
Post No. 11,698
Date uploaded in London – – 22 JANUARY 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx
எதை எதை காசு கொடுக்காமல் பெறக்கூடாது என்றும் எதை எந்த ஜாதியினர் கொடுத்தாலும் வாங்கலாம் என்றும் முதல் பாடலில் சொல்கிறார் அம்பலவாணர். பிரமணர்களைத் திட்டினால் ஆயுள் குறையும் என்றும் எச்சரிக்கிறார்.
அடுத்த பாடலில் தத்துவங்கள் என்ன என்று எண்ணிக் காட்டுகிறார்.
மின்னுவதெல்லாம் பொன் அல்ல;
வெளுத்தது எல்லாம் பால் அல்ல ;
பூணுல் அணிந்தவர் எல்லாம் ஐயர் அல்ல;
உயர்ந்தோர் HIGHER ஹையர் = ஐயர் ;
நிமிர்ந்த நன்னடை, நேர் கொண்ட பார்வை,
திமிர்ந்த ஞானச் செருக்குடையோர் ; எவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டு ஒழுகுவோர் பிராமணாள்; வறுமையில் வாடினாலும், என் ஜாதியை கீழ் ஜாதி பட்டியலில் சேருங்கள் என்று கேட்காதவர், கெஞ்சாதவர் உண்மையிலேயே HIGHER ஹையர் தானே?
ஆகவே, அம்பலவாணர் சொல்லும், ஒழுக்கம் உடைய அந்தணருக்கு ஆதரவு தாருங்கள்.
பழகினும் பார்ப்பாரைத் தீப்போல் ஒழுகு என்ற என்னுடைய பழைய கட்டுரை இதோ::–
பேரறிவாளன், உலகின் முகல் பொருளாதார நூல் எழுதிய நிபுணன் ஆகிய சாணக்கியன் 2300 ஆண்டுகளுக்கு முன்னர் ப்ராஹ்மணாள் பற்றி ஒரு பெரிய எச்சரிக்கை விடுக்கிறான்.:
இரண்டு பிராமணர்கள் நின்று கொண்டிருந்தால் குறுக்கே போகாதே!
பிராமணன் இருந்தால் அவனுக்கு எதிரே கால் நீட்டாதே. ;
இதோ தமிழ், ஸம்ஸ்க்ருத கவிதைகள்!!!
விப்ரயோர்விப்ரவஹ்ன்யோஸ்ச தம்பத்யோஹோ ஸ்வாமிப்ருத்யர்யோஹோ
அந்தரேண ந கந்தவ்யம் ஹலஸ்ய வ்ருஷபஸ்ய ச
சாணக்கிய நீதி, அத்தியாயம் 7, ஸ்லோகம் 5
பொருள்—“இரண்டு பிராமணர்களுக்குக் குறுக்கே போகாதே; ப்ராஹ்மணனுக்கும் அக்னிக்கும் (தீ) குறுக்கே போகாதே போகாதே; அவ்வாறே கணவன்– மனைவி, எஜமானன்–சேவகன் (முதலாளி- தொழிலாளி), உழுகலன் (ஏர்)- காளை மாடு இவர்களுக்கு இடையிலும் செல்லாதே.
பாதாப்யாம் ந ஸ்ப்ருசேதக்னிம் குரும் ப்ராஹ்மணமேவ ச
நைவ காம் ந குமாரீம் ச ந வ்ருத்தம் ந சிசும் ததா
சாணக்கிய நீதி, அத்தியாயம் 7, ஸ்லோகம் 6
பொருள்
அக்னி, ஆசிரியர், ப்ராஹ்மணன், பசு மாடு, இளம் பெண், முதியவர், குழந்தை ஆகியோருக்கு முன்னால் காலை நீட்டி உட்காராதே, படுக்காதே..
xxx
பழகினும் பார்ப்பாரைத் தீப்போல் ஒழுகு!
அந்தக் காலத்தில் ப்ராஹ்மணர்கள் தூய ஒழுக்கத்தின் சின்னமாக விளங்கினர்; அந்தக் காலத்தில் மூவேந்தர்களும் கூட ப்ராஹ்மணர்களைக் கண்டு அஞ்சினர்.; சங்க இலக்கியத்தில் அதிகமான பாடல்களை இயற்றிய கபிலரையும் பரணரையும் கண்டு சேர சோழ பாண்டியர்கள் மரியாதையுடன் கூடிய பயம் கொண்டனர். ‘புலன் அழுக்கற்ற அந்தணாளன்’ என்று தமிழ்ப் பார்ப்பான் கபிலனை சங்கப் புலவர்கள் புகழ்ந்து, தலைமேல் வைத்துக் கூத்தாடினர்.
‘’குணம் என்னும் குன்று ஏறி நிற்கும் பார்ப்பனர்கள் வெகுளி கணம் ஏயும் காத்தல் அரிது’’ என்பதால் பயந்தனர். அந்தக் காலத்தில், அவர்கள் வாயில் நல்ல சொற்கள் வந்தால் அது பலிக்கும்; சுடு சொற்கள் வந்தால் அது ஒருவனுடைய குலத்தையே வேர் அறுக்கும் என்பது உண்மையாக இருந்தது. .
