செம்பைப் பொன்னாக்கி தந்த கொங்கண சித்தர்! (Post No.5403)

WRITTEN BY S NAGARAJAN

Date: 8 SEPTEMBER 2018

 

Time uploaded in London – 6-58 AM (British Summer Time)

 

Post No. 5403

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

 

ச.நாகராஜன்

 

செம்பைப் பொன்னாக்கி அனைவருக்கும் தந்த கொங்கண சித்தர்! (Post No.5403)

 

 

செம்பைப் பொன்னாக்கும் ரஸவாதக் கலையில் தேர்ந்தவர்கள் சித்தர்கள்.கருணை பெருக ஏழைகளுக்கும் தகுந்தவர்களுக்கும் செம்பைப் பொன்னாக்கித் தருவது அவர்களின் வழக்கம். இப்படிப்பட்ட சித்தர்களுள் குறிப்பிடத்தகுந்த பெரிய சித்தர் கொங்கண சித்தர்.

இவர் கொங்கு மண்டலத்தில் உள்ள ஊதியூர் மலையில் வசித்து வந்தார்.

இவரைப் பற்றி கொங்கு மண்டல சதகம் 37ஆம் பாடலில் சிறப்பித்துக் கூறுகிறது:

தோற்றிய செம்பு தராவீயம் பித்தளை சூழ்பச்சிலைச்

சாற்றுடனாக ரசங்கந் தகமிட்டுத் தந்திரமாய்

தேற்றுந் தவம்பெற்ற கொங்கணச் சித்தர்முன் செம்பொன்செய்து

மாற்றுரை கண்டது பொன்னூர்தி யூர்கொங்கு மண்டலமே

 

இதன் பொருள் :- செம்பு,பித்தளை முதலிய உலோகங்களுடன் பச்சிலைச் சாறு, ரச கந்தகம் முதலியன சேர்த்துப் பொன்னாக அதை மாற்றிக் காணும் கொங்கண சித்தர் வசிக்கும் ஊதியூர் மலையும் கொங்கு மண்டலத்தில் உள்ளதே ஆகும்.

 

இவர் பற்றிய வரலாறு ஒன்று உண்டு.

மகதநாட்டு மன்னனுக்கு ஒரு ஆண் மகவு பிறந்தது. அதைப் பார்த்த சுராநந்த முனிவர் என்பவர் அதை நீடித்து வாழ்வாயாக என்று ஆசி கூறிக் காப்பிட்டார்.

சகல கலைகளும் கற்ற அந்த அரசகுமாரன் தேச சஞ்சாரத்தால் ஞானத்தைப் பெறலாமென்று எண்ணினான். அதைத் தன் தந்தைக்கு அவன் தெரிவிக்க உரிய பரிவாரங்களோடு மகனை அனுப்பி வைத்தார் தந்தை. பல ஊர்களையும் சென்றடைந்த பின் ஆதியூருக்கு வந்தான் அரசகுமாரன். அங்கு சுராநந்த முனிவர் தோன்றி அவனுக்கு முக்கால அடைவு உணர்வித்து ஆசி அருளினார்.

இந்த கொங்கண ராஜன் மேல் நாட்டு யாத்திரையாகக் கிளம்பி பல தலங்களையும் தரிசித்து தென் கரை நாட்டில் கொங்கணேசரைத் தரிசித்து அங்கே தங்கி இருந்தான். ஒரு நாள் புன்னாக மர நிழலிலே சிவனைத் தரிசித்து உள்ளமுருகுப் பூசிக்கும் காலத்தில் இறைவன் குருவடிவாகத் தோன்றி அஷ்ட மா சித்தியையும் சிவ யோகத்தையும் தெளிவாக உபதேசித்து அருளினார்.

கொங்கணர் தாமிர முதலியவற்றை பொன்னாக மாற்றும் சித்தியைப் பெற்றதால் விரும்பினோருக்கு அப்படிப் பொன்னாக மாற்றிக் கொடுத்து வந்தார். ஒரு சமயம் ஆகாயத்தில் பறந்த கொக்கு ஒன்று அவர் மீது எச்சமிட அதைக் கொங்கணர் விழித்துப் பார்க்கவே அது சாம்பலானது.

கொங்கணருக்கு இன்னொரு சித்தரான கோரக்கநாதரின் நட்பும் உண்டானது.

அப்பிரமேய தல புராணம் கூறும் செய்யுள் இது:-

பாத பத்திரம் பற்பல மூலி கொண்

டூது கற்புட முன்வலி யெய்திய

சூத வேதைசிந் தூரத் துகளினால்

வாத சித்தி கனகம் வழங்கினான்

தென்கரை நாட்டில் உள்ள ஊதியூர் சிவபெருமான் கொங்கணேசர் என்ற திருநாமம் கொண்டவர். இங்கு சிவபிரானின் அநுக்கிரகம் பெற்று வசித்தலால் இறைவன் திரு நாமமான கொங்கணர் என்ற பெயரைப் பெற்று வாழ்ந்து வந்தார் இந்த சித்தர்.

இராசிபுர நாட்டிலும் கொங்கண சித்தர் மலை, கொங்கண சித்தர் ஆலயம் ஆகியவை உள்ளன.

கொங்கண சித்தர் அருளிச் செய்த நூல்களாக நம்மிடையே இன்று பஞ்சபட்சி, வாதம், வைத்தியம் ஆகிய நூல்கள் உள்ளன.

 

கொங்கணகிரியில் அருணகிரிநாதர் அருளிச் செய்த திருப்புகழ் ஒன்று உண்டு:

 

ஐங்கரனை யொத்தமன மைம்புலம கற்றிவள

ரந்திபக லற்றநிலை                        வருள்வாயே

அம்புவித னக்குள்வளர் செந்தமிழ்வழுத்தியுனை

அன்பொடுது திக்கமன                   மருள்வாயே

தங்கியத வத்துணர்வு தந்தடிமை முத்தி பெற

சந்திரவெ ளிக்குவழி                        யருள்வாயே

தண்டிகைக னப்பவுசு எண்டிசைம திக்கவளர்

சம்ப்ரமவி தத்துடனே                       வருள்வாயே

மங்கையர்சு கத்தைவெகு இங்கிதமெ னுற்றமன

முன்றனைநி னைத்தமைய                  அருள்வாயே

மண்டலிக ரப்பகலும் வந்தசுப ரக்ஷைபுரி

வந்தனைய புந்தியினை                     யருள்வாயே

கொங்கிலுயிர் பெற்றுவளர் தென்கரையி லப்பரருள்

கொண்டுஉட லுற்றபொரு                   ளருள்வாயே

குஞ்சரமு கற்கிளைய கந்தனென வெற்றிபெறு

கொங்கணகி ரிக்குள்வள்ர்                    பெருமாளே

அருமையான அர்த்தத்தைக் கொண்ட இந்த அரிய திருப்புகழின் இறுதியில்,

கொங்கிலுயிர் பெற்றுவளர் தென்கரையி லப்பரருள்

கொண்டுஉட லுற்றபொரு                   ளருள்வாயே

குஞ்சரமு கற்கிளைய கந்தனென வெற்றிபெறு

கொங்கணகி ரிக்குள்வள்ர்                    பெருமாளே

என்று வரும் வரிகள் கொங்கண கிரியின் பெருமையைக் கூறுவதைக் காணலாம்.

***

1324 திருப்புகழ் பாடல்களில் 857 சந்தங்கள்! (Post No.5388)

WRITTEN BY S NAGARAJAN

Date: 3  SEPTEMBER 2018

 

Time uploaded in London – 7-29 AM (British Summer Time)

 

Post No. 5388

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

 

 

1324 திருப்புகழ் பாடல்களில் 857 சந்தங்கள்! 178 தாள அமைப்புகள்!

 

ச.நாகராஜன்

 

அருணகிரிநாதர் இயற்றி அருளியுள்ள திருப்புகழ் பாடல்களின் எண்ணிக்கை 16000 என வரகவி மார்க்க சகாய தேவர் தனது பாடலில்,

 

“எம் அருணகிரி நாதர் ஓது பதினாயிரத் திருப்புகழழ் அமுதுமே” என்ற வாக்கால் கூறியுள்ளார்.

திருப்புகழ்ச் சிறப்புப் பாயிரம் பாடல்களில் ஒன்று இதை வலியுறுத்துகிறது :

 

அருணகிரி நாதர்பதி னாறா யிரமென்

றுரைசெய் திருப்புகழை யோதீர் – பரகதிக்கஃ

தேணி யருட்கடலுக் கேற்றம் மனத்தளர்ச்சிக்

காணி பிறவிக் கரம்

பதினாயிரம் திருப்புகழை ஓதி உணர்ந்தால், அது

பரகதிக்கு ஏணி

அருள் கடலுக்கு ஏற்றம்

மனத்தளர்ச்சிக்கு ஆணி

பிறவிக்கு அரம்.

அருணகிரிநாதரே திருப்புகழின் மஹிமையை இப்படி கூறியுள்ளார்:

 

சந்தம்

தனத்தன தனத்தம் தனத்தன தனத்தம்

தனத்தன தனத்தம் …… தனதான

பாடல்

 

சினத்தவர் முடிக்கும் பகைத்தவர் குடிக்குஞ்

செகுத்தவர் ருயிர்க்குஞ் …… சினமாகச்

 

சிரிப்பவர் தமக்கும் பழிப்பவர் தமக்கும்

திருப்புகழ் நெருப்பென் …… றறிவோம்யாம்

 

நினைத்தது மளிக்கும் மனத்தையு முருக்கும்

நிசிக்கரு வறுக்கும் …… பிறவாமல்

 

நெருப்பையு மெரிக்கும் பொருப்பையு மிடிக்கும்

நிறைப்புக ழுரைக்குஞ் …… செயல்தாராய்

 

தனத்தன தனத்தந் திமித்திமி திமித்திந்

தகுத்தகு தகுத்தந் …… தனபேரி

 

தடுட்டுடு டுடுட்டுண் டெனத்துடி முழக்குந்

தளத்துட னடக்குங் …… கொடுசூரர்

 

சினத்தையு முடற்சங் கரித்தம லைமுற்றுஞ்

சிரித்தெரி கொளுத்துங் …… கதிர்வேலா

 

தினைக்கிரி குறப்பெண் தனத்தினில் சுகித்தெண்

திருத்தணி யிருக்கும் …… பெருமாளே.

