
Picture of Saptasrngi Temple
Post No. 11,959
Date uploaded in London – – May 2 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx
மஹாரஷ்டிரத்தில் ஆறு பிரபல சக்திக்க கேந்திரங்கள் இருப்பதாக சொன்னேன். நேற்று கோலாப்பூர் மகா லட்சுமியையும் துல்ஜாபூர் சிவாஜி மஹராஜ் புகழ்- பவானி தேவியையும் தரிசித்தோம். இன்று முதலில் ஏழுமலை உச்சியில் காடுகளுக்கு இடையே வீற்றிருக்கும் சப்த ச்ருங்கி மாதாவை தரிசிப்போம். ஸப்த= ஏழு , ச்ருங்கி = மலை, சிகரம்
Part 8
34. சப்த ச்ருங்கி மாதா

வாணி என்று அழைக்கப்பட்டும் இந்த சக்தி கேந்திரம்/ ஸ்தலம் , நாசிக் நகரிலிருந்து 60 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது.
சப்த ச்ருங்கி வாஸினி என்று அழைக்கப்படும் இந்தக் கோவில் ஒரு காலத்தில் முதியோர்கள் செல்ல முடியாத கோவிலாக இருந்தது .ஏனெனில் மலையில் 500 படிகளுக்கு மேல் எற வேண்டும். இப்பொழுது கம்பி ரயில் வந்து விட்டது .20 படிகள் ஏறினால் தேவி தரிசனம் கிடைத்துவிடும் .கடல் மட்டத்திலிருந்து 4659 அடி உயரத்தில் ஏழு மலைகளுக்கு இடையே, இயற்கை வனப்பு சூழ்ந்த கோவில் இது. ஆந்திரத்திலுள்ள ஏழு மலையான் – திருப்பதி பாலாஜி கோவிலை இதற்கு ஒப்பிடலாம் . இது சாடே தீன் – மூன்றரை தலங்களில் ஒன்று
அது என்ன மூன்று அரை கணக்கு ?
சக்தியின் தந்தை தக்ஷன்.
அவன் ஒரு யாகம் நடத்தினான்.
சக்தியின் கணவனான சிவபெருமானை மட்டும் அழைக்காமல் மற்ற எல்லா தெய்வங்களையும் அழைத்தான்.. கணவனை அவமதித்த ஒரு ஆளை சும்மாவா விடுவாள் பத்தினிப் பெண்? நேரே சென்று தந்தையைக் கண்டித்தாள் அவன் ‘போடி , போ . நீயும் ஆச்சு; உன் தாடி வச்ச புருஷனும் ஆச்சு’ என்று பகடி செய்தான். தேவி, அவமானம் பொறுக்க மாட்டாமல், தீயில் விழுந்து தன்னைத்தானே உயிர்த் தியாகம் செய்தாள் ; செய்தி சிவனின் காதுகளை எட்டியது.
சிவன் என்னும் சாந்த சொரூபம் மாறி , ருத்ரன் என்னும் கோர சொரூபம் எடுத்தார். அந்த மூர்த்தியின் பெயர் வீரபத்ரன்; அண்டம் குலுங்க நடனமாடி தக்ஷனின் யாகத்தை உருக் குலைத்தார் ; கையில் எடுத்தார் கருகிய மனைவியின் சடலத்தை ; ஆட்டம் நிற்கவில்லை . எல்லோரும் விஷ்ணுவை வேண்ட, அவர் பூமராங் Boomerang போல செயல்படும் தசுதர்சன சக்கரத்தை ஏவி, தேவியின் உடலை துண்டு துண்டாக்கினார். அந்த உடற்பகுதிகள் பூமியில் விழுந்த இடம் எல்லாம், சக்தியின் அருள் பொங்கும் சக்தி பீடங்களாகின. பல லட்சம் மக்களை ஆகர்ஷிக்கும் அருள் கோவில்களாக மாறின. இப்படி மூன்று பகுதிகள் விழுந்த இடங்களான கோலாப்பூர் , துல்ஜாபூர், மாஹுர் பெரிய தலங்கள் ஆயின. உடலின் அரை பகுதி மட்டும் விழுந்த சப்த ஸ்ருங்கம் (ஏழு மலை ) அரை (சாடே) தலம் ஆகியது .
இங்குள்ள தேவியின் உருவம் எட்டு அடி உயரம் உடையது இயற் கையான மலைப் பாறையில் செதுக்கப்பட்டுள்ளது 9+9 என்று இரண்டு புயத்திலும் 18 கைகள். பல்வேறு ஆயுதங்களைத் தாங்கி நிற்கிறாள் தேவி.’பகவதி’ என்றும் பக்தர்கள் அழைப்பர். மலை அடிவாரத்தில் நந்தூரி என்ற கிராமம் இருக்கிறது.
இந்த மலையிலும் காடுகளிலும் மூலிகைகளும் பறவை, மிருக இனங்களும் அதிகம் இருப்பதால் இயற்கை ஆர்வலர்களும் இங்கே படை எடுக்கின்றனர். நிரைய ஏரி குளங்களும் இருக்கின்றன. அவைகளுக்கு காளி குண்டம், தத்தாத்ரேய குண்டம், சூர்ய குண்டம் என்று பல பெயர்கள். ஒரு பள்ளத்தாக்கு பகுதியை அடுத்து நிற்பது மார்கண்டேய மலை. அங்குதான் மார்க்கண்டேய மகரிஷி, தேவி மீது துதி பாடி துர்கா சப்த சதியை இயற்றினார் என்றும் சொல்லுவார்கள் .
சித்திரை மாத, ஆஸ்வீன (தமிழ் பஞ்சாங்கப்படி புரட்டாசி) மாத நவராத்திரிகளில் பெரிய திருவிழாக்கள் நடைபெறும்.
கோவிலுக்குச் செல்ல 510 படிகள் ஏறியாக வேண்டும். இது தவிர வலம் (பரிக்ரமம்) வரும் நீண்ட மலைப்பாதையும் உண்டு; கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை என்பவருக்கு ஏற்ற பாதை. அழகான காடுகளையும் காணலாம்.
2018 முதல் இயங்கி வரும் மலை ரயில் பாதை ஒவ்வொரு நாளும் 5000 பேரை கோவிலுக்கு அழைத்துச் செல்கிறது. படி ஏற முடியாதோர் இதை பயன்படுத்துவார்கள் .
Xxx
35. வாணி மலை அடிவாரக் கோவில்
வாணி என்னும் இடத்தில் மலை அடிவாரக் கோவிலும் அமைந்துள்ளது. முன்னர் மலை ரயில் பாதை இல்லாத காலத்தில், வயதானவர்கள் தரிசிப்பதற்காக இந்தக் கோவில் எழுப்பப்பட்டது ; சித்திரை மாத கிருஷ்ண பட்ச அஷ்டமியில் பெரிய விழா நடைபெறும்.
Xxxx
36. மாஹுர் ரேணுகா தேவி கோவில்

