Post No. 12,019
Date uploaded in London – 20 May , 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
Xxxx
கடவுளைக் காண வழி சொல் – ஒரு வாரத்திற்குள்!
ச. நாகராஜன்
முன்னொரு காலத்தில் தெய்வ பக்தியுள்ள ஒரு மன்னன் தனது நாட்டை ஆண்டு வந்தான். அவனுக்கு வாய்த்த மந்திரியோ மதியூகி. மன்னனைப் போலவே மிகவும் தெய்வ பக்தி கொண்டவன்.
எந்த வெற்றியை அடைந்தாலும் இந்த இருவருமே, ‘கடவுளின் அருளால்’ என்று ஆரம்பித்தே தங்கள் வெற்றிகளைச் சொல்லி மகிழ்வது வழக்கம்.
காலம் சென்றது. மன்னனுக்கு வயதாகிக் கொண்டே போனது. ஒரு நாள் அவன் இறைவனடி சேர்ந்தான்.
முறைப்படி ராஜகுமாரன் மன்னனாக முடி சூடப்பட்டு மன்னனாக ஆனான்.
ஆனால் அவனுக்கு தெய்வ நம்பிக்கை இல்லை.
மந்திரியிடம். ‘தந்தையிடம் கூறுவது போல, ‘கடவுளின் அருளால்’ என்று எதையும் ஆரம்பித்துச் சொல்லக் கூடாது’ என்று கண்டிப்பாகக் கூறி விட்டான்.
ஒரு நாள் பழக்க தோஷத்தின் காரணமாக மந்திரி, அவனிடம், ‘கடவுளின் அருளால்’ என்று முக்கிய வெற்றியைக் கூற ஆரம்பித்தார்.
உடனே மன்னனாக இப்போது இருக்கும் ராஜகுமாரனுக்கு மிகுந்த கோபம் வந்தது.
“உங்களிடம் எத்தனை முறை கூறி இருக்கிறேன். கடவுள் என்று சொல்லாதீர்கள் என்று” என்று கோபத்துடன் மந்திரியைப் பார்த்துக் கூறிய அவன், “சரி, உங்களிடம் மூன்று கேள்விகளைக் கேட்கிறேன்.
முதலாவது, கடவுளை எப்படிப் பார்ப்பது, உங்களால் வழி சொல்ல முடியுமா? இரண்டாவது அவர் எந்தத் திசையைப் பார்த்து இருக்கிறார்? மூன்றாவது அவர் என்ன அற்புதத்தை நிகழ்த்துகிறார்? ஒரு வாரத்திற்குள் இதற்கான விடைகளைச் சொல்ல வேண்டும்.” என்றான்.
மந்திரி மிகவும் வருத்தப்பட்டார். ஒரு வாரத்திற்குள் எப்படி கடவுளைக் காணும் வழியைச் சொல்ல முடியும்? அவர் எந்த திசையை யாரைப் பார்க்கிறார் என்பதை எப்படிச் சொல்ல முடியும்? அவர் எப்படி மன்னனிடம் அற்புதத்தை நிகழ்த்துவார்?
தூக்கம் வராத மந்திரி மிகவும் சோகமாக இருந்தான்.
மூன்று தினங்கள் கழிந்தன.
மந்திரியின் வேலைக்காரன் அவரை மிகுந்த சோகத்துடன் சாப்பிடாமல் இருப்பதைப் பார்த்து, “ஐயா? என்ன விஷயம்?” என்று கேட்டான்.
மந்திரி, ‘போ, போ, உனக்கு ஒன்றும் புரியாது’ என்று சொல்லி அவனைத் துரத்தி விட்டார்.
ஆறாவது நாள் வந்தது.
வேலைக்காரன் விடாமல் அவரிடம் வந்து காரணத்தைக் கேட்ட வண்ணம் இருந்தான்.
மந்திரியும் அவன் தொந்தரவு பொறுக்க முடியாமல் மன்னனின் கேள்விகளைச் சொன்னார்.
இதைக் கேட்ட வேலைக்காரன் விழுந்து விழுந்து சிரித்தான்.
“இவை எல்லாம் கேள்விகளா என்ன? நாளை நான் இதற்கு பதில் கூறுகிறேன். நீங்கள் என் வேலைக்காரனே இந்தக் கேள்விகளுக்கு பதில் கூறுவான்” என்று சொல்லி விடுங்கள் என்றான்.
வேறு வழியில்லை மந்திரிக்கு.
அடுத்த நாள் அரசவை கூடிய போது மந்திரி மன்னனைப் பார்த்து, “இதற்கு என் வேலைக்காரனே பதில் சொல்வான்” என்று கூறினார்.
வியப்படைந்த மன்னன் வேலைக்காரனைப் பார்த்து, “நீயா கடவுளைக் காணும் வழியை எனக்குச் சொல்லப் போகிறாய்?” என்றான்.