 

ஆம்,   சிரிப்பவர் தமக்கும் பழிப்பவர் தமக்கும்

திருப்புகழ் நெருப்பு.

 

திருப்புகழ் நினைத்ததும் அளிக்கும்; மனத்தையும் உருக்கும்;

நிசிக் கருவறுக்கும் – பிறவாமல்

 

நெருப்பையும் எரிக்கும்;  பொருப்பையும் இடிக்கும்

நிறைப்புகழே திருப்புகழ்!

 

இது அருணகிரிநாதர் திருத்தணிகையில் அருளிய திருப்புகழ் வாக்கு.

கண்ட கண்ட ஆராய்ச்சிகளையெல்லாம் செய்யும் தமிழுலகில் உருப்படியான ஆராய்ச்சியைச் செய்துள்ளவர் முனைவர் திருமதி இ.அங்கயற்கண்ணி. திருப்புகழ் பாடல்களில் சந்தக் கூறுகள் பற்றி ஆய்வு செய்து சென்னை பல்கலைக் கழகத்தில் பி.ஹெச்.டி பட்டத்தை  பெற்றுள்ளார்.

 

திருப்புகழிசை என்ற நூலில் முதல் முயற்சியாக 51 திருப்புகழ் பாடல்களுக்கு சந்த அமைப்பிக்கேற்றவாறு தாளங்கள் அமைத்து  அவற்றிற்குச் சுரதாளக் குறிப்புகளையும் தந்துள்ளார்.

போற்றப்பட வேண்டிய பெரிய முயற்சி. அரிய முயற்சி. வெற்றிகரமான முயற்சி.

திருப்புகழ் அமைப்பைப் பற்றித் தன் அரிய ஆராய்ச்சியின் வாயிலாக இவர் தரும் ஆய்வுத் தகவலில் ஒரு பகுதி இதோ:

 

 

“ திருப்புகழ்ப் பாடல்கள் கிருதி, கீர்த்தனை, பதம், ஜாவளி போன்ற இசை உருப்படிகளின் அமைப்பைப் போன்றல்லாது, பெரும்பான்மையான பாடல்கள் எட்டுப் பிரிவுகளைக் கொண்டதாக அமையக் காண்கிறோம். ஒரு குறிப்பிட்ட தலத்தில் உறையும் முருகப் பெருமானை எட்டுப் பிரிவுகளில் புகழ்ந்து பாடப்பெறும் “பதிக” மரபினை இதில் காண முடிகிறது. இதைக் கண்டிகை என்றும், சரணங்கள் என்றும் கூறலாம். சாதாரணமாக, ஒவ்வொரு பிரிவிலும் இரண்டு வரிகள், மூன்று வரிகள் அமைந்துள்ளன. சில பாடல்களில் ஒவ்வொரு பிரிவிலும் ஆறு, ஒன்பது மற்றும் 12 வரிகள் அமைந்துள்ளன.

 

 

சான்றுகள் :

விட மடைசு வேலை (4) ஒரு பிரிவில் இரண்டு வரிகள்

உனைத்தினந் தொழுதிலன் (7) ஒரு பிரிவில் மூன்று வரிகள்

சகடத்திற் குழையிட்டெற்றி (146) ஒரு பிரிவில் ஆறு வரிகள்

இதமுறு விரைபுனல் (353) ஒரு பிரிவில் ஒன்பது வரிகள்

விந்துப் புளகித (559) ஒரு பிரிவில் பன்னிரெண்டு வரிகள்

 

எட்டு வரி மற்றும் நான்கு வரிகளைக் கொண்ட சிறிய பாடல்களும் காண முடிகின்றது.

 

 

சான்றுகள் :

சந்ததம் பந்தத் (15)   – எட்டு வரிப்பாடல்

காலனிடத் தணுகாதே (388)  – நான்கு வரிப்பாடல்

 

திருப்புகழ்ப் பாடல்களில் ஒவ்வொரு பிரிவும் ஒரு குறிப்பிட்ட சந்தம் மூன்று முறை ஒரே சீராக மடங்கி வந்து இறுதியில், “தன தானா” என்னும் சந்த அமைப்புடைய தனிச் சொல்லுடன் முடிவுறுவதாக விளங்குகின்றது. இஃது தங்கப்பதக்கத்தில் அமைந்த ஒரு மதாணியைப் போல் விளங்குகின்றது. இசைமரபில் “தொங்கல்” என வழங்கப்படும்.

 

 

திருப்புகழ்ப் பாடல்களின் தனிப்பட்ட சிறப்பிற்கு ‘தொங்கல்’ என்னும் இவ்வமைப்பே காரணமாகும். இவ்வாறான தொங்கலே திருப்புகழை மற்ற இசை இலக்கியப் பாடல்களினின்றும் வேறுபடுத்திக் காட்டுகின்றது. இந்தத் தொங்கல் காணப்படும் இடத்தை வைத்தே பாடல்களில் பிரிவுகள் கணக்கிடப்படுகின்றன. அவ்வாறு கணக்கிடும்போது திருப்புகழில் எட்டுப் பிரிவுகளே வருகின்றன. பெரும்பான்மையான பாடல்கள், “பெருமாளே” என்ற தொங்கலுடன் முடிவுறுகின்றன.”

 

அடுத்து திருப்புகழில் உள்ள சந்த அமைப்புகளையும் தாள வகைகளையும் நுணுகி ஆராயும் அம்மையார் அங்கயற்கண்ணி தன் முடிவாகக் கூறுவது இது தான்:

“ இவ்வாறு திருப்புகழ்ப் பாடல்களை தாள இலக்கணத்தோடு தொடர்புபடுத்தி, ஆராய்ந்ததன் மூலம் மொத்தமாக 857 சந்தங்களும் அவற்றிலிருந்து 178 தாள அமைப்புகளும் கிடைத்துள்ளன.”

 

அருமையான இந்தத் தகவலை இவரது ஆய்வு தந்து விட்டது.

நமக்குக் கிடைத்துள்ள 1324 பாடல்களில் 857 சந்த பேதம்; 16000 பாடல்களும் கிடைத்திருந்தால்….!!

 

தமிழுக்குத் தனியொரு பெருமையைத் தருவது திருப்புகழ்; பொருளாலும் சந்த அமைப்பினாலும், தாள வகைகளாலும், எல்லாவற்றிற்கும் மேலாக வெற்றிக் குமரனைத் தொழும் பக்தி அநுபூதியைத் தருவதாலும் திருப்புகழுக்கு ஈடு இணை இல்லை!

 

வேதம் வேண்டாம் சகல வித்தை வேண்டாம் கீத

நாதம் வேண்டாம் ஞான நூல் வேண்டாம் – ஆதி

குருப்புகழை மேவுகின்ற கொற்றவன் தாள் போற்றுந்

திருப்புகழைக் கேளீ ர் தினம்!

 

****

 

குறிப்பு: திருப்புகழிசை என்ற நூல் 1999 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டிருக்கிறது. 160 பக்கங்கள் கொண்ட இந்த நூலைப் பற்றி தஞ்சாவூர், தமிழ்ப் பல்கலைக் கழகத்திற்கு எழுதித் தெரிந்து கொள்ளலாம்.

பாடல்களில் பிராக்கட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ள எண்கள் பாடலின் எண்ணாகும்.

 

–subahm–

“சலாம் முருகா”! “சலாம் முருகா”!! அருணகிரிநாதரின் தனி வழி !!

welcome

ஆய்வுக் கட்டுரையாளர்:- லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண்:-1129; தேதி:– 25 ஜூன் 2014.

N.B. If you want to reproduce this article, please email me for permission. You must get written permission from me for each and every article separately. swami_48@yahoo.com

கடவுளுக்கு என்ன மொழி தெரியும்?

நாம், அவருக்கு வேதம் முழங்கும் சம்ஸ்கிருதம் மட்டுமே தெரியும்,
தேவாரம், திவ்யப் பிரபந்தம் முழங்கும் தமிழ் மட்டுமே தெரியும்,
பைபிள் முழங்கும் எபிரேயம் அல்லது ஆங்கிலம் மட்டுமே தெரியும்,
குரான் முழங்கும் அராபியம் மட்டுமே தெரியும்,
சமண நூல் முழங்கும் ப்ராக்ருதம் மட்டுமே தெரியும்,
தம்ம பதம் முழங்கும் பாலி மொழி மட்டுமே தெரியும்,
ஜெண்ட் அவஸ்தா முழங்கும் பாரசீகம் மட்டுமே தெரியும்
ஆதிக்கிரந்தம் முழங்கும் பஞ்சாபி மொழி மட்டுமே தெரியும்———-
என்று நினைத்தால், அது நமது அறியாமைக்கு ஆயிரம் ‘வாட் பல்ப்’ போட்டு வெட்ட வெளிச்சமாக்கியதற்குச் சமம் ஆகும்.
அப்படியானால் அவருக்குத் தெரிந்த மொழி என்ன?

akshara
கடவுளுக்கு இரண்டே மொழிகள்தான் தெரியும்; அவற்றின் பெயர் அன்பு, உண்மை = பிரேமையும் சத்தியமும்தான் என்று சாது சந்யாசிகள் பல்லாயிரம் பாடல் பாடி முழங்குகின்றனர்.

