
Post No. 11,731
Date uploaded in London – 31 JANUARY 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
தனிப்பாடல்களில் தமிழ் இன்பம்!
யமனே, உன்னால் என்னிடம் வர இனி முடியுமா?
ச.நாகராஜன்
ஒப்பிலாமணிப் புலவர் என்று ஒரு தமிழ்ப் புலவர் இருந்தார். சிறந்த சிவ பக்தர்.
அவர் ரத்ன சபாபதி, திருவொற்றியூர் தியாகேசர், திருவாரூர் தியாகராஜர் எனத் தலம் தலமாகச் சென்று சிவபிரானை வழிபட்டுப் பாடல் புனைந்து வந்தார்.
எமனை நினைத்தாலே அவருக்கு பயம்? என்ன செய்வது?
ஒரு வழி தெரிந்தது. அதைச் செய்தார், பயம் போனது மட்டுமல்லாமல் எமனுக்கே சவால் விட்டார்.
அப்படி என்ன வழி என்றால் அது ரத்னசபாபதி மீது பாமாலை சார்த்தியது தான்.
அவர் சொல்வதையே கேட்போம் :
சீமானு நாமகள் கோமானு மேத்தித் தினம்பணிந்து
பூமாலை சாத்திய ரத்நச பாபதி பொன்னடிக்குப்
பாமாலை சாத்திநின் றேனவ னான்மிகப் பாடுபட்ட
ஏமாவுன் னாலினி யாமாவென் பாற்சினந் தெய்துதற்கே
பொருள் :
சீமானும் – திருமாலும்
நாமகள் கோமானும் – சரஸ்வதியின் நாயகனான பிரமனும்
ஏத்தி – துதித்து
தினம் பணிந்து – நாள்தோறும் வணங்கி
பூமாலை சாத்திய – பூ மாலைகள் சாத்தி சமர்ப்பிக்கப்பெற்ற
ரத்ந சபாபதி பொன்னடிக்கு – ரத்ந சபாபதியின் திருவடிகளில்
பாமாலை சாத்தி நின்றேன் – கவி மாலையைச் சமர்ப்பித்து நின்றேன்
அவனான் மிகவும் பாடுபட்ட – அவனால் மிகவும் துன்பமடைந்த
ஏமா – யமனே!
என்பால் சினந்து எய்துதற்கே – என்னிடத்தில் கோபித்து வருவதற்கு
இனி – இனிமேல்
உன்னால் ஆமா? – உன்னால் முடியுமா, என்ன?
ரத்ன சபாபதியின் திருவடிகளைத் தொழுவோர்க்கு யமபயம் இல்லை என்பது பாட்டின் திரண்ட பொருள்.

அடுத்து திருவொற்றியூர் சென்றார் கவிராயர்.
அங்கே அவர் பாடினார்:
தடங்கொண்ட கல்வில்லின் மெல்லெனப் பூட்டி தமதுரத்தில்
வடங்கொண்ட சாத்தி விடம்ங்கொண்டு பார்த்து மணிகிளரும்
படங்கொண்ட பரம்பின் பழகிய பின்மலைப் பாவைதன்னை
இடங் கொண்ட வொற்றித் தியாகேசர் புற்றி லிடங்கொண்டதே
பொருள்:
மலைப்பாவை தன்னை – மலையரையன் பெண்ணாகிய உமாதேவியை
இடங்கொண்ட – இட பாகத்தில் கொண்ட
ஒற்றித் தியாகேசர் – திருவொற்றியூர் தியாகேசர்
புற்றினிடங் கொண்டது – புற்றைப் பீடமாகிக் கொண்டது
தடம் கொண்ட கல்லில் வில் மெல்லெனப் பூட்டி – பெருமை கொண்ட மேருமலையாகிய வில்லில் (நாணியாகிய) மெல்லெனப் பூட்டி
தமது உரத்தில் வடம் கொண்டு சாத்தி – தமது திருமார்பில் ஆரமாகக் கொண்டு அணிந்து
விடம் கொண்டு பார்த்து – நஞ்சை உட்கொண்டு பார்த்து
மணிகிளரும் படம் கொண்ட – மாணிக்கம் விளங்குகின்ற படத்தைக் கொண்ட பாம்பின்
பழகிய பின் – பாம்போடு பழகிய பின்பேயாம்.
கல் வில்லில் பூட்டியது – திரிபுர சங்கார காலத்தில்!
உரத்தில் வடமாகச் சாத்தியது – தாருகாவனத்தில் ரிஷிகள் செய்த யாகத்தில் தோன்றிய சமயத்தில்!
விடம் கொண்டு பார்த்தது – பாற்கடல் கடையப்பட்ட காலத்தில்.
இவை அனைத்தையும் இணைத்து ஒரு பாடலில் கொண்டு வந்து விட்டார் கவிராயர்.
அடுத்து அவர் திருவாரூர் சென்றார்; தியாகேசர் மீது பாடல் புனைந்தார்.

விடங்காட்டிக் கண்டத்திற் றோலுரி காட்டித்தன் மெய்யினைப்புற்
றிடங்காட்டி வாலை யொருபுறங் காட்டிவண் டேறுமலர்த்
தடங்காட்டி யபொழி லாரூர் தியாகர் தமது பொற்றாட்
படங் காட்டி யாடிநின் றாருல கேழும் பணியென்னவே
பொருள் :
வண்டு ஏறும் மலர்த் தடம் காட்டிய பொழில் – வண்டுகள் ஏறப் பெற்ற பூம்பொழில் சோலை சூழ்ந்த
ஆரூர் தியாகர் – திருவாரூர்த் தியாகராயர்
கண்டத்தில் விடம் காட்டி – கழுத்தில் உள்ள விஷத்தைக் காட்டி
தோல் உரி காட்டி – யானைத் தோலைக் காட்டி
தன் மெய்யினைப் புற்றிடம் காட்டி – தன் திருமேனியைப் புற்றிடமாகக் காட்டி
வாலை ஒரு புறம் காட்டி – உமாதேவியை ஒரு புறத்தில் (இடப்பாகத்தில்) காட்டி
தமது பொன் தாள் படம் காட்டி – தமது திருவடியாகிய எழுது படத்தைக் காட்டி
உலகு ஏழும் பணி உன்ன – ஏழுலகமும் பணிக என்று
ஆடி நின்றார் – ஆடியவாறு நின்றார்!
பணியென என்பதற்குப் பாம்பு போலெனக் கொண்டு சிலேடை அர்த்தத்தையும் கொள்ளலாம்.
தோலுரி – தோலுரித்தல் , வாலை – வாலினை
இப்படி இன்னும் பல பாடல்களையும் புனைந்துள்ளார் ஒப்பிலாமணிப் புலவர். அனைத்தும் அருமையான பாடல்களே!
***
Tags- ஒப்பிலாமணிப் புலவர்