
Post No. 11,925
Date uploaded in London – – 22 APRIL 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx
தமிழ்நாட்டில் 63 நாயன்மர்களும் , 12 ஆழ்வார்களும், அருணகிரி நாதரும், மாணிக்கவாசகரும் பாடிப் பரவிய 400 தலங்கள் , புனிதக் கோவில்கள் நாள்தோறும் பல்லாயிரக் கணக்கான மக்களைக் கவர்ந்து இழுக்கிறது. இது போல ஆந்திரத்தில் அன்னமாசார்யா , கர்நாடகத்தில் புரந்தரதாஸர் பாடிப் போற்றிய பல தலங்கள் உள . நாட்டின் மேற்குப் பகுதியில் உள்ள மஹாராஷ்டிர மாநிலம் எந்த விதத்திலும் பக்தி விஷயத்தில் பின்தங்கவில்லை . ஏகநாத், துக்காராம் , நாமதேவ் , சமர்த்த ராமதாஸ், நிவ்ருத்தி, ஞானதேவ் , சோபான , முக்தாபாய் போன்ற மஹான்கள் நடந்த இடமெல்லாம், சென்ற கோவில் எல்லாம், புனிதம் பெற்று, இன்றும் லட்சக்கணக்கானோரை ஈர்த்து வருகின்றன . சில ஜோதிர்லிங்க தலங்களோடு , பண்டரீபுரம், ஷீரடி , மும்பை கோவில்கள் நாளுக்கு நாள் பிரசித்தம் அடைந்து வருகின்றன
கோவில்கள் மூன்று விதங்களில் புனிதம் பெறுகின்றன . முதலாவது மலை முகடுகளில் இருக்கும். இரண்டாவது ஏதேனும் 2 அல்லது 3 நதிகள் சங்கமிக்கும் இடத்தில் அமைந்திருக்கும். மூன்றாவது சாது, சந்யாசிகள் , மகான்கள் பிறந்த அல்லது வசித்த அல்லது இறந்த இடத்தில் இருக்கும்
இனி ஒவ்வொரு கோவிலாக தரிசிப்போம்; வாருங்கள்
1. ஆடிவரே மஹாகாளி கோவில்
எங்கே உள்ளது ?

ஆடிவரே (Aadiware) மஹாகாளி கோவில் ரத்னகிரியிலிருந்து 39 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது. அருகிலுள்ள ரயில் நிலையம் ராஜபுர் (28 கிலோமீட்டர் தூரம்)
வெள்ளிக்கிழமை, பெளர்ணமி தினங்கள் ஆஸ்வீன மாத நவராத்ரி ஆகிய காலங்களில் வீதி உலாவும் , சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் நடைபெறும்.
ஆடிவரே கோவில் ராஜ்பூர் தாலுகாவில் இருக்கிறது .மஹா காளியுடன் லெட்சுமி, ஸரஸ்வதி சிலைகளும் இருக்கின்றன இங்கு பழங்கால முறையில் இயக்கப்படும் கிணறு உள்ளது. மூங்கில் கம்பு இணைப்புகள் உள்ள கிணறு இது.
