அகத்தியர் கூறிய தீப மஹிமை!(Post No.6334)

WRITTEN  by S Nagarajan

swami_48@yahoo.com


Date: 2 May 2019


British Summer Time uploaded in London – 12-59

Post No. 6334

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

ரிஷிகள் சரித்திரம் – அகத்தியர் பெருமை

அகத்தியர் கூறிய தீப மஹிமை!

ச.நாகராஜன்

கிருத யுகத்தில் நடந்த சம்பவம் இது.

பத்திராசுவன் என்று ஒரு அரசன் இருந்தான். அவனுக்கு 500 மனைவிகள். அவர்களில் காந்திமதி என்பவள் பேரழகி. தன் கணவனின் மீது எல்லையற்ற அன்பு கொண்டவள். அவளை அவன் பட்டமகிஷி ஆக்கினான். மன்னனின் இதர மனைவிகளும் காந்திமதி மீது மிக்க மரியாதையும் மதிப்பும் கொண்டிருந்தனர்.

நல்ல முறையில் பத்திராசுவன் தனது நாட்டை ஆண்டு வருகையில் ஒரு நாள் அகத்திய முனிவர் அவனது அரண்மனைக்கு வந்தார். பத்திராசுவன் பெரு மகிழ்ச்சி அடைந்து அவரை உரிய முறையில் வரவேற்று உபசரித்தான்.

அகத்தியர் அவனை நோக்கி, “மன்னா! நான் இங்கு ஏழு நாட்கள் தங்க விரும்புகிறேன்” என்று கூறினார்.

“தாங்கள் எத்தனை காலம் தங்க விரும்புகிறீர்களோ அத்தனை காலம் இங்கு தங்கலாம்” என  மன்னன் பதில் கூறினான்.

முதல் நாளில் அகத்தியர் கூறியது:

முதல் நாளன்று அகத்தியர் பத்திராசுவனின் மனைவியான காந்திமதியைப் பார்த்து, “ஸாது, ஸாது, ஜெகந்நாத!” என்றார். அதாவது, “ஹே! லோக நாயகனே! நன்று , நன்று” என்பது இதன் பொருளாகிறது.

இரண்டாம் நாளில் அகத்தியர் கூறியது :

இரண்டாம் நாளன்று அகத்தியர் ராஜ பத்னியான காந்திமதியை நோக்கி, “இந்த உலகம் மோசம் போயிருக்கிறது. ஆ! என்ன ஆச்சரியம், என்ன ஆச்சரியம்!” என்றார்.

மூன்றாம் நாளில் அகத்தியர் கூறியது :

மூன்றாவது நாளன்று அகத்தியர் பட்டமகிஷியை நோக்கி, “ஒரே தினத்தில் செய்த பகவத் கைங்கரியத்தினால் சந்தோஷமடைந்து அரசன் ஆகும்படியான் பதவியை அளித்த மஹாவிஷ்ணுவின் பெருமையை இந்த மூடர்கள் அறியவில்லையே! ஆ! கஷ்டம்! கஷ்டம்!!” என்றார்.

நான்காவது தினத்தில் அகத்தியர் கூறியது :

நான்காம் தினத்தன்று அகத்தியர் காந்திமதியைப் பார்த்துக் கை கூப்பிக் கொண்டு, “ஓ! ஜெகந்நாதரே! நல்லது, நல்லது, ஓ, பிராமணர்களே, க்ஷத்ரியர்களே, வைச்யர்களே, சூத்திரர்களே! பெண்களே! உங்களின் அனுஷ்டானங்கள் வெகு அழகாயிருக்கின்றன. பத்ராசுவனே! நீ ஒருவன் நல்ல யோக்கியன்!

உயர்ந்த விரத சீலர்களான பிரகலாதரே, துருவரே! நீங்கள் பரம சாதுக்கள்” என்று கூறினார். பின்னர் அரசன் முன் ஆனந்தக் கூத்தாடினார்.

பத்திராசுவன் இதைப் பார்த்து வியப்படைந்தான்.

அகத்தியரிடம் தன் பத்னியுடன் வந்து கை கூப்பி வணங்கியவாறே, “ஓ! மாமுனிவரே! தாங்கள் இப்படி சந்தொஷமடைந்து ஆனந்தக் கூத்தாடுவதன் காரணம் என்ன? எங்களுக்குச் சொல்லுங்கள்” என்று பணிவுடன் வேண்டினான்.

