
WRITTEN BY S NAGARAJAN
Post No. 11,826
Date uploaded in London – 22 MARCH 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
நீடித்த ஆயுள் பெற ஒரு வழி : சிருங்கேரி ஆசார்யாளின் அருளுரை!
ச.நாகராஜன்
சிருங்கேரி ஜகத்குரு ஶ்ரீ அபிநவ வித்யாதீர்த்த மஹாஸ்வாமிகள் தக்ஷிணாம்னாய சிருங்கேரி சாரதா பீடத்தின் 35வது பீடாதிபதிகளாக 35 வருடங்கள் திகழ்ந்தார்கள்.
அவர் ஆற்றிய அருளுரைகள் பல; நிகழ்த்திய லீலைகள் பல.
மஹாஸ்வாமிகள் பிங்கள வருடம் ஆச்விஜ மாதம் கிருஷ்ண பக்ஷம் சதுர்த்தசி திதி – 13-11-1917 அன்று பெங்களூர் நகரில் கைபு ராமா சாஸ்திரிகள் மற்றும் வெங்கடலக்ஷ்மி அம்மாள் ஆகிய புண்ணிய தம்பதிகளுக்கு மூத்த புத்திரனாக அவதரித்தார்கள்.
அவருக்கு ஶ்ரீநிவாஸன் என்ற பெயர் சூட்டப்பட்டது.
ப்ராஜபதி வருடம் – 1931ஆம் ஆண்டு அவர் சந்யாஸ ஆஸ்ரமத்தை ஏற்றார்.
ஜய வருடம் – 1954இல் – ஶ்ரீ சிருங்கேரி சாரதா பீடத்தின் பீடாதிபதியாக ஆனார்கள்.
அவர் புகழ் எங்கும் பரவியது.
சுதந்திர இந்தியாவின் முதல் ஜனாதிபதியான பாபு ராஜேந்திர பிரசாத் அவர்கள் குருவின் தரிசனத்திற்காக 24-8-1954 அன்று சிருங்கேரி வந்தார். தரிசனம் பெற்றார். மகிழ்ச்சியுற்றார்.
ஏராளமான ஞானிகள், தலைவர்கள், சாதகர்கள், பக்தர்கள் உள்ளிட்டோர் உலகெங்கிலுமிருந்து வந்து அவரை தரிசித்தார்கள். அருளாசி பெற்றார்கள்.
சுக்ல வருடம் பாத்ரபத சுக்ல ஸப்தமி – 21-9-1989 அன்று அவர் விதேஹ முக்தி அடைந்தார்கள்.
அவர் 21-12-1982 அன்று மத்தியப் பிரதேச மாநிலத்தில் பரமஹம்ஸி கங்கா ஆசிரமம் என்ற இடத்தில் ஒரு மாபெரும் கூட்டத்தில் அருளுரை வழங்கினார்.
அப்போது அம்பாளைத் தகுந்த வகையில் தியானம் செய்து எவ்வாறு மக்கள் தங்களுக்கு வேண்டியதை அடையலாம் என்ற ரகசியத்தையும் தெளிவாக எடுத்துரைத்தார்.
நீண்ட ஆயுளை விரும்புவோர் என்ன செய்ய வேண்டும்?
அதற்கான ஆதார பூர்வமான ஸ்லோகத்தை அவர் அப்போது கூறி அருளினார் இப்படி:
சீர்ஷாம்போருஹமத்யே சீதலபீயூஷவர்ஷிணீம் பவதீம் |
அநுதினமனுசிந்தயதாமாயுஷ்யம் பவதி புஷ்கலமவன்யாம் ||
தலையிலுள்ள தாமரையினுள் இருந்து கொண்டு அம்பாள் குளிர்ந்த அம்ருதத்தைப் பொழிவதாக யார் அனுதினமும் தியானிப்பார்களோ அவர்களின் ஆயுள் இவ்வுலகில் அதிகரிக்கும்.
ஆசார்யாள் பின்னர் லம்பிகா யோகம் என்னும் அதிசய யோகம் பற்றி விளக்கினார். சாஸ்திரம் மட்டுமின்றி, நமது அனுபவமும் கூட தலையில் ஒரு தாமரை இருப்பதையே உணர்த்துகிறது என்றும் அவர் அந்த உரையில் அருளினார்.
