
WRITTEN BY S NAGARAJAN
Post No. 11,986
Date uploaded in London – May 10, 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
ராமாயண வழிகாட்டி!
சரணாகதி அடைந்த விபீஷணரிடம் ஶ்ரீ ராமர் செய்த ப்ரதிக்ஞை!
ச.நாகராஜன்
வால்மீகி ராமாயணத்தில் 7 பிரதிக்ஞைகள் இடம் பெறுகின்றன.
அவற்றில் ஆறு ப்ரதிக்ஞைகளை இது வரை பார்த்தோம்.
கடைசியில் ஏழாவது ப்ரதிக்ஞையை இங்கு பார்க்கலாம்.
யுத்த காண்டத்தில் 19வது ஸர்க்கத்தில் இடம் பெறுவது இது.
விபீஷணர் ராமரிடம் சரணாகதி அடைகிறார்.
உடனே ஶ்ரீ ராமர் கூறுவது இது:
அஹம் ஹத்வா தசக்ரீவம் சப்ரஹஸ்தம் சபாந்த்வம் |
ராஜானம் த்வாம் கரிஷ்யாமி சத்யமேதத்ப்ரவீமி தே ||
ஸ்லோகம் 21
அஹம் – நான்
தசக்ரீவம் – தசக்ரீவனை
சப்ரஹஸ்தம் – பிரஹஸ்தனுடனும்
சபாந்த்வம் – பந்துக்களுடனும்
ஹத்வா – கொன்று
த்வாம் – உன்னை
ராஜானம் – மன்னனாக
கரிஷ்யாமி – ஆக்கப் போகிறேன்
ஏதத் – இதை
தே – உனக்கு
சத்யம் – சத்தியமாக
ப்ரவீமி – சொல்லுகிறேன்
ரஸாதலம் வா ப்ரவிஷேத்பாதாளம் வாபி ராவண: |
பிதாமஹசகாஷம் வா ந மே ஜீவன்விமோக்ஷ்யதே ||
ஸ்லோகம் 22
ராவண: – ராவணன்
ரஸாதலம் வா – ரஸாதலத்திற்குத் தானாகட்டும்
பாதாளம் வா – பாதாளத்திற்குத் தானாகட்டும்
பிதமஹ சகாஷம் வா – பிரம்மதேவரின் சந்நிதிக்குத் தானாகட்டும்
ப்ரவிஷேத் அபி – (எங்கு) சென்றாலும்
ஜீவன் – உயிருடன்
மே – எனக்கு
விமோக்ஷயதே ந – தப்ப மாட்டான்
அஹத்வா ராவணம் சங்க்யே சபுத்ரபலபாந்த்வம் |
அயோத்யாம் ந ப்ரவேக்ஷயாமி த்ரிபிஸ்தைர்ப்ராத்ருபி: ஷபே ||
ஸ்லோகம் 23
சங்க்யே – போரில்
ராவணம் – ராவணனை
சபுத்ரபல பாந்த்வம் – புத்திரர்களுடனும், சேனைகளுடனும், பந்துக்களுடனும்
அஹத்வா – கொல்லாது
அயோத்யாம் – அயோத்தி மாநகருக்குள்
ப்ரவேக்ஷ்யாமி ந – புகப் போவதில்லை
தை:- அந்த
த்ரிபி – மூன்று
ப்ராத்ருபி: – தம்பிமார்களின் மீது
ஷபே – ஆணையிட்டுச் சொல்கிறேன்
ஶ்ரீ ராமர் வீண் சொல்லை ஒரு போதும் சொல்பவர் அல்லர். தன்னை சரணாகதி அடைந்த விபீஷணரிடம் இப்படி பிரதிக்ஞையை ராமர் செய்கிறார்.
அத்துடன் மட்டுமல்ல, விபீஷணர் அரக்கர்களின் அழிவு விஷயத்தில் தம்மால் இயன்றதைச் செய்வதாக உடனே உறுதி அளித்ததால் பெரிதும் மகிழ்ந்த ராமர், லக்ஷ்மணரிடம் , “சமுத்திரத்திலிருந்து தீர்த்தத்தைக் கொண்டு வருவாயாக! அதைக் கொண்டே அரக்கர்களின் மன்னனாக விபீஷணனை இப்போதே அபிஷேகம் செய்து வைப்பாயாக” என்று கூறுகிறார்.
அந்த ஆணையை சிரமேற்கொண்ட லக்ஷ்மணர் அப்படியே வானரர்களுக்கு மத்தியில் விபீஷணருக்கு மன்னராக அபிஷேகம் செய்து வைக்கிறார்.
ஒரு நொடியில் ராமரது அனுக்ரஹத்தைப் பார்த்த வானரர்கள் வியப்பு மேலிட ‘நன்று நன்று’ என்று கோஷமிடுகின்றனர்.
இறைவனின் அனுக்ரஹம் ஒரு கணத்தில் கிடைக்கும் என்பதை இந்த விபீஷணருக்கு கிடைத்த அனுக்ரஹம் புலப்படுத்துகிறது.
இது வரை இராமாயணத்தில் வந்த 7 பிரதிக்ஞைகளைப் பார்த்தோம்:
1) ஶ்ரீ ராமர் லக்ஷ்மணரிடம் செய்த பிரதிக்ஞை
(சீதையை குகையில் பத்திரமாகக் கூட்டிக் கொண்டு செல் என்று சொல்வது)
2) சீதை அக்னியில் ப்ரவேசிக்கும் போது செய்யும் பிரதிக்ஞை
3) ஶ்ரீ ராமர் விபீஷணர் சரணாகதி அடையும் போது செய்யும் பிரதிக்ஞை
4) இந்திரஜித்தை வதம் செய்யும் போது லக்ஷ்மணர் செய்யும் பிரதிக்ஞை
5) ஶ்ரீ ராமர் சீதையின் பதிவிரதைத் தன்மையின் மீது பூரண நம்பிக்கை வைத்து செய்யும் பிரதிக்ஞை
6) சீதையின் பதிவிரதா தர்மம் பற்றி வால்மீகி முனிவர் செய்யும் பிரதிக்ஞை
7) சீதை தனது சுத்த பதிவிரதா தர்மத்தைப் பற்றிச் செய்யும் பிரதிக்ஞை
இதைச் செய்தவுடன் பூமி பிளக்கிறது. ஒரு சிம்மாசனம் வெளிப்பட்டு அவளை ஏந்திச் செல்கிறது.
ஆக உலகில் எந்தக் காவியத்திலும் இல்லாதபடி அபூர்வமான பிரதிக்ஞைகள் இப்படி வால்மீகி ராமாயணத்தில் வால்மீகி மஹரிஷியால் சித்தரிக்கப்படுகிறது.
இராமாயணம் படிப்போம்; உயர்வோம்!
ஜெய் ஶ்ரீ ராம்! சீதா மாதா கீ ஜெய்!
***