அகத்தியர் மன்னனைப் பார்த்து, “ ஓ! மன்னா! நீ ஒன்றும் அறியாத நிந்திக்கத் தக்க மூடனே! கஷ்டம், கஷ்டம், உன் பரிவாரங்களும் கூட மூடர்களே! உன்னுடைய அரசவை புரோகிதர்களும் கூட மூடர்கள் தாம்! உங்களில் ஒருவர் கூட என் கருத்தை அறியவில்லை” என்றார்.

அரசன் அவரிடம், “ஐயனே! நீங்கள் கூறுவதை எங்களால் அறியவே முடியவில்லை; விளக்கமாகக் கூறி அருள வேண்டும்” என்று விண்ணப்பித்தான்.

அகத்தியர் தான் கூறியதை நன்கு விளக்க ஆரம்பித்தார் இப்படி :

“ஓ மன்னா! உனது பத்தினியாகிய காந்திமதி முன் ஜென்மத்தில் ஒரு வணிகனின் வீட்டில் வேலை பார்த்து வந்தாள். அப்போது அவளுடைய கணவனாக நீ இருந்தாய்; அதே வணிகனிடம் நீயும் ஊழியம் செய்து வந்தாய். ஒரு நாள் அந்த வணிகன் ஐப்பசி மாத துவாதசி விரதத்தை மஹாவிஷ்ணுவின் கோவிலில் அனுஷ்டித்தான்; பின்னர் உங்கள் இருவரையும் கோவிலில் ஏற்றி வைத்த விளக்குகள் அணைந்து போகாமல் ஜாக்கிரதையாகப் பார்த்துக் கொள்ளும்படி கட்டளையிட்டான். பின்னர் வீட்டிற்குத் திரும்பினான்.

எஜமானின் கட்டளையை சிரமேற்கொண்ட நீங்கள் இருவரும் ஊக்கத்துடன் இரவு முழுவதும் விழித்திருந்து காலை வரை தீபங்கள் பிரகாசித்துக் கொண்டிருக்கும்படி அவற்றைப் பாதுகாத்துக் கொண்டிருந்தீர்கள். அந்தப் புண்ணியத்தால் நீ ப்ரியவிருதனுடைய வம்சத்தில் ஜெனிக்கும்படியாகவும் இந்த புண்ணியவதி உனக்கு பட்டமகிஷி ஆகும்படியாகவும் உள்ள பாக்கியத்தை அடைந்தீர்கள்.

பிறர் சம்பந்தமான தீபங்களைப் பாதுகாத்துப் பிரகாசிக்கச் செய்த ஒரு செய்கையினாலேயே இவ்வித விசேஷ பலன்கள் கிடைக்கும் போது தனது சொந்தப் பணத்தினாலும் சேவையினாலும் தீபங்களைப் பிரகாசிக்கச் செய்யும் ஒருவனுடைய புண்ணியத்தை எப்படி அளவிட முடியும்?

இதனால் தான் நான் ஏன் இதை ஒருவரும் அறிய முடியாத மூடர்களாக இருக்கிறார்கள் என்று கூத்தாடினேன்.

பிரகலாதர் அசுர குலத்தில் பிறந்தவர்; துருவரோ சிறு குழந்தை, பட்டத்துக்கு உரியவர். என்ற போதிலும் அவர்கள் இருவரும் மிகுந்த பக்தியுடன் விஷ்ணுவை ஆராதித்து ஒப்பற்ற உயர்ந்த பதவிகளை அடைந்தனர்.”

அகத்தியர் இவ்வாறு விரிவாகக் கூறி முடித்தார்.

இதைக் கேட்ட மன்னனும் அரசியும் ஆனந்தமடைந்தனர். அகத்தியரை வணங்கி தங்களுக்கு பத்மநாப துவாதசி விரதத்தை முறைப்படி அனுஷ்டிக்க உபதேசித்து அருள வேண்டுமென்று பிரார்த்தித்தனர்.

அகத்தியரும் அந்த விரத முறையை அவர்களுக்கு உபதேசித்து அருளினார்.

பின்னர் அவர் புஷ்கர க்ஷேத்திரம் நோக்கிச் சென்றார்.

மன்னனும் அரசியும் அந்த விரதத்தை அனுஷ்டித்து நீண்ட காலம் அரசை ஆண்டனர்; பின்னர் வைகுண்ட பதவியையும் அடைந்தன்ர்.

வராக புராணத்தில் வரும் சரித்திரம் இது.

இதனால் அகத்தியரின் மஹிமையும் அவரது ஆற்றலையும் தெரிந்து கொள்கிறோம்.

