
WRITTEN BY S NAGARAJAN
Post No. 11,627
Date uploaded in London – 5 JANUARY 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
அருள்வாயே! – 9
(75 முதல் 84 முடிய)
ச.நாகராஜன்
அருணகிரிநாதர் ‘அருள்’ என்ற சொல்லைத் திருப்புகழில் ஆண்ட இடங்கள் ஏராளம்.
அவர் அருள்வாயே என்று கூறும் இடங்களின் நீண்ட தொகுப்பு இது:
படித்து மகிழ்வோம்; பாடிப் பரவுவோம்!
75) திருவருணை
கனக மியற்றித் திரிந்து துவளு மெனைச்சற் றறிந்து
கவலை யொழித்தற் கிரங்கி யருள்வாயே
பாடல் எண் 428 – ‘தலையை மழித்து‘ எனத் தொடங்கும் பாடல்
பொருள் : பொன் வேண்டி இரச வாதத்தால் பொன்னை ஆக்கித் திரிந்து சோர்வடையும் என்னைக் கொஞ்சம் கவனித்து என் கவலையை ஒழிக்க வேண்டி என் மேல் இரக்கம் கொண்டு அருள்வாயாக.
76) திருவருணை
நினது தாளை நாடோறு மனதி லாசை வீடாமல்
நினையு மாறு நீமேவி யருள்வாயே
பாடல் எண் 435 – ‘புலையனான‘ எனத் தொடங்கும் பாடல்
பொருள் : உன் திருவடிகளையே தினமும் மனதில் ஆசை அழியாமல் நினைக்கும் வண்ணம் நீ என் உள்ளத்திலிருந்து அருள்வாயாக
77) திருவருணை
சிவமார்தி ருப்புகழை எனுநாவி னிற்புகழ
சிவஞான சித்திதனை யருள்வாயே
பாடல் எண் 441 – ‘வலி வாத பித்தமொடு‘ எனத் தொடங்கும் பாடல்
பொருள் : மங்கலம் நிறைந்த உனது திருப்புகழை என் நாவாறப் புகழ்வதற்கு சிவஞான சித்தியைத் தந்தருள்வாயாக
78) திருவருணை
முறைமை யாகநி னடிகள் மேவவே
முனிவு தீரவந் தருள்வாயே
பாடல் எண் 443 – ‘விதி அதாகவே‘ எனத் தொடங்கும் பாடல்
பொருள் : முறைமைப் படி உனது திருவடிகளை அடையுமாறு, உனது கோபம் தீர்ந்து வந்து அருள்வாயாக
79) திருவருணை
உறவாடி
நாடியது வேகதியெ னாசுழலு மோடனைநின்
ஞானசிவ மானபத மருள்வாயே
பாடல் எண் 445 – ‘வீறு புகழான பனி‘ எனத் தொடங்கும் பாடல்
பொருள் : (அந்த வேசையர்களுடன்) உறவாடி அவர்களுடன் ஆடுவதே கதி என்று சுழல்கின்ற மூடனாகிய எனக்கு உனது சிவஞான மயமான திருவடியைத் தந்தருள்வாயாக
80) திருவருணை
கூறுமடி யார்கள்வினை நீறுபட வே அரிய
கோலமயி லானபத மருள்வோனே
பாடல் எண் 445 – ‘வீறு புகழான பனி‘ எனத் தொடங்கும் பாடல்
பொருள் : உன்னைப் போற்றும் அடியார்களின் வினை தூளாகிப் போக, அருமையான அழகிய மயிலான பதவியை அருள்பவனே!
81) சிதம்பரம்
பரமகுரு அருள்நி னைந்திட் டுணர்வாலே
பரவுதரி சனையை யென்றெற் கருள்வாயே
பாடல் எண் 428 – ‘இருவினையின் மதி‘ எனத் தொடங்கும் பாடல்
பொருள் : சிறந்த குருவாகிய உன் அருளை நினைவில் வைத்து, ஞானத் தெளிவு பெற்று, போற்றுதற்குரிய உன் தரிசனக் காட்சியை என்றைக்கு எனக்கு அருளப் போகிறாய்?
82) சிதம்பரம்
தொடைசிந்திட மொழிகொஞ்சிச அளகஞ்சுழ லாட
விழிதுஞ்சிட இடைதொய்ஞ்சிட மயல்கொண்டணை கீனும்
சுகசந்திர முகமும்பத அழகுந்தமி யேனுக் கருள்வாயே
பாடல் எண் 467 – ‘முகசந்திர புருவம்‘ எனத் தொடங்கும் பாடல்
பொருள் :- மாலை சிதறவும், பேச்சு கொஞ்சவும், கூந்தல் சுழன்று அசையவும், கண்கள் சோர்வு அடையவும், இடை தளரவும், காம மயக்கம் கொண்டு நான் விலைமாதர்களைத் தழுவிய போதிலும், அழகிய சந்திரன் போன்ற உனது முக தரிசனத்தையும், திருவாயால் கூறும் உபதேச மொழியையும் அடியேனுக்குத் தந்தருள்வாயாக!
83) சிதம்பரம்
அங்கமிக மெலியாதே
அன்புருக அருள்வாயே
பாடல் எண் 473 – ‘செம் கலச‘ எனத் தொடங்கும் பாடல்
பொருள் : என்னுடல் மிகவும் மெலிவு அடையாமல், உன் அன்பால் என் உள்ளம் உருகும் படி அருள்வாயாக
84) சிதம்பரம்
துக்கத் தேபர வாமல்ச தாசிவ
முத்திக் கேசுக மாகப ராபர
சொர்க்கப் பூமியில் லேறிட வேபத மருள்வாயே
பாடல் எண் 480 – ‘அக்குப் பீளை‘ எனத் தொடங்கும் பாடல்
பொருள் ; துக்கம் பெருகி வேதனைப்படாமல், எப்பொழுதும் மங்களகரமாயுள்ள முக்தி நிலையில் சுகமாக எவற்றிலும் மேம்பட்ட சொர்க்க நாட்டில் நான் கரை ஏறும்படி உன் திருவடியைத் தந்தருள்வாயாக!
குறிப்பு & நன்றி : https://www.kaumaram.com தளத்தில் உள்ளபடி பாடல் எண் தரப்பட்டுள்ளது. முழுத் திருப்புகழ்ப் பாடலையும் அதன் விளக்கத்தையும் இதில் காணலாம்.
***