Post No. 11,822
Date uploaded in London – – 20 MARCH 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx
பிப்ரவரி 2023 இந்திய விஜயத்தில், சூரியனார்கோவில் ஸ்தலத்தைப் பார்த்துவிட்டு சுக்கிரன் (வெள்ளி) கிரக பரிகார ஸ்தலமான திருக் கஞ்சனூருக்குச் சென்றோம் கும்பகோணத்திலிருந்து 20 கிலோமீட்டர் செல்லவேண்டும் .
மாயவரம்- தஞ்சாவூர் மார்க்கத்தில் நாரசிங்கன்பேட்டை ரயில் நிலயத்திலிருந்து இரண்டு மைல் தொலைவில் இருக்கிறது
இங்குள்ள சிவன் கோவிலில் சுவாமி பெயர்- அக்கினீசுவரர்
தேவியின் திருநாமம் – கற்பக நாயகி
சுக்கிரனுக்கு இங்கு தனி சந்நிதி இருப்பது சிறப்புடைய விஷயமாகும்
நடராஜர், சிவகாமி அம்மையார் உருவங்கள் இங்கு சிலைகள் உருவத்தில் உள்ளன. வேறு இடங்களில் பஞ்சலோகத்தில் அவர்களைக் காண்கிறோம்.
அப்பர், சுந்தரர் ஆகிய இரு தேவார அடியார்கள் இங்குள்ள சிவ பெருமானைப் பாடிப் பரவியுள்ளனர்.
மானக்கஞ்சார நாயனார் அவதரித்த தலம்.
கலிக்காம நாயனார் திருமணம் நடைபெற்ற தலம்.
இந்த தலத்தின் மரம்- புரச மரம் (இதன் இலைகள் யாகத்தில் நெய்யையும் அவிஸையும் எடுக்கப் பயன்படுத்தப்படுகின்றன.)
ஹரதத்த சிவாசாரியார் சைவத்தின் மேன்மையை ஸ்தாபித்த தலம் . அவருக்குத் தனி ஆலயம் இருக்கிறது. அவர் பூஜித்த சிவலிங்கமும் இருக்கிறது .
கோயிலுக்குக் கிழக்கில் அக்கினி தீர்த்தம் அமைந்துள்ளது.
அக்கினியும் பிரமனும் பூஜித்த தலம்.
இங்கு அற்புதமான செப்புத் திருமேனிகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.
பலருடைய ரோகங்களைத் தீர்த்த இறைவன் இவர் என்று பல தல புராணக்கதைகள் இருக்கின்றன. ஜாதகத்தில் சுக்கிர தோஷமுள்ளவர்கள் வந்தால் அவைகள் நீங்கும் என்பதால் நிறைய பக்தர்கள் வருகின்றனர்
பராசர முனிவருக்கு சிவன் தாண்டவ கோலத்தைக் காட்டியதால் பராசபுரம் என்றும், பிரம்மனுக்கு திருமண கோலத்தைக் காட்டியதால் பிரம்மபுரி என்றும், கம்சன் என்ற வடநாட்டு மன்னனுக்கு நோயைத் தீர்த்தத்தால் கம்சனூர்/ கஞ்சனூர் என்றும் இந்த ஊர் அழைக்கப்படுகிறது
சுரைக்காய் பக்தர் என்பவர் தன் மனைவியுடன் காட்சி தருகிறார். அவருடைய வரலாறும் செவிவழியாக வந்துள்ளது. அவர் சுரைக்காயை விற்று வாழ்க்கை நடத்திய பொழுது, கடைசி சுரைக்காயை விதைக்காக வைத்திருந்ததாகவும் சிவனடியார் போல இறைவனே வந்து யாசித்தபோது அவர் ஏது செய்வதென்று திகைத்தார் என்றும் சொல்லப்படுகிறது. பாதி சுரைக்காய் கறிக்கு, மீதி பாதி விதைக்கு என்று சிவனே சொன்னார் என்றும் கதை போகிறது. இதனால் இவர் சிலையும் இடம்பெற்றுவிட்டது.
ஹரதத்தர் என்ற பெரியார் ஒரு வைணவக் குடும்பத்தில் பிறந்தாலும் சிவனை வழிபட்டு பல அற்புதங்களைச் செய்தார் . ஒரு பிராமணர் தவறுதலாக ஒரு பசுவின் கன்று மரணம் அடையக் காரணமாகியதால் பயந்து நடுங்கினார். சிவ பெருமானின் ஐந்தழுத்தை உச்சரித்தால் பாவம் நீங்கிவிடும் என்று சொல்லியும் அவர் நம்பவில்லை. உடனே ஹரதத்தர் அவரைப் புல்லைப்பறித்துக் கொணருமாறு கூறினார். கோவிலில் இருந்த கல் நந்தியிடம் அதைக் காட்டி இந்தக் கல் நந்தி புல்லைச் சாப்பிடுமானால் சிவனின் பஞ்சாட்சரமும் உமது பாவத்தை நீக்கும் என்று சொன்னவுடன் கல் நந்தி புல்லைச் சாப்பிட்டதாம். இவ்வாறு பல அற்புதங்கள் நிறைந்த இடம் என்பதால் மக்கள் நம்பிக்கையுடன் இங்கு வருகின்றனர்.
நம்பினார் கெடுவதில்லை; இது நான்கு மறைத் தீர்ப்பு என்ற பாரதியார் வாசகமும் இதை உறுதிப்படுத்துகிறது.
Xxxx
அப்பர் அருளிய தேவாரம்
அ௫ளியவர் : திருநாவுக்கரசர்
திருமுறை : ஆறாம்-திருமுறை
மூவிலைநற் சூலம்வல னேந்தி னானை மூன்றுசுடர்க் கண்ணானை மூர்த்தி தன்னை நாவலனை நரைவிடையொன் றேறு வானை நால்வேத மாறங்க மாயி னானை ஆவினிலைந் துகந்தானை அமரர் கோவை அயன்றிருமா லானானை அனலோன் போற்றுங் காவலனைக் கஞ்சனூ ராண்ட கோவைக் கற்பகத்தைக் கண்ணாரக் கண்டுய்ந் தேனே. 1
தலையேந்து கையானை என்பார்த் தானைச் சவந்தாங்கு தோளானைச் சாம்ப லானைக் குலையேறு நறுங்கொன்றை முடிமேல் வைத்துக் கோணாக மசைத்தானைக் குலமாங் கைலை மலையானை மற்றொப்பா ரில்லா தானை மதிகதிரும் வானவரும் மாலும் போற்றுங் கலையானைக் கஞ்சனூ ராண்ட கோவைக் கற்பகத்தைக் கண்ணாரக் கண்டுய்ந் தேனே. 2
–subham–
Tags- கஞ்சனூர் , சுக்கிரன் தலம்,
ஹரதத்தர், புரச மரம், பராசர முனிவர் , அப்பர்