மகாலெட்சுமி நடுவிலும் இரு புறங்களில் காளி , ஸரஸ்வதி உருவங்களும் உள்ளன. அவைகளை நோக்கி கருட மண்டபம், கணேஷ் மண்டபங்கள் இருக்கின்றன.லட்சுமியின் பின்னால் ஸ்ரீ சக்கரம் வரையப்பட்டுள்ளது
லெட்சுமி சிலை 3 அடி உயரமானது ; கருங்கல்லில் ஆனது; ஆண்டுதோறும் மூன்று நாட்களுக்கு லக்ஷ்மியின் முகத்தில் சூரிய ஒளி விழும்படி கோவில் கட்டப்பட்டுள்ளது .சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோவிலில் பின்னர் பல சந்நிதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. முன்காலத்தில் காளி கோவில் என்ற பெயரே நிலவியது. இப்போது லெட்சுமிக்கு மேலே உள்ள கோவிலில் சிவலிங்கம், நந்தி உள்ளன. பிற சந்நிதிகளில் நவக்கிரகம், வெங்கடேசன், காத்தியாயனி , விட்டல் -ரகுமாயி மஹிஷாஸுரமர்தனி, துஜா பவானி, விஷ்ணு ஆகிய உருவங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
XXXX
2.அகாசி பவானி சங்கரர் கோவில்
வைதரண நதி, சூர்யா நதி முகத்துவாரத்தில் அகாசி (Aghaasi)இருக்கிறது. இங்குள்ள பவனி சங்கரர் கோவிலில் கார்த்திகை கிருஷ்ண பட்ச ஏகாதசியில் விழா நடக்கும். இங்குள்ள குளத்தில் குளித்தால் தோல் நோய்கள் நீங்கி விடும் என்ற நம்பிக்கை உள்ளது. 400 ஆண்டுகளுக்கும் மேலான பழமை உடைய கோவில் இது. 16 மரத்தூண்கள் தாங்கி நிற்கும் சபா மண்டபம் உள்ளது . அருகில் புகழ்பெற்ற சமண மத தீர்த்தங்கரர் கோவிலும் இருக்கிறது
XXX
3.அகால் கோப் தத்தாத்ரேயர் கோவில்
இது ஒரு சிறிய ஊர் . தஸ்காவ்ன் என்னும் ஊரிலிருந்து 11 மைல் தொலைவிலும் அஷ்ட என்னும் இடத்திருந்து 4 மைல் தொலைவிலும் கிருஷ்ணா நதிக்கரையில் அகால் கோப் (Akhaalkop) அமைந்துள்ளது. இங்கு தத்தாத்ரேயர் பாதச் சுவடுகள் இருக்கின்றன. மார்கழி மாத பெளர்ணமி , ஆஸ்வீன கிருஷ்ண பட்ச துவாதசி , மாசி மாத கிருஷ்ண பட்ச பஞ்சமியில் பெரிய திருவிழாக்கள் நடக்கின்றன . அச்சமயத்தில் முகம் உள்ள உருவத்தை பல்லக்கில் கொண்டுசெல்லுவார்கள். சாமரம், மயில் தோகை விசிறி , குடை ஆகிய மரியாதைகளுடன் ஊர்வலம் செல்லும்.
XXX
4.ஆலந்தி நகரில் ஞானேஸ்வரர் சமாதி, கோவில்
ஞானேஸ்வர் 700 ஆண்டுகளுக்கு முன்னர் மகாராஷ்டிர மாநிலத்தில் வாழ்ந்தார். திருஞான சம்பந்தரைப் போலவே இளம் வயதிலேயே பல அற்புதங்களை செய்தார். அவரைப் போலவே இளம் வயதிலேயே முக்தியும் அடைந்தார். அவர் முக்தி அடைந்த ஆலந்தி(Aalndi) என்னும் ஊர் புனே நகருக்கு அருகில் உள்ளது.
ஆலந்தியில் உள்ள ஞானேஸ்வர் சமாதி அதற்கு முன்னரே அங்கிருந்த சித்தேஸ்வரர் கோவிலில் இருக்கிறது. சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்னர் அந்த சமாதி மீதும் கோவில் எழுப்பப்பட்டது.
இந்த ஆலந்தியில் ஒரு அபூர்வ மரம் இருக்கிறது. அதை அஜான விருட்சம் என்று அழைப்பர். ஞானேஸ்வரருக்கு ஞானம் தந்த மரம் இது.
மரத்தின் தாவரவியல் பெயர் Ehretia laevis (Boraginaceae or borage family.) இதைத் தமிழில் குரு விச்சை மரம் என்று அழைப்பர். கடந்த சில நூற்றாண்டுகளாக ஆலந்தியில் ஒரு விழா கொண்டாடப்படுகிறது. அங்குள்ள ஞானேஸ்வரரின் பாதுகைகளை பண்டரீபுரம் பாண்டுரங்கன் கோவிலுக்குப் பல்லக்கில் கொண்டு செல்லுவார்கள். இது 21 நாட்களுக்கு நடைபெறும்..
to be continued…………………………
tags- மகாராஷ்டிரம் , புனித தலங்கள் , ஆலந்தி , அகாசி , அகால் கோப் , ஆடிவரே , மகாகாளி , தத்தாத்ரேயர்