
WRITTEN BY S NAGARAJAN
Post No. 11,924
Date uploaded in London – 22 APRIL 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
இரண்டாம் உலகப் போர் யுத்தத் துளிகள் – ரத்தத் துளிகள்
புதிய நெடுந்தொடர்.
அத்தியாயம் 3
நாஜிக்களின் சித்திரவதையால் பிறந்த புதிய மின்னல் வேகக் கணிதம்!
ச.நாகராஜன்
பகுதி 4
“கணிதம் கலைகளின் அரசன்; விஞ்ஞானத்தின் ராணி!”
– பிரபலமான பொன்மொழி
இரண்டாம் உலக போரில் ஹிட்லரால் கொடுமைப்படுத்தப்பட்டவர்களுள் முக்கியமாகவும் முதலாவதாகவும் அமைந்தவர்கள் யூதர்கள். இதற்காக மற்றவர்களை அவன் சும்மா விட்டு விடவில்லை.
தன்னை ஆதரிக்காத, தன்னை மதிக்காத, தனக்குக் கீழ்ப்படியாத யாராக இருந்தாலும் சரி அவர்கள் கதி அதோ கதி தான்.
நோபல் பரிசு பெற்ற மா மேதைகளும், கணித விற்பன்னர்களும், பொறியியில் வல்லுநர்களும், ஓவியர்களும், எழுத்தாளர்களும் இன்ன பிற துறையில் இருந்த ஏராளமானோர் அவனது கொள்கை பிடிக்காத காரணத்தினால் துணிந்து எதிர்த்தனர்.
ஐயகோ! அவர்களின் கதி பரிதாபகரமானது.
இந்த பரிதாபகரமான நிலையில் தான் சில நல்ல விஷயங்களும் கண்டுபிடிக்கப்பட்டன.
மேலை நாட்டுப் பள்ளிக் கூடத்தில் ஆச்சரியகரமான சம்பவம் ஒன்று நடந்தது.
அது ஒரு கணித வகுப்பு. கணித ஆசிரியர் ஒருவர் ஒன்பதே வயதான ஒரு சிறுவனிடம் மூன்று அடி நீளத்திற்குப் பல எண்களை எழுதி, ‘இதன் கூட்டுத் தொகை’ என்ன என்று விளையாட்டாகக் கேட்டார்.
ஆனால் அந்தச் சிறுவனோ தயங்காமல் அந்த எண்களை ஒரு முறை பார்த்து விட்டு உடனே அதன் கூட்டுத் தொகையைக் கூறினான். ஆசிரியர் அசந்து போனார். இன்னொரு சிறுமியைப் பார்த்து “735352314’ என்ற எண்ணை 11ஆல் பெருக்கினால் வரும் தொகை என்ன? என்று கேட்டார்.
அந்தச் சிறுமியோ சற்றும் பதட்டப்படாமல் அவர் கூறி முடித்த அடுத்த கணமே “8088875454” என்ற சரியான விடையைக் கூறினாள். ஒரே விநாடியில் விடை~
குட்டிப்பையன் ஒருவனை அவர், “ 5132437201 என்ற எண்ணை 452736502785 என்ற எண்ணால் பெருக்கி வரும் விடையைச் சொல்ல உனக்கு எவ்வளவு நேரம் ஆகும்?” என்று கேட்டார்.
அவனோ அடுத்த விநாடியே”23236416669144374104785” என்ற சரியான விடையைக் கூறி அனைவரையும் அசத்தினான்.
எப்படி இது? மந்திரமா, மாயமா?
ஒன்றுமில்லை.
“டிராக்டன்பெர்க் சிஸ்டம் ஆஃப் மேத்ஸ்” என்ற புதிய கணித முறைப்படி கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் ஆகிய கணக்குகளை மின்னல் வேகத்தில் போட்டு சில விநாடிகளிலேயே பதிலை கூறி விடலாம்.
அதைத் தான் இந்தக் குட்டிப் பையன்களும் பெண்களும் செய்து காண்பித்தனர்.
இந்த மின்னல் வேகக் கணித முறையைக் கண்டுபிடித்தவர் ஜாக்கோ டிராக்டன்பெர்க் (Jakow Trachtenberg) என்னும் கணித மேதை.
1888ஆம் ஆண்டு ரஷிய நாட்டில் ஒடிஸா என்ற இடத்தில் பிறந்தவர் ஜாக்கோ டிராக்டன்பெர்க். ஹிட்லரின் சித்திரவதை முகாமில் அரசியல் கைதியாகச் சொல்லொணா சித்திரவதையை அனுபவிக்கும் போது இந்தக் கணித முறையை அவர் கண்டு பிடித்தார்.
இளம் வயதிலேயே அபார மேதையாக விளங்கினார் அவர். செயிண்ட் பீடர்ஸ்பர்க்கில் இருபதாம் வயதிலேயே எஞ்சினியரிங் படிப்பில் தேர்ச்சி பெற்று துறைமுகத்தில் தலைமைப் பொறியாளரானார்.
அது ஜார் மன்னனின் அரசாட்சிக் காலம். 1000 பெருக்கு அதிகாரியாக விளங்கி அபாரமான ஆற்றலுடன் திறம்பட ஷிப் யார்டை அவர் நிர்வகித்தார்.
சண்டை என்றாலே அவருக்குப் பிடிக்காது. முதல் உலகப் போரின் போது காயம் பட்ட படை வீரர்களுக்கு சிகிச்சையை அளித்து அவர் ஜார் மன்னனின் விசேஷ பாராட்டைப் பெற்றார்.
1918இல் எழுந்த ரஷிய புரட்சியால் அரச குடும்பத்தினர் அனைவரும் கொலை செய்யப்பட்டனர். பிரமாதமாக கடற்படையை அமைக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருந்த டிராக்டன்பெர்க்கின் கனவு சிதைந்தது.
புரட்சியாளர்கள் ரஷியா முழுவதும் பரவி மன்னராட்சியை எதிர்த்த போது அவரோ சட்டத்தை அனைவரும் மதிக்க வேண்டும் என்று உபதேசம் செய்தார். இது யாருக்கும் பிடிக்கவில்லை.
இதனால் அவரது உயிருக்கே ஆபத்து வரப் போகிறது என்ற நிலையை அறிந்த அவர் விவசாயி போல வேஷம் போட்டு பகல் நேரங்களில் ஒளிந்திருந்து இரவு நேரங்களில் மட்டும் யாரும் அறியாமல் நடந்து ஜெர்மனிக்குத் தப்பி ஓடினார்.
அழகிய விசாலமான வீதிகளும், அற்புதமான இதமான குளிர்ந்த காற்றும் அவருக்கு தனது சொந்த ஊரான பீட்டர்ஸ்பர்க்கை நினைவு படுத்தின.
ஒரு சிறிய அறையில் தனது புதிய வாழ்க்கையை ஆரம்பித்தார். அங்கு புத்திசாலிகளான இளைஞர்களை அழைத்து அவர்களுடன் நட்பாகப் பழகி அவர்களுக்குத் தலைவராக ஆனார். ஒரு பத்திரிகையையும் ஆரம்பித்து ஜெர்மனி சமாதானத்தை வளர்க்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்திக் கட்டுரைகள் எழுதலானார்.
இந்த நிலையில் உயர் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு இளம் பெண்ணை அவர் சந்தித்தார்.
அவள் பெயர் ஆலிஸ்.
****
தொடரும்