
Post No. 11,721
Date uploaded in London – – 28 JANUARY 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx
கொல்லி மலை சதுர கிரியில் எழுந்தருளியுள்ள சிவபெருமான் மீது பாடப்பட்ட சதகம் இந்த நூறாவது பாடலுடன் நிறைவு பெறுகிறது. இதை பொழிப்புரையுடன் வெளியிட்ட தமிழ் இணையக் கல்விக்கழகத்துக்கு நன்றி ; என்னுடைய கருத்துக்கள், விமர்சனத்துடன் 100 பாடல்களையும் வெளியிட்டேன். கொள்ளுவன கொண்டு தள்ளுவன தள்ளுக .
இந்நூலின் இறுதிச் செய்யுளில், ‘அம்பலவாண கவிராயனாகும்’
எனத் தம்மைக் குறிக்கிறார். இவர் சோழ நாட்டில் தில்லையாடி என்னும்
ஊரில் வேளாளர் குலத்திற் சுமார் முந்நூறு ஆண்டுகளுக்குமுன் பிறந்தார். சீர்காழியில் தங்கியிருந்த – இராம நாடகம் பாடிய – சிறப்புப்பெற்ற அருணாசலக் கவிராயரின் மூத்த புதல்வர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது .

என்னுடைய மதிப்பீடு:
நூலாசிரியர் சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தவர். மனு நீதி, பிராமணர் ஆகியோரைப் புகழ்கிறார். இவர் நல்ல சம்ஸ்க்ருத அறிவு பெற்றிருத்தல் வேண்டும். ஏனெனில் இவர் சொல்லும் பல விஷயங்கள் சம்ஸ்க்ருத நூல்களில் இருக்கின்றன. ஆயினும் இவரது சொந்த கற்பனையும் நூலுக்குப் பெருமை சேர்க்கிறது. 99ஆவது பாடலில் சிவ பெருமானின் 25 வடிவங்களை ஒரே மூச்சில் நமக்கு அளிக்கிறார் . அதற்கு முன்னர் 32 அறங்களையும், , 18 புராணங்களையும் இவ்வாறு ஒவ்வொரு பாட்டில் வழங்குகிறார். மன்மதனின் 5 மலர் அம்புகளும் உடலிலும் உள்ளத்திலும் என்னென்னெ விளைவுகளை உண்டாக்கும் என்று புது முறையில் விளக்குகிறார். ஜோதிடம் உண்மையே என்றும் விளம்புகிறார். இவருடைய ஒவ்வொரு பாடலும் வள்ளுவரின் குறள் பாக் கருத்துக்களை ஒட்டியே செல்கின்றன. நல்ல அறிவும் ஒழுக்கமும் உடையவர்தான் இப்படிச் செய்யுள் இயற்ற முடியும்.
அந்தணர் முதல் வேளாளளார் வரையுள்ள நான்கு வருணத்தையும் புகழ்கிறார். தனக்கு ஆதரவு கொடுத்த மதனவேளுக்கு நன்றி செலுத்தி செய்நன்றி அறிதலுக்கு முன்னுதாரணமாகத் திகழ்கிறார். எளிய தமிழ் நடை; பெரும்பாலும் பொழிப்புரையின்றியே அர்த்தத்தை அறிய முடிகிறது. நல்ல சிவபக்தர் என்பதை ஒவ்வொரு பாட்டிலும் நமக்கு அளிக்கிறார். இவர் பாடல்களை மாணவர்களுக்கு பாட திட்டத்தில் சேர்ப்பது நலம் பயக்கும் . எல்லோருக்கும் கிடைக்கும் வகையில் தமிழ் இணைய கல்விக் கழகம் வசதி செய்து தந்தது பாராட்டத் தக்கது. வாழ்க தமிழ்.