சிறிய புண்ணிய காரியம் கூட பெரிய நல்ல விளைவை வாழ்வில் ஏற்படுத்தும்.

***

தலையில் குட்டிக் கொண்டு விநாயகரை வணங்குவது ஏன்? (Post No.5295)

Written by S NAGARAJAN

Date: 7 August 2018

 

Time uploaded in London – 7-35 AM  (British Summer Time)

 

Post No. 5295

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

தலையில் குட்டிக் கொண்டு விநாயகரை வணங்குவது ஏன்?

 

ச.நாகராஜன்

 

தலையிலே குட்டிக் கொண்டு விநாயகரை வழிபடுவது ஏன்?

இதற்கான சுவையான வரலாறு ஒன்று உண்டு.

 

அகத்தியர் காவிரியை ஒரு கலசத்தில் அடக்கிக் கொண்டு வந்தார். அப்போது அந்த காவிரி நீர் அடங்கிய கலசத்தைக் கவிழ்த்து ஒரு காகம் பறந்தோடியது. இதனால் வெகுண்டார் அகத்திய முனிவர். யார் அந்தக் காக்கை என்று அறியப் பின் தொடர்ந்தார். காக்கை ஒரு சிறுவனாக உரு மாறியது. அந்தச் சிறுவன் யார் எனப் பார்த்த அகத்தியர் விநாயகரே அப்படி காக்கை உருக் கொண்டு வந்துள்ளார் என்பதை அறிந்தார். சிறுவனைக் குட்டுவதற்காகப் பின் தொடர்ந்த அகத்தியர் விநாயகரை நோக்கி, “ அறியாமல் உங்களைக் குட்டுவதற்காகப் பின் தொடர்ந்த என்னை மன்னிக்க வேண்டும்” என்று இறைஞ்சி வேண்டினார். அத்தோடு, “அந்தக் குட்டு எனக்கே ஆகுக” என்று கூறி இரு கைகளையும் சேர்த்து அகத்தியர் குட்டிக் கொண்டார். ‘இது போலக் குட்டிக் கொண்டு வணங்குவோரின் வணக்கத்திற்குப் பெரிதும் மகிழ்ந்து அருள் புரிதல் வேண்டும்’ என்றும் அகத்தியர் விநாயகப் பெருமானை வேண்டிக்கொண்டார். “அவ்வாறே அருள் புரிகின்றோம்” என்று விநாயகர் வரத்தைத் தந்தார். அது முதல் குட்டிக் கொண்டு விநாயகரை வழங்கும் பழக்கம் தோன்றியது. இந்தச் சம்பவம் நடந்த இடம் கொங்கு நாடு. ஆக இப்படிக் குட்டிக் கொண்டு வழிபடும் முறை கொங்கு நாட்டிலேயே முதலில் தோன்றியது.

அந்தப் பெருமை உடைத்து கொங்கு மண்டலம் என்று கொங்கு மண்டல சதகம் ஒன்பதாம் பாடல் பெருமை படக் கூறுகிறது.

பாடலைப் பார்ப்போம்:

 

ஐங்கைப்புத் தேளைத் தொழுகின்ற பேர்க ளகங்கசிந்து    செங்கைத் துணைமுட்டி யாய்த்தலை யிற்குட்டிச் சீர்பெறுநற் றுங்கப் பணிவிடை முற்றோன்று தானஞ் சுரர்மகிழு       மங்குற் பொழிறிகழ் காவேரி சேர்கொங்கு மண்டலமே

 

பொருள் : விநாயகக் கடவுளை வணங்குவோர், தலையிற் குட்டிக் கொள்ளும் பழக்கமானது, முதலில் உண்டான இடம் கொங்கு மண்டலம் என்பதாம்.

 

(ஸ்)காந்தம் காவிரி நீங்கு படலத்தில் வரும் ஒரு பாடல் இதைக் கூறுகிறது :

என்னே தமியே னெனவே யினிநின்

முன்னே நுதலின் முறையா லிருகை

கொன்னே கொடுதாக் குனர்தங் குறைதீர்த்

தன்னே யெனவந் தருள்செய் யெனவே

 

தலையில் குட்டிக் கொண்டு விநாயகரை வழிபடும் பழக்கத்திற்கான காரணம் இது தான்!