இதை நமக்கு நிதர்சனமாகக் காட்டுபவர் திருப்புகழ் பாடிய அருணகிரிநாதர் ஆவார். அவர் சம்ஸ்கிருதம், தமிழ், ஹிந்துஸ்தானி போன்ற மொழிகள் மூலம் இறைவனை வழிபட்டு நமக்கு வழிகாட்டி உள்ளார். மொழிகள் மூலம் சண்டை வேண்டாம். அதிலும் குறிப்பாக “கோவில்களில் இறைவனுக்கு தமிழில் அர்ச்சனையா? சம்ஸ்கிருதத்தில் அர்ச்சனையா?”—என்று பட்டிமன்றம் நடத்த வேண்டாம் என்று சொல்லாமல் சொல்கிறார்.

இதோ அவரது திருப்புகழே அதற்குச் சான்று:
“சுராதிப திமாலய னுமாலொடு சலாமிடு
சுவாமிமலை வாழும் பெருமாளே” — என்றும்

கற்ப கந்திரு நாடுயர் வாழ்வுற
சித்தர் விஞ்சையர் மகர் சபாசென – என்றும்

பாடுகிறார். முகமதிய ஆட்சிக்காலத்தில் வாழ்ந்ததால் ஹிந்துஸ்தானி மொழியில் புழங்கிய சபாஷ், சலாம் முதலிய பல ஹிந்துஸ்தானிச் சொற்கள் அவர்தம் பாடல்களில் பரிமளிக்கின்றன.
om

நடிக்கும் பிரான் மருகா ! கொடும் சூரன் நடுங்க வெற்பை
இடிக்கும் கலாபத் தனி மயில் ஏறும் இராவுத்தனே — (கந்தர் அலங்காரம் பாடல் 51)
விருதா (பயனற்ற) என்ற சொல் “ அவமாயை கொண்டு உலகில் விருதா அலைந்துழலும் அடியேனை” என்ற வரியிலும் ஜே என்ற சொல்லை “நிருத ரார்க்கொரு காலா ஜேஜெய, சுரர்களேத்திடு வேலா ஜேஜெய” — என்ற திருப்புகழ் வரியிலும் காணலாம்.

குமரபரகுரு சுவாமிகளும் கூட மீனாட்சிப் பிள்ளைதமிழில்
“குறவர் மகட்குச் சலாமிடற் கேக்கறு
குமரனை முத்துக் குமரனைப் போற்றுதும்” — என்றும் பாடுகிறார்.

நாம் அன்றாடம் புழங்கும் ஹிந்துஸ்தானி சொற்கள்:
அசல், அந்தஸ்து, அபின், அல்வா, இஸ்திரி, உஷார், குமாஸ்தா, ஜமக்காளம், ஜல்தி, சோதா, தபால், தர்பார், பஞ்சாயத்து,பங்களா, சபாஷ் – இன்னும் பற்பல.

hello

உலகில் எவரும் பிறமொழிக் கலப்பிலாமல் வாழமுடியாது; பேசவும் முடியாது. ஆனால் அது எல்லை மீறிப் போகாதவாறு பாதுகாத்து, மொழியின் தூய்மையைப் போற்றுவதில் தவறில்லை.
வாழ்க தமிழ் ! வளர்க தமிழ்!

‘ரொம்ப நாளாக எனக்கு ஒரு ஆசை’

‘ரொம்ப நாளாக எனக்கு ஒரு ஆசை’ (கற்பனைப் படைப்பு- ச.சுவாமிநாதன்)

புலவர்கள் மாநாட்டுக்கு வருகை தந்த அனைவருக்கும் வணக்கம். என் பெயர் நக்கீரன். ‘நெற்றிக் கண்ணைத் திறப்பினும் குற்றம் குற்றமே’ என்று சிவ பெருமானையே கண்டித்தவன் நான். ‘சங்கு அறுப்பது எங்கள் குலம், சங்கரனார்க்கு ஏது குலம்?’ என்று சிவனையே தட்டிக் கேட்டவன் நான். கவனமாக உண்மையை மட்டும் பேசுங்கள். இன்றைய தலைப்பு:

“ ரொம்ப நாளாக எனக்கு ஒரு ஆசை ”:

 

1.சேக்கிழார்: என் பெயர் சேக்கிழார். நான் முதலில் பேசிவிடுகிறேன். நான் எழுதிய பெரிய புராணத்திலிருந்து ஒரு சில வரிகள்:

அளவு கூட உரைப்பரிதாயினும்

அளவிலாசை துரப்ப அறைகுவேன்

Though impossible to reach its limits

Insatiable love(desire) drives me to the task

 

2.கம்பன்: என் பெயர் கம்பன். நான் எழுதிய ராமாயணத்தில் சேக்கிழார் அய்யா சொன்னதையே சொல்லி இருக்கிறேன்:

ஆசைபற்றி அறையலுற்றேன் மற்றிக்

காசு இல் கொற்றத்து இராமன் கதை அரோ!

 

3.அப்பர் பெருமான் எழுந்தார். கருவில் இருந்தபோதே எனக்கு ஒரு ஆசை:

“கருவுற்ற நாள் முதலாக உன் பாதமே காண்பதற்கு

உருகிற்றென் உள்ளமும்…………………….”

 

4.என் பெயர் அருணகிரிநாதன். சுமார் 550 ஆண்டுகளுக்கு முன் திருவண்ணாமலையில் தறுதலைக் காலியாகத் திரிந்தேன். வாழ்க்கையே வெறுத்து தற்கொலை செய்ய கோபுரத்தில் இருந்து குதித்தபோது முருகன் அருள் பெற்று திருப்புகழ் பாடினேன். இதோ ஆசை பற்றி:

புலையனான மாவீனன் வினையிலேகு மாபாதன்

பொறை இலாத கோபீகனந்———- முழு மூடன்

புகழிலாத தாமீகன் அறிவிலாத காபோதி

பொறிகளோடி போய்வீழு————- மதி சூதன்

நிலையிலாத கோமாளி கொடையிலாத ஊதாரி

நெறியிலாத வேமாளி—————-  குலபாதன்

நினது தாளை நாடோறு மனதில் ஆசை வீடாமல்

நினயுமாறு நீமேவி—- யருள்வாயே

4444444

 

சீத தொங்கலழ காவணிந்து மணம்

வீச மங்கையர்கள் ஆட வெண்கரி

சீற கொம்பு குழல் ஊத தண்டிகயில் ——– அந்தமாகச்

சேர்கனம் பெரிய வாழ்வு கொண்டுழலும்

ஆசை வெந்திட உன் ஆசை மிஞ்சி சிவ

சேவை கண்டுனது பாத தொண்டன் என—— அன்புதாராய்.

5555555

 

5.என் பெயர் திருமூலர், ஆசையே துன்பத்துக்கு காரணம் என்று புத்தர் மட்டுமா சொன்னார். நானும்தான் பாடி இருக்கிறேன்:

‘ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள்

ஈசனோடாயினும் ஆசை அறுமின்கள்

ஆசைப்படப்பட ஆய்வரும் துன்பங்கள்

ஆசை விடவிட ஆனதம் ஆமே’ (திருமந்திரம் 2615)

 

6.என் பெயர் திருவள்ளுவர். இதே கருத்தை நான் இவருக்கும் முன்னரே சொல்லிவிட்டேன். ஆசை என்ற சம்ஸ்கிருத சொல்லுக்குப் பதிலாக பற்று என்ற தூய தமிழ் சொல்லைப் பயன்படுத்தி இருக்கிறேன்:

பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்

பற்றுக பற்று விடற்கு (திருக்குறள்)

 

7.என் பெயர் சுப்பிரமணிய பாரதி.இதோ பாருங்கள், நான் பாஞ்சாலி சபதத்துக்கு எழுதிய முன்னுரை: “ காரியம் மிகப் பெரிது; எனது திறமை சிறிது. ஆசையால் இதனை எழுதி வெளியிடுகின்றேன், பிறர்க்கு ஆதர்சமாக அன்று, வழிகாட்டியாக”.

இது மட்டுமா: நான் பாடிய

“ஆசை முகம் மறந்து போச்சே—இதை

ஆரிடம் சொல்வேனடி தோழி?

நேச மறக்கவில்லை நெஞ்சம்—எனில்

நினைவு முகம் மறக்கலாமோ?” என்ற பாடல் மிகவும் கீர்த்தி பெற்றுவிட்டது.

 

நன்று நன்று, வேறு யாராவது ஏதேனும் சொல்ல விரும்புகிறீர்களா?

8.என் பெயர் கண்ணதாசன். நான் ஒரு கவிஞன். திரைப் படங்களுக்கும் பாடல் எழுதுபவன். என் கருத்தையும் சொல்லிவிடுகிறேன்:

ஆசையே அலை போலே நாமெல்லாம் அதன் மேலே,
ஓடம் போலே ஆடிடுவொமே வாழ் நாளிலே
பருவம் என்னும் காற்றிலே, பறக்கும் காதல் தேரிலே
ஆணும் பெண்ணும் மகிழ்வர் , சுகம் பெறுவர் – அதிசயம் காண்பார்
நாளை உலகின் பாதையை இன்றே யார் காணுவர்?

English 
With passions as waves
we dance like the boat
in our passage of life
With the wind of youth,
by flying in the chariot of love,
man and woman make merry, enjoy
and surprise themselves
but who can guess tomorrow’s path
today itself?

 

நன்று நன்று. இன்னும் ஒருவர் பேசலாம். அத்தோடு கூட்டம் முடிவடையும்.