Xxxx
கடைசி பாடலில் சிவனை மீண்டும் புகழ்ந்து பணிவன்போடு தன்னுடைய பாடலையும் ஏற்க வேண்டுகிறார். அவர் பணிவுடன் ‘இழிந்த பாக்கள்’ என்று சொன்னாலும், பாடலைப் படிப்போருக்கு அவருடைய சொல் நயமும், பொருள் நயமும் , அவரை நல்ல பெரிய கவிஞர் என்றே காட்டும். புலிக்குப் பிறந்தது பூனையாகுமா? என்பது தமிழ்ப் பழ மொழி ; இராம நாடகம் பாடிய அருணாசலக் கவிராயரின் புதல்வர், அவருக்கு சளைத்தவரா என்ன? நல்ல கவி புனைந்து தந்தையின் மகன் என்பதை நிரூபித்துவிட்டார். அவருக்கும் புகழ் சேர்த்துவிட்டார்.
xxxxx
100. கவி வணக்கம்
மலரிதழி பைங்குவளை மென்முல்லை மல்லிகை
மருக்கொழுந் துயர்கூ விளம்
மற்றும்உள வாசமலர் பத்திரம் சிலர்சூட
மணிமுடி தனிற்பொ றுத்தே
சிலரெருக் கொடுவனத் துட்பூளை பச்சறுகு
செம்முள்ளி மலர்சூ டவே
சித்தம்வைத் தவையுமங் கீகரித் திடுமகா
தேவதே வா!தெ ரிந்தேகலைவலா ருரைக்குநன் கவியொடம் பலவாண
கவிராயன் ஆகு மென்புன்
கவியையும் சூடியே மனமகிழ்ந் திடுவதுன்
கடன் ஆகும் அடல்நா கமும்
அலைபெருகு கங்கையும் செழுமதிய மும்புனையும்
அமலனே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!
(இ-ள்.) அடல் நாகமும் அலைபெருகு கங்கையும் செழுமதியமும்
புனையும் அமலனே – கொல்லும் பாம்பும் அலைமிகுந்த கங்கையும் நல்ல
பிறையும் அணிந்த தூயவனே!, அருமை …….. தேவனே!, மலர் இதழி –
மலர்ந்த கொன்றை, பைங்குவளை – பசிய குவளை, மென்முல்லை –
மெல்லிய முல்லை, மல்லிகை – மருக்கொழுந்து, உயர் கூவிளம் – உயர்ந்த
வில்வம், மற்றும் உள வாச மலர் – வேறும் உள்ள மணமலர், பத்திரம் –
பச்சிலைகள் (ஆகியவற்றை) சிலர் சூட – சில (அடியார்கள்) அணிவிக்க,
மணி முடிதனில் பொறுத்து – நவமணிகள் இழைத்த முடியில் ஏற்று, சிலர்
எருக்கொடு வனத்துள் பூளை பச்சறுகு செம்முள்ளி மலர்சூட – சிலர்
எருக்கமலருடன் காட்டிற் கிடைக்கும், பூளைப்பூவும், பசுமையான
அறுகம்புல்லும் சிவந்த முள்ளி மலரும் அணிவிக்க, சித்தம்வைத்து அவையும்
அங்கீகரித்திடும் மகாதேவ தேவா – மனம் வைத்து அவற்றையும் ஏற்று
அருளும் பெருமைமிக்க தேவ தேவனே!, கலைவலார் தெரிந்து உரைக்கும்
நன்கவியொடு – கலையில் வல்லவர்கள் ஆராய்ந்து கூறும் நல்ல
பாக்களுடன், அம்பலவாண கவிராயன் ஆகும் என் புன்கவியையும் சூடிய –
அம்பலவாண கவிராயன் ஆகிய என் இழிந்த பாவையும் அணிந்தே, மனம் மகிழ்ந்திடுவது உன் கடன் ஆகும் – திருவுள்ளம் களித்தருளுவது உன் கடமை ஆகும்.
அறப்பளீசுர சதகம் மூலமும் உரையும்
முற்றிற்று.
Thanks to தமிழ் இணையக் கல்விக்கழகம் – TAMIL VIRTUAL ACADEMY
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
—subham—
Tags- அறப்பளீசுர சதகம், நிறைவு , முடிவு, அம்பலவாணர்