
Post No. 11,686
Date uploaded in London – – 19 JANUARY 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx
பிராமணர், அரசர் , வணிகர், வேளாளர் ஆகிய நான்கு ஜாதிகளையும் புகழ்ந்து எழுதிய 4 பாடல்கள் இவை.
உடனே நமக்கு விவேக சிந்தாமணி பாடலும், திரை கடல் ஓடியும் திரவியம் தேடு என்ற முது மொழியும் நினைவுக்கு வரும். அதுமட்டுமல்ல உழவரின் பெருமையை திருவள்ளுவர் போற்றியது போல எவரும் போற்றியதில்லை.அந்தக் குறள்களும் வேளாளர் பெருமையை பறை சாற்றும் .
கீழ்கண்ட பாக்களை 4 ஜாதிகளின் குணங்களுடன் ஒப்பிடலாம்.
அந்தணர் அறம் மாறினால்..
இந்திரன் பதங்கள் குன்றும் இறையவர் பதங்கள் மாறும்,
மந்திர நிலைகள் பேரும் மறுகயல் வறுமை யாகும்,
சந்திரன் கதிரோன் சாயும் தரணியிற் றேவு மாளும்,
அந்தணர் கருமம் குன்றில் யாவரே வாழ்வர் மண்ணில்.
—-விவேக சிந்தாமணி
அந்தணர்கள் செய்கின்ற இறைவழிபாடுகள், யாகங்கள் குறைந்து போனால் இந்திராதி தேவர்களின் அருள் குறைந்துபோகும், அரசனின் நல்லாட்சி மாறும், மந்திரங்களின் சக்தி குறையும், நாட்டில் வறுமையும் தீமையும் உண்டாகும், சந்திரனின் சூரியனின் இயல்பு நிலை மாறி கெடுதி உண்டாகும். இவ்வாறு நிகழ்ந்தால் மண்ணில் யார் தான் வாழ முடியும்?- —-விவேக சிந்தாமணி
வள்ளுவனும் சொல்லுவான்
மறப்பினும் ஒத்துக்கொளல் ஆகும் பார்ப்பான்
பிறப்பு ஒழுக்கம் குன்றக்கெடும் (134)
ஐயா, இந்த ஐயர்கள் வேதத்தை மறந்தால் கூடப் போனால் போகட்டும் என்று விட்டு விடலாம். காரணம்—திருப்பியும் படித்து மனப்பாடம் செய்து விடலாம். ஆனால் அவர்கள் பிறந்த காலத்திலேயே அவர்களிடம் சில ஒழுக்கங்கள் எதிர் பார்க்கபடுகின்றன. அது ஒரு முறை கெட்டுவிட்டாலும் ஆபத்து என்கிறார் வள்ளுவர்.
XXXX
க்ஷத்ரியர்கள்
திரு வள்ளுவரும் அரசர்களின் சிறப்பைச் சொல்லுகையில் யதா ராஜா ததா ப்ரஜா –என்ற கருத்தைக் குறைந்தது இரண்டு குறள்களிலாவது வைத்து விடுகிறார் :–
குடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன்
அடிதழீஇ நிற்கும் உலகு- திருக்குறள் 544
பொருள்
குடியைப் பொருந்தி முறைமை செலுத்துகின்ற பெரிய நில மன்னன் அடியைப் பொருந்தி நிற்கும் உலகு.
XX
இன்னொரு குறளில் (542)
வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்
கோல்நோக்கி வாழுங் குடி.–542
பொருள்
உலகத்தில் உள்ள உயிர்கள் எல்லாம் மழையை நம்பி வாழ்கின்றன, அதுபோல் குடிமக்கள் எல்லாம் அரசனுடைய செங்கோலை நோக்கி வாழ்கின்றனர்.