 

9.என் பெயர் வைரமுத்து. என் பாட்டுகளும் தமிழ் கூறு நல்லுலகத்தில் பிரசித்தம். இதோ சாம்பிளுக்கு ஒன்று:

சின்ன சின்ன ஆசை சிறகடிக்க ஆசை

முத்து முத்து ஆசை முடிந்துவிட ஆசை

வெண்ணிலவுதொட்டு முத்தமிட ஆசை

என்னையிந்த பூமி சுற்றிவர ஆசை.

 

இன்றைய கூட்டம் இத்தோடு நிறைவடைந்தது. அடுத்த வார தலைப்பு: “கறுப்புதான் எனக்கு பிடிச்ச கலரு”.

எல்லா புலவர்களும் பலத்த கரகோஷம் செய்தனர். கூட்டம் இனிதே முடிந்தது.

(முந்தைய கட்டுரை மன்னிக்க வேண்டுகிறேன். அதனையும் படித்து மகிழ்க)

அருணகிரிநாதரின் சொற்சிலம்பம்

Photos from Face Book; Thanks.

திருப்புகழ் ஆராய்ச்சிக் கட்டுரை -8

அருணகிரிநாதரின் சொற்சிலம்பம்

திருப்புகழ் என்பது இறைவனின் புகழ் பாடும் துதிப் பாடல்கள்தான். ஆயினும் அதில் தமிழ் கொஞ்சி விளையாடுகிறது. பல இடங்களில் அருணகிரிநாதர் சொற் சிலம்பம் ஆடுகிறார். முருகனை மறந்து விட்டு தமிழின் அழகை ரசிக்கத் துவங்கிவிடுகிறோம். ஏனெனில் ஆழ்வார்கள், நாயன்மார்கள் துவங்கி பாரதி வரை வந்த அடியார்கள் அனைவரும் தமிழையும் தெய்வத்தையும் ஒன்றாகவே கண்டார்கள். இதோ சில எடுத்துக் காட்டுகள்:

மனித்தர் பத்தர் தமக்கு எளியோனே

மதித்த முத்தமிழில் பெரியோனே

என்ற வரியிலிருந்து இது தெளிவாகிறது.

 

காமாரி, தீயாடி, ஆசாரி

விராலிமலை பாடலில் காமாரி, தீயாடி, ஆசாரி என்று சிவ பெருமானைப் பாடுகிறார். ஏதோ திட்டுவது போல இருக்கும்.

கரி புராரி காமாரி திரிபுராரி தீயாடி

கயிலையாளி காபாலி            கழியோனி

கரவு தாசன் ஆசாரி பரசு பாணி பானாளி

கணமொடாடி காயோகி           சிவயோகி

என்று பாடுகிறார். இதன் பொருள்: யானைத் தோலை உரித்து அணிந்தவர், காமனையும் திரிபுரங்களையும் எரித்தவர், சுடலையில் ஆடுபவர், கயிலை மலையை ஆளுபவர், கபாலத்தைக் கையில் ஏந்தியவர், மூங்கில் கழியின் கீழ் பிறந்தவர்,  கையில் தீயை ஏந்தி ஆடும் ஆசார்யர் (குரு), பரசு எனும் ஆயுதத்தை உடையவர், நள்ளிரவில் ஆடுபவர், பூத கணங்களுடன் ஆடுபவர், காப்பாற்றும் யோகி, சிவயோகி என்று சிவ பெருமானைப் புகழ்கிறார்.

சலா சலா, சிலீர் சிலீர், அளா அளா, சுமா சுமா

திருக்கழுக்குன்ற திருப்புகழில் தனா தனா, பளீர் பளீர், கலீர் கலீர், குகூ குகூ, சலா சலா, சிலீர் சிலீர், அளா அளா, சுமா சுமா, எழா எழா, குகா குகா, செவேல் செவேல் என்று ஓசை நயத்துடனும் பொருள் நயத்துடனும் பாடி இருக்கிறார். இதோ சில வரிகள் மட்டும்:

ஓலமிட்ட சுரும்பு தனாதனாவென

வேசிரத்தில் விழுங்கை பளீர் பளீரென

வோசை பெற்ற சிலம்பு கலீர் கலீரென             விரக லீலை

ஓர் மிடற்றில் எழும் புள் குகூ குகூவென…………..

 

பழமுதிர்ச் சோலையில் பாடிய சீர் சிறக்கு மேனி பசேல் பசேல் என

என்ற பாடலும் இதே பாணியில் அமைந்துள்ளது. ஓசை நயத்துடன் அத் திருப்புகழைப் பாடுகையில் நம்மை அறியாமலே உற்சாஅகம் கொப்பளிக்கும்.

 

தகப்பன் சாமி, நடிக்கும் சாமி, ஒழிக்கும் சாமி, பொறுக்கும் சாமி

சிவ பெருமானுக்கே ஓம்காரப் பொருளை உரைத்தவன் ஆதலால் முருகனை தகப்பன் சுவாமி என்பர். ஆனால் அருணகிரி சாமி என்ற சொல்லை வைத்துக் கொண்டு எப்படிச் சிலம்பம் ஆடுகிறார் என்று பாருங்கள்:

புவிக்குன் பாத—— என்று துவங்கும் பாடலில் சாமி என்ற சொல்லை வைத்துக் கொண்டு சாமி ஆடி விடுகிறார்!!

சிவத்தின் சாமி மயில் மிசை நடிக்குஞ் சாமி எமதுளம்

சிறக்குஞ் சாமி சொருப மீது ஒளி காணச்

செழிக்குஞ் சாமி பிறவியை ஒழிக்கும் சாமி பவமதை

தெறிக்குஞ் சாமி முனிவர்களிடம் மேவும்

தவத்தின் சாமி புரி பிழை பொறுக்கும் சாமி குடிநிலை

தறிக்கும் சாமி அசுரர்கள் பொடியாகச்

சதைக்கும் சாமி எமை பணிவிதிக்கும் சாமி சரவண

தகப்பன் சாமி எனவரு பெருமாளே

சாமியையே கிண்டல் செய்வது போல சொற் பிரயோகம் இருந்தாலும் ஒவ்வொரு சொல்லும் ஆழந்த பொருள் உடையது.

எண் ஜாலம்

எண்களை வைத்துக் கொண்டு ஜால வித்தை காட்டும் திருப்புகழ் இதோ:

சுருதி மறைகள் இருநாலு திசையில் அதிபர் முனிவோர்கள்

துகளில் இருடி எழுபேர்கள்             சுடர் மூவர்

சொலவில் முடிவில்  முகியாத பகுதி புருடர் நவநாதர்

தொலைவிலுடு வினுலகோர்கள் மறையோர்கள்;

அரிய சமய மொருகோடி அமரர் சரணர் சத கோடி

அரியும் அயனும் ஒருகோடி            இவர்கூடி

அறிய  அறிய அறியாத அடிகளறிய  அடியேனும்

அறிவு ளறியு மறிவூர அருள்வாயே

 

2,4,7,3,9 என்று சொல்லிவிட்டு கோடி, சத கோடி என்று அடுக்கியதோடு அறிய என்ற சொலை வைத்தும் சிலம்பம் ஆடுகிறார்! விஷ்ணுவும் பிரம்மனும் அறிய முயன்றும் அறியாத உன்னை எனது அறிவுக்குள் அறியும் அளவுக்கு அறிவு ஊர அருளவேண்டும் என்பது இதன் பொருள்.

 

அணிகலம் எது?

ஆலுக்கு அணிகலம் வெண்தலை மாலை

மாலுக்கு அணிகலம் தண் அம் துழாய், மயில் ஏறும் ஐயன்

காலுக்கு அணிகலம்  வானோர் முடியும் கடம்பும் கையில்

வேலுக்கு அணிகலம்  வேலையும் சூரனும், மேருவுமே

பொருள்: ஆலமர்ச் செல்வன் சிவனுக்கு அணி மண்டைஓட்டு மாலை, திருமாலுக்கு அணி துளசி மாலை, மயில் ஏறும் முருகன் காலுக்கு, தேவர்களின் முடியும் கடம்பும் அணிகலம். கையில் உள்ள வேலுக்கு அணி அதன் மூலம் துணிக்கப்பட்ட சூரனும் மலையும் கடலும் ஆகும்.

 

காணி நிலம் வேண்டும் பராசக்தி…….

பாரதி பாடிய பாடலில் காணி நிலம், மாளிகை, கிணறு, 10, 12 தென்னை மரங்கள் நிலவொளி, குயில் ஓசை ஆகியவற்றைக் கேட்டுவிட்டு அமைதியை வேண்டுகிறார். அதற்கு முன்னரே அதே பாணியில் அருணகிரி பாடிவிட்டார். பாரதியே இதைப் படித்துதான் காணி நிலம் வேண்டும் பாட்டை எழுதினாரோ !

உடுக்கத் துகில் வேணும் நீள் பசி

அவிக்கக் கன பானம் வேணும் நல்

ஒளிக்குப் புனலாடை வேணும் மெய்யுறு நோயை

ஒழிக்கப் பரிகாரம் வேணும் உள்

இருக்கச் சிறு நாரி வேணும் ஓர் படுக்கத்

தனி வீடு வேணும்……………… என்று அடுக்கிக் கொண்டே போகிறார்.

(நாரி=மனைவி)

 

உருகவில்லை, அறியவில்லை, விழையவில்லை

தீர்த்தமலையில் பாடிய பாடலில் என்ன என்ன செய்யவில்லை என்பதைப் பட்டியல் போடுகிறார்:

பாட்டில் உருகிலை, கேட்டும் உருகிலை,

கூற்று வழி பார்த்தும் உருகிலை

பாட்டை அநுதினம் ஏற்றும் அறிகிலை       தினமானம்

பாப்பணியருள் வீட்டை விழைகிலை

நாக்கின் நுனி கொண்டு ஏத்த அறிகிலை என்று பாடுகிறார்.