நவ நந்தர்களை வேருடன் அறுத்து, அலெக்ஸ்சாண்டரும் கண்டு அஞ்சிய மாபெரும் மகத சாம்ராஜ்யத்தை ஸ்தாபித்த சாணக்கியன் இதற்கு உதாரணம்..
xxxxx
இதனால் வேளாண் குடி மக்களுக்கு திரிகடுகம் ஆசிரியர் நல்லாதனார், ஒரு நல்ல புத்திமதி செப்பினார்::-
சூதாட்டத்தில் பணம் கிடைக்க வேண்டும் என்று காத்திராதே; விரும்பாதே; பார்ப்பனர்களை தீ என்று கருது;
அகலாது அணுகாது குளிர் காய்பவர் போல இரு;
உழவுத் தொழிலை கடனே என்று செய்யாமல், விரும்பிச் செய்.
கழகத்தால் வந்த பொருள் காமுறாமை
பழகினும் பார்ப்பாரைத் தீப்போல்- ஒழுகல்
உழவின்கண் காமுற்று வாழ்தல் இம்மூன்றும்
அழகென்ப வேளாண் குடிக்கு
–திரிகடுகம், நல்லாதனார்
உண்மையில் இந்த தீக்காயும் உவமையை முதல் முதலில் பயன்படுத்தியவர் ஆதி சங்கரர் ஆவார். அவர் எழுதிய பாஷ்யங்களில் இந்த உவமை வருகிறது..
பகவத் கீதை 9-29 ம் ஸ்லோகத்துக்கு அண்ணா எழுதிய உரையில் இதை மேற்கோள் காட்டுவார்::-
“அக்னியைப் போல் நான் உளேன்; எட்டி நிற்பவர் குளிரை அக்னி போக்குவதில்லை; ஸமீபித்து வருவோர் குளிரைப் போக்குகிறது. இது அக்னியின் பாரபக்ஷமன்று. அது போலவே பக்தர்கள் என் அருள் பெறுவதும். மற்றவர் பெறாததும்”-
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
88. பல்துறை, அறப்பளீசுர சதகம்
தாம்புரி தவத்தையும் கொடையையும் புகழுவோர்
தங்களுக் கவைத ழுவுறா!
சற்றும்அறி வில்லாமல் அந்தணரை நிந்தைசெய்
தயவிலோர் ஆயுள் பெருகார்!
மேம்படு நறுங்கலவை மாலைதயிர் பால்புலால்
வீடுநற் செந்நெல் இவைகள்
வேறொருவர் தந்திடினும் மனுமொழி யறிந்தபேர்
விலைகொடுத் தேகொள் ளுவார்!
தேன்கனி கிழங்குவிற கிலையிவை யனைத்தையும்
தீண்டரிய நீசர் எனினும்
சீர்பெற அளிப்பரேல் இகழாது கைக்கொள்வர்
சீலமுடை யோர்என் பரால்!
ஆன்கொடி யுயர்த்தவுமை நேசனே! ஈசனே!
அண்ணலே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!
(இ-ள்.) ஆன் கொடி உயர்த்த உமை நேசனே – ஏற்றுக்கொடியை
உயர்த்திய உமையன்பனே!, ஈசனே – செல்வத்தை யளிப்பவனே!, அண்ணலே
– பெரியோனே!, அருமை ……. தேவனே!, தாம்புரி தவத்தையும்
கொடையையும் புகழுவோர் தங்களுக்கு அவை தழுவுறா – தாங்கள் செய்த தவத்தினையும் ஈகையையும் புகழ்ந்து கூறிக்கொள்வோருக்கு அவை கிடையாமற் போய்விடும், சற்றும் அறிவு இல்லாமல் அந்தணரை நிந்தை செய்
தயவு இலோர் ஆயுள் பெருகார் – சிறிதும் அறியாமல் அந்தணரைப் பழிக்கும் இரக்கமிலோர்க்கு ஆயுள் குறையும், மேம்படு நறுங்கலவை மாலை தயிர் பால்,
புலால் வீடு நல் செந்நெல் இவைகள் – உயர்ந்த மணமிக்க கலவைச் சந்தனம்,மாலை, தயிர், பால், ஊன், வீடு, நல்ல செந்நெல் ஆகிய இவற்றை,வேறு ஒருவர் தந்திடினும் மனுமொழி அறிந்தபேர் விலை கொடுத்தேகொள்ளுவார் – மற்றொருவர் கொடுத்தாலும் மனு கூறிய முறையை அறிந்தவர்கள் விலை கொடுத்துத் தான் வாங்குவார்கள், தேன் கனி கிழங்கு
விறகு இலை இவை அனைத்தையும் தீண்ட அரிய நீசர் எனினும் சீர் பெற
அளிப்பரேல் – தேனையுங் கனியையுங் கிழங்கையும் விறகையும்
இலையையும் இவை (போன்ற) யாவற்றையும் தீண்டத்தகாத
இழிந்தோரானாலும் சிறப்புறக் கொடுத்தாரானால், சீலம் உடையோர் இகழாது கைக்கொள்வர் – ஒழுக்கம் உடையோர் பழிக்காமல் ஏற்றுக்கொள்வர்.
