
Post No. 11,810
Date uploaded in London – 16 MARCH 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
கடவுள் துகளைக் கண்ட பாரத விஞ்ஞானி எடுத்த
ஆரத்தி! – 1
ச.நாகராஜன்
பாரத விஞ்ஞானிகளுள் மிகவும் பெருமை வாய்ந்த விஞ்ஞானி சத்யேந்திர நாத் போஸ்.
1894ஆம் ஆண்டு ஜனவரி முதல் தேதியன்று பிறந்த சத்யேந்திரநாத்
1974ஆம் ஆண்டு பிப்ரவரி 4ஆம் தேதி மறைந்தார்.
பெரும் கணித மேதையாகவும் இயற்பியலில் பெரும் விஞ்ஞானியாகவும் விளங்கிய அவருக்கு 1954ஆம் ஆண்டு பத்ம விபூஷன் விருதை இந்திய அரசு அளித்து கௌரவித்தது.
வங்காளத்தில் காயஸ்த குடும்பத்தில் ஏழு பேர்களில் முதலாவது ஆண்மகனாகப் பிறந்தார் இவர். இவருக்கு அடுத்துப் பிறந்த ஆறு பேரும் பெண்கள்.
இளமையிலேயே அவரது கணித அறிவு அனைவரையும் திகைக்க வைத்தது.
நூற்றுக்கு நூற்றுப்பத்து வாங்க முடியுமா என்ன என்று அனைவரும் கேட்டுச் சிரிப்பார்கள். ஆனால் அவரது ஆசிரியர் உபேந்திர நாத் கணிதத்தில் அவரது விடைத்தாளைத் திருத்த ஆரம்பித்தவர் அவர் அனைத்து கேள்விகளுக்கும் சரியான விடையைத் தந்திருந்ததோடு ஜாமெட்ரி கணிதங்களை ஒன்றுக்கும் மேற்பட்ட விதத்தில் துல்லியமாக விளக்கி இருந்ததைக் கண்டு அசந்து போனார்.
ஆகவே நூற்றுக்கு நூற்றுப் பத்து என்று மதிப்பெண் கொடுத்தார்.
1913ஆம் ஆண்டு அவர் விஞ்ஞானத்தில் டிகிரியைப் பெற்றார். பின்னர் கணிதத்தில் 1915இல் மேற்படிப்பைப் படிக்க ஆரம்பித்தார். அதில் அவர் எடுத்த மதிப்பெண்ணே மிக அதிக மதிப்பெண்ணை ஒருவர் எடுத்த சாதனையாகக் குறிக்கப்பட்டது. இன்றும் அந்த சாதனையை யாரும் முறியடிக்கவில்லை.
ப்ரசாந்த சந்த்ர மஹாலநோபிஸ் ஒரு முறை இந்திய விஞ்ஞானிகளுள் அவரளவு மேதையைக் கொண்ட இன்னொருவர் இல்லை என்று கூறி வியந்தார்.
ப்ரசாந்த சந்த்ர மஹாலநோபிஸ் யார்? அவர் முதல் பிளானிங் கமிஷனின் மெம்பராக இருந்தவர். ஏராளமான பட்டங்களைத் தன் பெயருக்குப் பின்னால் கொண்டவர் – OBE, FA Sc, FRS என்றெல்லாம்.
1967ஆம் ஆண்டு, ஒரு நாள் சத்யேந்திர நாத் அவரைச் சந்திக்க கொல்கத்தாவில் பாராநகர் சென்றார். ப்ரசாந்தோ மிகுந்த ஜுரத்தினால் பாதிக்கப்பட்டிருந்தார். ஆனால் சத்யேந்திரநாத் தன்னைப் பார்க்க வந்திருக்கிறார் என்பதைக் கேள்விப்பட்ட அவர் மாடியிலிருந்து கீழிறங்கி வந்து அவரைச் சந்தித்து இய்றகை விஞ்ஞானி T.A.டேவிஸைப் பார்த்து போஸ்ட் கிராஜுவேட் ஆராய்ச்சியைச் செய்யுமாறு சொன்னார்.

