WRITTEN BY S NAGARAJAN
Post No. 12,029
Date uploaded in London – 22 May , 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
Xxxx
இராமாயண வழிகாட்டி
பெண்களின் வேலைத் திறனைத் திறம்பட விவரிக்கும் வால்மீகி மஹரிஷி!
ச.நாகராஜன்
‘பெண்கள் ஆணுக்கு நிகர்!’ ‘ஆண்களோடு பெண்களும் சரி நிகர் சமானமாக வாழ்வம் இந்த நாட்டிலே’ என்ற முழக்கங்களை இன்றைய நவீன காலத்தில் கேட்கிறோம்.
விண்கலத்தில் வீராங்கனை, பைலட்டாக வீராங்கனை, காவல் உயர் அதிகாரியாக வீராங்கனை, ராணுவத்தில் பெண்கள், விஞ்ஞானத் துறைகளில் பெண்கள் என வரிசையாக இப்படிப் பெண்கள் பல்துறைகளிலும் விகசிப்பதைக் காண்கிறோம்.
பழைய காலத்தில் பெண்கள் வீட்டிற்குள்ளே பூட்டி வைக்கப்பட்டார்கள் என்று பலரும் முழக்கமிடுவதையும் பார்க்கிறோம்.
ஆனால் இந்தக் கூற்று எவ்வளவு பெரிய தவறு என்பதை இராமாயண, மஹாபாரத இதிஹாஸங்களையும், புராணங்களையும் படிப்போர் அறிவர்.
ராமாயணத்தில் பல்வேறு துறைகளில் பரிமளித்த பல பெண்களைத் திறம்பட வால்மீகி விவரிக்கிறார்.
யாரும் நெருங்க முடியாத இலங்கையைக் காவல் காத்தது ஒரு பெண்மணி.
செக்யூரிடி பொறுப்பை ராவணன் லங்கிணி என்ற பெண்ணிடமே ஒப்படைத்திருந்தான். இன்றைய பார்வையின் படி லங்கிணி சீஃப் செக்யூரிடி ஆஃபீஸர் – CHIEF SECURITY OFFICER!
அவள் கட்டுமஸ்தாக, உறுதியான உடலுடன் இருந்தாள். அனுமான் போன்ற வீரனுடன் கூடச் சண்டையிடும் வலிமை பெற்றிருந்தாள்.
ஹனுமான் சிறிய உருவத்தில் உள்ளே நுழைவதைக் கூட அவளால் கண்டுபிடிக்க முடிந்தது.
அஹம் ராக்ஷஸ ராஜஸ்ய ராவணஸ்ய மஹாத்மன: |
ஆஜ்ஞாப்ரதீக்ஷா துர்தர்ஷா ரக்ஷாமி நகரீமிமாம் !
சுந்தர காண்டம் மூன்றாம் ஸர்க்கம் ஸ்லோகம் 28
“நான் ராக்ஷஸ ராஜனாகிய வலிமை கொண்ட ராவணனுடைய கட்டளையைப் பூர்த்தி செய்பவள்; ஒருவராலும் வெல்ல முடியாதவள். இந்தப் பட்டணத்தைக் காக்கிறேன்.”
அஹம் ஹி நகரீ லங்கா ஸ்வயமேவ ப்லவங்கம |
ஸர்வத: பரிரக்ஷ்யாமி ஹ்யேதத்தே கதிதம் மயா ||
சுந்தர காண்டம் மூன்றாம் ஸர்க்கம் ஸ்லோகம் 30
“வானர! நானே லங்கா நகரம்! நான் ஒருத்தியாகவே எல்லாப் பக்கங்களிலும் ஜாக்கிரதையாகக் காக்கிறேன். என்னால் இது உனக்காகத் தான் சொல்லப்பட்டது”
இப்படி லங்கிணி ஹனுமானிடம் உரைக்கிறாள்.
அடுத்து கைகேயியைப் பார்க்கலாம். ஒரு சமயம் தசரதன் போருக்குச் சென்றபோது கைகேயி அவனுக்கு ரத சாரதியாக இருந்து திறம்பட ரதத்தைச் செலுத்தியவள். அதாவது போரில் ராணுவ டாங்கைத் திறம்படச் செலுத்தும் ஒரு ராணுவ வீரன் போல கைகேயி போரில் லாவகமாகத் தேரைச் செலுத்தி தசரதனை வெற்றி பெறச் செய்தாள்.
ஆக அந்தக் காலத்தில் பெண்கள் வீட்டிற்குள் அடங்கிக் கிடக்கவும் இல்லை; ஒரு கலையும் தெரியாமல் முடங்கி இருக்கவும் இல்லை.
சீதையை எடுத்துக் கொண்டால் ராமனுடன் காட்டிற்குச் சென்று பல்வேறு கஷ்டங்களையும் தாங்கி ராமரை உற்சாகப்படுத்தி வந்ததை ராமாயணத்தில் பார்க்கலாம்.
எதிர்பாராத தருணத்தில் வாலியை போர் எதிர்நோக்கியபோது தாரை பாதுகாப்பு மந்திரியாக இருந்துத் திறம்படச் செயல்பட்டாள்.
ராவணனின் மனைவியான மண்டோதரி தர்மத்தின் வழி நின்று ராவணனுக்குத் தக்க அறிவுரைகளைக் கூறியவள்.
தனது கணவனுக்கு உரிய காலத்தில் ரிஸர்வ் படையாக – வலிமையாக இருந்து உதவி செய்த பெண்களை வால்மீகி சித்தரித்துள்ளார்.
எண்ணற்ற பெண்களை மஹாபாரதமும் புராணங்களும் அற்புதமாகச் சித்தரித்துக் காட்டி அவர்களின் வலிமையையும், புத்தி சாதுரியத்தையும், பல்கலை நிபுணத்வத்தையும் காட்டுகின்றன.
***
Athmanathan Seetharaman
/ May 22, 2023திரௌபதி, தமயந்தி, அனுசூயா ஆகிய பலரும் இதில் அடக்கம். அது பற்றிய தனிக் கட்டுரை தேவை.