
Post No. 11,962
Date uploaded in London – May 3 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
மாக்ஸிம் கார்க்கியை அயர வைத்த இந்திய யோகி!
ச.நாகராஜன்
மாக்ஸிம் கார்க்கியின் பெயரை கேள்விப்படாதவர் இலக்கிய உலகில் இருக்க முடியாது.
எழுத்துலகில் சோஷலிஸம், யதார்த்தம் இரண்டிற்கும் தந்தை கார்க்கி என புகழப் படுகிறார்.
ரஷியரான இவர் 28-3-1868இல் பிறந்தார். 18-6-1936இல் 68ஆம் வயதில் மறைந்தார்.
உலகின் பல நாடுகளுக்கும் சென்றவர்.
இவரது ‘தாய்’ என்ற புத்தகம் முதலில் அமெரிக்காவில் தான் பிரசுரமானது என்பது ஒரு சுவையான செய்தி.
பல தோல்விகளையும் துக்கங்களையும் தாங்கிக் கொள்ள முடியாமல் தற்கொலைக்கு முயன்றார். அது தோல்வியில் முடிந்தது. உடம்பில் குண்டு பாய்ந்த போதும் கூட பிழைத்துக் கொண்டார்.
இவரது வாழ்வில் நடந்த ஒரு சுவையான சம்பவம் இவர் இந்திய யோகி ஒருவரைச் சந்தித்தது தான்!
இந்தச் சம்பவத்தைக் குறிப்பிட்டு எழுதி இருப்பவர் புரபஸர் நிகோலஸ் ரோயரிச். (Prof. Nicholas Roerisch)
அவர் கூறும் சம்பவம் இது தான்:-
ஒரு நாள் நண்பர்கள் கூட்டத்தில் கார்க்கி தனது சுவையான குணாதிசயத்தின் ஒரு பகுதியை வெளியிட்டதை நான் இப்போது நினைவு கூர்கிறேன்.
யோகிகளைப் பற்றியும் அதீத உளவியல் ஆற்றல்களைப் பற்றியும், அதன் தாயகமான இந்தியாவைப் பற்றியும் நாங்கள் பேசிக் கொண்டிருந்தோம். எல்லோரும் மௌனமாக இதைக் கேட்டுக் கொண்டிருந்த கார்க்கியையே பார்த்தோம். ‘ஒன்றுமே அவர் சொல்லவில்லையே! கடுமையான விமரிசனம் அவரிடமிருந்து வரும்’ என்று எதிர்பார்த்தோம்.
ஆனால் அனைவரும் எதிர்பார்க்காதபடி தனது அனுபவம் ஒன்றை அவர் பகிர்ந்து கொண்டார்.
“ஹிந்துக்கள் அருமையான மேன் மக்கள். எனது நேரடி அனுபவம் ஒன்றை உங்களுக்குக் கூறுகிறேன். காகஸஸில் ஒரு சமயம் ஒரு ஹிந்துவைச் சந்தித்தேன். அவரைப் பற்றிய ஏராளமான கதைகள் உலவி வந்தன. ஆனால் அந்தச் சமயத்தில் அதை நான் நம்பவில்லை. கடைசி கடைசியாக ஒரு நாள் அவரை நேரில் சந்தித்தேன். நான் இப்போது கூறப் போவது என் கண்ணால் நானே கண்டதாகும்.
ஒரு பெரிய நூலை எடுத்த அவர் வானில் அதை வீசினார். அது அப்படியே வானில் நின்றது. நான் ஆச்சரியப்பட்டுப் போனேன். பிறகு என்னைப் பார்த்த அவர், “உங்களுக்கு ஏதாவது போட்டோ ஆல்பம் பார்க்க வேண்டுமா? எந்தப் படங்கள் உங்களுக்குப் பிடிக்கும். அதைச் சொல்லுங்கள்” என்றார்.
நான், “இந்திய நகரங்களைப் பார்க்க விரும்புகிறென்” என்று சொன்னேன்.
உடனே அவர் தனது ஆல்பத்தை என்னிடம் கொடுத்து, “இதோ பாருங்கள், இந்திய நகரங்கள்!” என்றார்.

அந்த ஆல்பம் தகதகவென பாலிஷ் செய்யப்பட்ட பித்தளைத் தகடுகளைக் கொண்டிருந்தது. அதில் ஏராளமான இந்திய நகரங்கள், கோவில்கள் மற்றும் இதர காட்சிகள் இருந்தன. அந்த ஆல்பம் முழுவதையும் ஆர்வத்துடன் கவனமாகப் பார்த்தேன். பிறகு அதை மூடி அவரிடம் கொடுத்தேன்.
அவர் புன்னகையுடன் என்னப் பார்த்துக் கூறினார் :” நீங்கள் இந்தியாவின் காட்சிகளைப் பார்த்து விட்டீர்கள் இல்லையா?”
பிறகு ஆல்பத்தை மேலே வீசினார். பிறகு அதை மீண்டும் என்னிடம் தந்தார். அந்த ஆல்பத்தைப் பிரித்துப் பார்த்தேன். என்ன ஆச்சரியம், அதில் படங்களே இல்லை. வெறும் பளபளவென்று மின்னும் பித்தளைத் தகடுகள் மட்டுமே இருந்தன! ஹிந்துக்கள் உண்மையிலே குறிப்பிடத்தக்க அளவு மேன்மையான மக்கள்!”

அனைவரும் இதைக் கேட்டு அயர்ந்து போனார்கள்.
இந்தியா பற்றிய கார்க்கியின் அபிப்ராயம் மிக உயர்ந்த ஒன்று!
***
ஆதாரம் & நன்றி கொல்கத்தா வார இதழ் ட்ரூத்,
தொகுதி 4 இதழ் 25 தேதி : 2-10-1936