XXXX
வணிகர் சிறப்பு
வணிகர் சிறப்பு பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை என்பதில் வந்து விடுகிறது ; சங்க இலக்கியம் முழுதும் பொருள் தேடிச் செல்லும் காதலர்கள், கார் காலத்துக்கு முன்னர் வந்து சேர வேண்டுமே என்ற கவலையைக் காட்டுகிறது.
திரை கடல் ஓடியும் திரவியம் தேடு என்ற முது மொழி, வணிகர்களுக்காகவே சொல்லப்பட்டுள்ளது
XXX
விவசாயிகள் வாழ்க
உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர்—குறள் 1033
பொருள்
உழவு செய்து அதனால் கிடைத்ததைக் கொண்டு வாழ்கின்றவரே உரிமையோடு வாழ்கின்றவர், மற்றவர் எல்லோரும் பிறரைத் தொழுது உண்டு பின் செல்கின்றவரே.
உழுவார் உலகத்தார்க் காணியஃ தாற்றா
தெழுவாரை எல்லாம் பொறுத்து—குறள் 1032:
உழவு செய்ய முடியாமல் உயிர் வாழ்கின்றவர், எல்லாரையும் தாங்குவதால், உழவு செய்கின்றவர் உலகத்தாற்கு அச்சாணி போன்றவர்.
இதைவிட அருமையாகச் சொல்ல முடியாது உழவர்கள்தான் உலகத்திற்கே அச்சாணி
Xxxx
தமிழ் இணைய பல்கலைக்கழகத்திலிருந்து (Tamil VU) கிடைத்த 4 பாடல்கள் இதோ :-

81. மறையோர் சிறப்பு
ஓராறு தொழிலையும் கைவிடார்; சௌசவிதி
ஒன்றுதப் பாது புரிவார்;
உதயாதி யிற்சென்று நீர்படிகு வார்; காலம்
ஒருமூன்றி னுக்கும் மறவா
தாராய்ந்து காயத்ரி யதுசெபிப் பார்;நாளும்
அதிதிபூ சைகள்பண் ணுவார்;
யாகாதி கருமங்கள் மந்த்ரகிரி யாலோபம்
இன்றியே செய்து வருவார்;
பேராசை கொண்டிடார்; வைதிகநன் மார்க்கமே
பிழையா திருக்கும் மறையோர்
பெய்யெனப் பெய்யும்மு கில்;அவர்மகி மையெவர்களும்
பேசுதற் கரித ரிதுகாண்!
ஆரார் நெடுஞ்சடில அமலனே! எனையாளும்
அண்ணலே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!
(இ-ள்.) ஆர் ஆர் நெடுஞ் சடில அமலனே – ஆத்திமாலை தரித்த
நீண்ட சடையை உடைய தூயவனே!, எனை ஆளும் அண்ணலே – என்னைக்
காக்கும் பெரியோனே!, அருமை …… தேவனே!, வைதிக நல்மார்க்கமே
பிழையாது இருக்கும் மறையோர் – மறைநெறியாகிய நல்ல வழியிலே தவறாது
செல்லும் மறையவர்கள், ஓர் ஆறு தொழிலையும் கைவிடார் – (தமக்கு உரிய)
ஆறு தொழில்களையும் விடமாட்டார், சௌசவிதி ஒன்று தப்பாது புரிவார் –
தூய்மை விதிகளை ஒன்றேனும் விடாமற் செய்வார், உதய ஆதியில் சென்று
நீர் படிகுவார் – வைகறையிலே போய் நீராடுவார், காலம் ஒரு மூன்றினுக்கும்
மறவாதுஆராய்ந்து காயத்திரியது செபிப்பார் – முக்காலத்தினும் மறவாமல் காயத்திரி மந்திரத்தைத் தெரிந்து ஓதுவார், நாளும் அதிதி பூசைகள் பண்ணுவார் –
எப்போதும் விருந்தினரை ஓம்புவார், யாகாதி கருமங்கள் மந்திர
கிரியாலோபம் இன்றியே செய்துவருவார் – வேள்வி முதலிய தொழில்களை மந்திரமும் செயலும் குறைவு இல்லாமற் செய்துவருவார், பேராசை
கொண்டிடார் – பேராசை கொள்ளமாட்டார், பெய்யென முகில் பெய்யும் –
(இவர்கள்) பெய் என்று கூறியவுடன் மழை பெய்யும், அவர் மகிமை
எவர்களும் பேசுதற்கு அரிது, அரிது – அவருடைய மேன்மை யாவராலும்
கூற இயலாதது! இயலாதது!
