
Post No. 11,532
Date uploaded in London – 11 December 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx
THOSE WHO ARE WITHOUT DHAANA, DHARMA , DAYAA, AND TAPAS ARE NOTHING BUT ANIMALS LIKE ELEPHANTS AND CATS.
யானைக்கு இல்லை தானமும் தருமமும்
ஞானிக்கு இல்லை இன்பமும் துன்பமும்
சிதலைக்கு இல்லை செல்வமும் செருக்கும்
முதலைக்கு இல்லை நீத்தும் நிலையும்
அச்சமும் நாணமும் அறிவிலோர்க் கில்லை
நாளும் கிழமையும் நலிந்தோர்க் கில்லை
கேளும் கிளையும் கெட்டோர்க் கில்லை.
வெற்றிவேற்கை (நறுந்தொகை) எழுதிய ஆசிரியர் அதிவீரராம பாண்டியர் யாருக்கு எது இல்லை என்பதை அழகாக சொன்னார்.

அதே பாணியில் – ஸ்டைலில் style — அம்பலவாண கவிராயரும் யாருக்கு எது இல்லை என்று சொல்லுகிறார்.
திருவள்ளுவரும் நிறைய இடங்களில் யாருக்கு எது இல்லை என்பதை அடுக்குகிறார்.
குறள் 32
அறத்தினூஉங்கு ஆக்கமும் இல்லை அதனை
மறத்தலின் ஊங்கில்லை கேடு
குறள் 59
புகழ்புரிந்த இல்லிலோர்க்கு இல்லை இகழ்வார்முன்
ஏறுபோல் பீடு நடை
குறள் 247
அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு
இவ்வுலகம் இல்லாகி யாங்கு
குறள் 751
பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்
பொருளல்லது இல்லை பொருள்
இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம் . இனி அறப்பளீசுர சதகம் சொல்லுவதைக் காண்போம்
Xxxx
ARAPPALICHURA SATAKA VERSE 17 WITH MY COMMENTARY
அறப்பளீசுர சதகம்
18. இல்லை
காமிக்கு முறையில்லை; வேசைக்கு நாண்இல்லை;
கயவர்க்கு மேன்மை யில்லை;
கன்னம்இடு கள்வருக் கிருளில்லை; விபசார
கன்னியர்க் காணை யில்லை;
தாமெனும் மயக்கறுத் தோங்குபெரி யோர்க்குவரு
சாதிகுலம்என்ப தில்லை;
தாட்சணியம் உடையபேர்க் கிகலில்லை; எங்குமொரு
சார்பிலார்க் கிடம தில்லை;
பூமிக்குள் ஈயாத லோபர்க்கு வளமான
புகழென்ப தொன்று மில்லை;
புலையர்க்கு நிசமில்லை; கைப்பொருள் இலாததோர்
புருடருக் கொன்றும் இல்லை;
யாமினி தனக்கு நிகர் கந்தரத் திறைவனே
அன்புடைய அருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!
(இ-ள்.) யாமினி தனக்குநிகர் கந்தரத்து இறைவனே – இருளுக்கு
ஒப்பான கழுத்தினையுடைய முதல்வனே!, அன்பு உடைய – அன்புள்ள,
அருமை……………..தேவனே!, காமிக்கு முறை இல்லை – காம மயக்கம்
உடையவர்க்கு முறை தோன்றாது. வேசைக்கு நாண் இல்லை – பரத்தைக்கு வெட்கம் இராது, கயவர்க்கு மேன்மை இல்லை – தாழ்ந்தவர்க்கு உயர்வு வராது, கன்னம் இடு கள்வருக்கு இருள் இல்லை – கன்னம் வைக்கும் திருடருக்கு இருளில் அச்சம் தோன்றாது,
தாம் எனும் மயக்கு அறுத்து ஓங்கு பெரியோருக்கு வரு சாதி குலம் என்பது இல்லை –
நாம் எனும் மயக்கத்தை நீக்கி மேன்மையுற்ற சான்றோர்களுக்குச் சாதியும் குலமும் தேவையில்லை,
தாட்சணியம் உடையபேர்க்கு இகல் இல்லை – கண்ணோட்டமுள்ளவர்க்குப் பகைவர் உண்டாகமாட்டார்,
எங்கும் ஒரு சார்பு இலார்க்கு இடமது இல்லை – ஓரிடத்தும் ஆதரவு அற்றவர்க்கு இடம் கிடையாது,
பூமிக்குள் ஈயாத லோபர்க்கு வளமான புகழென்பது என்றும் இல்லை –
உலகத்தில் வறியோர்க்குக் கொடாதவர்களுக்கு நிறைந்த புகழ் எப்போதும்ஏற்படாது,
புலையர்க்கு நிசம் இல்லை – இழிந்தவர்க்கு உண்மையிராது,
கைப்பொருள் இலாத ஓர் புருடருக்கு ஒன்றும் இல்லை – கைப்பொருள்
இல்லாத ஒருவனுக்கு எந்த நலனும் இல்லை.
