
Post No. 11,841
Date uploaded in London – 26 MARCH 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
யமுனா நதியில் குளியல்!
ச.நாகராஜன்
அழகிய யமுனை நதி.
நினைத்தாலே நெஞ்சம் பரவசமாகும். ஶ்ரீ கிருஷ்ணரின் நினைவு. கோபிகைகளின் பக்தி அனைத்தும் நெஞ்சத்தை நிறைக்கும்.
காலம் காலமாக பக்தர்கள் அலைமோதி அங்கு சென்று யமுனா ஸ்நாநம் செய்து ஜன்ம சாபல்யம் பெற்று வந்துள்ளதை நினைத்தாலே நெஞ்சம் பரவசமாகும்.
ஒரு பக்தர். அவர் பெயர் பி.என் மாலிக் தாதா (B.N.Maik Dada).
அவர் பெரிய மகானான அனந்த ஶ்ரீ ஶ்ரீ தாகூர் சீதாராம்தாஸ் ஓம்கார்நாத் தேவ் அவர்களின் சீடரும் கூட. (Ananta Sri Sri Thakur Sitaramdas Onkarnathdev).
அவர் தனது யமுனா ஸ்நாநம் பற்றி ஒரு கட்டுரை எழுதியுள்ளார்.
அதன் சாரம் தான் இந்தக் கட்டுரை.
அவரது எழுத்திலேயே அவர் கூறுவதைப் பார்ப்போம்:
சைத்ர சங்கராந்தி தினம். இடம் டெல்லி.
ஶ்ரீ ஶ்ரீ பாபா டெல்லிக்கு விஜயம் செய்திருந்தார். யமுனா நதியில் ஸ்நாநம் செய்ய வேண்டும் என்ற தனது விருப்பத்தை என்னிடம் தெரிவித்தார்.
இருபது வருட காலமாக நான் டெல்லியில் வசித்து வந்தாலும் கூட ஒரு தடவை கூட யமுனா நதியில் நான் குளித்ததில்லை.
பாபா எனது தயக்கத்தைப் புரிந்து கொண்டார்.
“உனக்கு கங்கை தான் பிடிக்கும் என்று எனக்குத் தெரியும். ஆனால் இன்று யமுனைக்குச் செல்வோம்” என்றார் அவர்.
யமுனைக்குச் சென்றோம்.
இடுப்பளவு ஆழத் தண்ணீரில் இறங்கினோம்.
பாபா 12 தடவை யமுனா நதியில் மூழ்கி எழுந்தார்.
நான் மூன்று தடவை மூழ்கி எழுந்தேன்.
அதற்கு மேல் என்னால் முடியவில்லை.

நீர் சகதியும் சேறுமாக இருந்தது.
பாபாவோ சந்தோஷமாகக் காணப்பட்டார். அழகிய முகம் பிரகாசமாக இருந்தது. தூய்மையாகவும் காணப்பட்டது.
நானோ உள்ளுக்குள் புழுங்கினேன். மிக மோசமாக உணர்ந்தேன்.
இன்னும் இரு இடங்களுக்கு நாங்கள் சென்றோம். பாபாவோ பிரகாசமாக இருந்தார்.
என்னாலோ பேசவே முடியவில்லை. சகதியும் அதிலிருந்த துர்நாற்றமும் என்னைத் தொந்தரவு செய்து கலங்க வைத்தது.
பாபா தங்கி இருந்த லக்ஷ்மி நாராயணன் ஆலயம் சென்ற போது, அவரிடம் விடை பெற்று சட்டென்று என் வீடு நோக்கி விரைந்தேன்.
எனது வீடு பக்கத்தில் தான் இருந்தது.
நல்ல வெந்நீரில் பல தடவை என்னை சுத்தம் செய்து கொண்டேன். சோப்பை நன்றாகப் போட்டுத் தேய்த்துத் தேய்த்துக் குளித்தேன்.
நிறைய தண்ணீரை மொண்டு எடுத்துக் குளித்துக் கொண்டே இருந்தேன்.
ஓரளவு சுத்தமாக ஆகி விட்டோம், துர்நாற்றமும் தொலைந்தது என்ற உணர்வு வந்தவுடன் தான் குளிப்பதை நிறுத்தினேன்.
சுத்தமான நல்ல ஆடைகளை அணிந்து கொண்டேன்.
பாபாவைப் பார்க்க ஆலயம் சென்றேன்.
அவர் என்னைப் பார்த்தவுடன், “வா, வா, உனக்காகத் தான் காத்துக் கொண்டிருக்கிறேன். எங்கே போனாய் இவ்வளவு நேரம்? யமுனா நதி குளியல் எவ்வளவு அழகாக இருந்தது? அதில் குளிக்க நீயோ தயங்கினாய்?!” என்றார்.
நான் கம்மிய குரலில், “ஆமாம், ஆமாம், பிரமாதம். நன்றாக இருந்தது” என்றேன்.
ஶ்ரீ கிருஷ்ணரும் கோபிகைகளும் குளித்த யமுனா நதியில் பாபா குளித்து விட்டு வந்திருந்தார்.
நானோ டெல்லி சாக்கடை நீரெல்லாம் கலந்த அழுக்கும் நாற்றமும் உடைய யமுனா நதியில் குளித்து விட்டு வந்திருந்தேன்.
5000 ஆண்டுகளாக யமுனை அன்னை அதே மாதிரியாகத் தான் பாய்ந்து ஓடிக் கொண்டிருக்கிறாள். அதிலே தான் பாபா குளித்தார். சுத்தமாக ஆனார்.
ஆனால் எனக்கோ அதே யமுனா நதி தான் இன்றைய அழுக்கு நீராக இருந்தது.
கடவுள் அழுக்கு நீரைச் சுத்தமாக ஆக்குகிறார். மனிதனோ நல்ல நீரை அழுக்காக ஆக்குகிறான்!
நன்றி : ட்ரூத் 30-12-2022 இதழ்
Source & Thanks Truth Kolkata Weekly Issue 30-12-2022 Vol 90 No 36
***