***

தொல்காப்பியம் பெரிய நூலாக மலர்ந்து விரிந்தது எப்படி? ஒரு சுவையான கதை

கி.வா.ஜ

Article No.1974

Date: 5  July 2015

Written by London swaminathan

Uploaded from London at 7- 39

இலங்கையிலுள்ள மட்டக்கிளப்பு, புளியநகர் க.பூபால பிள்ளை 1920 ஆம் ஆண்டில் எழுதிய தமிழ் வரலாறு என்னும் நூலில் காணப்படும் செய்தி:

“தொல்காப்பியர் அல்லது திருணதூமாக்கினி என்பவர், அகத்தியர் மாணாக்கருள் முதன்மை பெற்று

விளங்கினர். இவர் இயற்றி தம் பெயர் நிறுத்திய தொல்காப்பியமென்னும் இலக்கணம் அஞ்ஞான்றார் யாவராலும் மிக்க விருப்புடன் கையாடப்பட்டு வந்தமையால் பலவிடங்களில் பரந்து னிலைத்தழிந்த மற்றைய நூல்கள் போல் அழியாமல் நிலைபெற்றது. இந்நூல் முத்தமிழியல் விரிக்கும் அகத்தியம் போன்று துறை விரித்தகலாமல் ஓதுவார்க்கெளிதில் அமைவர இயற்றப்பட்டு இலக்கணத்தை வரிசையிற் சுருக்கிக் காட்டும் பெருஞ் சிறப்பினையுடையது.

அந்நாட்களில் யாரொருவர் எந்த நூலை இயற்றினும் அதனைச் சங்கத்தில் அரங்கேற்றினாலன்றியும் பிறர் ஒப்புக்கொள்வதில்லை. அகத்தியர் இத்தொல்காப்பியத்தை அரங்கேற்றவிடாமல் பலவழியாலும் தடை செய்தனர். தொல்காப்பியருக் கீடாக கல்வித் திறமையும் அவர் மாட்டுப் பேரன்புமுடைய அதங்கோட்டாசான் என்பவரை இந்நூல் அரங்கேற்றத்திற்குச் செல்லாதிருக்கும்படி அகத்தியர் தடுத்தும் அவர் அமையாமல் தொல்காப்பியர் கேள்விப்படி சபைக்குச் சென்றிருந்து தம்மாசிரியராகிய அகத்தியர் மனங் களிப்ப ஆக்ஷேபணை செய்பவர் போலப் பற்பல வினாக்களையும் பொறித்து நண்பனுடைய நூலின் பெருமையை வியக்காமல் வியந்து விளங்கவைத்தனர்.

இந்நூலின்கண் ஆதியிலமைந்த சூத்திரங்களின் எண்ணிக்கை அறுநூறு. அதங்கோட்டாசனார் ஆசங்கித்துக் கடாவக் கடாவத் தொல்காப்பியர் முறையே விடைகளாக விளக்கியிருந்த புதிய சூத்திரங்கள் ஓராயிரத்தின் மேற்றிரண்டு என நூல் மிகவும் விரிந்தது.

நிலந்தருதிருவிற் பாண்டியன் சபையிலே அதங்கோட்டாசான் முன்னிலையில் இந்நூல் அரங்கேறியதாக பனம்பாரன் கொடுத்த சிறப்புப் பாயிரத்தால் விளங்கும். நிலந்தருதிருவிற் பாண்டியன் அரசுபுரிந்த காலம் எண்ணாயிரம் வருஷங்களின் முன்னாதலின் இந்நூல் வயதும் அத்துணைத்தென்க.

