Post No. 12,012
Date uploaded in London – – 18 May , 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx
மஹாராஷ்டிரத்தில் சாதாரா (सातारा Satara) நகரில் சிதம்பரம் போலவே ஒரு நடராஜர் கோவிலை காஞ்சி மகா சுவாமிகள் (1894-1994) கட்டினார் . மகாராஷ்டிரத்தில் பக்தி வெள்ளம் கரைபுரண்டு ஓடும் பண்டரீபுரம் விட்டோபா கோவிலுக்கு பாடிக்கொண்டும் ஆடிக்கொண்டும் பத்து லட்சம் பக்தர்கள் வருவது ஆண்டுதோறும் நடைபெறுகிறது. இதோ விவரங்கள்:-
மாநில அளவில் தெருவெங்கும் நடைபெறும் கணேஷ் சதுர்த்தி விழா, ஐந்து ஜோதிர்லிங்க சிவ பெருமான் தலங்கள் ஆகியவற்றுக்கு அடுத்த படியாக பேசப்படுவது பண்டரிபுரம் விட்டோபா கோவில் ஆகும் .
xxx
108 மஹாராஷ்டிர மாநில புனித தலங்கள் – Part 16
69. பண்டரிபுரம் விட்டோபா கோவில்
விட்டல் என்னும் விட்டோபாவும் (கிருஷ்ணன்) ருக்மிணியும் தரிசனம் தரும் விட்டோபா கோவில் இடம்பெற்ற பண்டரிபுரம் , சோலாப்பூரிலிருந்து 72 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது , பண்டரீபுரம் ரயில் நிலையத்தில் இறங்கியும் கோவிலுக்குப் போகலாம்.
1195-ம் ஆண்டுமுதல் வரலாற்றுக் குறிப்புகளில் இடம்பெறும் கோவில் இது.
இந்த ஊரில் மேலும் பல கோவில்களும் புனிதர்களின் மடங்களும் பக்தர்களைக் கவர்ந்து இழுக்கின்றன . பீமா என்னும் நதி இந்த ஊரின் நடுவே சந்திரபாகா என்ற பெயரில் பாய்கிறது . தமிழ் நாட்டில் தேவாரம், திவ்யபிரபந்தம் உள்ளது போலவே மஹாராஷ்டிரத்தில் மராத்தி மொழியில் அபங்கம் என்னும் பக்தி பாடல்கள் உள்ளன. அவற்றில் இந்த நதியின் பெயரும் இறைவனின் பெயரும் அடிக்கடி வரும்.
நாமதேவ் பயரி என்னும் இடத்தைத் தாண்டி பஸ்ச்சிம வாயில் வழியாக நுழைந்தால் கீழ்கண்ட கடவுளரின் கோவில்களைக் காணலாம் : கணபதி, தத்தாத்ரேயர், கருடன், மாருதி என்னும் அனுமன், செளரங்கி தேவி , கருட கம்பம் , நரசிம்மர், ஏகமுக தத்தாத்ரேயர், ராமேஸ்வர லிங்கம், கால பைரவர், லெட்சுமி நாராயணன், காசி விஸ்வநாதர் , சத்ய பாமா, ராதிகா, சித்தி விநாயகர் , மஹா லெட்சுமி, வெங்கடேஸ்வர் , கண்டோபா , அமிதா பாய் , சனைச்சரன் , குப்த லிங்கம், கனோபத்ர சந்நிதிகள்.
