
கிருஷ்ணா நதி உற்பத்தி யாகும் இடம் .
Post No. 12,000
Date uploaded in London – – 14 May , 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx
பகுதி 14
கேரளத்தின் தென் கோடியில் துவங்கி மஹாராஷ்டிரத்தின் வட கோடி வரை செல்லும் 1000 மைல் நீளமுள்ள மலைத்தொடருக்கு புராணங்களில் சஹ்யாத்ரி என்று பெயர் . இதை நாம் இன்று மேற்குத் தொடர்ச்சி மலை என்று அழைக்கிறோம். இதன் ஒரு பகுதிதான் மஹாபலேஷ்வர். இந்த மலைப்பகுதியில் கிருஷ்ணா நதியும் அதன் நான்கு உப நதிகளும் உற்பத்தியாகின்றன. இவை சங்கமிக்கும் இடம் பஞ்ச கங்கா எனப் படுகிறது . இங்குள்ள நான்கு கோவில்கள் :
1.மஹா பலேஸ்வர்
2.கிருஷ்ணாபாய்
3.பஞ்ச கங்கா
4.அதிபலேஸ்வர்
ஓவ்வொரு கோவில் பற்றிய சுவையான செய்திகளைக் கேளுங்கள்:
57.மஹா பலேஸ்வர் கோவில்

மஹா பலேஸ்வர் நகரிலிருந்து 5 கிலோமீட்டர் தொலைவிலுள்ள இந்தக் கோவிலை க்ஷேத்ர மகா பலேஸ்வர் என்பர். மகா பலம் உடைய சிவன் என்று பொருள். இந்த ஊர் புனே நகரிலிருந்து 124 கி.மீ; சாதாராவிலிருந்து 61 கி.மீ., கோலாப்பூரிலிருந்து 178 கி.மீ தூரத்தில் இருக்கிறது இது மிகவும் பழமையான கோவில் ; குறைந்தது 800 ஆண்டு வரலாறு உடையது . அருகில் கிருஷ்ணா பாய் கோவில், பஞ்ச கங்கா புனிதத் தலங்கள் அமைந்துள்ளன. கிருஷ்ணா, வீணா, கொய்னா, சாவித்ரி, காயத்ரி ஆகிய ஐந்து நதிகள் உற்பத்தியாகும் இடம் பஞ்ச கங்கா எனப்படும் ; சிறிது தொலைவிலியே அவைகள் சங்கமித்து கிருஷ்ணா என்னும் நதியாகப் பாய்கிறது.
மஹா பலேஸ்வர் கோவில் 16ம் நூற்றா ண்டில் சந்தராவ் வம்சத்தாரால் கட்டப்பட்டது ஐந்து அடி சுவரால் பிரிக்கப்படும் இந்தக் கோவிலில் உட்பிரகாரம், வெளிப் பிரகாரம் என இரண்டு பிரிவுகள் இருக்கின்றன.
உட்பகுதியில் சிவலிங்கம் அமைந்த கர்ப்பக்கிரகம் இருக்கிறது . ஆறு அடி உயரமுள்ள சிவ லிங்கத்தின் தலைப்பகுதியை காண முடிகிறது .
ஊரின் பெயருக்கு மற்றும் ஒரு பொருளும் கற்பிக்கப்படுகிறது . மாவலர் என்போரின் கடவுள் மாமலேஷ்வர் ; அது மருவி மஹா பலேஸ்வர என்று ஆகிவிட்டது என்பர். தேவகிரி மன்னன் சிங்கன் 1215ம் ஆண்டில் இந்தக் கோவிலை தரிசித்த வரலாற்றுக் குறிப்பு இந்தக் கோவிலின் பழமையைக் காட்டுகிறது. அவர், கிருஷ்ணா நதி தோன்றும் இடத்தைச் சுற்றி ஒரு குளம் வெட்டினார் கர்ப்பக் கிரஹத்திலுள்ள மஹாலிங்கம் ஸ்வயம்பு லிங்கம்; அதாவது மனிதர்கள் செதுக்கி உருவாக்காமல் லிங்க வடிவிலேயே கிடைத்த கல்.
இங்கு காட்சிக்கு வைக்கப்பட்ட 300 ஆண்டு பழமையான சிவனின் படுக்கை, கம்பளம், திரிசூலம், டமருகம் என்னும் உடுக்கை , ருத்ராக்ஷம் ஆகி னயனவும் குறிப்பிடத் தக்கவை . கோவிலுக்குள் தங்கத்தினால் ஆன ஒரு மேடை இருக்கிறது. இது ஹிந்து சாம்ராஜ்யத்தை ஸ்தாபித்த சத்ரபதி சிவாஜி கொடுத்தது என்றும் அவரது தாயார் ஜீஜாபாயின் எடைக்கு எடை தங்கம் இதில் வார்க்கப்பட்டது என்றும் சொல்லுவர்
Xxxx
58.கிருஷ்ணா பாய் கோவில்