இந்தக் கோவில் நான்டெட் மாவட்டத்தில் மாஹூர் என்னும் இடத்தில் உள்ளது மாஹூர், நான்டெட் நகரிலிருந்து1 30 கிலோமீட்டர் தொலைவில் அமைந்த ஊர்.. அருகிலேயே பென்கங்கா , புஸ் என்ற இரண்டு நதிகள் சங்கமம் ஆகும் இடம் இருக்கிறது. தத்தாத்ரேயரின் பிறந்த இடம் என்ற பெருமையும் உண்டு. மூன்று மலைகள் இருக்கும் இந்த ஊரில் ஒரு குன்றில் ரேணுகா தேவி கோவிலும் மற்ற இரண்டில் தத்த சிகர கோவிலும் அத்ரி-அனுசூயா சிகர கோவில்களும் இருக்கின்றன. இது சக்தி பீடங்களில் ஒன்று..
நவராத்திரியின் போது பெரிய விழா நடைபெறுகிறது.
ரேணுகா , பரசுராமரின் தாய். அவரது தந்தை ஜமதக்கினியின் உத்தரவின் பேரில் தாயின் தலையைத் துண்டித்துப் பின்னர் தவ வலிமையால் தாயை உயர்ப்பித்தார்.
தேவி பாகவதத்தில் இதை மாத்ரி புரம் , மாதாபூர் என்று யாத்திரைத் தலப் பட்டியலில் குறிப்பிடுகின்றனர்.
கோவிலை அடைய 250 படிகள் ஏற வேண்டும்.இந்த மலையில் பல
குகைகள் இருக்கின்றன சில குகைகளை பாண்டவர் குகைகள் என்பர். ஜமதக்னி , பரசுராமர் கோவில்கள் காளிகா மாதா என்ற பெயர்களில் கோவில்கள் இருக்கின்றன மேலே ஏறிப் பார்த்தால் சஹ்யாத்ரி என்று புராணங்கள் வருணிக்கும் மேற்குத் தொடர்ச்சி மலையின் முழு அழகையும் ரசிக்கலாம். பிரம்மிப்பூட்டும் காட்சியாக இருக்கும்..
இந்தக் கோவிலிலும் கோந்தால வகுப்பினர் கோந்தாலா நடனம் ஆடுகின்றனர். தேவியின் லீலைகளைச் சொல்லும் கதைகளை அவர்கள் நடனம் ஆடிக்காட்டுவர் .
யாதவ அரசர்கள் நிர்மாணித்த இந்தக் கோவில் 800 அல்லது 900 ஆண்டுகளுக்கு முற்பட்டது.

To be continued……………………………..
Tags — கோந்தாலா நடனம் ,சக்தி பீடம், மாஹுர், ரேணுகா தேவி கோவில், சப்த ச்ருங்கி,மஹாராஷ்டிர, புனிதத் தலங்கள் 8, சாடே தீன் , மூன்றரை தலம்