Xxx
விட்டோபா சந்நிதி
இதுதான் பிரதான கோவில்; நகரின் நடுவில் அமைந்துள்ளது கோவிலுக்கு எட்டு வாசல்கள் இருக்கின்றன.கிழக்கு வாசலை நாமதேவர் என்ற மகானின் பெயரில் அழைக்கின்றனர். அவர் இறந்த பின்னர் அவருடைய வேண்டுகோளின்பேரில் அவருடைய உடற்பகுதிகள் புதைக்கப்பட்ட இடத்தின் மீது கட்டப்பட்ட படிகளை உடையது நாமதேவ் ப்யாரி .அதைத் தாண்டிச் சென்றால் வருவது முக்தி மண்டபம்.அங்கே மூன்று அறைகள் உண்டு. பின்னர் நாம் நுழைவது மரத் தூண்களைக் கொண்ட சபா மண்டபம்.; அடுத்தது 16 கம்பங்களை/ தூண்களை உடைய சோல் கம்ப ; அதில் ஒரு தூண் தங்கத் தகடால் மூடப்பட்டிருக்கும்
இது கருட கம்பம் எனப்படும் . அதனருகே உள்ள கற்பலகையில் பொது .ஆண்டு CE 1208 கல்வெட்டைக் காணலாம் . பின்னர் 4 தூண்களை உடைய சோகாம்ப் வரும்.
பின்னர் வெள்ளிக்கூரை வேய்ந்த மண்டபத்தில் ஸ்ரீ விட்டோபா நின்ற திருக்கோலத்தில் தரிசனம் தருவார் அவரைக் கண்டு ஆசிபெற ஆண்டுதோறும் பத்து லட்சம் பக்தர்கள் வருகிறார்கள். விட்டல் , விட்டோபா, விட்டல் நாத் , பண்டரிநாதன் , பாண்டுரங்கன் என்ற பல பெயர்களில் அவரைப் போற்றியவாறு பக்தர்கள் பவனி வருவார்கள் . பின்னர் ருக்மிணி சந்நிதி வருகிறது. அவரையும் தரிசித்த பின்னர் வெளியே செல்லலாம்.
பாத ஸ்பர்ச தரிசனம் – காலைத் தொட்டு வணங்கலாம்
ஜாதி, குலம் , கோத்ரம் வேறு பாடின்றி அனைவரும் விட்டோபா சிலை அருகில் சென்று, தொட்டு வணங்கலாம். விடோபாவின் பாதங்களில் பக்தர்கள் தலையை வைத்து வழிபடுவது மரபு. இந்த சம்பிரதாயத்தை வேறு எந்தக் கோவிலிலும் காணமுடியாது இதற்கான வரிசையில் நின்றால் 3 மணி நேரம் காத்திருக்க வேண்டும். விழாக் காலங்களில் 5 மணியும் ஏகாதசி மற்றும் யாத்திரை ஊர்வலம் வரும் நாட்களில் 36 மணி நேரமும் காத்திருக்க நேரிடலாம் ; இவரிடம் திருப்பதி பாலாஜியும் கூடத் தோற்றுவிடுவார்!!
முக தரிசனம்
கியூவரிசையில் நிற்க இயலாதோர், முக தரிசனம் செய்யலாம். இதை அரை மணி நேரத்தில் முடித்து விடலாம். ஆயினும் விட்டலையும் ருக்மிணியையும் 25 அல்லது 15 மீட்டர் தொலைவிலிருந்தே காண முடியும் . தமிழ் நாட்டுக் கோவில்களில் ஆறு கால பூஜை இருப்பது போல இங்கும் அதிகாலை முதல், பல ஆரத்திகள், தீவாராதனைகள் நடைபெறும்
நகரிலுள்ள ஏனைய கோவில்கள் : பத்மாவதி கோவில், லகுபாய் அம்பா பாய், கோபால்பூர், விஷ்ணு பாத, புண்டரீக , நாமதேவ், ஞான தேவ் , துகாராம் , கால மாருதி, தம்பத மாருதி, வியாச நாராயண, யாமை துர்கா , கஜான மஹராஜ்,ராம் பாக் , லக்ஷ்மண் பாக் கோவில்கள் .
Xxx
அருகிலுள்ள முக்கிய இடங்கள்
கைக்கடி மஹராஜ் மடம் , தனபுரி மஹராஜ் மடம், குஜராத்தி தேவஸ்தான,ம்.
