
WRITTEN BY S NAGARAJAN
Post No. 11,900
Date uploaded in London – 14 APRIL 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
ராமாயண வழிகாட்டி!
சீதையைப் பற்றிய வால்மீகி முனிவரின் ப்ரதிக்ஞை!
ச.நாகராஜன்
ஆதி காவ்யமான ராமாயணத்தை இயற்றிய வால்மீகி முனிவர் தான் இயற்றிய காவியத்தில் தானே ஒரு முக்கிய கதாபாத்திரமாகத் திகழ்வது எந்த காவியத்திலும் காண முடியாத அபூர்வமான உத்தி.
அவரே சீதையின் கற்பு பற்றி கூறுவதோடு, லவகுசர்கள் ஶ்ரீ ராம- சீதா தம்பதியினரின் புதல்வர்களே என அறுதியிட்டு உறுதி கூறுகிறார்.
சுவையான காவியத்தில் சுவாரசியமான உத்திகள் இடம் பெறுகின்றன.
ராமரின் யாகசாலையில் வந்த லவகுசர்கள் ராமாயணத்தை வால்மீகி இயற்றியபடி அருமையாகப் பாடத் தொடங்கினர்.
கேட்ட அனைவரும் விக்கித்துப் போயினர்.
ராமர் உடனே உணர்ந்து கொண்டார்- இந்தக் காவியத்தை அமைத்த வால்மீகி மாமுனிவர் லவகுசர்களை இங்கு அனுப்பி இதைப் பாட வைத்திருக்கிறார் என்று.
உடனே தன் தூதர்களை அனுப்பி வால்மீகி மஹரிஷியை தன் யாகசாலைக்கு வருமாறும் சீதையின் அற்புத கற்பின் மஹிமையை உணர்த்துமாறும் வேண்டுகிறார்.
தூதர்களிடம் ஶ்ரீ ராமர் கூறுகிறார்:
“இங்கிருந்து நீங்கள் பகவானது சந்நிதிக்கும் போக வேண்டும். எனது பின் வரும் விண்ணப்பதை நீங்கள் தெரியப் படுத்துங்கள். ‘அவளைப் போல் கற்புடையவள் வேறொருத்தி இல்லாதவளாக இருக்கும் பக்ஷத்தில் மனம், வாக்கு, காயம் இவைகளால் ஏற்படும் எப்படிப்பட்டதாகிய பாவத்திற்கும் இடமாகாதவளாய் இருக்கும் பக்ஷத்திலும் முனிவர் பெருமானை கேட்டு அனுமதி பெற்றுக் கொண்டு இப்படி தோஷமற்றவளாக இருப்பதை இவ்விடத்தில் நிரூபிக்க வேண்டும்.
மத்வசோ ப்ரூத கச்சத்வமிதோ பகவதோந்திகம் |
யதி சுத்தசமாசாரா யதி வா வீதகல்மஷா ||
கரோத்விஹாத்மன: சுத்திமனுமான்ய மஹாமுனிம் ||
“எனது சபையின் நடுவில் ஜனகரின் திருமகளாகிய மைதிலீ உள்ளது உள்ளபடியே இருக்கும் தீர்மானத்தைப் பெற வேண்டிய காரணமாய் சபதத்தை நாளை காலையிலேயே செய்யக் கடவள்.
பிரமாணம் செய்யும் விஷயத்தில் முனிவரது திருவுள்ளத்தையும் எவருக்கும் ஹிதமே செய்யும் மனம் உடையவளாகிய சீதையினது அபிப்ராயத்தையும் அறிந்து அவ்விடமிருந்து சீக்கிரமாய் திரும்பி வந்து எனக்கு நீங்கள் தெரியப் படுத்த வேண்டும்.”
சந்தம் முனேச்ஸ விஞ்ஞாஉஅ சீதாபாச்ஸ மனோகதம் |
ப்ரத்யம் தாதுகாமாயாஸ்தத: சம்ஸத்க மே லகு ||
ஸ்வ ப்ரபாதே து சபதம் மைதிலீ ஜனகாத்மஜா |
கரோது பரிஷன்மத்யே ஷோதநார்த்தே மமைவ ச ||
ராமரின் இந்த மொழியைக் கேட்ட தூதர்கள் வால்மீகி முநிவரிடம் சென்று இதைத் தெரியப்படுத்தினார்கள்.
உடனே முனிவர் இந்த பதிலை விடுத்தார்:

“உங்களுக்கு மெச்சுதலே கிடைக்கும். அங்ஙனமே ஆகட்டும். ஸ்திரீயாகிய எவளுக்கும் கணவன் ஒருவனே போற்ற வேண்டிய தெய்வம் அன்றோ! சீதை ஶ்ரீ ராகவர் எதைச் செய்தால் மனத் திருப்தி அடைவாரோ அதையே செய்வாள்.
ஏவம் பவது பத்ரம் வோ யயா துஷ்யதி ராகவ: |
ததா கரிஷ்யதே சீதா தைவதம் ஹி பதி: ஸ்த்ரீயா: ||
வால்மீகி முனிவரின் அற்புதமான ப்ரதிக்ஞை சீதையின் கற்புத்தன்மையை உலகிற்கு பறை சாற்றியது.
மறுநாள்!
யாகசாலையில் கூடிய முனிவர்கள் . .. அடேயப்பா..!
வஸிஷ்டர், வாமதேவர், ஜாபாலி, காஸ்யபர், விஸ்வாமித்திரர், துர்வாஸர், புலஸ்தியர், சக்தி, பார்க்கவர், வாமனர், மார்க்கண்டேயர், மௌத்கல்யர், கர்க்கர், ஸ்யவனர், சதாநந்தர், பரத்வாஜர், அக்னி புத்திரராகிய சுப்ரபர், நாரதர், கௌதமர் காத்யாயனர், சுயக்ஞர், அகஸ்தியர் இன்னும் ஏராளமான முனிவர்கள் கூடினர்.
அங்கே தான் சீதையின் சபதம் அரங்கேறியது.
(இதை முந்தைய கட்டுரையில் பார்த்தோம்)
வால்மீகியும் கதாபாத்திரமாக மாறி சீதையின் புனிதத்தன்மையைக் கூறும் உத்தரகாண்டம் 95வது ஸர்க்கம் வால்மீகி ராமாயணத்தில் ஒரு முக்கியமான ஸர்க்கம்.
ஶ்ரீ ராம் கீ ஜெய்! சீதா தேவி கீ ஜெய்!!
***