(வி-ரை.) காண் : முன்னிலை அசைச்சொல். ஆறு தொழில் : ஓதல்,
ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல், ஏற்றல். (வேட்டல் – வேள்வி
செய்தல். வேட்பித்தல் – வேள்வி செய்வித்தல்.) உதயம் – கதிரவன்
தோன்றும் காலம். உதயாதி என்பது அதற்கும் முற்காலம். ஆகவே,
வைகறை. வைதிகம் வேத சம்பந்தமானது (தத்திதாந்த நாமம்.)
XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX
82. அரசர் சிறப்பு
மனுநீதி முறைமையும், பரராசர் கொண்டாட
வரும்அதிக ரணவீ ரமும்,
வாள் விசய மொடுசரச சாதன விசேடமும்,
வாசிமத கரியேற் றமும்,
கனமாம் அமைச்சரும், பலமான துர்க்கமும்,
கைகண்ட போர்ப்ப டைஞரும்,
கசரத பதாதியும், துரகப்ர வாகமும்
கால தேசங்க ளெவையும்
இனிதாய் அறிந்ததா னாபதிக ளொடுசமர்க்
கிளையாத தளகர்த் தரும்,
என்றும்வற் றாததன தானிய சமுத்திரமும்,
ஏற்றம்உள குடிவர்க் கமும்,
அனைவோரும் மெச்ச இங்கிவையெலாம் உடையபேர்
அரசராம்! அருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!
(இ-ள்.) அருமை ……. தேவனே!, மனுநீதி முறைமையும் – மனுவினால்
ஏற்படுத்தப்பெற்ற அரசநெறி ஒழுங்கும், பரராசர் கொண்டாட வரும் அதிக
ரணவீரமும் – மற்ற மன்னர்கள் புகழுமாறு காணப்படும் சிறந்த போர்
வீரமும், வாள் விசயமொடு சரசசர் தனவிசேடமும் – வாள்கொண்டு
வெற்றிபெறுவதுடன் இனிய முறையிலே தொழிலை முடித்துக்கொள்ளும்
சிறப்பும், வாசி மதகரி ஏற்றமும் – குதிரை யேற்றம் யானையேற்றங்களில்
பயிற்சியும், கனம்ஆம் அமைச்சரும் – பெருமை மிக்க மந்திரிகளும், பலமான
துர்க்கமும் – உறுதியான அரணும், கைகண்ட போர்ப்படைஞரும் – பயிற்சி
பெற்ற போர் வீரரும், கசரத பதாதியும் – யானை தேர் காலாட்களும்,
துரகப்ரவாகமும் – குதிரை வெள்ளமும், காலதேசங்கள் எவையும் இனிதாய்
அறிந்த தானாபதிகளோடு – காலம் இடம் முதலானவற்றையெல்லாம் நன்றாக
உணர்ந்த தானத் தலைவருடனே, சமர்க்கு இளையாத தளகர்த்தரும் –
போர்க்குப் பின்னடையாத படைத்தலைவரும், என்றும் வற்றாத தனதானிய
சமுத்திரமும் – எப்போதும் குறையாத பொன்னும் தானியமும் ஆகிய
பெருக்கும், ஏற்றம் உளகுடிவர்க்கமும் – (வெளிநாட்டில் இருந்தும்) வந்து
சேரும் இயல்புடைய பலவகைக் குடிகளும், இங்கு இவையெலாம்
அனைவோரும் மெச்ச உடைய பேர் அரசர் ஆம் – இங்குக் கூறப்பட்ட
இவற்றையெல்லாம் யாவரும் புகழப் பெற்றவர்களே அரசராவர்.
