
Post No. 11,975
Date uploaded in London – – May 6 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx
அக்ஷய நவமி பண்டிகை பற்றி அதிகம் பேருக்குத் தெரியாது. ஏனெனில் இதை வங்காளிகள்தான் பெரும்பாலும் கொண்டாடுகிறார்கள். வீடுகளில் கொண்டாடப்படும் விழா இது. துர்கா பூஜைபோல தெருவெங்கும் பந்தல் போட்டு மாநில அளவில் கொண்டாடாமல், வீடுகளில் மட்டும் அனுஷ்டிக்கப்படுகிறது..துர்கா பூஜையின்போது சக்தியை துர்கா என்று வழிபட்டனர். அவள் தீமையை அழித்து நன்மையை நிலைநாட்டினாள் . இப்பொழுது அதே சக்தியை ஜகத்தாத்ரி என்ற பெயரில் வழிபடுவார்கள். உலகையே வழிநடத்தி பராமரிப்பவள் என்பது இதன் பொருள்
எப்போது இந்தப் பண்டிகை ?
கார்த்திகை மாத சுக்லபக்ஷ நவமி அன்று வங்காளிகள் இதைக் கொண்டா டுவார்கள் . துர்கா பூஜையின்போது களிமண்ணால் துர்க்கை உருவத்தைப் படைத்து , சில நாட்களுக்குப் பின்னர் நதிக்கரையில் விசர்ஜனம் (கரைத்தல் ) செய்வார்கள். இந்தப் பண்டிகையில் ஜகத்தாத்ரி என்னும் சக்தி தேவியை தாமிரம் அல்லது பித்தளைக் குடத்தில் ஆவாஹனம் செய்து பூஜைக்குப்பின்னர் விசர்ஜனம் செய்வார்கள்.
நாட்டின் சில பகுதிகளில் இந்த நாளில் நெல்லிக்காய் மரத்தை வழிபடுகிறார்கள். அதை விஷ்ணுவின் அமசமாகக் கருதுவதே இதற்குக்காரணம். ஆனால் வடக்கில் வேறு சில இடங்களிலோ வெண் பூசணிக்காய் முக்கியத்துவம் பெறுகிறது.
Xxx

பரத மிலன்
முதலில் உத்தரப் பிரதேசத்தில் இதன் கதையைக் காண்போம் .
சீதை, லட்சுமணன் சகிதம் ராமபிரான் 14 ஆண்டுகள் காட்டில் வசித்தார் . இந்த வனவாசத்தின் துவக்க காலத்தில் ரிஷிகளில் ஒருவரான பரத்வஜரைச் சந்தித்து ஆசீர்வாதம் பெற்றார். 14 ஆண்டு வனவாசத்தின் இறுதியில் ராவணனை ஸம்ஹாரம் செய்து திரும்புகையில், பரத்வாஜரைச் சந்தித்து நன்றி கூறும் முகத்தான், பிரயாகைக்கு வந்தார். அவரது புஷ்பக விமானம் பிரயாகையில் இறங்கியவுடன் பரதனுக்கு செய்தி பறந்தது. அண்ணனின் வருகைக்காக அயோத்திக்கு வெளியே 14 ஆண்டுகளுக்கு ராமனின் காலணிகளை சிம்மாசனத்தில் வைத்து ஆட்சி செய்துவந்த பரதன், நந்திக்கிராமம் என்னும் ஊரிலிருந்து தேன் சிட்டாகப் பறந்து வந்தார் .
உடனே உலகம் முழுதுமுள்ள பத்திரிக்கை, டெலிவிஷன் சானல்களுக்கும் செய்தி தெரிய அவர்கள் எல்லோரும் ஸ்பெஷல் ஹெலிகாப்டர்களில் அங்கே வந்து குழுமி இருப்பார்கள் என்பதை நாம் ஊகிக்கலாம்.
ராமனைக் கண்ட பரதன் அண்ணா என்று அலறிக்கொண்டு ஓடி வந்து ராமபிரானைக் கட்டித் தழுவினான். இந்த சந்திப்பை பரத மிலன் என்பர். காசியில் தசராவுக்கு மறுநாள் இதை பெரிய அளவில் ஆண்டு தோறும் பரத மிலாப் என்ற பெயரில் கொண்டாடுகிறார்கள். தேதி வேறுபட்டாலும் அண்ணன்- தம்பி உறவின் சின்னமாக இந்தப் பண்டிகை விளங்குகிறது.
xxxx
பூசணிக்காய் அசுரன் / பஞ்ச ரத்தின தானம்
கூஷ்மாண்ட என்ற ஸம்ஸ்க்ருதச் சொல்லுக்கு பூசணிக்காய் என்று பொருள். சிலர் கூஷ்மாண்ட என்ற அசுரனை விஷ்ணு சம்ஹரித்த / தீர்த்துக்கட்டிய நாள் என்பர். ஆயினும் வட இந்தியாவில் பல இடங்களில் இதற்கு வேறு பொருள். அவர்கள் அன்றைய தினம், பிராமண புரோகிதர்களுக்கு வெண் பூசணிக்காயை தானாம் செய்வார்கள் . சிலர் பூசணிக்காய்க்குள் பஞ்ச ரத்தினங்களை வைத்து தானம் செய்வார்கள் .
பஞ்ச ரத்தினம் என்றால் என்ன?
பூசணிக்காயை, இந்தியில் ‘பேட்டா’ என்பார்கள். அதற்குள் தங்கம், வெள்ளி, தாமிரம், முத்து, பவளமென்னும் ஐந்து ரத்தினங்களை (ரத்தினம் = விலை மதிப்புடைய பொருள்; சிறந்த பொருள்; மனிதருள் மாணிக்கம் என்பது போல) மறைத்து வைத்து தானமாகத் தருவார்கள். இப்படி மறைத்துவைத்துத் தருவதால் இதற்கு குப்த தானம் என்று பெயர் குப்த என்றால் ரகசிய/ மறைவான என்று பொருள்.
சிலர் இந்த நாளில்தான் திரேதா யுகம் துவங்கியதாகவும் சொல்லுவார்கள்.
பிரயாகையின் மற்றொரு பெயர் திரிவேணி சங்கமம்; கங்கை, யமுனை, ஸரஸ்வதி (பூமிக்கு ஆடியில்) ஆகிய மூன்று நதிகள் சங்கமிக்கும் இடம்; துலுக்கர்கள் ஆட்சியில் இதற்கு அலஹாபாத் என்று பெயர் சூட்டினார்கள். இப்போது அந்தப் பெயர் அழிக்கப்பட்டுவிட்டது.
–subham —
Tags- பூசணிக்காய், கூஷ்மாண்ட , குப்த தானம், பஞ்ச ரத்தினம் , அக்ஷய நவமி, ராமன், பரதன், சந்திப்பு, பரத , மிலன், மிலாப் , நெல்லிக்காய்