
Post No. 11,620
Date uploaded in London – – 3 JANUARY 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx
அறப்பளீசுர சதகம் பாடல் 46–ம் 47-ம் புராணக் கதைகளின் பட்டியல் .நல்லது நடக்க, எந்த வழியையும் கடைப்பிடிக்கலாம். தீய செயலைச் செய்வோர் எவ்வளவு வலிமை பெற்றாலும் இறுதியில் அழிவர் என்பது இந்த பாடல்களின் கருத்து.
ரஷ்யப் புரட்சி, பிரெஞ்சுப் புரட்சிகளில் ஏராளமானோர் கொல்லப்பட்டனர். அப்படியும் அந்தப் புரட்சிகள் பாராட்டப்படுகின்றன. ஜப்பானிலுள்ள அப்பாவி மக்கள் தலையில் 2 அணுகுண்டுகளைப் போட்டு பல லட்சம் மக்களை ஒரு நொடியில் கொன்றுகுவித்தது அமெரிக்கா. ஆனால் ஹிட்லர் ஒழிந்தான் என்ற சந்தோஷத்தில் அமெரிக்காவை யாரும் இதுவரை கண்டிக்கவில்லை. பாகிஸ்தானில் ஒசாமா பின் லாடனை சட்டவிரோதமாக அமெரிக்கா கொன்றது அவன் 3000 பேர் சாவுக்குக் காரணமானதால் அதையும் உலகம் கண்டிக்கவில்லை . இறுதி லட்சியம் நல்லதாக இருந்தால் எந்த அதிரடி வேலையையும் செய்யலாம் என்பது உலகம் ஏற்றுக்கொண்ட நடை முறை. பெரிய புராணத்தில் பல வன்முறைக் காட்சிகள் வருகின்றன. அதன் பின்னாலுள்ள சிவ பக்தி– குருட்டுத் தனமான பக்தியால் அவை பாராட்டப்படுகின்றன. மேலும் அவர்கள் அனைவரும் சிவபதம் அடைவதாகவே கதை முடிகிறது. இதை ஆங்கிலத்தில் END JUSTIFIES MEANS என்று சொல்லுவார்கள்.
Xxx
.png)
நல்வினை செய்தோர் பட்டியல்
1.அடைக்கலம் என்ற புறாவைச் சிபி காப்பாற்றத்
தன்னையே எடையாக நிறுத்தினான்.
2.அரிச்சந்திரன் உண்மையைக் கடைப்பிடிக்க மனைவியையும் மகனையுங்கூட விற்றான்; தானும் தோட்டிக்கு விலையானான்.
3.மாபலி தன்னையேற்பவர் மாயையில் வல்ல திருமாலென்றறிந்தும் பொருட்படுத்தாமல் வேண்டிய மூன்றடி மண்ணைக் கொடுத்தான்.
4.பரசுராமன் தந்தை சொற்படி தாயைக் கொன்றான்.
5.இலக்குமணன் தமயனான இராமனொடு காட்டிற்குச் சென்றான்.
6.கருடன்,தன் தாயான வினதையின் அடிமைத் தன்மையை மாற்றத் தன் மாற்றாந் தாயான கத்துருவை மக்களை (பாம்புகளை) வேண்டுமிடங்களுக்குக்கொண்டு போய்க் காட்சிகளைக் காட்டினான்.
7.பகீரதன் தன் முன்னோரான சகரர்கள் நிற்கதியடையத் கங்கையைப் பூவுலகிற் கொணர்ந்து சகரரின் சாம்பற் குவியலிற் பாய்ச்சினான்.
8.சிறுத்தொண்டர் அடியார்கோலத்துடன்
வந்த சிவபிரான் அமுது செய்ய மைந்தனைக் கொன்று சமைத்தார்.
9.பிரகலாதன் தன் தந்தைக்குமாறாக நின்று நரசிங்க மூர்த்தியால் தன்
தந்தையையே கொல்வித்தான்.
10.வீடணன் தன் தமையனான இராவணனுக்கு
மாறாக நின்று இராமனைக்கொண்டு கொல்வித்தான்.