இது தான் பழ மையான கோவில் ; பஞ்ச கங்கா கோவிலுக்கு அணித்தே அமைந்தது கிருஷ்ணருக்கு அர்ப்பணம் செய்யப்பட இந்த இடத்தில் சிவலிங்கமும் இருக்கிறது இங்குதான் கிருஷ்ணா நதி உற்பத்தி ஆகிறது . பாண்டவர்கள் வசித்த இடம் என்றும் பெருமை உடைத்து.
(13 ஆண்டுகள் வனவாசம் இருந்த பாண்டவர்களும், 14 ஆண்டுகள் வனவாசம் இருந்த ராம, லெட்சுமணரும் இந்தியா, இலங்கை முழுதும் சுற்றி இருப்பார்கள் என்பது நம்பத்தக்கதே ; இதே போல அகத்தியரும் ஆதிசங்கரரும் இமயம் முதல் குமரி வரை வலம் வந்ததற்கு நமக்கு சான்றுகள் கிடைத்துள்ளன )
கிருஷ்ணா பாய் கோவிலின் கட்டி டம் கடைசியாக கட்டப்பட்டது 1888ம் ஆண்டு .கிருஷ்ணர் சிலையும் இங்கே நிறுவப்பட்டுள்ளது . இப்போது கோவில் கட்டிடம் பாழடைந்த நிலையில் இருந்தாலும் சுவரில் பாசி படர்ந்த நிலையில் இருக்கும் பழைய வேலைப்பாடுகளைக் காண முடிகிறது . மிக அருகில் பசுமை நிறைந்த காடுகள் இருப்பதால், மலை ஏறும் குழுவினர் காடு மலை கடக்கும் பொழுதுபோக்கு இடமாகவும் மகா பலேஸ்வர் திகழ்கிறது .
XXX
59. பஞ்ச கங்கா கோவில்
கிருஷ்ணா ,கொய்னா , காயத்ரி, சாவித்ரி, வீணா என்ற ஐந்து நீரோடைகள் சங்கமிக்கும் இடம் பஞ்ச கங்கா கோவில் எனப்படும். இதை யாதவ அரசர் சிங்கதேவன் 13ம் நூற்றாண்டில் அமைத்தான் ஒரு பசுவின் முகத்திலிருந்து நீர் விழும்படி அமைக்கப்பட்டுள்ளது. அது ஐந்து நதிகளின் நீரையும் கொணர்வதாக ஐதீகம்
இந்தக் கோவில்கள் அனைத்தும் அடுத்தடுத்து உள்ளன.
XXX
60.அதிபலேஸ்வர் கோவில்

இது 400 ஆண்டு பழமையானது . பலேஸ்வர் ,அதிபலேஸ்வர் கோவில்களை இரட்டைச் சிவாலயங்கள் என்று அழைத்தாலும் தகும் . நல்ல அழகான நந்தி சிலையைக் காணலாம் . ஆத்ம லிங்கம் உற்சவ லிங்கம் அமைந்த இடம். இந்தக் கோவிலுக்கும் ஒரு கதை உண்டு மஹா பலி , அதி பலி என்ற இரண்டு அசுரர்களை விஷ்ணுவும் மகா மாயாவும் கொன்ற இடம் இது.
மஹா பலேஸ்வர் என்ற பெயரில் சிவனும், அதி பலேஸ்வர் என்ற பெயரில் விஷ்ணுவும் கோடீஸ்வரர் என்ற பெயரில் பிரம்மாவும் இங்கே குடிகொண்டுள்ளனர்.
இந்தக் கோவில் மிகவும் சிறியது ; இருண்ட பகுதிக்குள் அமைந்த லிங்கத்தைப் பார்க்க டார்ச் விளக்குடன் செல்ல வேண்டும். மிகவும் தாழ்வான வாசல் என்பதால் குனிந்து பயபக்தியுடன்தான் செல்லவேண்டும்.
மொத்தத்தில் 4 கோவில் என்று கணக்குக் காட்டினாலும் இவை அடுத்தடுத்து உள்ள இடங்களே. காடுகள் நிறைந்த இப்பகுதி நல்ல மனச்சாந்தியைத் தரும் இடமாகத் திகழ்கிறது . மலை ஏறும் சுற்றுலாப் பயணிகள் அந்த அமைதியைக் கெடுத்து, வணிக மையமாக மாற்றாமல் இருக்க வேண்டும் .
–SUBHAM—
TAGS– மஹா பலேஸ்வர் , பஞ்ச கங்கா, கிருஷ்ணா நதி, சஹ்யாத்ரி, தங்க மேடை, சிவாஜி, ஜீஜாபாய் , கோவில்கள் , பகுதி 14, மஹாராஷ்டிர , 108 புனித தலங்கள்