Xxx
வாரி விழாவின்போது, பல சந்யாசிகள் பெயர்களில் பக்தர்கள் சுமந்துவரும் பல்லக்குகள், கோவிலுக்கு ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் வர்காரி என்னும் இடத்தில் நிறுத்தப்படும் மஹான் ஞானேஸ்வர் பெயரில் ஆலந்தி நகரிலிருந்து 2 லட்சம் பக்தர்களுடனும் தேஹு என்னும் இடத்திலிருந்து மேலும் பல்லாயிரம் துகாராம் பக்தர்களும் ,வருவார்கள். பிற இடங்களில் மேலும் எட்டு லட்சம் பேர் சேருவர் . இது 800 ஆண்டுகளாக நடைபெறுகிறது ஆஷாட ஏகாதசி விழாதான் மிகப்பெரியது சித்திரை, ஆடி, கார்த்திகை, மாசி ஆகிய நாலு மாதங்களில் இந்த பவனிகள் நடைபெறுகின்றன.
வாரி என்பது கால் நடையாக பவனி வருதல், வர்காரி என்பது அப்படி காலில் நடந்து வரும் பக்தர்கள் ஆவர்.. பக்தர்களின் பரவசம்மிகுந்த ஊர்வலங்கள், நம்மூர் காவடி ஊர்வலங்களை நினைவப்படுத்தும்.
Xxx
70. உத்தர சிதம்பர நடராஜர் கோவில்
காஞ்சி மஹா சுவாமிகள் (1894-1994), சாதாரா நகரில், 1980-ல் வியாச பூஜை காலத்தில் சில மாதங்களுக்கு முகாமிட்டிருந்தார். அப்போது சிதம்பரம் மாதிரியில் வடக்கிலும் ஒரு கோவில் அமைக்க திட்டமிட்டார்.
ஏழு குன்றுகள் சூழ்ந்ததால் இது சாதாரா என்று அழைக்கப்படுகிறது . சுவாமிகளின் திட்டத்தைக் கேட்டவுடன் ஊர்ப் பிரமுகரும் காஞ்சி சங்காராச்சார்யார் ஸ்ரீ சந்திர சேகர சரஸ்வதியின் பக்தருமான சாமண்ணா , தனது நிலத்தைக் கோவில் கட்ட தானம் செய்தார். அப்போதைய கர்நாடக, தமிழ்நாடு, மஹாராஷ்டிர அரசுகள், அந்தக் கோவிலுக்கு நிதி உதவி செய்தன. கேரள மாநிலம், நல்ல ஜாதி மரங்களைக் கோவில் கட்ட கொடுத்து உதவியது. தர்ம சிந்தனையாளர்களும் பொருளுதவி செய்தனர் .
சிதம்பரம் போலவே எழுந்த இந்தக் கோவிலின் கும்பாபிஷேகம் ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளால் 1984-ம் ஆண்டு நடத்தப்பட்டது கோவில் கட்டும் பணி 1981ல் துவங்கி மூன்றே ஆண்டுகளில் நிறைவு அடைந்தது. சிதம்பரத்திலிருந்து வரும் தீட்சிதர்களே உத்தர சிதம்பரம் நடராஜருக்கும் அபிஷேக ஆராதனைகள் செய்யவேண்டும் என்றும் சுவாமிகள் விரும்பினார். அதன்படி இப்போதும் ரொடேஷன் Rotation முறையில் சிதம்பரம் தீட்சிதர்களே இக்கவிலுக்கு வந்து பூஜை செய்கின்றனர்.
வடக்கிலும் ஒரு சிதம்பரம் இருப்பது நாட்டு ஒற்றுமைக்கு உதவுவதோடு, தென்னிந்திய மக்களுக்கு வரப்பிரசாதமாகவும் அமைந்துள்ளது .
Xxxx subham xxxxxx
Tags- வாரி வர்காரி, பண்டரிபுரம், சந்திரபாகா, பண்டரிபுரம், விட்டோபா, விட்டல் , உத்தர சிதம்பரம், நடராஜர் கோவில், சாதாரா