையும் இதில் காணலாம்.
***. தொடரும்
rajan2012
/ December 11, 2022ஐங்கரனை ஒத்தமனம் ஐம்புலம் அகற்றி வளர்
அந்திபகல் அற்ற நினைவு …… அருள்வாயே.
அம்புவி தனக்குள் வளர் செந்தமிழ் வழுத்தி, உனை
அன்பொடு துதிக்க மனம் …… அருள்வாயே.
தங்கிய தவத்து உணர்வு தந்து, அடிமை முத்திபெற
சந்திர வெளிக்கு வழி …… அருள்வாயே.
தண்டிகை கனப் பவுசு எண் திசை மதிக்க, வளர்
சம்ப்ரம விதத்துடனெ …… அருள்வாயே.
மங்கையர் சுகத்தை வெகு இங்கிதம் என் உற்ற மனம்
உன்தனை நினைத்து அமைய …… அருள்வாயே.
மண்டலிகர் ராப்பகலும் வந்து சுப ரட்சை புரி
வந்து அணைய புத்தியினை …… அருள்வாயே.
கொங்கில் உயிர் பெற்று வளர் தென்கரையில் அப்பர் அருள்
கொண்டு, உடல் உற்ற பொருள் …… அருள்வாயே.
குஞ்சர முகற்கு இளைய கந்தன்என, வெற்றிபெறு
கொங்கண கிரிக்குள் வளர் …… பெருமாளே.
Note the alternate line