
Post No. 11,891
Date uploaded in London – 11 APRIL 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
ராமாயண வழிகாட்டி!
சீதையின் ப்ரதிக்ஞை! – 2
ச.நாகராஜன்
மனதை நெகிழ வைக்கும் ஒரு நிகழ்ச்சியை உத்தரகாண்டம் 97வது ஸர்க்கம் விவரிக்கிறது.
தனது அவதார நோக்கத்தைப் பூர்த்தி செய்த அன்னை சீதா தேவி பூமாதேவியிடம் திரும்புவதை வர்ணிக்கும் ஸர்க்கம் இது.
உத்தரகாண்டம் மொத்தம் 110 ஸர்க்கங்களைக் கொண்டது. இதில் மொத்தம் 3276 ஸ்லோகங்கள் உள்ளன. 97வது ஸர்க்கத்தில் உள்ள ஸ்லோகங்கள் 26.
இதில் சீதையின் பிரதிக்ஞை (சபதம்) இடம் பெறுகிறது.
பிரம்மாண்டமான அவை கூடுகிறது. தேவர்களும் நிகழப் போகும் நிகழ்ச்சியைப் பார்க்கக் கூடுகின்றனர்.
அனைத்து மக்களும், ரிஷிகளும் வந்து குழுமியுள்ள சபையில் வால்மீகி முனிவர் சீதை சுத்தமானவள் என்பதை சபதம் செய்து கூறியதோடு லவ, குசரை ராமரின் புதல்வர்களே என உறுதிப் படுத்துகிறார்.
மனம் கலங்கும் ராமர் சீதையின் பத்தினித்தன்மையை தான் முழுதும் அறிந்தவன் என்பதோடு லவ குசர் ஆகிய இருவரும் தனது புதல்வர்களே என உறுதியுடன் நம்புவதாகக் கூறுகிறார்.
என்றாலும் லோக அபவாதம் என்பதை ஒட்டியே சீதை தனித்திருக்க விடப்பட்டாள் என்பதை அவர் விளக்குகிறார்.
அப்போது காஷாயச் சேலையை தரித்துக் கொண்டு தலையைக் குனிந்தவாறு ஸபையினரை நோக்கி அஞ்சலி ஹஸ்தராகி இந்த பிரமாணத்தை சீதா தேவி கூறி அருள்கிறார்.
நான் மனச்சாட்சியுடன் ஶ்ரீ ராகவர் ஒருவரைத் தவிர வேறு எதற்கும் சிந்தையில் இடம் கொடாதிருந்தது ஸத்தியமானால், மாதவருக்கு பத்னியான பூமாதேவி எனக்கு இடத்தைக் கொடுக்கக் கடவள்.
யதாஹம் ராகவாதன்யம் மனஸாபி ந சிந்தயே |
ததா மே மாதவீ தேவீ விவரம் தாதுமர்ஹதி ||
– ஸ்லோகம் 14
மனதாலும் செய்கையாலும் வாக்காலும் ஶ்ரீ ராமரையே எப்போதும் நான் பூஜித்து வந்தேன் என்பது ஸத்தியமானால் மாதவருக்கு பத்னியான பூமாதேவி எனக்கு இடத்தைக் கொடுக்கக் கடவள்.
மனஸா கர்மணா வாசா யயா ராமம் சமர்ச்சயே |
ததா மே மாதவீ தேவீ விவரம் தாதுமர்ஹதி ||
– ஸ்லோகம் 15
ஶ்ரீ ராமரைக் காட்டிலும் மேலானதொன்றையும் நான் அறிந்திலேன்
என்ற இந்த எனது மொழி ஸத்தியம் என்னும் பக்ஷத்தில் மாதவரின் பத்னியான பூமாதேவி எனக்கு இடத்தைக் கொடுக்கக் கடவள்”
யதைதத்ஸத்யமுக்தம் மே வேத்தி ராமாத்பரம் ந ச |
ததா மே மாதவீ தேவீ விவரம் தாதுமர்ஹதி ||
– ஸ்லோகம் 16
இப்படி சீதா தேவியார் தனது பிரதிக்ஞையைச் செய்ய, உடனே ஒரு தெய்வாதீன சம்பவம் நடைபெற்றது.
அமித ஆற்றல் கொண்டதும், திவ்ய ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்டதும் முடிகளால் நாகங்களால் ஜோதி மயமான காட்சியால் கண்களைக் கவரும் வண்ணம் தாங்கப் பெற்றதும் ஒப்புயர்வு இல்லாததுமான தேவதைகளுக்கே ஏற்ற ஒரு சிங்காசனம் பூமியிலிருந்து வெளிப்பட்டது.
பூமிதேவி வெளிப்பட்டு மைதிலியை தனது இரு திருக்கரங்களாலும் அணைத்தெடுத்து நன் மனத்துடன் ஆதரித்து போற்றிப் புகழ்ந்து அழைத்தாள். அந்த சிங்காசனத்தில் அமர வைத்தாள்.
சிங்காசனம் மைதிலியுடன் பூதலத்தினுள் புகுந்தது.
தேவர்கள் ஓயாது பூமாரி பொழிந்தனர். நன்று நன்று என்று தேவர்கள் கூவினர்.
முனிவர்கள் மன்னர்களும் மக்களும் யாதும் தோன்றாதவர்களாக நின்றனர்.
சிலர் ஆனந்தக் கூச்சலிட்டனர். சிலரோ பரமாத்வை தியானம் செய்ய ஆரம்பித்தனர்.
உலகமே ஒரு முகூர்த்த காலம் ஏக்கம் பிடித்துக் கிடந்தது.
(தத் ஜகத் சமம் முகூர்த்த இவ அத்யர்த சம்போஹிதம்)
அருமையான சொற்களால் வால்மீகி இதை உள்ளம் நெகிழும் வண்ணம் விவரிக்கிறார்.
சீதையின் முக்கிய பிரதிக்ஞையை விவரிக்கும் ஸர்க்கமாக இது அமைகிறது.
சீதா தேவி கி ஜய்!
***