
WRITTEN BY S NAGARAJAN
Post No. 11,734
Date uploaded in London – 1 FEBRUARY 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
ராமாயண வழிகாட்டி!
ஒரு கடினமான விஷயத்தை ஆரம்பிக்கும் முன்னர் செய்ய வேண்டியது என்ன?
ஹனுமான் காட்டும் வழி!
ச.நாகராஜன்
வால்மீகி ராமாயணத்தில் ஏராளமான அதிசய விஷயங்கள் அடங்கி உள்ளன.
அதில் ஒன்று ஹனுமான் காட்டும் பல வழிகள்.
ஒரு கஷ்டமான காரியத்தை ஆரம்பிக்கும் முன்னர் ஒருவர் என்ன செய்ய வேண்டும்?
சீதையைக் கண்டு பிடிக்கச் சொல்லி ஶ்ரீ ராமர் ஆணையிட்டு விட்டார்.
எப்படி, எங்கே தேடிக் கண்டுபிடிப்பது?
ஹனுமார் உடனே செய்த காரியம் நமக்கு காட்டும் வழியாகும்.
ஒரு காரியத்தை ஆரம்பிக்கும் முன்னர்
1) நாம் கடவுளைப் பிரார்த்திக்க வேண்டும்.
2) மஹான்களையும் பெரியோரையும் பிரார்த்திக்க வேண்டும்.
3)யாருக்காக அந்தக் காரியம் ஆரம்பிக்கப்படுகிறதோ அந்தப் பெரியோரைப் பிரார்த்திக்க வேண்டும்.
4) அந்தக் காரியத்தைத் தடை செய்யக் கூடிய பெரிய இயற்கை சக்திகளை தனக்கு இடையூறின்றி காரியத்தை முடிப்பதற்காகப் பிரார்த்திக்க வேண்டும்.
5) நண்பர்கள், உறவினர்கள் மற்றும் அந்தக் காரியத்தை செவ்வனே முடிக்க உதவக்கூடிய யாராக இருந்தாலும் அவர்கள் – ஆகியோரைப் பிரார்த்திக்க வேண்டும்.
ஹனுமார் சீதையைத் தேடிக் கிளம்பும் முன்னர் செய்த பிரார்த்தனை இது:
அந்த சிவந்த முகத்தை உடைய ஹனுமார் சீதை, இந்திரன், வாயு, பிரம்மா, மற்றும் பல்வேறு இயற்கை சக்திகளை நோக்கிப் பிரார்த்தனை செய்தார். பிறகு கிழக்கு நோக்கி தனது தந்தையான வாயுவை வணங்கிப் பிரார்த்தனை செய்தார். ராமர், லக்ஷ்மணரை பிரார்த்தித்தார். மற்றும் ஆறுகள், கடலை பிரார்த்தித்தார். பிறகு தனது உறவினர்களையும் நண்பர்களையும் தழுவிக் கொண்டார். மரியாதை செலுத்தும் விதமாக அவர்களை வலம் வந்தார்.
பின்னரே லங்கையை நோக்கிய அவரது பயணம் தொடங்கியது.
அகங்காரம் இன்றி தனியாக நான் தான் இதை முடித்தேன் என்று சொல்லாமல் அனைவரையும் வணங்கி அவர்களின் ஆசீர்வாதங்களைப் பெற்று நண்பர்கள், உறவினர்களின் ஆதரவைப் பெற்று, தடை செய்யக் கூடிய இயற்கை சக்திகளை வணங்கி, இந்தக் காரியத்தில் எனக்கு இடையூறு விளைவிக்க வேண்டாம் என்று வணங்கி அவர் செல்கிறார்.