நச்சி

அகத்தியர் இந்நூலை வெறுத்தற் கிருந்த நியாயம், யாண்டுந் தலைமை பெருமை பெற்று விளங்கிய தமது அகத்தியத்தின் மகத்துவங் குன்றிவிடுமென் றெழுந்த ஐயத்தானும், பொறாமை யினானுமென்று சிலர் கூறுவர். மற்றுமோர் நியாயம், அகத்தியர் தாம் வதுவை செய்துகொண்ட லோபாமுத்திரையைத் தம்முட  னழைத்துச் செல்லாமல் தம்பின் வரும்படி கட்டளையிட்டுத் தாம் பொதிய மலைக்கு முந்திச் சென்றனெ ரென்றும் பின்னர் வந்த லோபாமுத்திரையுந் தொல்காப்பியரும் செல்வழியில் வையையாற்றைத் தாண்டும் பொழுது வெள்ளம் பெருக்கெடுத்தலும் லோபாமுத்திரை தயங்கித் தத்தளிக்க அதனைக் கண்ணுற்ற தொல்காப்பியர் குரு பத்தினியைத் தீண்டுவது தோஷமென்றெண்ணி ஒரு மூங்கில் கோலை அவள் பற்றும்படி கொடுத்துக் கரைசேர்த்துக் கொடுபோய் குரவரிடம் ஒப்புவித்தாரென்றும், அச்சமாசாரத்தை அகத்தியர் உள்ளது உண்மையை உணர்ந்து கொள்ளாமல் பேதுற நினைந்து கோபவயத்தாற் தொல்காப்பியரை நோக்கி உனக்கு முத்தி கெட்டாதொழியக் கடவதென்று சபிக்க, தொல்காப்பியர் மனங்கொதித்தும், குருவாதலின் அவரை நிந்திக்காமல், அவர் இயற்றிய அகத்தியம் வழங்காதொழியக் கடவதென்று எதிர்ச் சாபமிட்டனரென்றும், அதுமுதல் அவர் இருவர்க்குமிடையே பகை நேர்ந்திருந்ததென்றும் நச்சினார்க்கினியர் கூறுவர். இவர் கூற்று உண்மையென்று கொள்ளற்கேற்ற தடயங்கள் கானப்படவில்லையென்று அவருக்குப் பிந்திய காலத்தில் தோன்றியர் சிலர் சாதிக்கின்றனர்.”

அகத்தியரை நியூசிலாந்து மயோரி பழங்குடியினர் வழிபடுவது ஏன்?

candi banon

எழுதியவர்:—- கட்டுரை மன்னன் லண்டன் சுவாமிநாதன்
ஆராய்ச்சிக் கட்டுரை எண்:- 1320; தேதி:– 1st October 2014

அகத்தியர் பற்றி தமிழிலும் ஆங்கிலத்திலும் கடந்த நான்கு ஆண்டுகளில் பல கட்டுரைகள் எழுதிவிட்டேன். இதுவரை எழுதிய கட்டுரைகளின் சுருக்கம்:

1.அகத்தியர் என்பவர் தமிழர்களுக்கு மிகவும் நெருக்கமான வடக்கத்திய ரிஷி. ஜனத்தொகை பெருக்கத்தைச் சமாளிக்க, சிவபெருமான் இவரை தெற்கே அனுப்பினார். அதுதான் உலகின் முதல் ஜனத்தொகைப் பிரச்சனை. (ஆதாரம்: திருவிளையாடல் புராணம்)

2.அகத்தியர் ‘’விந்திய மலையின் கர்வத்தை பங்கம் செய்தார்’’. ‘’கடலைக் குடித்தார்’’ — இது புராணம் தரும் தகவல் — இதன் பொருள்:– அவர்தான் முதல் முதலில் வடக்கிற்கும் தெற்கிற்கும் விந்திய மலை வழியாக சாலை மார்கம் கண்டவர். அவர்தான் முதல் முதலில் கடலைக் கடந்து தென்கிழக்காசிய நாடுகளில் இந்து கலாசாரத்தைப் பரப்பியவர். இதையே புராணங்கள் வேடிக்கையான பரிபாஷையில் அப்படிச் சொல்லும். தென் கிழக்காசிய நாடுகளில் இவர் சிலைகளும் வழிபாடும் அதிகம். உலகில் அதிக நாடுகளில் வழிபடப்படும் முனிவர் என்ற (கின்னஸ்) சாதனை படைத்தவர்!!

3.அகத்தியர் 3000 ஆண்டுகளுக்கு முன்னர் (கி.மு.1000 வாக்கில்) 18 குடிகளை அழைத்துக் கொண்டு தெற்கே வந்தார் (ஆதாரம் கபிலரின் புறநானூற்றுப் பாடல் 201 மற்றும் அதற்கு நச்சினார்க்கினியர் முதலியோர் தரும் விளக்கம்)

map_sirius_web
Canopus is at the bottom right.

4.அவர் ரிக்வேத கால அகத்தியர் அல்ல. அதற்குப் பின் அதே கோத்திரத்தில் உதித்தவர். பல அகத்தியர்கள் இருந்ததால் பல காலங்களில் பல இடங்களில் அவர் ஆஸ்ரமம் இருந்ததாக புராண, இதிஹாசங்கள் பகரும். இது குழப்பத்திற்கு வழிவகை செய்யும்.

