
Post No. 11,659
Date uploaded in London – 12 JANUARY 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
ஜனவரி 12 – ஸ்வாமி விவேகானந்தர் ஜெயந்தி தினம்!
ஸ்வாமிஜி தோற்றம் :- ஜனவரி 12, 1863
ஸ்வாமிஜி சமாதி தினம் :- ஜூலை 4, 1902
ஸ்வாமி விவேகானந்தர் வாழ்க்கையில் சுவையான சம்பவங்கள்!
ச.நாகராஜன்
1
ஸ்வாமி விவேகானந்தர் இமயமலையில் நடைப்பயணமாக வெகு தூரம் நடந்து கொண்டிருந்தார்.
வழியில் ஒரு வயதான மனிதர் ஸ்வாமிஜியைப் பார்த்தார்.
‘ஓ ஸ்வாமிஜி! நான் நடந்து நடந்து மிகவும் களைத்து விட்டேன்.
இந்த மலைப் பாதையில் பாதி தூரம் வந்து விட்டேன்.
இனி மீதி தூரத்தை எப்படி ஏறிக் கடப்பது?” என்று அவர் ஸ்வாமிஜியைக் கேட்டார்.
ஸ்வாமிஜி புன்சிரிப்புடன் அவரைப் பார்த்தார், பேசலானார்: “ஒன்றும் கவலைப்பட வேண்டாம். உங்கள் காலடிக்குக் கீழே பாருங்கள். நீங்கள் கடந்து வந்த பாதை தெரிகிறதா? இதை இவ்வளவு தூரம் கடந்தது யார்? நீங்களே தான்! இதே சாலை தான் உங்கள் முன் இருக்கிறது. இதுவரை எப்படி நீங்களே இதைக் கடந்து வந்து சாதித்தீர்களோ அதை இன்னும் உங்களால் செய்ய முடியுமே! நடந்து முன்னேறுங்கள். வெற்றி தான்!”
என்றார்.
ஸ்வாமிஜியின் பேச்சால் உத்வேகம் பெற்ற அவர் புத்துணர்ச்சி பெற்று அவரை வணங்கி விட்டு மலை மீது ஏறலானார்.
2
ஸ்வாமிஜி ஒரு முறை மேலை நாட்டில் ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தார். அவருடன் அதே பெட்டியில் அவருக்கு எதிரில் இருவர் உட்கார்ந்திருந்தனர். அவரது உடையைப் பார்த்த அந்த இருவரும் அவரைக் கிண்டல் செய்ய ஆரம்பித்தனர்.
ஒருவன் தனது நண்பனைப் பார்த்துச் சொன்னான்: “ இந்த ஆளைப் பார்! இவரை ‘ஃபூல்’ என்று நான் நினைக்கிறேன். நீ என்ன நினைக்கிறாய்?”
அதற்கு அவனது நண்பன் பதில் சொன்னான்; “இல்லை இல்லை, நீ சொல்வது தப்பு. இவர் ஒரு இடியட். அது தான் சரியாக இருக்கும்.”
இருவரும் மாறி மாறித் தான் சொல்வதே சரி என்று ஆங்கிலத்தில் பேசிக் கொண்டிருந்தனர்.
அவர்களுக்கு இப்படிப்பட்ட காவி உடை அணிந்த ஒருவருக்கு ஆங்கிலமே தெரியாது என்ற எண்ணம்.
நடுவில் டிக்கட் பரிசோதகர் வந்த போது ஸ்வாமிஜி, “எனக்கு குடிக்க தண்ணீர் வேண்டுமே? எங்கே கிடைக்கும்?” என்று தெளிவான உச்சரிப்பில் ஆங்கிலத்தில் கேட்டார்.
அவரும் தக்க பதிலைச் சொல்லி விட்டு அகன்றார்.
இவரது பேச்சைக் கேட்ட எதிரிலிருந்த இருவரும் அசந்து போனார்கள்.
