WRITTEN BY S NAGARAJAN
Post No. 12,039
Date uploaded in London – 24 May , 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
அத்தியாயம் 12
ஆபரேஷன் குன்னர்சைட்! உலகத்தைப் பிழைக்க வைத்த ஒரு சாகஸ செயல்!
ச.நாகராஜன்
பகுதி 16
ஹிட்லர் நார்வேயின் மீது படையெடுத்த போது டெலிமார்க் (Telemark) என்ற இடத்தில் இருந்த வெமார்க் (Vemark) என்ற ஒரு தொழிற்சாலையைக் கைப்பற்றியது நாஜி படை.
அந்தத் தொழிற்சாலை கனநீரை உற்பத்தி செய்து வந்தது.
கனநீர் புளுடோனிய உற்பத்திக்கு இன்றியமையாத ஒன்று. ஆகவே புளுடோனியம் தயாரிப்பில் மும்முரமாக முனைந்தனர் நாஜி நிபுணர்கள்.
அவர்களது ஒரே நோக்கம் புளுடோனியத்தை உபயோகித்து அபாயகரமான அணு ஆயுதத்தைத் தயாரிப்பது தான்.
ஒரு இடத்தில் குண்டு போட வேண்டியது தான்! படார்!
பல லக்ஷம் மனிதர்கள் ஒரு சில கணங்களில் மாண்டுபோவர்.
இதைத் தடுக்க முடிவு செய்யப்பட்டது.
வெமார்க் (Vemark) ஒரு 60 MW பவர் ஸ்டேஷன். இது ஜுகான் (Rjukan) என்ற நீர்வீழ்ச்சிக்கு அருகில் நிறுவப்பட்டிருந்த பவர் ஸ்டேஷன். 1934ஆம் ஆண்டு இது கட்டப்பட்டது.
இதன் கனநீர் உற்பத்தி ஆண்டுக்கு 12 டன்கள்.
நார்வே மீது ஜெர்மனி 1940ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஒன்பதாம் தேதி படை எடுத்தது. அதற்கு சற்று முன்னதாக பிரான்ஸ் 185 கிலோகிராம் கனநீரை வெமார்க்கிலிருந்து அகற்றியது. இது இரகசியமாக ஆஸ்லோவிற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து பெர்த், ஸ்காட்லாண்டிற்கு கொண்டு செல்லப்பட்டது.
இங்கிருக்கும் கனநீரை ஜெர்மனி அணுகுண்டு தயாரிக்கப் பயன்படுத்தினால், அவ்வளவு தான் உலகம் என்பதை அறிந்த நார்வே அரசு அந்த பவர் ஸ்டேஷனை அடியோடு அழிக்கத் தீர்மானிக்கப்பட்டது.
இதன் விளைவாக ‘ஆபரேஷன் குன்னர்சைட்’ (Operation Gunnerside) என்ற ஒரு ரகசிய திட்டம் தீட்டப்பட்டது. குன்னர்சைட் என்பது ஒரு கிராமத்தின் பெயர்.
ஆறு கமாண்டோக்கள் அடங்கிய ஒரு குழுவை 1942 பிப்ரவரி மாதம் 16ஆம் தேதி பிரிட்டிஷ் விமானம் ஒன்று பாராசூட் மூலம் கீழே தரை இறக்கியது.
அவர்கள் ரகசியமாக ஒரு கேபிள் டன்னல் வழியே பவர் ஸ்டேஷனுக்குச் சென்று அதை குண்டு போட்டு அழித்தனர்.
இவர்களைப் பிடிக்க 3000 நாஜி படைவீரர்கள் துடிதுடித்து செயலில் இறங்கினர். ஆனால் அவர்களைப் பிடிக்கவே முடியவில்லை. ஆறு பேரும் உயிருடன் சாகஸமாக தப்பினர்.
இந்த ஆறு பேரில் ஐந்து பேர்கள் ஸ்கீயிங் மூலமாக 400 கிலோமீட்டர் பயணித்து ஸ்வீடனுக்குத் தப்பிச் சென்றனர்.
ஜெர்மனி தனது திட்டத்தைக் கை விட்டு மீதி இருக்கும் கனநீரை ஜெர்மனிக்குக் கொண்டு செல்ல முயன்றது. ஆனால் அதுவும் கூட நார்வேயினால் முறியடிக்கப்பட்டது.
அபாரமான இந்த சாகஸ செயலை விவரமாக விளக்கும் நூல்களைப் படித்தால் சுவையாக இருக்கும்.
***