இவர்கள் நன்னெறியிலே சென்றதனால் தகாத செயல்களான இவற்றைச்
செய்தும் புகழ்பெற்றனர் என்று கூறுவர்.
(க-து.) உலகியலுக்கு மாறாயினும் நன்னெறியிலே (End justifies means) செல்வதே நலந்தரும்.
xxxx
தீவினை செய்தோர் பட்டியல்
1.நகுடன் (Nahusa) நூறு பரிவேள்வி செய்து இந்திரபதவி பெற்றான்.
ஏழுமுனிவர் சுமக்கும் சிவிகையிலே இந்திராணியை நாடிச் செல்கையில்
‘சர்ப்ப! சர்ப்ப’ என விரைந்து செல்லும்படி பெரியோர்களை (மதியாமல்)
ஏவியதால் மலைப் பாம்பாக அகத்தியராற் சபிக்கப்பெற்றான்.
2.தக்கன் சிவனை இகழ்ந்து பேசி, அவரை நீக்கி வேள்வி செய்ததனால் வீரபத்திரரால்தலையை இழந்து ஆட்டுத்தலை பெற்றான்.
3.இந்திரன் கௌதமர் மனைவியான அகலிகையை விரும்பியதால் உடலெங்கும் பெண்குறியைப் பெற்றான்.
4.துரியோதனன் தன் பங்காளிகளான பாண்டவரின் உரிமையைக்
கொடாததால் அவர்களாற் போரில் இறந்தான்.
5.சிசுபாலன் எப்போதும் கண்ணனை யிகழ்ந்து கூறி வந்ததனால் அவராற் போர்க்களத்தில் இறந்தான். (க-து.) தீயவழியிலே செல்வோர் தீமையடைவது உறுதி.
xxx
அறப்பளீசுர சதகம் 46. நல்வினை செய்தோர்
சாண்எனக் காத்தவன், மெய்யினால் வென்றவன்,
தானம்இளை யாது தவினோன்,
தந்தைசொல்மறாதவன், முன்னவற் கானவன்
தாழ்பழி துடைத்த நெடியோன்,
வருபிதிர்க் குதவினோன், தெய்வமே துணையென்று
மைந்தன்மனை வியைவ தைத்தோர்,
மாறான தந்தையைத் தமையனைப் பிழைகண்டு
மாய்த்துலகில் மகிமை பெற்றோர்
கருதரிய சிபிஅரிச் சந்திரன், மாபலி,
கணிச்சியோன் சுமித்தி ரைசுதன்,
கருடன், பகீரத னுடன்சிறுத் தொண்டனொடு
கானவன், பிரக லாதன்,
அரியவல் விபீடணன் எனும்மகா புருடராம்
அத்தனே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!
(இ-ள்.) அத்தனே – தலைவனே!, அருமை ……… தேவனே!,
சரண்எனக் காத்தவன்-அடைக்கலம் (என்ற புறாவைக்) காப்பாற்றியவன்,
மெய்யினால் வென்றவன் – உண்மையேபேசி வெற்றியுற்றவன், இளையாது
தானம் உதவினோன் – சோர்வின்றிக் கொடை கொடுத்தவன்! தந்தை
சொல் மறாதவன் – தந்தையின் மொழியைத் தட்டாதவன்,
முன்னவற்கு ஆனவன் – தமையனுக்கு உற்ற துணையானவன், தாய்
பழிதுடைத்த நெடியோன் – அன்னைக்கு உற்ற நிந்தையைப் போக்கிய
பெரியோன், வருபிதிர்க்கு உதவினோன் – தலைமுறையில் வந்த
தென்புலத்தார்க்கு நலம் புரிந்தோன். தெய்வமேதுணையென்று
மைந்தன்மனைவியை வதைத்தோர் – கடவுளைத் துணையாக நம்பி மகனை
வதைத்தவனும் மனைவியை வதைத்தவனும், மாறான தந்தையைத்
தமையனைப் பழிகண்டு மாய்த்து உலகில் மகிமைபெற்றோர் – (நன்னெறிக்கு)
மாறுபட்ட தந்தையைக் கொன்றும், தமயனைக் கொன்றும் உலகிற்
புகழ்பெற்றோர், (ஆகிய இவர்கள் முறையே) கருதரிய சிபி – நினைத்தற்கரிய
சிபிச் சக்கரவர்த்தியும், அரிச்சந்திரன் – அரிச்சந்திரனும், மாபலி-மாபலியும்,
கணிச்சியோன் – பரசுராமனும், சுமித்திரை – சுதன் – சுமித்திரை மகனான
இலக்குவனும், கருடன் – கருடனும், பகீரதனுடன் – பகீரதனும்,
சிறுத்தொண்டனொடு – சிறுத்தொண்டனும், கானதன் – வேடனும்,
பிரகலாதன் – பிரகலாதனும், அரியவல் விபீடணன் – அரிய வலிய
விபீடணனும், எனும்மகா புருடராம் – எனக் கூறும் பெருமக்கள் ஆகும்.

