
Post No. 11,880
Date uploaded in London – 8 APRIL 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
பொன்னொளிர் பாரதம்!,,
ஒரு பட்டுக் கைக்குட்டையின் கதை!
ச.நாகராஜன்
இந்தியாவின் நெசவுத் தொழில் புகழ் பெற்ற ஒன்று என்பதை உலகம் நன்கு அறியும்.
டாக்கா மஸ்லின் என்பதைக் கேள்விப் படாதோர் இருக்க முடியாது.
இந்த நெசவுத் தொழிலில் தேர்ந்தவர்கள் இந்தியர்கள் என்பதையும் அவர்களை ஒரு நாளும் எந்த தேசத்தவராலும் வெல்ல முடியாது என்பதையும் அறிந்த ஆங்கிலேயர் பொறாமையால் கொதித்தனர்.
இதற்குக் காரணம் அவர்களின் கை திறமையே என்பதைக் கண்ட அவர்கள் அனைத்து நெசவாளர்களின் கைகளில் உள்ள கட்டை விரல்களை வெட்டினர்.
அந்தத் தொழில் நசித்தது.
பாவிகள் சந்தோஷப்பட்டனர்.
இப்போது ஒரு பட்டுக் கைக்குட்டையின் கதையைப் பார்ப்போம்.
இது நிஜமாக நடந்தது.
1915ஆம் ஆண்டு வங்காள லெஜிஸ்டேடிவ் கவுன்சிலில் சுரேந்திரநாத் பானர்ஜியின் தீர்மானத்தை வரவேற்று திருவாளர் பீட்ஸன் பெல் (Mr Beatson Bell, in the Bengal Legislative Council) பேசுகையில் நிஜமாக நடந்த இந்த சம்பவத்தைக் குறிப்பிட்டார்.
சுரேந்திரநாத் பானர்ஜி இந்திய தொழிற்சாலைகளை ஊக்குவிக்க வேண்டும் என்ற தீர்மானத்தை முன் வைத்தார்.
அதையொட்டி அதை வரவேற்ற தனது பேச்சில் இந்த சுவாரஸியமான சம்பவத்தை பீட்ஸன் குறிப்பிட்டார்.
லார்டு கெமிகல் (Lord Chemichael) என்ற ஆங்கில துரையும் அவரது தந்தையாரும் எடின்பரோவில் இருந்த ஒரு கடைக்குச் சென்றனர்.
அங்கு வைக்கப்பட்டிருந்த துணிகளில் இந்திய பட்டுக் கைக்குட்டை ஒன்று அவர்களைக் கவர்ந்தது. அதை வாங்கினார் கெமிகல்.
பின்னர் அவர் மதராஸ் கவர்னராக மதராஸுக்கு வந்தார்.
வந்தவுடன் சென்னையில் உள்ள அனைத்து வியாபாரிகளிடம் தனது மாதிரி கைக்குட்டையைக் காண்பித்து அது போன்ற கைக்குட்டை வேண்டுமென்றார். சென்னை வியாபாரிகள் கை விரித்தனர்.
அது போன்ற கைக்குட்டைகள் வங்காளத்தில் தான் தயாரிக்கப்படுவதாகவும் அங்கே சென்றால் தான் அதை வாங்க முடியும் என்றும் அவர்கள் கூறினர்.
லார்டு கெமிகல் (Lord Chemichael) வங்காளத்தின் முதல் கவர்னராக ஆனார். வந்து பதவியேற்றார். பதவியேற்றவுடன் தன் மாதிரி கைக்குட்டையை அங்குள்ள வியாபாரிகளிடம் அனுப்பி அது போன்ற கைக்குட்டை வேண்டுமென்றார்.
அவர்கள் அதை நன்கு பார்த்து விட்டு அது ஒருவேளை பம்பாயில் தயாரிக்கப்பட்டிருக்கலாம் என்றனர்.
பம்பாயில் அது பற்றிய தேடுதல் வேட்டை ஆரம்பிக்கப்பட்டது.
பம்பாய் வியாபாரிகள் அது பர்மாவில் தயாரிக்கப்பட்டிருக்கலாம் என்று தெரிவித்தனர்.
லார்டு கெமிகல் விடவில்லை. பர்மாவில் விசாரிக்கத் தொடங்கினார்.
பர்மா வணிகர்கள் அது ஜப்பானில் தயாரிக்கப்பட்டிருக்கலாம் என்ற தங்கள் கருத்தை முன் வைத்தனர்.
லார்ட் கெமிகல் உடனே ஜப்பானின் டிபார்ட்மெண்ட் ஆஃப் காமர்ஸ் அண்ட் இண்டஸ்ட்ரீஸைத் தொடர்பு கொண்டார்.
பல மாதங்கள் கழிந்த பின்னர் ஜப்பானிலிருந்து பதில் வந்தது.
அது தென் பிரான்ஸில் தயாரிக்கப்பட்டிருக்கலாம் என்பதே பதில்
கெமிகல் விடவில்லை.
பிரான்ஸில் தன் தேடுதலைத் தொடர்ந்தார்.
ஆனால் பிரான்ஸிலிருந்து பதிலே வரவில்லை.
என்ன செய்வதென்று யோசித்த அவர் தான் வாங்கிய எடின்பரோ கடையிலேயே அந்த கைக்குட்டையைப் பற்றி விசாரித்தார்.
நிஜமாக அவர்கள் அதை எங்கிருந்து பெற்றனர் என்பதைச் சொல்ல வேண்டும் என்று விசேஷ வேண்டுகோளை விடுத்தார்.
பதில் வந்தது.
.jpg)
என்ன ஆச்சரியம்? அது வங்காளத்தில் முர்ஷிபாத்தில் வாங்கப்பட்டதாம்.
முர்ஷிபாத்தில் அந்தக் கைக்குட்டைகளைப் பார்த்தவுடன் கெமிகல் ஆனந்தக் கண்ணீர் விட்டாராம்.
இதை தனது உரையில் சொன்னார் மிஸர் பீட்ஸன் பெல்.
இந்திய பட்டுக் கைக்குட்டைகளின் நேர்த்தியும் வடிவமைப்பும் கைத்திறனும் ஒப்பற்றது என்பதை உலகம் ஒப்புக் கொண்டது அன்றே!
இன்றும் கூட காஞ்சிபுரத்தில் தயாரிக்கப்படும் பட்டுச் சேலைகளுக்கு உலகெங்கும் கிராக்கி இருப்பது கண்கூடு.
எதிலும் சோடையில்லை இந்தியர்கள் – அன்றும், இன்றும்!
***
நன்றி & ஆதாரம் : கல்கத்தா வார இதழ் ட்ரூத்
Thanks and Source
Truth Kolkata Weekly Volume 76 No 40 dated 16-1-2009
Reprinted from its old issue Volume 4, No 36 dated 8-1-1937