Xxxx
காம மயக்கம் உடையவர்க்கு முறை தோன்றாது. என்பதை ஆசை வெட்கம் அறியாது என்ற பழமொழியுடன் ஒப்பிடலாம். ஆங்கிலத்திலும் காதலுக்கு கண்ணில்லை LOVE IS BLIND என்பார்கள்
XX
– கைப்பொருள் இல்லாத ஒருவனுக்கு எந்த நலனும் இல்லை.
என்பதை வள்ளுவரே சொல்லிவிட்டார்:-
அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு
இவ்வுலகம் இல்லாகி யாங்கு –247
XX
நாம் எனும் மயக்கத்தை நீக்கி மேன்மையுற்ற சான்றோர்களுக்குச் சாதியும் குலமும் தேவையில்லை என்பதை கிருஷ்ண பரமாத்தவே பகவத் கீதையில் சொல்லிவிட்டார் சொல்லிவிட்டார்:-
பகவத் கீதை 5-18
பண்டிதா: சம தர்சின (5-18): பிராமணன்,பசு, யானை, நாய், புலையன் எல்லோரையும் சமமாகப் பார்ப்பவனே ஞானி
विद्याविनयसम्पन्ने ब्राह्मणे गवि हस्तिनि।
शुनि चैव श्वपाके च पण्डिताः समदर्शिनः॥१८॥
வித்³யாவிநயஸம்பந்நே ப்³ராஹ்மணே க³வி ஹஸ்திநி|
ஸு²நி சைவ ஸ்²வபாகே ச பண்டி³தா: ஸமத³ர்ஸி²ந: ||5-18||
கல்வியும் விநயமும் நன்கு கற்ற பிராமணனிடத்திலும், பசுவினிடத்திலும், யானையினிடத்தும், நாயினிடத்தும், நாயைத் தின்னும் புலையனிடத்தும், பண்டிதர் சம பார்வையுடையோர்.
XX
ஞானிக்கு இல்லை இன்பமும் துன்பமும்
யாதெனின் யாதெனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்.- குறள் 341
ஆசையே துன்பத்துக்குக் காரணம் என்று புத்தர் சொன்னார். ஆசையை ஒழித்த ஞானிக்கு இன்பமும் இல்லை; துன்பமும் இல்லை
XXX
VALLUVAR’S VIOLENT STRATEGY
பொருளை வைத்துக்கொண்டு மற்றவர்க்குக் கொடாமலிருப்பவனை கையை முறுக்கி நாலு குத்து, குத்து என்கிறான் வள்ளுவன்
குறள் 1077
ஈர்ங்கை விதிரார் கயவர் கொடிறுடைக்கும்
கூன்கையர் அல்லா தவர்க்கு- 1077
xx
இதே கருத்தையே, அறநெறிச்சாரப்பாடல் இவ்வாறு கூறுகிறது
இட்டக் கடைத்தரார் ஈண்டும் பலிமரீஇப்
பட்ட வழங்காத பான்மையார்–நட்ட
சுரிகையாற் கானும் சுலாக்கோலாற் கானும்
சொரிவதாம் ஆபோற் சுரந்து.
அதாவது, தம்பால் உள்ள பொருள்களை, நட்பினர்களுக்கும் கொடாமலும், பிச்சையேற்று வாழ்வோருக்கும் ஈயாமலும் வாழும் கஞ்சராம் கீழோர் உடைவாளால் தம்மைத் தாக்க வருபவனுக்கும், தடியைச் சுழற்றிக்கொண்டு அடிக்க வருபவனுக்கும், கறப்பவனுக்குத் தனது பாலைச் சுரந்து கொடுத்தல்போல அப் பொருளை நிறைய வழங்குதல் உண்டாகும். தடியெடுப்பவனுக்கும் தண்டல்காரனுக்கும் அஞ்சுகிற கீழோர், மற்றபடி, எச்சல் கையால் காக்கைகூட ஓட்டமாட்டார்கள்.
XX
THOSE WHO ARE WITHOUT DHAANA, DHARMA , DAYAA, AND TAPAS ARE NOTHING BUT ANIMALS LIKE ELEPHANTS AND CATS.
வெற்றிவேற்கையும் தானம் தர்மம் அற்றவர்களை
யானைக்கு இல்லை தானமும் தருமமும்
பூனைக்கு இல்லை தவமும் தயையும்
என்று சொல்லி அவர்களை மிருகங்களுடன் ஒப்பிடுகிறது
–சுபம்—
TAGS– ஞானி, யானை, பூனை, கருமி, இல்லை, அறப்பளீசுர சதகம், சாதி குலம், காமம்