
Post No. 11,762
Date uploaded in London – 10 FEBRUARY 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
மறுபிறவி எடுத்த ஒரு குழந்தையின் விசித்திரக் கதை!
ச.நாகராஜன்
மறுபிறவி உண்டா, உண்டு என்றால் அதில் கர்ம பலன் எப்படி இருக்கும்? சென்ற ஜன்மத்தில் செய்த பாவ, புண்ணியம் இந்த ஜன்மத்தில் எப்படி வரும், வருமானால் அதற்கு ஆதாரங்கள் உண்டா?
பகுத்தறிவுவாதிகளின் கேள்விகள் பல.
இதற்கு ஆதாரபூர்வமாக எட்கர் கேஸ் (பிறப்பு 1877 மறைவு 3-1-1945) உள்ளிட்டோர் பதில் கூறியுள்ளனர்.
எட்கர் கேஸ் 2500 பேர்களைப் பற்றி கூறியுள்ளார். அவரது ‘ரீடிங்ஸ்’ எனப்படும் முந்தைய ஜன்மங்களைப் பற்றிய குறிப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
முற்பிறவிகளைப் பற்றிய அவர் கூற்று சரிதானா என்றும் ஆய்வு செய்யப்பட்டு முடிவுகள் மறுபிறப்பு உண்டு என்பதை உறுதி செய்த போது உலகமே வியந்தது.
இப்படி நூற்றுக்கணக்கான சம்பவங்கள் ஆங்காங்கே அவ்வப்பொழுது நடைபெற்றுக் கொண்டே இருக்கின்றன.
அவற்றில் ஒன்று இது:
1908ஆம் ஆண்டு நடந்த சம்பவம் இது.
பழைய கால பிரிட்டிஷ் இந்தியாவில் க்வாலியர் ராஜதானியில் காசிராம் என்று பெயர் கொண்ட காயஸ்த பிரிவைச் சேர்ந்த ஒருவர் நன்ஹுதா கிராமத்தில் பட்வாரி எனப்படும் தலைமைப் பொறுப்பை வகித்து வசித்து வந்தார்.
அவர் தாகூர் சோடி லால் என்பவரின் ஆவணத்தில் அவரது சொத்து பற்றிய தவறான பதிவுகளை இட்டு விடவே சோடி லாலின் சொத்துரிமை பாதிக்கப்பட்டது.
1908ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 7ஆம் தேதி தாகூர் பட்வாரியை ஓரிடத்தில் பிடித்துக் கொண்டார். அவரது வலது கையில் உள்ள விரல்களை வெட்டியதோடு துப்பாக்கியால் அவரை மார்பில் சுட்டார். பட்வாரி காசிராம் சம்பவ இடத்திலேயே இறந்து போனார்.
விரல்களை வெட்டும் போது, “இந்த விரல்கள் தானே தவறான பதிவை இட்டன?” என்று வேறு கேட்டு தன் வஞ்சத்தைத் தீர்த்துக் கொண்டார் தாகூர்.
சரியாக இரண்டு மாதங்கள் 25 நாட்கள் கழிந்தன.
கொலை நடந்த இடத்திலிருந்து 14 மைல்கள் தள்ளி இருந்த பிலாஸ்பூரில் மிஹிர் லாலா என்பவர் வசித்து வந்தார். அவருக்கு 1909 ஜனவரி மாதம் 31ஆம் தேதி ஆண் குழந்தை ஒன்று பிறந்தது.
பிறக்கும் போது துரதிர்ஷ்டவசமாக குழந்தையில் கட்டைவிரல் மற்ற குழந்தைகளுக்கு சாதாரணமாக இருப்பதில் கால் பங்கே இருந்தது.
வலது கையில் மற்ற விரல்கள் இல்லவே இல்லை.
மார்பில் துப்பாக்கி சூடுபட்ட குறி ஒன்று தென்பட்டது. அந்த இடத்தில் இருந்த எலும்புகள் வளைந்து உட்குவிந்து இருந்தன.
குழந்தைக்கு சுக்லால் என்று பெயரிடப்பட்டது. அது வளர்ந்தது. பேசும் பருவமும் வந்தது.
ஒரு நாள் பாதி சோகத்துடனும் பாதி வேடிக்கையாகவும் மிஹிர் லாலா தன் குழந்தை சுக்லாலைப் பார்த்து, “ கடவுள் உனக்கு விரல்களை வைக்க மறந்து விட்டானோ?” என்று கேட்டார்.
தந்தை ஆச்சரியப்படும் படி குழந்தை பேச ஆரம்பித்தது :” நன்ஹுதா கிராமத்தைச் சேர்ந்த சோடிலால் தாகூர் என்னை மார்பில் பார்த்து சுட்டார். எனது விரல்களை வேறு வெட்டினார். இந்த விரல்கள் தானே தவறான பதிவை இட்டன என்று வேறு கூறினார்” என்று குழந்தை பழைய கால சம்பவத்தின் முழுவிவரத்தையும் கூறியது.
மிஹிர்லாலா பிரமித்துப் போனார்.
குழந்தையின் பிறந்த தேதி தவறோ என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
ஏனெனில் 1908 ஆம் ஆண்டு நவம்பர் 7ஆம் தேதி காசிராம் கொலையுண்டார். குழந்தையின் பிறந்த தேதியோ 1909 ஜனவரி 31 என்று தரப்பட்டிருக்கிறது.
பத்து மாதம் குழந்தை கருவில் வளர வேண்டும் என்ற கருத்தை எடுத்துக் கொண்டு பார்க்கையில், ஒரு ஜீவன் எப்படி இரு இடங்களில் இருக்க முடியும் என்ற குழப்பம் ஏற்படுகிறது.
ஒரு ஜீவன் ஒரே சமயத்தில் இரு இடங்களில் இருக்க முடியாது என்பதால் இந்த பிறந்த தேதி இதை வெளியிட்ட தர்மராஜ்யா என்ற இதழின் 26-3-1936 தேதியிட்ட இதழில் தவறாகத் தரப்பட்டிருக்கலாம் என்று அறியப்படுகிறது.

இப்படி ஏராளமான சம்பவங்கள் உலகின் பல்வேறு நாடுகளில் பல்வேறு இடங்களில் நடந்துள்ளன. அவை ஆவணங்களாகப் பதிவும் செய்யப்பட்டுள்ளன.
மறுஜன்மம் உண்மையே என்பதும் கர்ம பலன் அடுத்த ஜன்மங்களில் தொடரும் என்பதும் இதனால் உறுதிப்படுத்தப்படுகிறது.
***
Source Truth Weekly Vol 4 Issue 2 dated 24-4-1936 ; Reprinted in Truth Vol 76 Issue 46 dated 27-2-2009
நன்றி : ட்ரூத் (Truth) ஆங்கில வார இதழ்
குறிப்பு : எட்கர் கேஸ் பற்றிய மேலதிக விவரங்களை நான் எழுதியுள்ள ‘விந்தை மனிதர்கள்! விந்தைப் பெண்மணிகள்!!’ என்ற நூலில் காணலாம்.