(வி-ரை.) ஆல் : அசை. ஈசன் – செல்வமுடையோன்.
Xxxxxxxxxxxxxxxxxxxx
89. முப்பொருள் (தத்துவத் திரயம்), அறப்பளீசுர சதகம்
பூதமோ ரைந்துடன், புலனைந்தும், ஞானம்
பொருந்துமிந் திரிய மைந்தும்,
பொருவில்கன் மேந்திரியம் ஐந்தும், மனம் ஆதியாம்
புகலரிய கரணம் நான்கும்,
ஓதினோர் இவை ஆன்ம தத்துவம் எனச் சொல்வர்;
உயர்கால நியதி கலையோ
டோங்கிவரு வித்தை, ராகம், புருடன் மாயை யென்
றுரைசெய்யும் ஓரே ழுமே
தீதில்வித் யாதத்வம் என்றிடுவர்; இவையலால்
திகழ்சுத்த வித்தை ஈசன்,
சீர்கொள்சா தாக்கியம், சத்தி, சிவம் ஐந்துமே
சிவதத்வம் என்ற றைகுவார்;
ஆதிவட நீழலிற் சனகாதி யார்க்கருள் செய்
அண்ணலே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே.
(இ-ள்.) ஆதிவடநீழலில் சனகாதியர்க்கு அருள்செய்
அண்ணலே – முற்காலத்தில் கல் ஆலமரத்தின் நிழலில் சனகர்
முதலானோர்க்கு அருள்புரிந்த பெரியோனே!, அருமை……தேவனே!,
பூதம் ஓர் ஐந்து – ஓர் ஐம்பூதங்களும், உடன் புலன் ஐந்தும் –
(அவற்றுடன்) ஐம்புலன்களும், ஞானம் பொருந்தும் இந்திரியம்
ஐந்தும் – ஞான இந்திரியங்கள் ஐந்தும், பொரு இல் கன்ம இந்திரியம்
ஐந்தும் – உவமையில்லாத கன்ம இந்திரியங்கள் ஐந்தும், மனம் ஆதி
ஆம் புகல் அரிய கரணம் நான்கும் – மனம் முதலிய சொல்லற்கரிய
கரணங்கள் நான்கும், இவை ஆன்ம தத்துவம் என ஓதினோர்
சொல்வர் – இவற்றை ஆன்ம தத்துவம் என்று கற்றறிந்தோர் கூறுவர்,
உயர்காலம் நியதி கலையோடு ஒங்கிவரு வித்தை ராகம் புருடன்
மாயை என்று உரைசெய்யும் ஓரேழுமே தீது இல் வித்யா தத்துவம்
என்றிடுவர் – உயர்வாகிய காலம், நியதி, கலைகளோடு கூறப்படும்
ஏழினையும் குற்றமற்ற வித்தியாதத்துவம் எனக் கூறுவர், இவை அலால்
– இவையல்லாமல், திகழ்சுத்த வித்தை, ஈசன், சீர்கொள் சாதாக்கியம்,
சத்தி, சிவம் ஐந்துமே சிவ தத்துவம் என்று அறைகுவார் – விளங்கும்
சுத்தவித்தை, ஈசன், சிறப்புடைய சாதாக்கியம் சத்தி, சிவம் (ஆகிய)
ஐந்தினையும் சிவ தத்துவம் என்று கூறுவர்.
(வி-ரை.) பூதம் ஐந்து : மண், நீர், அனல், வளி, வான். புலன்
ஐந்து : சுவை , ஒளி, ஊறு, ஒசை, நாற்றம். ஞான இந்திரியம் ஐந்து :
மெய், வாய், கண், மூக்கு, செவி. கன்ம இந்திரியம் ஐந்து : வாக்கு, பாதம்,
பாணி, பாயுரு, உபத்தம். கரணம் நான்கு: மனம், புத்தி, சித்தம், அகங்காரம்.
வடம் – ஆலமரம். சனகாதியர் – சனகர், சனந்தகர், சனத்குமாரர், சஹ்யஜாதர். ஞான இந்திரியம் : அறிவுப்பொறி. கன்மஇந்திரியம்: தொழிற்பொறி ஆன்மதத்துவம் உயிருடன் சேர்ந்தவை : இருபத்துநான்கு தத்துவங்கள். வித்தியா தத்துவம் : கலையுடன் சேர்ந்தவை ஏழு
தத்துவங்கள் சிவதத்துவம் : இறையுடன் சார்ந்தவை : ஐந்து தத்துவங்கள்,
ஆக முப்பத்தாறு. (24+7+5= 36)
To be continued……………………………………..
TAGS– பிராமணர், திட்டாதே, அம்பலவாணர் , ஆயுள், ஐயர் , பழகினும் பார்ப்பானை, 36 தத்துவங்கள்