xxxx
47. தீவினை செய்தோர்
வாயிகழ்வு பேசிமிகு வாழ்விழந் தோன், சிவனை
வைதுதன் தலைபோ யினோன்,
மற்றொருவர் தாரத்தில் இச்சைவைத்து உடலெலாம்
மாறாத வடுவா யினோன்,
தாயத்தி னோர்க்குள்ள பங்கைக் கொடாமலே
சம்பத் திகழ்ந்து மாய்ந்தோன்,
தக்கபெரி யோர்தமை வணங்கா மதத்தினால்
தந்திவடி வாய்அ லைந்தோன்,
மாயனைச் சபையதனில் நிந்தைசெய் தொளிகொள்நவ
மணிமுடி துணிந்து மாய்ந்தோன்,
வருநகுட னொடுதக்கன் குருடன்
மகன், வழுதி, சிசுபா லனாம்!
ஆயும்அறி வாளரொடு தேவர்பணி தாளனே!
அவனிபுகழ் அருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!
(இ-ள்.) ஆயும் அறிவாளரொடு தேவர்பணி தாளனே – ஆராய்கின்ற
அறிஞரும் அமரரும் பணியுந் திருவடியை உடையவனே!, அவனிபுகழ் –
உலகம் புகழும், அருமை ….. தேவனே!, வாய்இகழ்வு பேசிமிகு வாழ்வு
இழந்தோன் – வாயினாற் பிறரை இகழ்ந்துபேசித் தன் சிறந்த வாழ்வைப்
பறிகொடுத்தவன், சிவனை வைது தன் தலை போயினான் – சிவபிரானைப்
பழித்துத் தன் தலையை இழந்தவன், மற்றொருவர் தாரத்தில்
இச்சைவைத்து உடல் எலாம் மாறாத வடு ஆயினோன் – பிறர் மனைவியிடம் ஆசை கொண்டு
தன் மெய்யெலாம் நீங்காத வடுவைக் கொண்டவன், தாயத்தினோர்க்கு
உள்ள பங்கைக் கொடாமலே சம்பத்து இழந்து மாய்ந்தோன் – பங்காளிக்கு
உரிய பங்கைக் கொடாததால் (தனக்குரிய) செல்வத்தையும் போக்கிவிட்டு
மடிந்தவன், தக்க பெரியோர் தமை வணங்கா மதத்தினால் தந்திவடியாய்
அலைந்தோன் – தகுதியான சான்றோரை வணங்காத செருக்கினால்
யானைவடிவாக அலைந்தவன், மாயனைச் சபையதனில் நிந்தனைசெய்து
ஒளிகொள் நவமணி முடிதுணிந்து மாய்ந்தோன் – கண்ணனை அவையிலே
பழித்துக் கூறியதனால் கதிர்விடும் நவமணி முடியை இழந்து இறந்தவன்
(முறையே,) வரு நகுடனோடு – (இந்திர பதவிக்கு) வந்த நகுடனும்,
தக்கன் – தக்கனும், அயிராவதன் – இந்திரனும்; குருடன் மகன் –
துரியோதனனும், வழுதி – பாண்டியனும், சிசுபாலன் ஆம் – சிசு பாலனும்
ஆவார்.

Xxxxx subham xxxxx
TAGS_ நல்வினை, தீவினை செய்தோர் அறப்பளீசுர சதகம், அம்பலவாணர்