(வி-ரை.) இரணம் – புண். புண்படும் வீரம் போர்க்கள வீரம்
வாள்விசயம் – போரில் வெற்றிபெறுதல் (தண்டம்) சரச சாதனம் – சாமபேத
தானங்கள். எனவே நால்வகைச் சூழ்ச்சிகளாயின. அரண் : மதில், நீர், காடு,
மலை என்னும் நால்வகை அரண்கள். ஏற்றம் : மேன்மை யென்பதைவிடக்
(குடி) யேற்றத்தைக் குறிப்பதே சிறப்பாகும்.
XXXXXXXXXXXXXXXXXXXXX
83. வணிகர் சிறப்பு
நீள்கடல் கடந்திடுவர்; மலையாள மும்போவர்!
நெடிதுதூ ரந்தி ரிந்தும்
நினைவுதடு மாறார்கள்; சலியார்கள்; பொருள்தேடி
நீள்நிலத் தரசு புரியும்
வாளுழவ ரைத்தமது கைவசம் செய்வார்கள்;
வருமிடம் வராத இடமும்
மனத்தையும் அறிந்துதவி ஒன்றுநூ றாயிட
வளர்ப்பர்;வரு தொலைதொ லைக்கும்
ஆள்விடுவர்;மலிவுகுறை வதுவிசா ரித்திடுவர்
அளவில்பற் பலச ரக்கும்
அமைவுறக் கொள்வர்;விற் பார்கணக் கதிலணுவும்
அறவிடார்; செலவு வரிலோ
ஆளியொத் தேமலையின் அளவும் கொடுத்திடுவர்
அருள் வைசியர்! அருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!
(இ-ள்.) அருமை …….. தேவனே!, அருள் வைசியர் – அருளுடைய
மனத்தவரான வணிகர், நீள் கடல் கடந்திடுவர் – (வணிகத்திற்கு)ப்
பெருங்கடலையும் கடந்து செல்வர், மலையாளமும் போவர் –
மலைநாடுகளையும் சுற்றுவர், நெடிது தூரம் திரிந்தும் நினைவு தடுமாறார்கள்
– நீண்ட தொலைவு அலைந்தாலும் எண்ணத்திலே கலக்கம் அடையார்,
சலியார்கள் – சோர்வு அடையார், பொருள்தேடி நீள் நிலத்து அரவுபுரியும்
வாள் உழவரைத் தமது கைவசம் செய்வார்கள் – பொருளையீட்டி
வைத்துக்கொண்டு பெரிய நாட்டை ஆளும் வாளேந்திய அரசர்களைத் தம்கையிற் போட்டுக்கொள்வார்கள், வரும் இடம் (உம்) வராத இடமும்
மனத்தையும் அறிந்து உதவி – (பொருள்) வரும் இடத்தையும் வராத
இடத்தையும் (பொருள்வாங்குவோர்) உள்ளத்தையும் தெரிந்து (பொருள்)
கொடுத்து, ஒன்றுநூறா ஆயிட வளர்ப்பார் – ஒரு பொருள் நூறாக வளரும்படி யீட்டுவர்,
வரு தொலை தொலைக்கும் ஆள்விடுவர் – (பொருள்) வரக்கூடிய நீண்ட
தொலைவுக்கும் ஆளைச் செலுத்துவர், மலிவு குறைவது விசாரித்திடுவர் –
(பொருள்) மிகுதியையும் குறைவையும் கேட்டறிவர், அளவு இல் பற்பல
சரக்கும் அமைவுறக்கொள்வர் – எல்லை அற்ற பலவகையான
பொருள்களையும் பொருத்தம் அறிந்து வாங்குவர், விற்பார் – விற்பார்கள்,
கணக்கதில் அணுவும் அற விடார் – கணக்கினில் இம்மியும் பிசக விட
மாட்டார்கள், செலவு வரிலோ ஆளி யொத்தே மலையின் அளவும்
கொடுத்திடுவர் – (ஒழுங்கான) செலவு வந்தாலோ சிங்கம் போல அஞ்சாமல் மலையளவாயினும் செலவழிப்பார்கள்.
