
Post No. 11,966
Date uploaded in London – May 4 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
இரண்டாம் உலகப் போர் யுத்தத் துளிகள் – ரத்தத் துளிகள்
புதிய நெடுந்தொடர்.
அத்தியாயம் 10
தலைவனுக்காக ஏங்கிய ஜெர்மனி
ச.நாகராஜன்
பகுதி 13
முதல் உலகப் போர் 1914 முதல் 1918 முடிய நடந்தது.
இதில் ஜெர்மனி முக்கியப் பங்கை வகித்தது. ஆரம்ப கால வெற்றிகளை அது பெற்றது. ஆனால் பல்வேறு காரணங்களால் அது யுத்தத்தில் தனது தோல்வியைச் சந்திக்க நேர்ந்தது.
போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட, வெர்சாய் உடன்படிக்கை (Treaty of Versailles) என்ற ஒரு ஒப்பந்தத்தில் அது கையெழுத்திட நேர்ந்தது.
அதில் அது நன்கு தண்டிக்கப்பட்டது. அமெரிக்க உட்ரோ வில்ஸன் ஜெர்மனியைக் கடுமையாகத் தண்டிக்க விருப்பப்படவில்லை. எதிர்காலத்தில் வீறு கொண்டெழுந்து ஜெர்மனி அனைவரையும் தாக்கக்கூடும் என்று அவர் முன்னெச்சரிக்கையுடன் ஊகித்தார். ஆனால் பிரான்ஸின் ஜார்ஜ் க்ளிமென்ஸ் ஜெர்மனியைப் பழி வாங்க நினைத்தார். பிரான்ஸின் நஷ்டத்திற்கு ஜெர்மனி பொறுப்பேற்க வேண்டும் என்று அவர் விரும்பினார். பிரிட்டனின் டேவிட் லாய்ட் ஜார்ஜ் பிரிட்டன் மக்களின் விருப்பத்தை நன்கு அறிந்திருந்தார். அவர்கள் ஜெர்மனியைப் பழிவாங்கத் துடித்தனர். ஆக இந்த அனைத்துப் பார்வைகளும் ஒன்று சேர வெர்சாய் உடன்படிக்கையில் ஜெர்மனி நன்கு பழி வாங்கப்பட்டது.
போரை ஆரம்பித்தது ஜெர்மனியே என்ற போர்க் குற்றத்தை (War Guilt Clause) அது ஏற்க வேண்டி வந்தது. ஜெர்மானியர் இதைக் கேட்டுத் துடித்தனர். போர் ஆரம்பிக்க ஆஸ்திரியா- ஹங்கேரியும் காரணம்; அதை மறைத்து அனைத்துப் பொறுப்பையும் தம் மீது திணிப்பதை அவர்கள் விரும்பவில்லை. ஆஸ்திரியா- ஹங்கேரியே செர்பியா மீது முதலில் போர் தொடுத்தது. ஆகவே தான் உலகப் போர் துவங்கியது.
அடுத்து ஜெர்மானிய ராணுவத்தை பலமிழக்க ஒரு ஷரத்து இருந்தது. அதன் படி ஜெர்மனியின் ராணுவ வீரர்கள் ஒரு லட்சமாகக் குறைக்கப்பட்டனர். இன்னும் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன .
கடற்படையில் ஆறு போர்க்கப்பல்களே வைத்துக் கொள்ளலாம், சப்மரீனோ, விமானங்களோ டாங்குகளோ உற்பத்தி செய்யப்படக் கூடாது. அத்தோடு நேச நாட்டுத் துருப்புகள் 15 ஆண்டுகள் அங்கு இருக்கும், ஜெர்மனியில் சில பகுதிகள் ஜெர்மனியிடமிருந்து பறிக்கப்பட்டன. மிக மோசமான ஷரத்தாக இருந்தது ஜெர்மனி 66000 லட்சம் பவுண்டுகளை போர் இழப்பீடாகத்தர வேண்டும் என்பது தான்.
இவ்வளவு மாபெரும் தொகையை ஜெர்மனி எப்படித் தர முடியும். அமெரிக்கா கடனாகத் தர முன் வந்தது.
ஜெர்மனியில் பொருளாதாரம் ஆடிப் போனது. பணவீக்கம் ஒரு புறம், எதையும் வாங்க முடியாமல் ஜெர்மானியர் தவிக்க, போரில் தோல்வி, அவமானம் இன்ன பிற தொல்லைகளும் சேர ஜெர்மானியர் மனம் உடைந்தனர்.#
அவர்கள் தங்கள் நாட்டைத் தூக்கி விட நல்ல ஒரு தலைவனுக்காக ஏங்கினர். உற்சாகம் தர வல்ல அந்தத் தலைவன் யார்?

பகுதி 14
ஹிட்லரின் தோற்றம்!
இந்தக் கால கட்டத்தில் தான் ஹிட்லர் தோன்றினார்.
1889 ஏப்ரல் மாதம் 20ஆம் தேதி பிறந்த ஹிட்லர் 56 ஆண்டுகளே வாழ்ந்து உலகை ஒரு கலக்குக் கலக்கி 1945ஆம் ஆண்டு ஏப்ரல் 30 ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டார்.
நாஜி கட்சியின் தலைவராக அவர் 1920-21இல் விளங்கிப் பின்னர் ஃப்யூரர் என தன்னை அறிவித்துக் கொண்டார். 1933 முதல் 1945 முதல் தன்னிகரற்ற ஒரே தலைவனாக விளங்கினார்.
1933 ஜனவரி 30 முதல் அவர் ஜெர்மனியின் சான்ஸலராக ஆனார். பிறகு ஜனாதிபதி பால் வான் ஹிண்டன்பெர்க் மறைந்ததை ஒட்டி அவரே இரு பதவிகளையும் – ஃப்யூரர் மற்றும் சான்ஸலர் – ஏற்றுக் கொண்டார்.
ஃப்யூரர் என்றால் ஜெர்மானிய மொழியில் தலைவர் என்று அர்த்தம்!
***