பிரமிப்புடன். “என்ன உங்களுக்கு ஆங்கிலம் தெரியுமா? நாங்கள் இவ்வளவு நேரம் உங்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்ததைக் கேட்டுக் கொண்டே தானே இருந்தீர்கள்?” என்று கூறினர்.
ஸ்வாமிஜி புன்முறுவல் பூத்தார்.
பிறகு அவர்கள் வியப்புடன், “ நீங்கள் யார்?” என்று கேட்டனர்.
ஸ்வாமிஜி அவர்கள் இருவரையும் தன் பக்கத்தில் தன் தோளுக்கு அருகே இழுத்துக் கொண்டார். நடுவில் ஸ்வாமிஜி இருக்க ஆளுக்கு ஒரு பக்கமாக அவர்கள் இருந்தனர்.
“ஓ! நான் யார் என்றா கேட்கிறீர்கள்! நான் ஃபூலுக்கும் இடியட்டுக்கும் நடுவில் இருப்பவன்” என்றார்.
அவர்கள் வெட்கித் தலை குனிந்தனர்.
3

ஸ்வாமிஜி பள்ளியில் படித்துக் கொண்டிருந்த போது ஒரு நாள் வகுப்பறையில் ஆசிரியர் வந்து பாடம் நடத்திக் கொண்டிருந்தார்.
நரேந்திரன் (பின்னால் விவேகானந்தர் என்ற பெயரைப் பெற்ற ஸ்வாமிஜி) தன் நண்பர்களிடம் ஒரு கதையைச் சொல்லிக் கொண்டிருந்தார்.
அவர் கதை சொன்ன விதம் நண்பர்களை ஈர்த்தது. பாடத்தை யாரும் கவனிக்கவில்லை. கதையையே கேட்டுக் கொண்டிருந்தனர்.
ஆசிரியர் யாரோ முணுமுணுத்த குரலில் பேசிக் கொண்டிருந்ததைக் கவனித்தார்.
“யார் அங்கே பேசுவது?” என்று கேட்டார். பதிலே வரவில்லை.
முணுமுணுப்பு சப்தம் வந்த இடத்தை நோக்கிய அவர் அங்கிருந்தவர்களிடம், “இது வரை நான் என்ன நடத்திக் கொண்டிருந்தேன் சொல்லுங்கள்” என்றார்.
யாரும் ஒன்றும் பேசவில்லை.
நரேந்திரன் மட்டும் அவர் நடத்திய பாடத்தைச் சொன்னார்.
தான் நடத்திய பாடத்திலிருந்து ஆசிரியர் கேள்விகள் கேட்கவே அனைத்திற்கும் அவர் பதிலைச் சொன்னார்.
ஆசிரியர் வியந்து போனார்.
அவரைத் தவிர மற்றவர்கள் அனைவரையும் பெஞ்சின் மீது நிற்கச் சொன்னார். அனைவரும் ஏறி நின்றனர்.
விவேகானந்தர் தானும் ஏறி நின்றார்.
“நீ ஏற வேண்டாம். இறங்கு” என்றார் ஆசிரியர்.
“ஸார்! நான் தான் இவ்வளவு நேரம் பேசியது. அவர்கள் கேட்கத் தான் செய்தனர். நான் தான் பெஞ்சின் மீது நிற்க வேண்டும்” என்றார் நரேந்திரன்.
அனைவரும் வியந்தனர்.
ஒரே சமயத்தில் பல விஷயங்களைக் கவனிக்கும் அவதான சக்தியை அவர் அப்போதே கொண்டிருந்தார்.
அது அனைவரையும் வியக்க வைத்தது!
இப்படி நூற்றுக் கணக்கான சம்பவங்கள் ஸ்வாமிஜியின் வாழ்க்கையில் உண்டு.
அனைத்தும் சுவையானவையே!
***Tags– ஸ்வாமி, விவேகானந்தர்