 

முந்தைய ஏழு திருப்புகழ் ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் கண்டு களிக்க.

swami_48@yahoo.com

நரகத்துக்கு போவோர் பட்டியல்

 

Picture of Skanda/Kartikeya/Murugan in Cambodia (from Wikipedia)

திருப்புகழ் ஆராய்ச்சிக் கட்டுரை -6

நரகத்துக்கு போவோர் பட்டியல்

யார் யார் நரகத்துக்குப் போவார்கள் என்று ஒரு சுவயான பட்டியலைத் தருகிறார் அருணகிரிநாதர்:

 

ஓதுவித்தவர் கூலிகொடாதவர்

மாதவர்க்கு அதிபாதகமானவர்

ஊசலில் கனலாய் எரி காளையர்         மறையோர்கள்

ஊர்தனக்கு இடரே செயும் ஏழைகள்

ஆர்தனக்கும் உதாசினதாரிகள்

ஓடி உத்தமர் ஊதிய நாடினர் இரவோருக்கு

ஏதும் இத்தனை தானம் இடாதவர்

பூதலத்தினில் ஓரமதானவர்

ஈசர் விஷ்ணுவை சேவை செய்வோர்தமை இகழ்வோர்கள்

ஏகசித்த தியானமிலாதவர்

மோகமுற்றிடு போகிதம் ஊறினர்

ஈனர் இத்தனை பேர்களும் ஏழ்நரக உழல்வாரே

 

பொருள்: குரு தட்சிணை கொடுக்காதவர்கள், தவ வலிமை மிக்க பெரியோர்களுக்கு ஊறுவிளைவிப்போர், காம வெப்பத்தில் நெருப்பாய் எரியும் இளையோர், வேதம் அறிந்த பார்ப்பனர் ஊர்களுக்கு கெடுதி செய்வோர், எல்லோரையும் உதாசினம் செய்து பேசுவோர், உத்தமர்களின் செல்வத்தை ஏமாற்றிப் பறிப்போர், பிச்சை கேட்போருக்கு தானம் இடாதவர், பூவுலகில் பாரபட்சமாகப் பேசுவோர், சிவனையும் விஷ்ணுவையும் க்உம்பிடுவோரை கேலி செய்வோர், ஒரு முகப் பட்ட மனத்துடன் தியானம் செய்யாதவர்கள், மோகத்தில் மூழ்கி காமத்தில் திளைப்பவர்கள், இன்னர்கள் இத்தனை பேரும் ஏழுவகை நரகங்களில் துன்புறுவார்கள்.

இதன் ஆங்கில மொழி பெயர்ப்பு வேண்டுவோர் கௌமாரம்.காம்  –இல் திரு கோபாலசுந்தரம் அவர்களின் அற்புதமான மொழிபெயர்ப்பைப் படிக்கவும்.

 

“ கடவுள் ஒரு திருடன் “

ஒரு நாஸ்தீகர் இப்படிச் சொல்லியிருந்தால் நாம் இது அவர்களின் வாடிக்கையான வசனம் என்று தள்ளிவிடலாம். அருணகிரிநாதரும் ஞான சம்பந்தரும் மீரா பாயும் சொன்னால் ஒதுக்கிவிட முடியுமா? கொஞ்சம் ஆழ்ந்து படிக்க வேண்டும்.

கண்ணபிரானைப் பற்றிப் பாடுவோர் எல்லாம் அவனை ‘சோர்’ (சம்ஸ்கிருத இந்தி மொழியில் சோர, சோர் என்றால் திருடன்) என்று புகழ்ச்சியாகப் பாடுவதைக் கேட்கிறோம். வெண்ணையை மட்டுமா திருடினான். கோபியரின் புடவையையும் அல்லவா திருடினான் கள்ளக் கிருஷ்ணன். ஆனால் இந்தத் திருட்டுக்கும் நம்ம ஊர் அரசியல் திருடர்களுக்கும் வித்தியாசம் உண்டு. கண்ணன் திருடினால் அவன் அன்பின் காரணமாக நம் வீட்டில் செல்வம் குவியும். நாம்ம ஊர் அரசியல்வாதிகள் திருடினால் நம் வாழ்வில் இருள் கவியும்.

அருணகிரிநாதர் கூட கண்ணனின் பெருமையைப் பாடுகிறார்:

 

சிகர குடையினி னிரைவர இசைதெரி

சதுரன் விதுரனில்  வருபவ னளையது

திருடி யடிபடு சிறியவ நெடியவன் மதுசூதன்

என்று பழனி திருப்புகழில் பாடுகிறார்.

 

சம்பந்தப் பெருமான் சிவனுக்கும் திருட்டுப் பட்டம் சூட்டினார். சிவனை உள்ளம் கவர் கள்வன் என்று மூன்று வயதிலேயே முதல் பாட்டிலேயே அடையாளம் கண்டுவிட்டார்:

 

தோடுடைய செவியன், விடை ஏறி ஓர் தூவெண் மதி சூடி

காடுடைய சுடலைப் பொடி பூசி என் உள்ளம் கவர் கள்வன்

ஏடுடைய மலரான் உனை நான் பணித்து ஏத்த அருள் செய்த

பீடுடைய பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன்  அன்றே

 

மூன்று வயதிலேயே சம்ப்ந்தரின் உள்ளத்தைக் கவர்ந்ததால் ஞான சம்பந்தர் இந்து சமய வரலாற்றில் அழியாத இடம் பெற்றுவிட்டார்.

முருகனுக்கும் திருட்டுப் பட்டம் உண்டு என்பது பலருக்கும் தெரியாது. அருணகிரிநாதர் போன்ற அருளாளர்கள் தான் இப்படிச் சொல்லமுடியும்.

 

பெண் திருடி

செம்மான் மகளைத் திருடும் திருடன்

பெம்மான் முருகன், பிறவான், இறவான்,

‘சும்மா இரு சொல் அற’ என்றலுமே

அம்மா பொருள் ஒன்றும் அறிந்திலனே

(கந்தர் அநுபூதி, பாடல் 12)

இறைவனின் திருவிளையாடல்கள் எண்ணிலடங்கா. எவ்வளவோ அடியார்கள் வாழ்வில் கொள்ளையர் ரூபத்தில் வந்தும் அருள் பாலித்தான். இதுபோல பல அரசர்களும் புலவர்கள் பேரில்கொண்ட அன்பின் காரணமாக அவரை மீண்டும் ஊருக்கு வரவழைக்க இப்படி வழிப்பறிக் கொள்ளை அடித்ததுண்டு.

 

எனது முந்தைய திருப்புகழ் ஆராய்ச்சிக் கட்டுரைகள்

1.தமிழில் திட்டத் தெரியுமா? வசை பாடுவது எப்படி?

2.சம்பந்தருக்கு அடிமை அருணகிரிநாதர்

3. தனிமையில் இனிமை: அருணகிரிநாதர்

4. டாக்டர் முருகனும் ‘பேஷன்ட்’ அருணகிரிநாதரும்

5. அருணகிரிநாதருடன் 60 வினாடி பேட்டி

6.’திருப்புகழ் நெருப்பு என்று அறிவோம் யாம்’

Contact London Swaminathan at swami_48@yahoo.com for the list of all the 400+ articles.

“திருப்புகழ் நெருப்பு என்று அறிவோம் யாம்”

திருப்புகழ் ஆராய்ச்சிக் கட்டுரை -5

“திருப்புகழ் நெருப்பு என்று அறிவோம் யாம்”

 

அருணகிரிநாதர் பாடியதில் நமக்குக் கிடைத்த திருப்புகழ் பாடல்கள் 1300க்கும் சற்று அதிகம். அவைகளில் அவரே திருப்புகழின் பெருமையைக் கூறும் இடங்கள் நவில்தொறும் நூல்நயம் பயக்கும். படிக்கப் படிக்கத் தெவிட்டாதது. திருப்புகழைப் பழிப்பவர்க்கு விடும் எச்சரிக்கையைப் பாருங்கள்:

 

“சினத்தவர் முடிக்கும் பகைத்தவர் குடிக்கும்

செகுத்தவர் உயிர்க்கும் சினமாகச்

சிரிப்பவர் தமக்கும் பழிப்பவர் தமக்கும்

திருப்புகழ் நெருப்பு என்று அறிவோம் யாம்

நினைத்தது அளிக்கும் மனத்தையும் உருக்கும்

நிசிக்கரு அறுக்கும்       –பிறவாமல்

நெருப்பையும் எரிக்கும் பொருப்பையும் இடிக்கும்

நிறைப் புகழ் உரைக்கும்   –செயல் தாராய்

 

திருத்தணியில் பாடிய இன்னொரு பாட்டில்

பலகாலும் உனைத் தொழுவோர்கள்

மறவாமல் திருப்புகழ் கூறி

படி மீது துதித்துடன் வாழ        –அருள்வாயே

என்பார்.

 

திருப்புகழ் படித்தால் இடர்கள் பறந்தோடும் என்று உறுதிபடக் கூறுகிறார்:

இருப்பவல் திருப்புகழ் விருப்பொடு படிப்பவர்

இடுக்கினை அறுத்திடும் எனவோதும்”

இதே கருத்தை வேல் வகுப்பிலும் கூறுவார்:

“ துதிக்கும் அடியவர்க்கு ஒருவர் கெடுக்க இடர்

நினைக்கின் அவர் குலத்தை முதல் அறக் களையும்

எனக்கோர் துணையாகும்

சொலர்க்கறிய திருப்புகழை உரைத்தவரை

அடுத்த பகை அறுத்து எறிய உறுக்கி எழு

மறத்தை நிலை காணும்”

 

சந்த நடை

சந்த நடை என்ற சொல் வரும் திருச்செங்கோட்டுப் பாடலில்:

“பத்தர் கணப்ரிய நிர்த நடித்திடு

பக்ஷி நடத்திய           குகபூர்வ

பச்சிம தக்ஷிண உத்தர திக்குள

பத்தர்கள் அற்புதம்        எனவோதும்

சித்ர கவித்துவ  சத்த மிகுத்த  தி

ருப்புகழைச் சிறிது அடியேனும்”

வரும் வரிகள் படிக்கப் படிக்கச் சுவைதரும்

கிருஷ்ண தேவராயரின் கல்வெட்டுகளில் பூர்வ தக்ஷிண உத்தர பச்சிம சதுஸ் சமுத்ராதிபதி என்று எழுதி இருக்கிறார். நான்கு திசைகளிலும் அவர் வெற்றி வாகை சூடியதை இது குறிக்கும். ஏறத்தாழ அதே காலத்தில் வாழ்ந்த அருணகிரியின் பாடல்களில் அதன் தாக்கம் தெரிகிறது.