“ஆம், மன்னவா! நானே தான்!” என்ற வேலைக்காரன், “இப்போது கேள்வி கேட்கும் சீடன் ஸ்தானத்தில் நீங்கள் இருக்கிறீர்கள். பதில் அளிக்கும் குரு ஸ்தானத்திற்கு நான் வந்து விட்டேன். ஆகவே குரு மேலான ஆசனத்திலும் குருவுக்கு கீழாக சீடன் இருப்பதும் தான் முறை. நீங்கள் மந்திரி அருகில் வந்து உட்காருங்கள். நான் உங்கள் ஆசனத்தில் அமர்ந்து விடை சொல்கிறேன்” என்றான் வேலைக்காரன்.
வேறு வழியில்லை மன்னனுக்கு. அவன் கூறியதில் இருந்த நியாயம் அவனுக்குப் புரிந்தது. கீழே வந்து அமர்ந்தான்.
வேலைக்காரன் சிம்மாசனம் ஏறி அமர்ந்தான்.
மன்னனைப் பார்த்து, “ஒரு பாத்திரத்தில் பாலைக் கொண்டு வாருங்கள்” என்று கட்டளை இட்டான்.
மன்னனும் உடனே அதற்கு ஏற்பாடு செய்தான்.
பால் வந்தது.
“ மன்னா! இதற்குள் வெண்ணெய் இருக்கிறதா?” என்று கேட்டான்.
மன்னன், “இருக்கிறது!” என்றான்.
“காணோமே” என்றான் வேலைக்காரன்.
“இது கூடவா புரியவில்லை. கடைய வேண்டும். கடைந்தால் தான் உள்ளே இருக்கும் வெண்ணெய் வரும். அதை நீ பார்க்க முடியும்” என்றான் மன்னன்.
“மன்னா! உங்களின் முதல் கேள்விக்கு விடையை நீங்களே கூறி விட்டீர்கள்!. எப்படி உள்ளே இருக்கும் வெண்ணையைக் கடைந்தால் மட்டுமே பார்க்க முடியுமோ அதைப் போல எங்கும் உள்ள கடவுள் உங்கள் உள்ளத்திலேயேயும் கூட இருக்கிறான். மனதைக் கடையுங்கள். அவன் வெளிப்படுவான்” என்றான் வேலைக்காரன்.
அடுத்து இரண்டாவது கேள்வியைப் பார்ப்போம் என்ற வேலைக்காரன்,
“ஒரு தீபத்தைக் கொண்டு வரச் சொல்லுங்கள்’ என்றான்.
சுடர் விட்டெறியும் தீபம் வந்தது.
“மன்னா! தீபத்தின் சுடர் எந்த திசையைப் பார்த்து, யாரைப் பார்த்து இருக்கிறது?” என்று கேட்டான்.
மன்னன், “அது எல்லா திசையையும் பார்த்துத் தானே இருக்கும். எல்லோரையும் அது பார்க்கிறது. வானையும் கூட அது பார்க்கிறது?” என்றான்.
“மன்னரே! உங்கள் இரண்டாவது கேள்விக்கும் விடையைக் கூறி விட்டீர்கள்! இந்த தீபச் சுடர் போல கடவுள் எல்லா திசையையும் பார்க்கிறான். எல்லோரையும் பார்த்துக் கொண்டே இருக்கிறான்!” என்றான் வேலைக்காரன்.
அடுத்து உங்கள் மூன்றாவது கேள்விக்கு வரலாம்.
“கடவுள் என்ன அற்புதத்தை நிகழ்த்துகிறான் என்பது உங்கள் கேள்வி.
மன்னா! அற்பனான நான் அந்தஸ்தோ, செல்வமோ, அதிகப் படிப்போ இல்லாதவன். ஆனால் பாருங்கள், மன்னனான உங்களைக் கீழே இறக்கி என்னை சிம்மாசனத்தில் அமரச் செய்திருக்கிறான். ஆனால் மன்னரான உங்களையோ கீழே அமர்த்தி இருக்கிறான்.
இது தான் இறைவனது திருவிளையாடல்! லீலை! கணம் தோறும் அவன் செய்யும் அற்புதம்” என்று கூறிய வேலைக்காரன் கீழே இறங்கினான்.
மன்னனிடம் வந்து தான் சிம்மாசனத்தில் சிறிது நேரம் அமர்ந்ததற்கு மன்னிப்பையும் வேண்டினான்.
மன்னன் முகம் மலர்ந்தான்.
‘எனக்கு எல்லாம் புரிகிறது ‘என்றான். மந்திரியும் மகிழ்ந்தான். கூடி இருந்த அரசவையினர் கை தட்டி அவனைப் பாராட்டினர்.
இறைவன் சிரித்தான்!
***