(வி-ரை.) வாள் உழவர் : அரசர், (வாளினாலே தமது முயற்சியைச்
செய்வோர்.)
XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX
84. வேளாளர் சிறப்பு
யசனாதி கருமமும் தப்பாமல் வேதியர்
இயற்றிநல் லேர்பெ றுவதும்,
இராச்யபா ரஞ்செய்து முடிமன்னர் வெற்றிகொண்
டென்றும்நல் லேர்பெ றுவதும்,
வசனாதி தப்பாது தனதா னியந் தேடி
வசியர்நல் லேர்பெ றுவதும்,
மற்றுமுள பேரெலாம் மிடியென்றி டாததிக
வளமைபெற் றேர்பெ றுவதும்,
திசைதோறும் உள்ளபல தேவா லயம்பூசை
செய்யுநல் லேர்பெ றுவதும்,
சீர்கொண்ட பைங்குவளை மாலைபுனை வேளாளர்
செய்யும்மே ழிப்பெ ருமைகாண்
அசையாது வெள்ளிமலை தனில்மேவி வாழ்கின்ற
அண்ணலே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!
(இ-ள்.) வெள்ளிமலைதனில் அசையாது மேவி வாழ்கின்ற அண்ணலே
– வெள்ளிமலையில் எப்போதும் பொருந்தி வீற்றிருக்கும் பெரியோனே!,
அருமை …… தேவனே!, வேதியர் யசனம்ஆதி கருமமும் தப்பாமல் இயற்றி
நல்ஏர் பெறுவதும் –மறையவர் வேள்வி முதலிய தொழில்களைத் தவறாமற்
செய்து பேரழகு பெறுவதும், முடிமன்னர் என்றும் வெற்றிகொண்டு இராச்சிய
பாரம் செய்து நல் ஏர் பெறுவதும் – முடியரசர் எப்போதும் பகைவரை
வென்றிகொண்டு, ஆட்சி புரிந்து பேரழகடைவதும், வசியர் வசனம் ஆதி
தப்பாது தனதானியம் தேடி நல் ஏர் பெறுவதும் – வணிகர் சொல் முதலிய
பிறழாமல் பொன்னும் தானியமும் ஈட்டிப் பேரழகு பெறுவதும், மற்றும் உள
பேரெலாம் மிடி என்றிடாது அதிக வளமை பெற்று ஏர் பெறுவதும் – மேலும்
உள்ள யாவரும் வறுமை என்று கூறாமல் மிக்க வளம் பெற்று அழகுறுவதும்,
திசைதோறும் உள்ள பல தேவாலயம் பூசை செய்யும் நல் ஏர் பெறுவதும் –
எல்லாத் திக்கினும் இருக்கும் பல திருக்கோயில்களும் வழிபாடு பெற்று
நல்லழகு பெறுவதும், சீர் கொண்ட பைங்குவளை மாலை புனை வேளாளர்
செய்யும் மேழிப் பெருமை – புகழ் பெற்ற பசிய குவளை மாலை அணிந்த வேளாளர் புரியும் உழவின் பெருமையாகும்.
(வி-ரை.) யசனம் – வேள்வி. வைசியர் என்பது வசியர் எனச் செய்யுள்
விகாரம் பெற்றது.
—–SUBHAM—–
Tags– ஜாதிகள், பிராமணர் , க்ஷத்ரியர் , வைசியர் , வேளாளர்