
Post No. 11,990
Date uploaded in London – – 11 May , 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx

தெருக்களில் அலைந்து திரியும் நாய்களைக் கொல்வது ஹிம்சை அல்ல, அஹிம்சையே என்று மஹாத்மா காந்தி அவரது பத்திரிகைகளில் எழுதிய விஷயங்களின் சுருக்கம் பின்வருமாறு :
நாய் ஒரு நன்றியுள்ள நண்பன். நாய்களின், குதிரைகளின் நன்றியைக் காட்டும் பல சம்பவங்கள் இருக்கின்றன அதை அறிந்த நாம் நம்முடைய நண்பர்களை எப்படி மரியாதையுடன் நடத்துகிறோமோ அப்படி நடத்த வேண்டும் . தெருக்களில் அலைந்து திரிய விடக்கூடாது தெரு நாய்களின் தொல்லையை அதிகப்படுத்துவது , நாம் கடமையிலிருந்து தவறுவதையே காட்டும். தெருக்களில் நாய்களை திரிய விடுவது நமக்கு அவமானம் ; ஆகையால் அவைகளுக்கு உணவு தரமாட்டேன் என்று நாம் கருத்துவோமானால் அது நாய்களுக்கு செய்யும் பெரிய சேவை மட்டுமல்ல. அவைகளை சந்தோஷப்படுத்துவதும் ஆகும்.
அப்படியானால் மனிதாபிமானமுள்ள ஒரு மனிதன் தெரு நாய்களுக்கு என்ன செய்ய வேண்டும்? தனது வருமானத்தில் ஒரு பகுதியை ஒதுக்கி, அதை நாய்களைப் பராமரிக்கும் சங்கத்துக்கு அனுப்பலாம் (சங்கம் இருந்தால்); அப்படி இல்லை என்றால் தாமே ஒரு நாயையோ அல்லது சில நாய்களையோ வளர்க்கலாம். ஒரு சங்கம் இருப்பது சாத்தியம் என்பதை விட அதை பராமரிப்பது கடினமே.அப்படி நாய்களை வளர்க்க முடியாவிட்டால் அதைப் பற்றி கவலைப்படாமல் வேறு பிராணிகளுக்கு சேவை செய்யலாம்.
ஆனால் நீங்கள் அவைகளைக் கொல்லுங்கள் என்றல்லவா சொல்கிறீர்கள்? என்று சிலர் கோபத்துடனும், சிலர் அன்புடனும் என்னைக் கேட்கிறார்கள் நாய்களை ஒழித்துக்கட்டுவது நம்முடைய தலையாய கடமை என்று நான் சொல்லவில்லை சில நாய்களைக் கொல்வது சில சூழ்நிலைகளில் , தொல்லை ஏற்படும்போது கொல்லுவது, நமது பணி ஆகிறது. அரசாங்கம் நாய்களைப் பற்றிக் கவலைப்படாதபோது , பொதுமக்கள் தாமாகவே அவைகளைப் பாதுகாக்க முன்வராதபோது அவைகள் நம் சமூகத்துக்கு தீங்கு விளைவிக்கும் என்று கருதும்போது, அவைகளைக் கொல்ல வேண்டும். இது அவைகள் கஷ்டப்பட்டு சாவதைத் தவிர்க்கும்; இது ஒரு கசப்பான மருந்து என்று நானும் ஒப்புக்கொள்கிறேன் . ஆனால் அப்படி அவைகளின் உயிரை வாங்குவது உண்மையாக இரக்கம் காட்டுவது , கருணை செய்வது என்பது என்னுடைய உறுதியான நம்பிக்கை .
உயிர்க்கொலை கூட நம்முடைய ஒரு பணிதான் . அதை இப்போது காண்போம் .
நம் உடலைப் பராமரிக்க எவ்வளவு அவசியமோ அவ்வளவுக்கு நாம் உயிர்வதை செய்கிறோம். நம் உணவுக்காக மற்ற உயிர்களைக் கொல்கிறோம் அவை காய்கறி அல்லது பிற வகை ஜீவன்கள். . நம்முடைய உடலுக்குத் தொல்லை தரும் கொசு முதலிய ஜீவன்களை ரசாயனக் கொல்லி மூலம் தீர்த்துக் கட்டுகிறோம். இதை குற்றம் என்றோ மத விரோதமான செயல் என்றோ நாம் கருதுவதில்லை. இது நமக்காக நாம் செய்துகொள்வது; மற்றவர்களுக்கு நன்மை செய்யும்பொருட்டும் நாம் கொடிய பிராணிகளை வதைக்கிறோம் . புலிகளும் சிங்கங்களும் கிராமங்களுக்குள் புகுந்து தொல்லை தருகையில் அவைகளைக் கொல்லுவது அல்லது மற்றவர்களைக் கொண்டு கொல்ல வைப்பது கடமை என்றே கிராம மக்கள் கருதுகிறார்கள் .
கெட்ட மனிதர்களையும் கொல்லுங்கள்
மனிதர்களைக் கொல்லுவதும் கூட சில நேரங்களில் அவசியம்தான். ஒரு மனிதன் கத்தியுடன் ஓடிச்சென்று, வழியில் கண்டவர்களை எல்லாம் வெட்டி வீழ்த்துகிறான் என்று வைத்துக்கொள்ளுங்கள் , அவனை யாரும் உயிருடன் பிடித்துக்கொண்டு வருவதற்கு தைரியம் இல்லை என்று வைத்துக்கொள்ளுங்கள், அந்தப் பைத்தியக்கார மனிதனை யார் கொ ல்கிறேனோ அவனுக்கு சமுதாயம் நன்றி செலுத்தும்; அவனை உபகாரி என்றே பாராட்டுவர்.

(My comment : அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, வேறு ஒரு நாட்டில், சட்டவிரயத்தமாகச் சென்று பயங்கரவாதி ஒசாமா பின் லாடனை தீர்த்துக்கட்டவழி செய்தார் ; உலகம் அதைக் கண்டிக்கவில்லை; உத்தரப் பிரதேச முதல்வர் யோகிஜி இதை இன்று மிக அழகாகச் செய்துவருகிறார்.)
அஹிம்சை என்ற கண்ணோட்டத்தில் பார்க்கையில் அப்பேற்பட்ட கொடியவனைக் கொல்லுவது ஒவ்வொருவரின் கடமை ஆகும் . ஒருவேளை ஒரு விதிவிலக்கு இருக்கலாம். ஒரு யோகியானவர் அந்த மனிதனின் வெறியைத் தவிர்த்து அவனை உயிர்வாழ விடலாம். ஆனால் நாமோ பரிபூரணத்துவம் வாய்ந்த மனிதர்களைப் பற்றி பேசவில்லை தவறிழைக்கும் சாதாரண மனிதர்களைப் பற்றியே கதைக்கிறோம்.

கொல்லாமை என்பது மட்டும் அஹிம்சை அல்ல . ஹிம்சை என்பது என்ன? கோபத்தினாலோ, சுய நலத்தினாலோ மற்றவர்களுக்கு தீங்கிழைப்பதும், உயிர்களைப்போக்குவதும் ஹிம்சை; அதைத் தவிர்ப்பதே அஹிம்சை .
யங் இந்தியா Young India, 4-11-1926
–subham—
Tags -அஹிம்சை, தெரு நாய்கள், தொல்லை, பைத்தியக்காரன், கொலை