
WRITTEN BY S NAGARAJAN
Post No. 11,591
Date uploaded in London – 27 December 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
கொங்குமண்டல சதகம் பாடல் 48
திருஞானசம்பந்தர் நளிர் ஜுரம் நீங்கப் பாடிய பாடல்!
ச.நாகராஜன்
சீகாழியில் அவதரித்த திருஞானசம்பந்தர் வாழ்க்கையில் நிகழ்ந்த அற்புதங்கள் ஏராளம். அவர் நிகழ்த்திய அற்புதங்களோ அதை விட ஏராளம்.
ஒவ்வொரு ஊராகச் சென்று இறைவனை வழிபட்டு தேவாரப் பதிகங்களை அவர் பாடிக் கொண்டே இருந்தார்.
கொங்கு மண்டலத்தில் காவேரிக்குத் தென்கரையிலிருந்த ஆலயங்களைத் தரிசித்த பின்னர் வடகரையில் இருந்த திருச்செங்கோடு ஆலயத்திற்கு அவர் சென்றார்.
திருச்செங்கோடு அந்தக் காலத்தில் கொடிமாடச் செங்குன்றூர் என்று பிரசித்தி பெற்றிருந்தது.
அங்கு தேவாரம் பாடி அர்த்தநாரீஸ்வரரை வழிபட்டார். பின்னர் மேல் பக்கம் திருநண்ணா முதலிய தலங்களுக்கு யாத்திரை சென்றார். பின்னர் மறுபடியும் திருச்செங்கோட்டில் எழுந்தருளினார்.
அப்போது பனிக்காலம். பல நாள் அங்கு தங்கி இருந்த போது பனிகாலத்தில் பொதுவாக அனைவரையும் வருத்தும் குளிர் ஜுரம் அவருடன் இருந்த திருக்கூட்டத்தாரையும் பிடித்தது. அனைவரும் அதனால் வருந்தினர்.
இதைப் பார்த்த திருஞானசம்பந்தர், “அவ்வினைக் கிவ்வினையாம்” எனத் தொடங்கும் பதிகத்தைப் பாடி அருளினார்.
அடியார்களை வருத்தும் நளிர் ஜுரம் நீங்க வேண்டி, “அடியார்களை நளிர் ஜுரம் தீண்டப்படா” என்று ஆணை வைத்துத் திருநீலகண்டம் என்னும் பதிகத்தை ஓதி அருளினார்.
என்ன ஆச்சரியம்! உடனடியாக திருக்கூட்டத்தாரை மட்டுமின்றி அங்கு நளிர் ஜூரம் பீடித்திருந்த அனைவரிடமிருந்தும் நளிர் ஜுரம் நீங்கியது. அந்த நாட்டிலேயே நளிர் ஜுரம் நீங்கவே அனைவரும் மகிழ்ச்சியுற்றனர்.
இந்த திருநீலகண்ட பதிகத்தை மந்திரமாக ஓதி விபூதி பூசினால் குளிர் ஜுரம் போகும் என்பது அனைவரின் நம்பிக்கையாகும்.
அப்படியே இன்றும் நடப்பதும் கண்கூடு.
இந்த வரலாறு நிகழ்ந்தது கொங்குமண்டலத்தில் என்பதால் கொங்குமண்டல சதகம் பாடல் 48இல் இந்தப் பெருமையைப் பேசுகிறது.
பாடல் இதோ:
திருக்கூட்டத் தாரையுஞ் சேர்ந்த நளிர்சுரந் தீரவன்பின்
பெருக்காக “வவ்வினைக் கிவ்வினை யாமெனப்” பீடுபெறத்
திருக்காழிப் பிள்ளையார் நற்றமிழ் பாடவத் தேயமுற்றும்
வருத்தாதந் நோயின்னும் நீங்கிய துங்கொங்கு மண்டலமே
பாடலின் பொருள்:
சீகாழிப் பிள்ளையாராகிய திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் திருச்செங்கோடு என வழங்கும் திருக்கொடி மாடச் செங்குன்றூர்க்கு திருக்கூட்டத்தாருடன் எழுந்தருளியபொழுது, நளிர் ஜுரமானது அனவரையும் பீடிக்கவே, “அவ்வினைக் கிவ்வினையாம்” எனத் தொடங்கும் தேவாரப் பதிகத்தை அன்பின் பெருக்கால் பாடி அவ்வூர் மட்டுமின்றி அந்த நாடு முழுவதும் அந்த விஷ நோய் தீரும்படி ஓதப் பெற்றதும் கொங்குமண்டலமே என்பதாகும்.
அவ்வினை எனத் தொடங்கும் பாடல் இது:
அவ்வினைக் கிவ்வினை யாமென்று சொல்லு மதுவறியீர்
உய்வினை நாடா திருப்பது முந்தமக் கூனமன்றே
கைவினை செய்தம்பி ரான்கழல் போற்றுது நாமடியேஞ்
செய்வை வந்தெமைத் தீண்டப் பெறாதிரு நீலகண்டம்.
பதிகத்தின் இறுதிப் பாடல் இது:
பிறந்த பிறவியில் பேணி எம் செல்வம் கழல் அடைவான் இறந்த பிறவி உண்டாகில் இமையவர்கோன் அடிக்கண் திறம்பயில் ஞானசம்பந்தன் செந்தமிழ் பத்தும் வல்லார் நிறைந்த உலகினில் வானவர் கோனொடும் கூடுவரே
***