
Post No. 11,817
Date uploaded in London – 18 MARCH 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
கடவுள் துகளைக் கண்ட பாரத விஞ்ஞானி
எடுத்த ஆரத்தி! – 3
ச.நாகராஜன்

ஒரு நாள் சத்யேந்திரநாத் போஸின் மிக நெருங்கிய உறவினரிடமிருந்து அவர் இல்லத்தில் நடக்க இருக்கும் திருமணத்திற்கு அழைப்பு வந்தது.
விவேகானந்தா சாலையில் அவர் வாழ்ந்து வந்தார். மிக அருகில் நடந்த திருமணத்தில் கலந்து கொள்ள அங்கு சென்றார்.
ஹிந்துக்களுக்கே உரித்தான வைதீக முறைப்படியான அந்த திருமணத்தை ஶ்ரீ குருமோகன் பட்டாசார்யா என்பவர் நடத்தி வைத்தார்.
அவர் ஒரு வேத விற்பன்னர், நல்ல பக்தர்.
மேற்கு வங்கத்தில் நாடியா மாவட்டத்தில் சாந்திபூரில் அவர் வசித்து வந்தார். திருமணத்தை வேத முறைப்படி அவர் நடத்தி வைக்க அதைப் பார்த்த சத்யேந்திரநாத் அந்த வைபவத்தால் மிகவும் கவரப்பட்டார்.
அவரது சம்ஸ்கிருத ஞானம், வேத உச்சரிப்பு எல்லாவற்றையும் உற்றுக் கவனித்த சத்யேந்திரநாத் அவரிடம் சென்றார்.
“எல்லா வைபவங்களும் இரவுக்குள் முடிந்து விடுமே. இரவு என்னுடன் வந்து தங்க முடியுமா?” என்று அவர் குருமோகன் பட்டாசார்யாவைக் கேட்டார்.
குருமோகன், “சாந்திபூருக்கு நள்ளிரவில் செல்ல முடியவே முடியாது. ஆகவே நாளை காலை தான் போகப் போகிறேன். உங்களுடன் தங்க எனக்கு எந்த ஆக்ஷேபணையும் இல்லை” என்றார்.
சத்யேந்திரநாத் அவரைத் தனது இல்லத்திற்கு அழைத்துச் சென்றார்.
இரவை குருமோகன் அவரது இல்லத்தில் கழித்தார்.
காலையில் அவர் எழுந்த போது ஒரு அதிசயக் காட்சியைக் கண்டார்.
சத்யேந்திரநாத் வேஷ்டியைக் கட்டிக் கொண்டு துளசி மாடம் அருகே நின்று கொண்டிருந்ததையும் அவர் துளஸிக்கு ஆரத்தி எடுத்துக் கொண்டிருப்பதையும் கண்டு வியந்தார்.
அவரது பிரமிப்பைக் கண்ட சத்யேந்திரநாத், புன்சிரிப்புடன், “என்ன பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்?” என்று கேட்டார்.
குருமோகன் வியப்புடன் கூவினார்: “நீங்கள் ஒரு புகழ் பெற்ற விஞ்ஞானி! நீங்கள் ஆரத்தி எடுத்துக் கொண்டிருப்பதை என் கண்ணால் காண்கிறேன்!” என்றார்.
சத்யேந்திரநாத் நிதானமாகக் கூறினார் :’ ஆம், ஆரத்தி எடுத்துக் கொண்டிருக்கிறேன். அது பெரும் சக்தியின் ஆதாரம்!” என்றார்.
துளஸிக்கு ஆரத்தி எடுக்கும் போது, ஆரத்தி எடுப்பது சக்தியின் ஆதாரத்திற்கானது என்ற அவரது கூற்று கோடிக்கணக்கான ஹிந்துக்கள் காலம் காலமாக ஆரத்தி எடுக்கும் பழக்கத்திற்கான பெரும் பயனை எடுத்துரைத்தது.
ஒரு விஞ்ஞானியின் கூற்று என்பதால் அதை அவர் எவ்வளவு ஆழமாக ஆராய்ந்து அதன் பயனைக் கண்டுபிடித்திருக்கிறார் என்பதை உணர்வது சுலபமே.
குருமோகன் அவரை வணங்கிப் போற்றினார்.
தன்னுடைய இந்த அனுபவத்தை அவர் அனைவருடனும் பின்னால் பகிர்ந்து கொண்டார்.
ஆரத்தியின் மஹிமையே மஹிமை!

குறிப்பு:
சத்யேந்திரநாத், கடவுள் துகள், போஸான் பார்டிகிள், செர்ன் விஞ்ஞான கூடம், உள்ளிட்டவை பற்றிய பல சுவையான விவரங்களை எனது அறிவியல் துளிகள் மூன்றாம் பாகத்தில் 76,77,78 அத்தியாயங்களில் விரிவாகக் காணலாம்.
ஆகவே அவை இங்கு தரப்படவில்லை.
இதே போல கண் திருஷ்டியைப் பற்றி பிரபல விஞ்ஞானி கூறியவை பற்றியும் அறிவியல் துளிகள் தொடரில் அதைப் பற்றிய விஞ்ஞான விளக்கம் தரப்பட்டுள்ளதையும் இங்கு அன்பர்கள் நினைவு கூரலாம்.
***
இந்தத் தொடர் இத்துடன் நிறைவடைகிறது.