
Post No. 11,918
Date uploaded in London – 20 APRIL 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
யுத்தத் துளிகள் – ரத்தத் துளிகள்
புதிய நெடுந்தொடர்
இரண்டாம் உலகப் போர் – ஆரம்பமும் முடிவும்!
ச.நாகராஜன்
1
டிரான்ஸ்அட்லாண்டிக்
மனித குலத்தில் நமக்குத் தெரிந்து நன்கு ஆவணப்படுத்தப்பட்ட பெரும் போராகத் திகழ்வது இரண்டாம் உலகப் போர்.
இதைப் பற்றியும் இதைத் தொடர்ந்து முதல் உலகப் போர் பற்றியும் பல யுத்தத் துளிகளைச் ‘சிந்தும்’ தொடர் இது.
ரத்தத் துளிகளாக இவை பெரும்பாலும் இருப்பதால் மனதை நிச்சயம் நெகிழ வைக்கும்.
இதை எழுதக் காரணமாக இருந்தது நான் சென்ற வாரம் நெட்ஃப்ளிக்ஸில் பார்த்த TRANSATLANTIC என்ற தொலைக்காட்சித் தொடர் தான்.
7 பகுதிகளைக் கொண்ட இந்தத் தொடர் Anna Winger மற்றும் Daniel Hendler ஆகியோரால் உருவாக்கப்பட்ட தொடர். இது ஜூலி ஓரிங்கர் எழுதிய ‘தி ஃப்ளைட் போர்ட்ஃபோலியோ” (The Flight Portfolio by Julie Orringer) என்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட தொடர்.
‘எமர்ஜென்ஸி ரெஸ்க்யூ கமிட்டி’ என்ற அவசர கால மீட்புக் குழு எப்படியெல்லாம் பிரான்ஸிலிருந்து யூதர்களையும் பிரிட்டிஷ் ப்ரிஸனர் ஆஃப் வார் POW – கைதிகளையும் படு பாதகக் கொலையிலிருந்து காத்து அவர்களைத் தப்பிக்க வைத்தது என்பதை சுவாரசியமாகச் சொல்லும் தொடர் இது.
இரண்டாம் உலகப் போரின் ஒரு மிகச் சிறிய பகுதியை ஒரு சிறிய வட்டத்திற்குள் சித்தரிக்கும் இந்தத் தொடரே நம்மை நெகிழ வைக்கிறது என்றால் முழு உலகப் போர் செய்திகள் நம்மை எப்படியெல்லாம் உளவியல் ரீதியாகப் பாதிக்கும் என்பதை எண்ணிப் பார்க்கலாம்.
இன்னும் ஒரு உலகப் போர் நிச்சயமாக உருவாகக் கூடாது என்ற உணர்வு குழந்தைகளிலிருந்து முதியோர் வரை மனதில் வேரூன்ற வேண்டும் என்பதால் தான், இதையும் உலகப் போர் பற்றியும் அறிய வேண்டிய அவசியம் இன்று ஏற்படுகிறது.
2
இரண்டாம் உலகப் போர் ஆரம்பமும் முடிவும்!

1-9-1939 அன்று ஹிட்லர் போலந்து மீது படையெடுத்ததைத் தொடர்ந்து உலகப்போர் ஆரம்பமானது. 3-9-1939 அன்று பிரிட்டனும் பிரான்ஸும் ஹிட்லருக்கு எதிராகப் போரை அறிவித்தன.
1945,ஆகஸ்ட் மாதம் ஆறாம் தேதி அமெரிக்கா ஜப்பானில் உள்ள ஹிரோஷிமாவில் காலை 8.15 மணிக்கு அணுகுண்டைப் போட்டது. உலகில் போடப்பட்ட முதல் நாசகரமான பேரழிவு ஆயுதம் இது தான்.
அது போட்ட அந்தக் கணத்திலேயே 80000 பேர்கள் இறந்தனர்.
அடுத்த அணுகுண்டு அமெரிக்காவினால் ஜப்பானில் உள்ள நாகசாகி நகரின் மீது 1945 ஆகஸ்ட் மாதம் ஒன்பதாம் தேதி போடப்பட்டது. போடப்பட்ட அந்தக் கணத்திலேயே 40000 பேர்கள் இறந்தனர்.
ஜப்பானிய மன்னர் திகைத்தார். உலகமே திகைத்தது.
இதைத் தொடர்ந்து ஜப்பான் சரணாகதி அடைய உலக யுத்தம் முடிவுக்கு வந்தது.
இன்னொரு உலகப் போர் உருவாகி அணுகுண்டுப் போராக அது மாறினால் உலகம் என்ன ஆகும்?
பெர்ட் ரண்ட் ரஸ்ஸல் கூறிய படி மூன்றாம் உலக போர் ஏற்பட்டால் அதற்கு அடுத்த போரில் மனிதர்கள் கற்காலத்திய சண்டை போல கல்லினாலும் கையாலும் தான் சண்டை போட வேண்டி வரும்.
ஆம் நாம் கற்காலத்திய மனித நிலைக்குத் திரும்பி விடுவது உறுதி.
ஆகவே உலகப் போர் பற்றிய இந்த யுத்தத் துளிகளை – அது சிந்திய ரத்தத் துளிகளை அனைவரும் அறிவது அவசியம்.
வாருங்கள் துளிகளைப் பார்ப்போம்.
**** தொடரும்