ச சூர்யாய மஹேந்த் ராய பவனாய ஸ்வய்ம்புவே |
பூதேப்யஸ்சாஞ்சலி க்ருத்வா கமனே மதிம் ||
அஞ்சலிம் ப்ராங்முக: க்ருர்வன் பவனாயாத்மயோநயே |
மனஸாவந்த்ய ராமாய லக்ஷ்மணாய மஹா ஹரி: ||
சரித: சாகராங்க்ஷாபி ப்ரணம்ய சிரஸா ஹரி: |
ஞாதீம்ஸ்தான் சம்பரிவ்த்ரஜ்ய க்ருத்வா சாபி ப்ரதக்ஷிணம் ||
காரியத்தை ஆரம்பித்து விட்டாலோ ஒரு முனை கவனத்துடன் அதை முடிப்பது எப்படி என்பதிலேயே குறியாக இருக்க வேண்டும்.
எனது கடமை என்னை முன்னேறச் சொல்கிறது. நாள் வெகு விரைவாக மறைகிறது; பயணத்தின் நடுவில் எங்கும் நிற்க மாட்டேன் என்று சபதம் செய்திருக்கிறேன்.
இப்படிப் பதில் கூறிய வீர புருஷனான அவர் புன்னகை பூத்த முகத்துடன் மலையைத் தொட்டார்; லங்கையை நோக்கித் தான் பறப்பதைத் தொடர்ந்தார்.
நடுவழியில் ஓய்வு எடுக்க அவர் விரும்பவில்லை. உடல் களைப்பு என மனம் நினைத்தால் அது மனதின் பலவீனம். அது காரியத்தைக் கெடுத்து விடும். ஆகவே மனதை உற்சாகமாக வைத்துக் கொள்ள வேண்டும் – காரியம் முடியும் வரை.
அநிர்வேதம் (மனம் தளராமை அல்லது உற்சாகம்) என்ற இந்தச் சொல்லை ஹனுமான் பயன்படுத்துகிறார்.
உற்சாகமே உயிர் என்கிறார் அவர்.
அநிர்வேத: ஸ்ரியோ மூலம் அநிர்வேத: பரம் ஸுகம் |
அநிர்வேதோ ஹி ஸததம் ஸர்வார்த்தேஷு ப்ரவர்த்த: ||
(சுந்தர காண்டம், 12ஆம் ஸர்க்கம், ஸ்லோகம் 10)
உற்சாகமே செல்வத்திற்குக் காரணம்; உற்சாகமே மேலான சுகம்; எப்பொழுதும் எல்லா விஷயங்களிலும் முயலும்படி செய்வது உற்சாகமே!
அடுத்து முதல் காரியத்திற்கு கேடின்றி அடுத்த காரியங்களை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறுகிறார்.
கார்யே கர்மணி நிர்திஷ்டே யோ பஹூந்யபி ஸாதயேத் |
பூர்வகார்யா விரோதேந ஸ கார்யம் ஸ கர்து மர்ஹதி || (
சுந்தர காண்டம், 41ஆம் ஸர்க்கம், ஸ்லோகம் 5)
செய்து முடிக்க வேண்டிய ஒரு காரியத்தில் ஏவப்பட்ட போது எவன் ஒருவன் முதல் காரியத்திற்கு ஒரு கேடுமின்றி அனேகங்களையும் சாதிக்கிறானோ அவன் காரியத்தைச் செய்து முடிக்கத் திறமை உள்ளவன் ஆகிறான் என்று இப்படி நினைக்கும் அவர் முதல் குறிக்கோளை மனதில் கொண்டே ஒவ்வொரு காரியத்தையும் செய்து சாதனை படைக்க வேண்டும் என்கிறார்.
இவற்றை மனதில் கொண்டு அவர் தனது காரியத்தை மேற்கொண்டார்; சீதையைக் கண்டார்; தன் காரியத்தை சாதித்தார்; வெற்றி பெற்றார்.
மேலாண்மை நிர்வாக இயலில் உதாரண புருஷனாக விளங்குபவர் ஹனுமான்!
இதை வால்மீகி மஹரிஷி திறம்பட ராமாயணத்தில் விளக்குகிறார்!
***
காரிய, வெற்றி, வால்மீகி, மஹரிஷி, ஹனுமான் , வழி,