5.தமிழில் சித்த வைத்தியத்தில் வரும் அகத்தியர் மிகவும் பிற்காலத்தில் இருந்த ஒரு சித்தர். தமிழ் மொழிப் பாடலே அவர் காலத்தைக் காட்டிக் கொடுத்துவிட்டது. ஒருவேளை பழங்கால அகத்தியரின் கருத்துக்களை ஒரு புலவர் அவர்தம் கால தமிழில் பாடி இருக்கும் வாய்ப்பும் உளது.

6.அகத்தியருக்கும் அகத்திக்கீரை, நீர் நிலைகள் ஆகியவற்றுக்கும் உள்ள தொடர்பு அந்த நட்சத்திரக் கால உதயத்தில் இருக்கும் காலநிலை (பருவநிலை) பற்றிய குறிப்புகளாகும்.

7. கி.மு.முதல் நூற்றாண்டில் வாழ்ந்த காளிதாசன் என்னும் உலகப் புகழ்பெற்ற கவிஞன் பாண்டியர்களுக்கும் அகத்தியருக்கும் உள்ள நெருக்கத்தை ரகுவம்ச காவியத்தில் அழகாகப் படம்பிடித்துக் காட்டுகிறான்.

agastyanepal, carole R Bolon
Agastya in Nepal by Carole

8.வேதகால அகத்தியர் லோபாமுத்ரா என்னும் பேரழகியை மணந்ததார். அவர் ராஜ வம்த்தில் பிறந்த இளவரசி. இவர் ரிக்வேதகால முனிவர். இவரை குடத்தில் பிறந்தவர் என்று புராணங்கள் புகலும்.

9.அகத்தியர், தமிழுக்கு இலக்கணம் வகுத்தார். மாபெரும் மொழியியல் நிபுணர். அவர் மிகப் பெரிய எஞ்ஜினீயர். காவிரி நதியை திசை திருப்பிவிட்டது, கடல் வழியாக தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்குச் சென்றது, விந்தியமலை வழியாக ரோடு போட்டது ஆகியன இதற்குச் சான்றுகள். நான் எழுதிய கீழ்கண்ட ஆங்கிலக் கட்டுரைகளிலும் அதேகாலத்தில் வெளியான எனது தமிழ்க் கட்டுரைகளிலும் மேல்விவரம் காண்க

sriagathiyarlopamudratemple72

Agastya in kalyani Thirtham, modern installation

My previous articles on Agastya in the past four years:

Is Brahmastra a Nuclear Weapon?
Agastya in Jataka Tales and Kalidasa
Did Agastya drink ocean?
Population Explosion: Oldest reference in Hindu scriptures
Ravana-Pandya Peace Treaty! Kalidasa solves a Tamil Puzzle
New Zealand Maoris and Chinese worship Agastya!

சீனாவிலும் நியூசிலாந்திலும் அகத்தியர் பற்றிக் கிடைத்த புதிய விஷயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்:

அகத்திய நட்சத்திரம் என்பது தென் வானத்தில் பிரகாசிக்கும் ஒரு நட்சத்திரத்தின் பெயர். இதைவிடப் பிரகாசமானது சிரியஸ் நட்சத்திரம். இவைகளை ஐரோப்பிய நாடுகளில் உள்ளவர்கள் காணமுடியாது. ஆகவே இவைகளுக்கு கிரேக்க, லத்தின் மொழி விளக்கங்கள், பெயர்கள் இருந்தாலும் அவை அனைத்தும் இந்துக்களிடம் இருந்து கடன் வாங்கி மாற்றி எழுதப்பட்டனவே. உண்மைப் பொருள் விளங்கா நேரத்தில் புதுக்கதைகள் எட்டுக்கட்டுவதை சுமேரிய, பாபிலோனிய, கிரேக்க நாகரீகங்களிலும் காண்கிறோம்.