லலிதா சஹஸ்ர நாமத்தில் 105வது நாமமாக வரும் நாமம்:
ஸஹஸ்ராராம்புஜாரூடா
ஸஹஸ்ர (கணக்கில்லாத) தளங்களையுடையது ஸஹஸ்ரார பத்மம். ப்ரும்ஹ ரந்த்ரத்தின் கீழ் இருப்பது. அந்த பத்மத்தின் மேல் எழுந்தருளியிருப்பவள். (அங்கு வரும்படி செய்யப்பட்டவள்)
அடுத்த 106வது நாமமாகத் திகழ்வது :
ஸுதா ஸாராபி வர்ஷிணீ
மேலே சொல்லியபடி ஸஹஸ்ரார பத்மத்தின் நடுவிலிருக்கும் சந்த்ர மண்டலத்திலிருந்து அம்ருதத்தை (ஸமஸ்த நாடிகளிலும்)
பெருகும் படி செய்கிறவள்.
சௌந்தர்ய லஹரியில் ஆதி சங்கரர்,
ஸுதாதாரா ஸாரை: சரணயுகலாந்தர் விகலிதை:
ப்ரபஞ்சம் ஸிஞ்சந்தீ புநரபி ரஸாம்நாய மஹஸ:
– சௌந்தர்ய லஹரி ஸ்லோகம் 10
என்று கூறுவதை இங்கு ஒப்பு நோக்கலாம்.
இந்த ஸ்லோகத்தின் பொருள்:
தாயே! உன் திருவடிகளிலிருந்து பெருகுகின்ற அமிர்தத்தின் பிரவாகத்தால், உடலிலுள்ள எழுபத்திரண்டாயிரம் நாடிகளை நனைக்கிறாய். பிறகு சந்திர மண்டலத்திலிருந்து உன் இருப்பிடமான
ஆதார சக்ரத்தை அடைந்து, த உருவத்தைச் சர்ப்பம் போல் வட்டமாக அமைத்துக் கொண்டு சிறிய துவாரமுள்ளதும், தாமரைக் கிழங்கு போன்றதுமான மூலாதார சக்ரத்தில் யோக நித்திரையில் அமர்ந்திருக்கிறாய்.

இம்மாதிரி அம்ருதப்ரவாஹம் ஆவதைப் பற்றி சுருதியும் கூறுகிறது இப்படி:-
அம்ருதஸ்ய தாரா பஹுதா தோஹமானம் |
சரணம் கோ லோகே ஸுதிதாம் ததாது |
இந்த நாமமானது, ஸுதாதாராபிவரிஷிணீ என்றும் சொல்லப்படும்.
மனித குலத்தின் மீதுள்ள எல்லையற்ற கருணையால் அவ்வப்பொழுது தோன்றும் ஆசார்யர்கள் இப்படிப்பட்ட ரகசியங்களை உசிதமான சமயத்தில் எடுத்துரைத்து வந்திருக்கின்றனர்.
அந்த வகையில் நீடித்த ஆயுளுக்கான ரகசியத்தை இப்படி சிருங்கேரி மஹா ஸ்வாமிகள் எடுத்துரைத்துள்ளார்.
ஆதாரம் நன்றி : – யோகமும் ஞானமும் ஜீவன் முக்தியும்
சிருங்கேரி ஜகத்குருவின் ஆன்மீக சாதனை என்னும் தெய்வீக லீலை குறித்த விவரங்களை அருமையாகத் தரும் நூல்
கிடைக்கும் இடம் : ஶ்ரீ வித்யாதீர்த்த ஃபவுண்டேஷன், Sri Vidyatheertha Foundation, G 8, Sai Karuna Apartments, 49 Five Furlong Road, Guindy, Chennai 600032
போன் : 90031 92825
***
எனது தந்தையார் மதுரை தினமணி பொறுப்பாசிரியராக இருந்த போது அவ்வப்பொழுது சிருங்கேரி ஜகத்குரு அவர்களின் அருளுரையைப் பிரசுரிப்பது வழக்கம்.
ஶ்ரீ சிருங்கேரி ஜகத்குரு ஶ்ரீ அபிநவ வித்யாதீர்த்த மஹாஸ்வாமிகள் அவர்கள் மதுரைக்கு விஜயம் செய்த போது எங்கள் இல்லத்தில் எழுந்தருளி பரிபூரண ஆசிகளை வழங்கியதோடு ஒவ்வொருவருக்கும் ப்ரசாதம் கொடுத்து அனுக்ரஹித்தார்.