
Post No. 11,844
Date uploaded in London – 27 MARCH 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
சுபாஷிதச் செல்வம்
உண்மையான மகன் யார்? மனைவி யார்? நண்பன் யார்?
ச.நாகராஜன்
உண்மையான மனைவி யார்?
ஒரு உண்மையான மனவிக்கான இலக்கணம் என்ன? யாரை மகன் என்று கூற முடியும்? ஒரு நல்ல நண்பன் என்று கூறத் தக்கவன் யார்?
இந்த அனைத்துக் கேள்விகளுக்கும் ஒரு பாடலில் விடை தரப்படுகிறது.
ய: ப்ரீணயேத்சுசாரிதை: பிதரம் ச புத்ரோ
யத்பர்த்ருரேவ ஹிதமிச்சதை தத்களத்ரம் |
தன்மித்ரமாபதி சுகே ச சமக்ரியம் ய-
தேதத் த்ரயம் ஜகதி புண்யக்ருதோ லபந்தே ||
இந்த சுபாஷிதத்தின் பொருள்:
தனது மேன்மையான நடத்தையால் எந்த ஒருவன் தனது தந்தையை சந்தோஷப்படுத்துகிறானோ அவனே புத்திரன் எனச் சொல்லப்படுவான்.
தனது கணவனின் ஹிதத்தை எப்போதும் நினைத்துக் கொண்டிருக்கும் ஒருத்தியே மனைவி எனப்படுவாள்.
வளமாக சுகத்துடன் இருக்கும் காலத்திலும் அபாயகரமான காலத்திலும் எவன் ஒருவன் உதவி செய்கிறானோ அவனே நண்பன் எனப்படுவான்.
இந்த மூவரும் யாருக்குக் கிடைக்கும் எனில் புண்யம் செய்தவர்களுக்கே இப்படிப்பட்ட மூவர் கிடைப்பார்கள்.
இங்கு திருவள்ளுவரின்
“உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு” – (குறள் எண் 788)
என்ற குறளை ஒப்பு நோக்கலாம்.

காலால் தொடாதே!
எதையெல்லாம், யாரையெல்லாம் காலால் மறந்தும் தொடக் கூடாது.
ஒரு பட்டியலையே தருகிறார் கவிஞர்:
பாதாப்யாம் ந ஸ்ப்ருஷேதக்னிம் ந குரும் ப்ராஹ்மணம் ததா|
ந காம் ச ந குமாரிம் ச ந சிஷும் ந ச தேவதாம்.
பாதத்தால் தீயைத் தொடாதே.
அது மட்டுமல்ல பாதத்தால் தொடக் கூடாதவர்கள் இதோ;
குரு
ப்ராஹ்மணர்
பசு
குமாரி
குழந்தை
(தெய்வ) தேவதைகள்
சொர்க்கம் செல்ல வேண்டுமென்றால்….
சொர்க்கத்திற்குச் செல்ல யாருக்குத் தான் ஆசை இருக்காது.
சொர்க்கத்திற்குச் செல்வது பற்றி ஒரு கவிஞர் ‘டிப்ஸ்’ (TIPS) தருகிறார் இப்படி:
கொடுக்கப்படாததை மனதால் கூட இச்சிக்கக் கூடாது.
மதுபானத்தை அருந்தக் கூடாது.
உயிருள்ளவற்றை இம்சிக்கக் கூடாது.
தவறானவற்றைச் சொல்ல கூடாது.
அடுத்தவர் மனைவியை மனதாலும் விரும்பக் கூடாது. அடைய முயற்சிக்கக் கூடாது.
இவற்றை எல்லாம் சொர்க்கத்திற்குச் செல்ல விரும்புவோர் க்டைப்பிடிக்க வேண்டும்.
கடைப்பிடித்தால்,
பிறகென்ன, சொர்க்கம் நிச்சயம் தான்!
நாதத்தமிச்சேன்ன பிபேச்ச மத்யம்
ப்ராணான்ன ஹிம்ஸென்ன வதேச்ச மித்யா |
பரஸ்ய தாரான்மனசாபி நேச்சேத்ய:
ஸ்வர்காமிச்சேஎதூக்ருஹவத்ப்ரவேஷ்டம் ||
பண்டிதன் யார்?
பண்டிதன் என்று யாரைச் சொல்லலாம். கவிஞர் வழி காட்டுகிறார்:
எவன் ஒருவனின் செயல்கள் தடைகளைச் சந்திக்கவில்லையோ அவனே பண்டிதன்.
தடைகள் என்பவற்றில் கீழ்க்கண்டவையும் அடங்கும்:
குளிர்,
வெப்பம்,
பயம்,
பற்று,
வளம்,
வளமின்மை
இந்தத் தடைகள் அனைத்தையும் கடந்து தாண்டித் தன் செயல்களைச் செய்பவனே பண்டிதன் ஆவான்.
யஸ்ய க்ருத்யம் ந விதந்தி ஷீதமுஷ்ணம் பயம் ரதி: |
சம்ருத்திரசம்ருத்திர்வா ச வை பண்டித உச்யதே ||
கிடைக்கவே கிடைக்காதது எது?
ஒருவனுக்கு இன்னொரு வளமான வாழ்வு கிடைக்கலாம்.
இன்னொரு நண்பன் கிடைக்கலாம்.
இன்னொரு மனைவி கிடைக்கலாம்.
இன்னொரு நிலம் கிடைக்கலாம்.
இந்த எல்லாமும் கூட கிடைக்கலாம். ஆனால்
ஒருவனின் உடல் கிடைப்பதென்பது முடியவே முடியாது.
புனர்வித்த்தம் புனர்மித்ரம் புனர்பார்யா புனர்மஹீ |
ஏதத்சர்வம் புனர்லப்யம் ந சரீரம் புன: புன: ||
***