மிக உயரிய விஞ்ஞானியான J.B.S. ஹால்டன் ( Halden) இந்தியாவைப் பெரிதும் நேசித்தவர். இந்தியாவிலேயே தனது வாழ்நாளை அவர் கழித்ததோடு ஹிந்துக்களைப் போலவே வேஷ்டியைக் கட்டிக் கொண்டு வாழ்ந்து வந்தார். ஹிந்து தத்துவங்களையும் ஹிந்து பாரம்பரிய பழக்க வழக்கங்களையும் அவர் பெரிதும் போற்றி வந்தார். சத்யேந்திர நாத் அவருடனும் பழகி வந்தார். மேற்படிப்புக்காக அவர் திருமதி ஹால்டனையும் சந்தித்தார்.
இன்னொரு விஞ்ஞானியான டாக்டர் ரூபெர்ட் ஷெல்ட்ரேக்குடனும் (Dr Rupert Sheldrake) அவர் பழகி வந்தார். ஹைதராபாத்தில் உள்ள ICRISATஇல் ரூபெர்ட் ஆலோசகராக இருந்து வந்தார். அதீத உளவியலில் நாய்கள், எலிகள் மீது அவர் ஆராய்ச்சிகள் நடத்தி வந்தார். மூளையில் நினைவாற்றல் பற்றிய அவரது ஆய்வுகள் புகழ் பெற்றவை. 90 ஆய்வுக்கட்டுரைகளையும் 9 நூல்களையும் அவர் படைத்தார். அவருடன் சத்யேந்திரநாத் நன்கு பழகியதால் தனது ஆய்வுகளில் அவர் பெரிதும் உத்வேகம் கொண்டார்.
ஒரு முறை கல்கத்தா பல்கலைக் கழகத்தின் துணைவேந்தரான ஶ்ரீ ஆசுதோஷ் முகர்ஜி சத்யேந்திரநாத்திற்கு அழைப்பு விடுத்தார். சத்யேந்திரநாத், மேக்நாத் சாஹா, ஷலின் கோஷ் ஆகியோரைத் தனது அறைக்கு அழைத்து விவாதித்த ஆசுதோஷ், வளர்ந்து வரும் விஞ்ஞானத்தில் அண்மைக்காலக் கண்டுபிடிப்புகளை அனைவருக்கும் கற்பிக்க முடியுமா என்று கேட்டார். சத்யேந்திரர் உடனடியாக ஒப்புக் கொண்டு அதன் படியே அனைவருக்கும் நவீன அறிவியல் கொள்கைகளை போதிக்க ஆரம்பித்தார்.
மேக்நாத் சாஹா (Mehnad Saha) க்வாண்டம் தியரியில் கவனம் செலுத்த சத்யேந்திர நாத் ஐன்ஸ்டீனின் – தியரி ஆஃப் ரிலேடிவிடியில் – ஒப்புமைத் தத்துவத்தில் கவனம் செலுத்தலானார்.
இயல்பாகவே பல மொழிகளை அறிவதில் சத்யேந்திரருக்கு ஆவல் ஏற்பட்டது. பாலிக்ளாட் (Polyglot) எனப்படும் பல்மொழி வல்லுநராக அவர் ஆனார். வங்காளம், பிரெஞ்சு, ஜெர்மானிய மொழி, சம்ஸ்கிருதம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வல்லவராக அவர் திகழ்ந்தார்.
டெனிஸன், ரவீந்திரநாத் தாகூர், காளிதாஸ் ஆகியோரின் கவிதைகளில் அவருக்கு அதீத ஈடுபாடு இருந்தது. எஸ்ராஜ் எனப்படும் ஒரு விசேஷ வாத்தியத்தில் – வயலின் போன்ற வாத்தியம்- அவர் விற்பன்னராகத் திகழ்ந்தார்.
ஒரு நாள் ஷிப்பூர் எஞ்ஜினியரிங் கல்லூரியிலிருந்து (Shibpur Engineering College) சில புத்தகங்கள் சத்யேந்திரநாத்திற்குக் கிடைத்தது. கூடவே பேராசிரியர் ப்ரால் (Prof. Braul) வைத்திருந்த சொந்த நூலகத்திலிருந்து சில ஜெர்மானிய மொழியில் இருந்த புத்தகங்களும் சத்யேந்திரருக்குக் கிடைத்தது.
அப்போது….
– தொடரும்
Tags- God’s Particle, சத்யேந்திர நாத் போஸ்.