
WRITTEN BY S NAGARAJAN
Post No. 11,768
Date uploaded in London – 4 MARCH 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
ச.நாகராஜன்
பார்ப்பதெல்லாம் நிஜமல்ல என்று நமது பாரத தேச மஹான்கள் கூறினால் பகுத்தறிவுவாதிகள் சிரிப்பார்கள்!
கண்ணெதிரே தோன்றுவதெல்லாம், ஐம்புலன்களால் உணர்வதெல்லாம் பொய் என்று சொல்பவர்கள் பைத்தியக்காரர்கள் என்று சொல்வார்கள் இதே பகுத்தறிவுவாதிகள்.
சரி, அறிவியலுக்குள்ளேயே புகுவோம்.
பல நூறு வருடங்களுக்கு முன்னர் ஒரு பொருளின் எடை எப்போதும் எந்த இடத்திலும் ஒரே மாதிரியாகத் தான் இருக்கும் என்று அனைவரும் எண்ணி வந்தனர்.
சர் ஐஸக் நியூட்டன் வந்தார். பிரபல விஞ்ஞானியாகத் திகழ்ந்தார். பல ஆய்வுகளை நடத்தினார். ஆப்பிள் மரத்தின் மேலிருந்து ஒரு ஆப்பிள் கீழே விழுந்தது.
சிந்திக்க ஆரம்பித்தார். புவி ஈர்ப்பு விசை பற்றிச் சொல்ல ஆரம்பித்தார்.
ஒரு பொருளின் எடை கடல் மட்டத்தில் இருப்பதை விட மலை மீது குறைவாக இருக்கும்.
உயரத்தில் ஏற ஏற எடை குறையும்; இதற்குக் காரணம் புவி ஈர்ப்பு விசை என்றார்.
அனைவரும் அளந்து பார்த்தனர்; அதில் இருக்கும் உண்மையைக் கண்டு மலைத்தனர்.

எடை என்பதானது புவி ஈர்ப்பு விசையின் சக்தி ஒரு பொருளின் மீது பட்டு அதை நெருக்கும் போது ஏற்படுவது என்பது தெரிய வந்தது.
உடனே எடை என்பதோடு மாஸ் (Mass) எனப்படும் பொருள்திணிவு அல்லது பொருண்மை என்ற சொல் முக்கியத்துவம் பெற ஆரம்பித்தது.
உயரத்தில் ஏற ஏற எடை குறையலாம், மாறலாம். ஆனால் ஒரு பொருளின் பொருண்மை அதாவது Mass எப்போதுமே மாறாது என்பது கண்டுபிடிக்கப்பட்டது. அது நிலையானது என்று சொல்லப்பட்டது.
இந்தக் கொள்கையை அனைவரும் நம்ப ஆரம்பித்தனர். அதை அப்படியே கடைப்பிடித்தும் வந்தனர்.
அப்புறம் ஐன்ஸ்டீன் வந்தார். புதிய கொள்கையான ரிலேடிவிடி என்னும் ஒப்புமத் தத்துவத்தை உலகின் முன் வைத்தார். பொருண்மை அல்லது பொருள்திணிவு அல்லது மாஸ் என்பது எப்போதும் நிலையானது என்று கருதப்பட்டு வந்ததைத் தன் கொள்கை மூலம் உடைத்தார்; நிராகரித்தார்.
அவர் கூறினார் : “ஒரு பொருளின் பொருண்மை (Mass) என்பது எப்போதுமே நிலையானது என்று கூறுவது தவறு. அது வேகத்தைப் பொறுத்து மாறும்”.
பொருண்மை வேகத்தைப் பொறுத்து மாறும் என்பதை அவர் நிரூபித்துக் காட்டினார். ஒரு பொருளின் பொருண்மை ஒளியின் வேகத்திற்கு நெருங்க நெருங்க அதன் அளவு பெரிதாகிக் கொண்டே போகும் என்றார் அவர்.
ஒளியின் வேகம் ஒரு விநாடிக்கு 1,86,000 மைல்கள்.
ஒரு பொருளின் வேகம் ஒளியின் வேகத்தை அடையும் போது அதன் எடையானது எல்லையற்ற அளவைக் கொண்டிருக்கும். அதுமட்டுமல்லாமல் அதன் மீது எல்லையற்ற விசையின் தாக்கம் இருப்பதால் அதை விட திடமான ஒன்று ஒளியின் வேகத்தை விஞ்ச முடியாது. (When it reaches the speed of light its mass becomes infinite and as it would take an infinite force to accelerate an infinite mass then nothing solid can exceed the speed of light.)
பொருண்மை முன்னாலேயே எடையை விட முக்கியமானதாக ஆகி இருந்தது.
இந்த புதிய கொள்கையினால் வேகம் என்பது பொருண்மையை விட முக்கியமானதாக ஆனது.
இது மட்டுமல்லாமல், ஐன்ஸ்டீன் இன்னொரு அதிசயிக்கத் தக்க விஷயத்தையும் கூறினார். ஒரு பொருளானது ஒளியின் வேகத்தை எட்டும் போது காலமானது ‘ஸ்லோ’. (Slow) மெதுவாகிறது.
எடுத்துக்காட்டாக விண்வெளியில் பயணம் செய்யும் ஒரு விண்வெளி வீரர் சந்திரனுக்குச் சென்று திரும்பி பூமிக்கு வந்தால் அவர் விநாடியில் ஒரு சிறிய பங்கு பூமியில் வாழ்பவரை விடக் குறைந்த வயது உடையவராக ஆகிறார்.
இதையே சற்று அதிகமாக்கிப் பார்ப்போம். ஒரு விண்வெளி வீரர் விண்வெளியில் ஒளியின் வேகத்தில் ஐந்து வருடங்கள் பயணம் செய்து பின்னர் பூமிக்கு அதே வேகத்தில் திரும்பி வந்தால் அவர் பத்து வருடம் வயதில் கூடுதலாக ஆகி இருப்பார்; அதே சமயம் பூமியில் வாழ்பவர்கள் சுமார் 50 முதல் 100 வருடங்கள் கூடுதல் வயது ஆகி இருப்பர்.
ஆகவே ஐன்ஸ்டீனின் தத்துவத்தின் படி வேகம் என்பது மிகவும் முக்கியம் என்று ஆனது. பொருண்மையும் காலமும் வேகத்தால் நிர்ணயிக்கப்படுகிறது என்பது உண்மையானது.
ஆக உலகில் நாம் காண்பதெல்லாம் பார்ப்பது போல இருப்பதில்லை என்பது தெரிய வருகிறது.
ஆம் பார்ப்பதெல்லாம் நிஜமல்ல!
விஞ்ஞானம் நாளுக்கு நாள் புதுமைகளைக் கண்டுபிடித்துச் சொல்கிறது; பழைய கண்டுபிடிப்புகளில் தவறு இருந்தால் அதையும் சுட்டிக் காட்டுகிறது!
நியூட்டனையும் ஐன்ஸ்டீனையும் ஒப்பிட்டு ஒரு வேடிக்கையான ஒப்புமை கூட ஒன்று உண்டு.
Two Lines in Two Centuries என்ற தலைப்பிட்டு தரப்பட்ட அந்த ஒப்புமை இது தான்:
Nature and Nature’s laws lay hid in night God said, Let Newton be, and all was light
– Alexander Pope in the Eighteenth Century
It did not last. The Devil, howling Ho! Let Einstein be, restored the status Quo.
– J.C. Squire in the Twentieth Century
இதை Arthur Mee தொகுத்த One Thousand Famous Things நூலில் காணலாம்.
*** தொடரும்