
Picture is only representative; not the girl in the news.
Post No. 11,807
Date uploaded in London – 15 MARCH 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
காலம் வருமுன்னே காலன் வரமாட்டான்! – 2
ச.நாகராஜன்
இதே தலைப்பில் 23-6-2018 அன்று 5139 என்ற எண் கொண்ட எனது கட்டுரையைப் படித்தவர்களுக்கு இன்னும் சில செய்திகள்.
இவையும் உண்மையில் நடந்தவையே!
16-7-2012 The Telegraph இல் வந்த செய்தியை Leo Lewis லண்டன் The Timesஇல் செய்தியாகத் தந்துள்ளார்.
தெற்கு பிலிப்பைனிஸில் நடந்த சம்பவம் இது. மூன்று வயதே ஆன பெண் குழந்தை ஒன்று பல நாட்கள் ஜுரத்தால் அவஸ்தைப்பட்டு வந்தது.
ஒரு சனிக்கிழமை அன்று குழந்தையை அரோரா (Aurora) என்ற நகரில் உள்ள ஒரு மருத்துவமனைக்குப் பெற்றோர்கள் எடுத்துச் சென்றனர்.
டாக்டர் ஒருவர் குழந்தையைப் பரிசோதித்தார். பின்னர் அவர் குழந்தைக்கு நாடித்துடிப்பே இல்லை என்றும் குழந்தை இறந்து விட்டது என்றும் கூறினார்.
குழந்தையின் உடலை வீட்டுக்கு எடுத்துச் சென்ற பெற்றோர் இறுதிச் சடங்கு செய்ய ஆயத்தமாயினர்.
மறுநாள் குழந்தையின் உடல் அருகிலிருந்த சர்ச்சுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. ஒரு சிறிய மரத்தினால் ஆன சவப்பெட்டியில் குழந்தை வைக்கப்பட்டு அந்தப் பெட்டியை நான்கு நாற்காலிகள் மேல் சீராக வைத்தனர்.
இறுதிச் சடங்கு ஆரம்பமாக இருந்தது.
சில விநாடிகள் முன்பாக குடும்ப உறுப்பினர் சவப்பெட்டியின் மூடியைத் திறந்து கடைசி நிமிடமாக எல்லாம் சரியாக இருக்கிறதா என்று பார்த்தார்.
அப்போது அருகிலிருந்த நகர போலீஸ் இன்ஸ்பெக்டரான ஹெய்டில் டீலான் (Inspector Heidil Teelan) குழந்தையின் தலை அசைவது போல இருக்கிறதே என்று நினைத்தார்.
உடனே குழந்தை வெளியே எடுக்கப்பட்டது.
குழந்தையின் நாடித்துடிப்பு சரிபார்க்கப்பட்ட போது அது உயிருடன் இருப்பது தெரிய வந்தது.
அவ்வளவு தான், உடனே குழந்தைக்கு சிறிது தண்ணீர் அளிக்கப்பட்டது, நேராக மருத்துவ மனைக்குக் கொண்டு செல்லப்பட்டது. குழந்தை நலமாக இருப்பதாக மருத்துவ மனையில் டாக்டர்கள் தெரிவித்தனர்.
பின்னர் வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்ட குழந்தை உயிருடன் இருந்தது, நன்கு கவனித்துக் கொள்ளப்பட்டது.
பிலிப்பைன்ஸ் மீடியாவில் பேட்டி அளித்த டீலான், “குழந்தை நலமாக இருக்கும் என்று நம்புகிறேன்” என்றார்.
இதைப் படிக்கும் போது பராகுவேயில் நடந்த இன்னொரு சம்பவமும் நினைவுக்கு வருகிறது.
இது 10-9-2009 தேதியிட்ட The Sunday Telegraph பத்திரிகையில் வந்த செய்தியாகும்.
ஜோஸ் அல்வரேங்கா (Jose Alvarenga) என்பவர் ஆசங்ஷன் (Asunction) என்ற பராகுவே (Paraguay) தலை நகரில் தனது மனைவியை பிரசவத்திற்காக அட்மிட் செய்திருந்தார். பிரசவத்தில் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. ஆனால் குழந்தை பிறந்தவுடன் இறந்ததாகக் கூறிய மருத்துவ மனை அதிகாரிகள் அவரிடம் குழந்தையைத் தந்தனர்.
அது ஒரு தற்காலிகமான சவப்பெட்டியில் வைக்கப்பட்டு வீட்டுக்கு நான்கு மணி நேரம் கழித்து எடுத்துச் செல்லப்பட்டது.
சிறிது நேரம் கழித்து சவப்பெட்டியைத் திறந்து பார்த்த குழந்தையின் தந்தை அது மூச்சு விடுவதைப் பார்த்தார்.
உடனே அவர் ஆஸ்பத்திரிக்கு குழந்தையைக் கையில் தூக்கிக் கொண்டு ஓடினார்.
குழந்தையை சோதித்த டாக்டர்கள் குழந்தை உயிருடன் இருப்பதாகத் தெரிவித்தனர்.
இது போன்ற அதிகாரபூர்வமாக பத்திரிகையில் வெளியிடப்பட்ட சம்பவங்கள் உள்ளன.
என்னதான் சொன்னாலும் யார் தான் சொன்னாலும்,
காலம் வருமுன்னே காலன் வர மாட்டான். சரி தானே!
***