 

 

எல்லோரும் நன்கு அறிந்த சின்ன எட்டு வரிப் பாடல்

பத்தியால் யான் உனைப் பலகாலும்

பற்றியே மா திருப்புகழ் பாடி என்று துவங்கும் பாடல்.

பெங்களூர் ரமணி அம்மாளின் இனிய குரலில் இந்தப் பாட்டைக் கேட்டவர்கள் மீண்டும் மீண்டும் கேட்பார்கள்.

 

வயலூர் திருப்புகழில்

“வீசா விசாலப் பொருப்பெடுத்து எறி

பேர் ஆரவாரச் சமுத்திரத்தினில்

மீளாமல் ஓடித் துரத்தியுட் குறுஒருமாவை (மா மரம்)

வேரோடு வீழத் தறித்து அடுக்கிய

போராடும் சாமர்த்திய திருக் கையில்

வேல் ஆயுதம் மெய்த் திருப்புகழ் பெறு வயலூரா”

என்றும் பாடுகிறார்.

 

 

அற்புதத் திருப்புகழ்

அவரே தன் வாயால் ‘அற்புதத் திருப்புகழ்’ என்றும் முருகன் புகழைப் பாடுவார்:

யானாக நாம அற்புதத் திருப்புகழ்’

தேனூற ஓதி எத்திசைப் புறத்தினும்

ஏடேவு ராஜ தத்தினைப் பணித்ததும் இடர் ஆழி”

 

 

யமன் வரும் போதும் முருகன் வந்து ‘அஞ்சாதே’ என்று சொல்லிக் காப்பாற்றுவானாம்:

“ படிக்கும் திருப்புகழ் போற்றுவன், கூற்றுவன் பாசத்தினால்

பிடிக்கும் பொழுது வந்து அஞ்சல் என்பாய் ”

நாமும் திருப்புகழைப் பாடி இடர் களைந்து இன்புறுவோமாக.

(படங்கள்: முக நூல்; நன்றி.)

 

 

எனது முந்தைய திருப்புகழ் ஆராய்ச்சிக் கட்டுரைகள்

1.தமிழில் திட்டத் தெரியுமா? வசை பாடுவது எப்படி?

2.சம்பந்தருக்கு அடிமை அருணகிரிநாதர்

3. தனிமையில் இனிமை: அருணகிரிநாதர்

4. டாக்டர் முருகனும் ‘பேஷன்ட்’ அருணகிரிநாதரும்

5. அருணகிரிநாதருடன் 60 வினாடி பேட்டி

Contact London Swaminathan at swami_48@yahoo.com for the list of all the 400+ articles.

தமிழில் திட்டத் தெரியுமா? வசைபாடுவது எப்படி?

439px-Murugan_by_Raja_Ravi_Varma

திருப்புகழ் ஆராய்ச்சிக் கட்டுரை -4

தமிழில் திட்டத் தெரியுமா?

வசைபாடுவது எப்படி?

திருப்புகழில்  இருந்து பத்து வசவுப் பாட்டுகளைத் தேர்ந்தெடுத்து அதிலுள்ள வசவுகளைத் தொகுத்து உள்ளேன். அருணகிரிநாதரின் இளமைக் காலம் முழுதும் தீய பழக்க வழக்கங்களில் கழிந்ததால் அவர் இந்த வசவுகளில் ஒரு நிபுணர். ஆனால் அவர் முருகனால் காப்பாற்றப்பட்ட பின்னரும் இப்படி தன்னையே தாழ்த்திப் பாடுவது இது போன்ற ஆட்களையும் முருகன் காப்பாற்றுவான் என்பதைக் காட்டவே. பொதுவாக அவர் வசைமாறி பொழியும் இடங்கள் உண்மையில் இன்றும் தீய நிலையில் இருப்பவர்களைக் குறிப்பதாகும்.

 

அசடன், கவடன், விகடன், ஆதாளிவாயன்

 

அவகுண விரகனை வேதாள ரூபனை

அசடனை மசடனை ஆசார ஈனனை

அகதியை மறவனை ஆதாளிவாயனை— அஞ்சுபூதம்

அடைசிய சவடனை மோடாதி மோடனை

அழிகருவழி வரு வீணாதி வீணனை

அழுகலை அவிசலை ஆறான வூணனை  அன்பிலாத

கவடனை விகடனை நானா விகாரனை

வெகுளியை வெகுவித மூதேவி மூடிய

கலியனை அலியனை ஆதேச வாழ்வனை வெம்பி வீழுங்

களியனை அறிவுரை பேணாத மாநுட

கசனியை அசனியை மாபாதனாகிய

கதியிலி தனையடி நாயேனை ஆளுவது எந்நாளோ

I am a scoundrel, devil, wicked, stupid, refugee, loud mouth, hunter, stupid of all the stupid persons, idler of idlers, rotten stale foodstuff, glutton, cunning fellow devoid of love, sadist with a crooked mentality, man of foul temper, wretched harbinger of disasters, human scum, drinker, man of fickle life, sinner என்று அருணகிரி நாதர் தன்னையே நொந்துகொண்டு எனக்கு என்று அருளப் போகிறாய் என்கிறார்.

(திரு கோபாலசுந்தரம் அவர்களின் திருப்புகழ ஆங்கில மொழிபெயர்ப்பைப் பயன்படுத்தி இருக்கிறேன்).

 

துட்டர்கள் பட்டியல்

 

ஆசார வீனக் குதர்க்க துட்டர்கள்

மாதா பிதாவைப் பழித்த துட்டர்கள்

ஆமாவினைச் செகுத்த துட்டர்கள்   பரதாரம்

ஆகாத எமனாற் பொசித்த துட்டர்கள்

நானாவு பாயச் சரித்ர துட்டர்கள்

ஆவேச நீரைக் குடித்த துட்டர்கள்  தமியோர்சொங்

கூசாது சேரப் பறித்த துட்டர்கள்

ஊரார்க ஆசைப் பிதற்று துட்டர்கள்

கோலால வாவிற் செருக்கு துட்டர்கள்  குரு சேவை

கூடாத பாவத் தவத்த துட்டர்கள்

ஈயாது தேடிப் புதைத்த துட்டர்கள்

கோமாள நாயிற் கடைப் பிறப்பினில் உழல்வாரே

List of bad people: Those despicable people lacking in discipline, engaging in arguments, base people who abuse their parents, who kill the cows and eat beef, who cohabit with others wives, confident tricksters, immoral people who get intoxicated by drinking alcohol, thieves who usurp others wealth, blabbermouths, arrogant rogues, sinful people who don’t serve their masters, stingy people who amass wealth—those people will take birth baser than a boisterous mad dog.

ஆவேச நீரைக் குடித்த துட்டர்கள் என்று குடிகாரகளைச் சாடும் அழகு தனி அழகு

 

கசுமாலம்

சென்னை வாசிகளுக்கு மிகவும் பிடித்த வசவு கசுமாலம். இதை பகவத் கீதையில் அர்ஜுனனை நோக்கி கண்ண பிரானும் பயன்படுத்துகிறார். இந்த சம்ஸ்கிருத சொல்லுக்கு அழுக்கு என்று பொருள்

ஊனேறெலும்பு சீசீமலங்க

ளோடே நரம்பு  கசுமாலம்

Bones wrapped in flesh and skin along with disgusting faeces and discharged slags, nervous system, other dirts……

 

சங்காளர் சூது கொலைகாரர் குடிகேடர் சுழல்

சிங்கார தோளர் பண ஆசையுளர் சாதியிலர்

சண்டாளர் சீசீயவர் மாயவலை………..

Cut throats, gamblers, murderers, destroyer of families, women loitering around with sensuous shoulders covetous after money, indulging in carnal pleasures, coming from the basest lineage

 

தரையினில் வெகுவழி சார்ந்த மூடனை

வறியனை நிறை பொறை வேண்டிடாமத

சடலனை மகிமைகள் தாழ்ந்த வீணனை மிகு கேள்வி

தவ நெறி தனைவிடு தாண்டு காலியை

அவமதி அதனில் பொலாங்கு தீமை செய் சமடனை வலிய அசாங்க மாகிய தமியேனை

I am an utter fool, crazy drunkard, arrogant scum, wastrel, roaming loafer, deliberately harmed others, an outcast, who went chasing after women என்று அருணகிரி நாதர் தன்னையே நொந்துகொண்டு எனக்கு என்று அருளப் போகிறாய் என்கிறார். காலி என்ற சொல் குறிப்பிடத்தக்கது.

 

பித்தர், அஞ்சர்,அவலர், பேய்க்கத்தர்

அறிவிலாப் பித்தர் உன்றன் அடிதொழாக் கெட்ட வஞ்சர்

அசடர் பேய்க் கத்தர் நன்றி அறியாத

அவலர், மேற் சொற்கள் கொண்டு கவிகளாகப் புகழ்ந்து

அவரை வாழ்த்தித் திரிந்து பொருள்தேடிச்

Stupid fools, evil people who never worship your feet, idiots, indulging in devilish deeds, thankless miserable ones—these are the people on whom I wasted words composing poems praising them, I went on heaping plaudits on them to make money.

