
Post No. 11,663
Date uploaded in London – 13 JANUARY 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
தொண்டைமண்டல சதகம் பாடல் 51
பட்டாடையைக் கிழித்துக் காட்டிய வெண்ணெய்நல்லூர் சடையப்ப முதலியார்!
ச.நாகராஜன்
திருவெண்ணெய்நல்லூரிலே வாழ்ந்து வந்த சடையப்ப முதலியார் பெரும் செல்வர். வந்தோருக்கெல்லாம் இல்லை என்று சொல்லாமல் வேண்டுவதைக் கொடுத்து வந்த வள்ளல். அவர் புகழ் சோழ நாடெங்கும் பரவி இருந்தது.
அப்போது புதிதாகப் பட்டம் ஏறிய சோழ ராஜன் சடையப்ப வள்ளலின் புகழைக் கேட்டு ஆச்சரியப்பட்டான். தன்னை ஏன் அவர் வந்து காணவில்லை என்று அவன் எண்ணினான். தனது அதிகாரத்தை வைத்து அவரது பொருளையெல்லாம் சோழன் கவர்ந்து கொண்டான்.
என்றாலும் கூட சடையப்பர் அவனை வந்து காணவில்லை.
அந்தக் காலத்தில் சீனாவிலிருந்து வர்த்தகன் ஒருவன் சோழ தேசம் வந்தான். அவன் தன்னுடன் இழை ஆயிரம் பொன் பெற்ற விசேஷ பட்டாடை ஒன்றைக் கொண்டு வந்திருந்தான்.
அந்தப் பட்டாடையை சோழ மன்னனிடம் அவன் காட்டவே, அதைப் பார்த்து பிரமித்த சோழ மன்னன் அதன் விலையைக் கேட்டான்.
சீன வணிகனும் அதன் விலையைச் சொன்னான்.
விலையைக் கேட்ட சோழன் திகைத்து விட்டான்.
தன்னிடம் அவ்வளவு செல்வம் இல்லையே என்று எண்ணிய அவன் வணிகனிடம் அது வேண்டாம் என்று சொல்லி விட்டான்.
வணிகன் நேராக வெண்ணெய்நல்லூர் வந்தான். சடையப்பரிடம் பட்டாடையைக் காட்டினான்.
அதன் நேர்த்தியைக் கண்டு மகிழ்ந்த சடையப்பர் அந்தப் பட்டாடையை வாங்கிக் கொண்டார். தரித்துக் கொண்டார்.
இப்படி, தன்னால் வாங்க முடியாத பட்டாடையை சடையப்பர் வாங்கி அணிந்திருக்கிறார் என்ற செய்தியைக் கேள்விப்பட்ட சோழ மன்னன் பொறாமையால் மனம் புழுங்கினான். அவரைக் கூப்பிட்டனுப்பினான். ஆனால் அவரோ வரவில்லை.
கோபமுற்ற அவன், உடனடியாக சடையப்பரை தன்னை வந்து காணுமாறு ஆணையிட்டான்.
அவரும் வந்தார்.
“நாம் முன்பு கூப்பிட்ட போது நீர் ஏன் வரவில்லை” என்று கோபத்துடன் கேட்டான் சோழ மன்னன்.
“துடையில் சிலந்தி. ஆகவே தான் வர முடியவில்லை” என்று பதிலளித்தார் சடையப்பர். ஆனால் அதை அரசன் நம்பவில்லை.
இதைப் புரிந்து கொண்டார் சடையப்பர்.

உடனே, தான் அணிந்திருந்த பட்டாடையைக் கீறிக் கிழித்து தன் துடைப்பக்கத்த்தில் சிலந்தியைக் காட்டிய சடையப்பர், “இதனால் தான் வர முடியவில்லை” என்றார்.
செல்வத்தையெல்லாம் சிறுகச் சிறுகப் பறித்து சடையப்பரை வறுமை நிலைக்குக் கொண்டு வந்து விட்ட போதிலும், அவர் விலை உயர்ந்த இந்தப் பட்டாடையை வாங்கியதை எண்ணிய சோழன் அதையும் கூட கொஞ்சமும் லக்ஷியம் செய்யாமல் கிழித்து விட்டு தனக்கு துடைப் புண்ணைக் காட்டியதைக் கண்டு வியந்து போனான்.
இப்படிப்பட்ட செய்கையை ஒரு தெய்வீகப் பிரபுவினால் மட்டுமே செய்ய முடியும் என்று எண்ணிய அவன் சடையப்பரை வெகுவாக மதித்து, அவரைத் தானே சென்று காண்பது தான் முறை என்று தேறினான்.
அவரை நன்கு உபசரித்து அனுப்பினான்.
இந்த வரலாறு பெரிதும் பேசப்பட்டது. இதை தொண்டைமண்டல சதகம் தனது 51வது பாடலில் புகழ்ந்து கூறுகிறது.
பாடல் இதோ:
தெள்ளந்தெளிந்தவர் செய்தக்கதோர்முறை செய்யிலையா
எள்ளத்தனை மலையத்தனையாமென்ப தின்றறிந்தோ
முள்ளற்கரிய துடையாடைகீறிய தொன்றுமொரு
வள்ளற்றகைமையோ டொத்துளதாற்றொண்டை மண்டலமே
பொருள் : நூல்களைக் கற்றுத் தெளிந்த அறிவுடையோர் தாம் செய்யத் தகுந்த செயல்களில் ஒன்றை அவ்வளவாக நிரம்பச் செய்யாமல் ஒரு வகையாகச் சிறிது செய்தாலும் கூட, அது எள்ளத்தனை சிறியதாக இருந்தாலும் கூட, பிறருக்கு அது மலையத்தனை அளவு பெரிதாகும் என்று சொல்வதற்கு உதாரணமாக வெண்ணெய்நல்லூர் சடையப்ப முதலியார் அரசன் சமூகத்தின் முன் தனது துடை ஆடையைக் கிழித்த சிறு செயலினாலேயே கண்டோம். எவ்வாறெனில் அவர் செய்த அந்த சிறு செயலானது அரசனுக்கு பிரமிக்கத் தக்க பெரும் செயலாக இருந்தது. இத்தகைய வேளாண் குடிமையரைக் கொண்டது தொண்டை மண்டலமே.
***