Chinese_temple_malaysia
Cinese Temple of Fu Lu Shou in Malaysia

சீனாவில் அதிர்ஷ்டம் தரும் தேவர்கள் என்று மூவரை வழிபடுவர். அவர்கள் பெயர்கள்: பூ, லூ, ஷூ. இவர்கள் மூவரும் குரு எனப்படும் வியாழன் மற்றும் வசிஷ்ட நட்சத்திரம், அகத்திய நட்சத்திரம் ஆகிய மூவராக வானத்தில் தோன்றுகின்றனர். அவர்கள் மகிழ்ச்சி, வளமை, நீண்ட நோயற்ற வாழ்வு ஆகியவற்றை நல்குவர். இதிலும் கூட அகத்திய நட்சத்திரம் நோயற்ற தீர்க்க ஆயுஸ் உடன் தொடர்பு படுத்தப்படுவதால் சித்த வைத்திய நூல்கள் அவர்தம் பெயரில் இருப்பதன் பொருத்தத்தை எடுத்துக்காட்டும். இதில் குறிப்பிடப்படும் அகத்தியர், வசிட்டர் ஆகியோருக்கு தமிழ் வடமொழி நூல்களில் மட்டுமே முழு விளக்கம் இருப்பதால் இவை நம்மூர் கதைகள் என்பது புலப்படும். மேலும் தெற்கத்திய வானத்தில் ஜொலிக்கும் நட்சத்திரங்கள் சீனாவில் ஒரு குறிப்பிட்ட எல்லைக்கு அப்பால் தெரியாது. ஐரோப்பியர்களுக்கும் தெரியாது.

450px-agastyaprambananindonesia
Agastya from Prambanan, Indonesia

நியூசிலாந்து நாட்டில் பழங்குடி வழிபாடு

பாலிநேசியர்கள் எனப்படும் இன மக்கள் பசிபிக் தீவுகள் முழுவதும் வசிக்கின்றனர். இவர்கள் தாய்வான் எனப்படும் சீனப் பகுதியில் இருந்து அலை அலையாக தெற்கு நோக்கி வந்தது அண்மைக்கால ஆய்வுகளில் உறுதியாகியுள்ளது. ஆகவே இவர்கள் பூ, லூ, ஷூ என்னும் சீனக் கதைகளையோ அல்லது ஏற்கனவே இந்து நாகரீகம் இருந்த இந்தோநேஷியக் கதைகளையோ பாலிநேசியாவுக்குக் கொண்டு வந்திருக்கலாம். இந்தோநேசியாவில் இருந்த அகத்தியர் சிலைகள் உலக மியூசியங்களில் அமர்ந்து இன்றும் புகழைப் பரப்பிக் கொண்டிருக்கின்றன.

நியூசிலாந்து நாட்டில் மயோரி Maori எனப்படும் பழங்குடி இன மக்கள் சுமார் ஆயிரம் ஆண்டுகளாக அங்கே வசிக்கின்றனர். இவர்கள் அகத்திய நட்சத்திரத்தை வழிபடுகின்றனர். அவருக்கு அரிசி உணவையும் படைக்கின்றனர். அவருடைய பெயர்கள் பாலிநேசிய மொழியில் இருந்தாலும் அவை அனைத்தும் அகத்திய என்னும் சொல்லின் மரூஉ என்பது தெளிவு. மேலும் அவர்கள் அகத்தியர் பற்றிச் சொல்லும் கதையும் இந்துமதக் கதைகளை ஒட்டி அமைந்துள்ளது. கடவுள் கூடை பின்னிய போது கூடைக்கு வெளியே விடப்படதால் இவர் தெற்கில் ஜொலிப்பதக அவர்கள் கதை சொல்லுவர். கூடை, குடத்தில் பிறந்தவர் என்ற கருத்துக்களில் உள்ள நெருக்கத்தைக் காணலாம். இதைவிட அவர்தம் பெயர்களே காட்டிக் கொடுத்துவிடும்:

dr k ravi kumaragastya

இந்து புராணங்கள் “அவர் கலசத்தில் பிறந்த ஒளிவீசும் மீன்” என்று பாடுகின்றன.

அரிகி= உயர்குலத்தில் பிறந்தவர் (அகத்தியர் ஒரு பிராமணர்)
அதுதாஹி, அயதாஹி = அகத்தி என்ற சொல்லின் மரூஉ.
தப = தவ முனிவன் (தபஸ் என்ற வடமொழிச் சொல்)

ஆங்கிலத்தில் அகத்திய நட்சத்திரம் (Star Canopus) கனோபஸ் எனப்படும். இதன் பொருள் குடம், ஜாடி என்பதாகும். ஆனால் இந்துக் கதைகளை அறியாதோர் பின்னர் இதை கிரேக்க கதா பாத்திரங்களுடன் தொடர்பு படுத்தினர். இதே போல அகத்தி என்ற சபதத்தை அறியாதோர் பாலிநேசிய (மயோரி) மொழிகளில் அவைகளுக்குப் புதுப் பொருள் கண்டனர்.