 

சகல கருமிகள் சௌவிய சமயிகள்

சரியை கிரியைகள் தவமெனு மவர்சிலர்

சவலை யறிவினர் நெறியினை விடைனி யடியேனுக்

Ritualists, religious fanatics, those who worship through offerings and meditation, confused and unwise ones— I wanted to give up all these things.

தவநெறி தவறிய குருடுகள் தலைபறி கதறிய பரபாதத்

தருமிகள் கருமிகள் வெகுவித சமயிகள் அவரொடு சருவாநின்

The blind people who departed from the righteous path, the proponents of other religions who boisterously thrust their tenets by plucking hairs (like the Jains), the evil doers and various religious zealots—I have been locking horns with all these people. ‘தவநெறி தவறிய குருடுகள்’ என்பது படித்து இன்புறத் தக்கது.

 

பாவி, கோபி, பேடி, மோடி, லோபி, கோழை, பேய்

 

மதிதனை யிலாத பாவி குரு நெறி இலாத கோபி

மனநிலை இலாத பேயன்   அவ மாயை

வகையது விடாதபேடி தவநினைவிலாத மோடி

வரும் வகை யிதேது காயம் எனநாடும்

Sinner, coward, devil, hot tempered, ruffian, wicked miser, worthless fellow எனக்கும் அருள்புரி என்கிறார். பேடி, மோடி, கோபி, லோபி என்பன படிக்க சுவையாக இருக்கின்றன.

இன்னொரு இடத்தில் தேரா வ்ருதா, காமா விகாரன், ஆபாச ஈனன், அசாப சாசன், மோடாதி மோடன், கேடன், துரோகன், லோபன், வீணன் என்று அடுக்குகிறரர்.

 

குபேரன் யார்?

கொடாதவனை யேபு கழ்ந்து

குபேரனென வேமொ ழிந்து

குலாவியவ மேதி ரிந்து புவிமீதே

I used to praise a miser who had never given charity calling him the greatest giver like Kuberan and I kept on flattering him and wandering with him in vain!

பிறந்தார் கிடந்தார் இருந்தார் தவழ்ந்தார்

நடந்தார் தளர்ந்து பிணமானார்.

இந்தக் கருத்தை ஆதி சங்கரர், அப்பர் பெருமான் போன்றோர் அழகிய பாடல்களில் பாடியுள்ளனர் ( பாலனாய்க் கழிந்த நாளும்——-தேவாரம்; பாலஸ்தாவத் க்ரீடா சக்த:- ஆதி சங்கரரின் பஜ கோவிந்தம்)

 

contact london swaminathan at swami_48@yahoo.com

சம்பந்தருக்கு அடிமை அருணகிரிநாதர்

 

Murugan Statue at Batu Caves, Malaysia

திருப்புகழ் ஆராய்ச்சிக் கட்டுரை- 3

சம்பந்தருக்கு அடிமை அருணகிரிநாதர்

அருணகிரிநாதரின் திருப்புகழில் அப்பர், சுந்தரர், சம்பந்தர் ஆகியோரின் தேவார செல்வாக்கையும் மாணிக்கவாசகரின் திருவாசகச் செல்வாக்கையும் நன்கு காணமுடியும். இருந்தபோதிலும் அவர் சம்பந்தருக்குதான் அடிமை என்பதை அவரே திருப்புகழ் பாடல்களில் கூறுகிறார். 1300க்கும் அதிகமான திருப்புகழ் பாடல்கள் நமக்குக் கிடைத்துள்ளன. இதில் 149 பாடல்களில் அவர் திரு ஞான சம்பந்தப் பெருமானை நெஞ்சாரப் புகழ்கிறார், போற்றுகிறார். அவரைப் போல அமிர்த கவி இயற்ற அருள்  புரியுமாறு முருகப் பெருமானிடம் இறைஞ்சுகிறார். இந்த 149 பாடல் மேற்கோள்களையும் இங்கே கொடுத்தால் இந்தக் கட்டுரை புத்தக அளவுக்குப் பெருத்துவிடும். இதோ ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல சில எடுத்துக் காட்டுகள்:

 

புமியதனில் ப்ரபுவான

புகலியில்வித் தகர்போல

அமிர்தகவித் தொடைபாட

அடிமைதனக் கருள்வாயே;

சமரிலெதிர்த் தசுர்மாளத்

தனியயில்விட் டருள்வோனே

நமசிவயப் பொருளானே

ரசதகிரிப் பெருமானே

 

சம்பந்தரைப் புகலி (சீர்காழி) வித்தகர் என்று புகழ்ந்து அவரது பாடல்களை அமிர்தம் போன்றவை என்றும் போற்றுகிறார்.

பொதுவாக அவர் நால்வரின் தெய்வத் தமிழ் பாடல்களை “ஆரண கீத கவிதை, உபநிடத மதுர கவிதை, ஞானத் தமிழ் நூல்தாளக் கவிதை, பக்திமிக இனிய பாடல்” எனப் பாராட்டுகிறார்.

ஞான சம்பந்தருடன் வாதம் செய்து தோற்றுப்போன சமணர்கள் கழுவில் ஏறிய மதுரை சம்பவத்தைப் பல பாடல்களில் குறிப்பிடுகிறர். எப்போதெல்லாம் சம்பந்தரைச் சொல்கிறாரோ அப்போதெல்லாம் தமிழைப் புகழ்வதையும் காண்கிறோம். அன்று ஞான சம்பந்தர் இல்லாவிடில் தமிழே அழிந்திருக்கும் என்பது அருணகிரியின் கணிப்பு.

 

செந்தமிழ் நாளும் ஓதி உய்ந்திட ஞானமூறு

செங்கனி வாயிலோர் சொல் அருள்வாயே

பஞ்சவனீடு கூனுமொன்றிடு தாபமோடு

பஞ்சவறாதுகூறு சமண்மூகர்

பண்பறுபீலியோடு வெங்கழுவேற வோது

பண்டித ஞான நீறு தருவோனே

 

இன்னொரு பாடலில்

அழுதுலகை வாழ்வித்த கவுணியகுலாதித்த

அரிய கதிகாமத்தில் உரிய அபிராமனே—என்பார்.

சம்பந்தரின் ஊராகிய சீர்காழியில் பாடிய திருப்புகழ்களில் மறவாமல் அவரைப் பாடுகிறார்.

சேனக்குரு கூடலில் அன்று ஞானத் தமிழ் நூல்கள் பகர்ந்து

சேனைச் சமணோர் கழுவின் கண்மிசையேறத்

தீரத் திருநீறு புரிந்து மீனக்கொடியோன் உடல் துன்று

தீமைப் பிணி தீர உவந்த குருநாதா

என்று அற்புதமாகப் பாடுகிறார்.

 

அதே சீர்காழியில் பாடிய வேறு ஒரு பாடலில்

சமயமும் ஒன்றிலை என்ற வரும்பறி

தலையரு நின்று கலங்க விரும்பிய தமிழ் கூறும்

என்று தமிழையும் ஞான சம்பந்தரையும் ஒருங்கே புகழ்கிறார்.

 

ஒரு பாடலில் பாண்டிய மன்னனை தெற்கு நரபதி என்றும் சம்பந்தரை கவுணியர் பெருமான் என்றும் துதிக்கிறார்:

 

புத்தர் அமணர்கள் மிகவே கெடவே

தெற்கு நரபதி  திருநீறிடவே

புக்க அனல்வய மிகஏடுயவே உமையாள்தன்

புத்ரனென இசைபகர் நூல் மறநூ

கற்றதவமுனி பிரமாபுரம்வாழ்

பொற்ப கவுணியர் பெருமான் உருவாய் வருவானே.

 

சம்பந்தரை முருகப் பெருமானின் அவதாரம் என்று போற்றுவது சைவ மரபு. அதை இந்தப் பாடல் உறுதிசெய்துவிட்டது.

சம்பந்தப் பெருமான் ஞானப் பாலருந்தியதையும் பாட மறக்கவில்லை:

உமைமுலைத் தருபாற்கொடு

உரிய மெய்த் தவமாக்கி நலுபதேசத்

தமிழ்தனை கரைகாட்டிய திறலோனே

சமணரைக் கழுவில் ஏற்றிய பெருமாளே— என்பர்.

ஞானசம்பந்தரைப் பர சமயக் கோளரி என்றும் போற்றிப்பரவுகிறார். இருபது பாடலுக்கு ஒரு பாடல் வீதம் சம்பந்தரையும் அவர்தம் லீலைகளையும் துதிபாடுவதால் அருணகிரியை சம்பந்தரின் அடிமை என்பதில் தவறு ஒன்றுமிலை.

 

நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பிய ஞான சம்பந்தர் வாழ்க! புகலி வித்தகன் புகழ் பாடிய அருணகிரி வாழ்க!! தெய்வத் தமிழ் வாழ்க!!!

 

முந்தைய திருப்புகழ் ஆராய்ச்சிக் கட்டுரைகள்:

1.தனிமையில் இனிமை: அருணகிரிநாதர்

2.அருணகிரிநாதருடன் 60 வினாடி பேட்டி

3.டாக்டர் முருகனும் ‘பேஷன்ட்’ அருணகிரிநாதரும்

Contact London Swaminathan at swami_48@yahoo.com for the list of all the 400+ articles.

 

டாக்டர் முருகனும் ‘பேஷன்ட்’ அருணகிரிநாதரும்

திருப்புகழ் ஆராய்ச்சிக் கட்டுரை 2

டாக்டர் முருகனும் ‘பேஷன்ட்’ அருணகிரிநாதரும்

தமிழ் இலக்கியத்தில் மருத்துவ நூல்களில் நோய்களின் பட்டியலைப் பார்ப்பதில் வியப்பொன்றும் இல்லை. ஆனால் பக்தி இலக்கியத்தில் ஏராளமான நோய்களை பல (திருப்புகழ்) பாடல்களில் பட்டியலிட்ட ஒரே பக்தர் அருணகிரிநாதராகத் தான் இருப்பார்! இதற்கு என்ன காரணம்?

அருணகிரிநாதர் எல்லோருக்கும் உடலிலும் உள்ளத்திலும் ஏற்படும் நோய்களுக்கு ஒரே டாக்டர் முருகப் பெருமான்தான் என்று உணர்ந்ததே ஆகும். கடவுளை டாக்டராகப் பார்ப்பது ஒன்றும் புதிதல்ல. ‘ருத்ரம்-சமகம்’ என்ற யஜூர் வேதப் பகுதியில் கடவுளை டாக்டர் என்று துதி பாடுகின்றனர்.

‘அத்யவோசததி வக்தா ப்ரதமோ தைவ்யோ பிஷக்’ என்பதில் பிஷக் என்பது டாக்டர் என்று பொருள்.

இந்த ருத்ரத்தில்தான் முதல் முதலாக நமச்சிவாய என்ற அரிய பெரிய மந்திரம் வெளியானது.

பிறவிப் பிணிக்கு மட்டும் இன்றி வாழும் போது உடலில் ஏற்படும் உபாதைகளுக்கும் முருகனே அருமருந்து என்பது அருணகிரிநாதர் முடிவு.

அருணகிரிநாதர் அவர்தம் திருப்புகழ் பாடல்களில் நோய்களை வரிசைபடுத்தி பாடும் அழகே தனி அழகுதான். அந்தக் காலத்தில் பொதுவாக கவலை தந்த நோய்கள் என்ன என்னும் சமூகவியல் ஆய்வுக்கும் இவை துணை செய்யும் என்பதில் ஐயமில்லை. இதோ சில பாடல்கள்:

 

தலைவலி மருத்தீடு காமாலை சோகைசுரம்

விழிவலி வறட்சூலை காயாசுவாசம்வெகு

சலமிகு விஷப்பாக மாயாவி கார பிணி—-யணுகாதே

 

பொருள்: தலைவலி, வசிய மருந்தால் வரும் நோய், மஞ்சள்காமாலை ரத்தசோகை, சுரம், கண்வலி, வறள் என்ற வயிற்று வலி, காச நோய் (டி.பி.), மூச்சுப் பிடிப்பு, நீரிழிவு, கொடிய விஷ நோய்கள், மாயையால் வரும் விகாரமான நோய்கள் என்னை அணுகாதவாறு காப்பாயாக

டயாபடீஸ் என்னும் சர்க்கரை வியாதி மிக நீண்ட காலமாக இந்திய மக்களை வாட்டிவருவதால பல பாடல்களில் நீரிழிவு, வெகு சலம் என்று குறிப்பிடுகிறார். கண் வலிக்கு தூய தமிழில் விழி வலி என்று கூறுவதும் படித்து இன்புறத்தக்கது.

இன்னும் ஒரு பாடலில்

 

இருமலு ரோக முயலகன் வாத

மெரிகுண நாசி—விடமே நீ

ரிழிவுவிடாத தலைவலி சோகை

யெழுகளமாலை—யிவையோடே

பெருவயி றீளை யெரிகுலை சூலை

பெருவலி வேறுமுள நோய்கள்

பிறவிகள் தோறு மெனை நலியாத

படியுன தாள்கள்—அருள்வாயே

 

இருமல், முயலகன் என்னும் வலிப்பு நோய், வாதம், மூக்கு எரிச்சல், விஷ நோய்கள், நீரிழிவு (டயபடீஸ்), நீங்காத தலைவலி, ரத்த சோகை, கழுத்தைச் சுற்றிவரும் கழலை, மகோதர நோய், நுரை ஈரலில் ஏற்படும் கோழை, நெஞ்சு எரிச்சல், தீராத வயிற்றுவலி, மிகவும் வலி தரக் கூடிய பிற நோய்கள் எந்தப் பிறவியிலும் என்னை அணுகாதபடி அருளவேண்டும் என்று வேண்டுகிறார்.

தீராத தலை வலி என்பது மைக்ரைன் என்னும் ஒற்றைத் தலைவலி ஆகும்.நெஞ்சு எரிச்சல் என்பது அல்சர் எனப்படும் வயிற்றுப் புண் நோயாக இருக்கலாம். இதோ இன்னும் ஒரு வியாதிப் பாடல்:

 

வாதம் பித்தமிடா வயிறீளைகள்

சீதம் பற்சனி சூலை மகோதர

மாசங்கட் பெரு மூல வியாதிகள்— குளிர் காசம்

மாறுங் கக்கலொ டேசில நோய்பிணி

யோடுந் தத்துவ காரர் தொணூற்று

வாறுஞ் சுற்றினில் வாழ் சதிகாரர்கள்—-வெகுமோகர்

 

இதில் வாத, பித்த, கப நோய்கள், பானை வயிறு, சீதபேதி, ஜன்னி, வயிற்றுவலி, மகோதரம், கண் நோய்கள், மூல வியாதி, குளீர் ஜுரம்,காச நோய், தொடர்ந்து வரும் வாந்தி என பெரிய பட்டியலிட்டுவிட்டார்.

இவ்வாறு வியாதிகளைப் பட்டியல் இட்டுவிட்டு இவைகள் வரக்கூடாதென்று அவர் வேண்டுவது அவருக்காக அல்ல என்பதை நாம் அறிய வேண்டும். முருக பக்தர்களை இந்த நோய்கள் அணுகாது என்பதோடு, அப்படியே முன்கூட்டியே நோய்வந்தவர்கள் இந்த திருப்புகழ் பாடல்களைப் படித்தால அந்த நோய்கள் பறந்தோடிவிடும் என்பதும் கண்கூடு.

கந்த சஷ்டிக் கவசம் உள்பட பெரும்பாலான கவசங்களில் நோய்களின் பெயர்கள் சுருக்கமாக மட்டுமே வரும். ஆனால் நம் மீது கருணைகொண்ட அருணகிரி அத்தனை நோய்களையும் பட்டியல் போட்டு முருகனிடம் வேண்டி நமக்கு அருள் பாலிக்கிறார்.

இதோ இன்னும் இரண்டு பாடல்களை மட்டும் தருகிறேன்:

 

நீரிழிவு குட்ட மீளை வாதமொடு பித்தமூல

நீள்குளிர் வெதுப்புவேறு—முளநோய்கள்

நேருரு புழுக்கள் கூடு நான்முக நெடுத்த வீடு

நீடிய விரத்த மூளை— தசைதோல் சீ

பாரிய நவத்துவார நாறுமு மலத்திலாறு

பாய்பிணி யியற்று பாவை— நரி நாய் பேய்

 

இதில் முன்கூறியவாறு வியாதிகளை வரிசைப்படுத்திவிட்டு இந்த 9 துவாரங்கள் உள்ள உடல், புழுக்கள் உடையது. நரியும் நாயும் கோட்டானும் கழுகுகளும் உண்ணும் பாழான உடல் எடுத்து வீண்பொழுது போக்கமாட்டேன் என்கிறார். கடைசியாக சிவஞான சித்தி பெற நோயற்ற உடல் வேண்டும் என்று வேண்டுகிறார்.

வலிவாத பித்தமொடு களமாலை விப்புருதி

வறல் சூலை குட்டமொடு—குளிர்தாகம்

மலநீ ழிச்சல்பெரு வயிறீளை கக்குகளை

வருநீர டைப்பினுடன் …….. வெகுகோடி

சிலை நோயடைத்தவுடல் புவிமீதெ டுத்துழல்கை

தெளியாவெ னக்குமினி—முடியாதே

சிவமார் திருப்புகழை எனு நாவினிற்புகழ

சிவஞான சித்திதனை—யருள்வாயே

 

இதிலும் வலிப்பு, பித்தம் கண்டமலை, சிலந்திப் புண், உடல் இளைப்பு, வயிற்று உளைவு, குஷ்டம், குளிர் தாகம் நீரிழிவு, மகோதரம், கபம், வாந்தி, மூத்திரக் கடுப்பு முதலான கோடிக்கணக்கான நோய்களை பெற்று உடல் எடுத்து இனியும் திரிய முடியாது. மங்கலம் நிறைந்த உன் திருப்புகழை நாவாரப் பாட சிவஞான சித்தி அருளவேண்டும் என்று வேண்டுகிறார்.

மீண்டும் ஒருமுறை நினைவுகூறுவதில் தவறில்லை. இது அருணகிரி தனக்கு வந்த நோய்கள் அல்லது வரக்கூடிய நோய்கள் என்று நினைத்துப் பாடவில்லை. நம்மை எச்சரிக்கவும், நோய்வந்தாலும் திருப்புகழைப் பாடுவோரை அது ஒன்றும் பாதிக்காது என்று உணர்த்தவுமே இப்படி பல பாடல்களில் கொட்டித் தீர்த்திருக்கிறார்.

நாமும் டாக்டர் முருகனை வணங்கிப் பிறவிப் பிணியிலுமிருந்தும் உடற்பிணியிலிருந்தும் விடுதலை பெறுவோமாக.

 

திரு கோபால சுந்தரம் கொடுத்த பொருள் விளக்க உரையை பெரும்பாலும் பயன்படுத்தியுள்ளேன். கௌமாரம்.காம்—க்கு நன்றி.

முந்தைய திருப்புகழ் ஆராய்ச்சிக் கட்டுரைகள்:

1.தனிமையில் இனிமை: அருணகிரிநாதர்

2.அருணகிரிநாதருடன் 60 வினாடி பேட்டி

Contact London Swaminathan at swami_48@yahoo.com for the list of all the 400+ articles.