இந்துப் புராணங்களில் அகத்தியரின் பெயர்கள்: குடமுனி, கும்பசம்பவ, கலசி சுத, கடோத்பவ — இவை எல்லாம் கடம்/பானை, கலசம், கும்பம், குடம் ஆகியவற்றையே குறிப்பிடும். இவர் சோதனைக்குழாய் முறையில் செயற்கை முறையில் கருத்தரிக்கப்பட்ட குழந்தையோ என்று எண்ண வேண்டி இருக்கிறது. மேலும் மேலும் விஞ்ஞானம் வளர, வளர நாம் புதுப் பொருள் காண இயலும். இது பற்றி காந்தாரி கர்ப்பம் முதலிய கட்டுரைகளில் எழுதி இருக்கிறேன்.

agastya ashram

ரிக்வேத ஆராய்ச்சியில் அண்மைக் காலத்தில் கொடிகட்டிப் பறக்கும் ஸ்ரீகாந்த் தலகரி என்பவர் அகத்திய ரிஷி எவ்வளவு பழமையான ரிஷி என்பதற்கு ஒரு காரணம் காட்டுவார்: ரிக் வேதத்தில் வரும் பெண் தெய் வங்களான பாரதி, ஈலா, சரஸ்வதி என்ற கடவுளரை ஐந்து ரிஷிகள் மட்டும் இதே வரிசையில் பாடுவர். அவர்களில் அகத்தியரும் ஒருவர். ஏனைய ரிஷிகள் வரிசை மாற்றிப் பாடுவர்.

அகத்தியர் புகழ் பாடும் வேதங்கள் இவர் இரண்டு வர்ணத்தாருக்கு உரியவர் என்றும் செப்பும் — அதாவது தேவர்கள் அசுரர் (RV 1-179) ஆகிய இருவரும் ஒப்புக் கொள்ளும் முனிவர் என்று சொல்லலாம். இல்வலன், வாதாபி என்ற அரக்கரும் கூட இவரை விருந்துக்கழைத்த கதையை நாம் அறிவோம்.

அகத்தியர் இருக்கும் இடத்தில் நீர்தெளிவாக இருக்கும் (Agastyodaye jalani prasidanti ) என்ற வடமொழிப் பொன்மொழி இவருக்கும் கடலுக்கும் உள்ள தொடர்பைக் கட்டும் என்றும் இவர் கடலோடிகளின் காப்புத் தெய்வம் என்றும் ‘’ஆரியதரங்கிணி’’ என்னும் நூலை எழுதிய திரு கல்யாணராமன் (Mr A Kalyanaraman, author of Aryatarangini ) குறிப்பிடுவார். அவர்தம் நூலில் மயோரி- இந்துக்கள் தொடர்பு பற்றிய அவருடைய ஆராய்ச்சிகளை வெளியிட்டுள்ளார். இந்துக்களும் கூட பிண்டம் (அரிசிச் சோறு) வைக்கும் சிரார்த்த மந்திரத்தில் அகஸ்தியர் பெயரைச் சொல்லுவதை அவர் எடுத்துக் காட்டுகிறார்.

Contact swami_48@yahoo.com

ராவணன் – பாண்டியர் சமாதான உடன்படிக்கை !

pandya-flags

Pandya Flags drawn by me.

தமிழ் இலக்கியத்தில் ஓர் அதிசயத் தகவல்!!

ஆராய்ச்சிக் கட்டுரை எழுதியவர்:– லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண்:- 1127; தேதி:- 24th June 2014.

N.B. If you want to reproduce this article, please email me for permission. Previously I gave blank cheque to some people. They have been uploading all the 1100 posts from my blogs which is not allowed from today. You must get written permission from me for each and every article separately. swami_48@yahoo.com

அகத்திய முனிவருடன் அமர்ந்து பாண்டியர்கள் தமிழ் ஆராய்ந்த செய்தி பாண்டியர் செப்பேடுகளில் வருகிறது. மற்றொரு புதுமையான செய்தியும் பாண்டியர் செப்பேடுகளில் காணப்படுகிறது.

“அகத்தியனோடு தமிழாய்ந்தும் மிகத் திறனுடைய வேந்தழித்து
தசவதனன் சார்பாகச் சந்து செய்துந் தார்தராஷ்ட்ரன்
படை முழுதுங் களத்தவிய பாரதத்து பகடோட்டியும்
……………………………………………….. “
இது பாண்டியன் பராந்தக வீரநாராயணனின் தளவாய்புரச் செப்பேடுகள் (ஒன்பதாம் நூற்றாண்டு) கூறும் செய்தி.
Pandya_territories
Mighty Pandyan Empire praised by Kalidasa

பாண்டியர்களின் குல குரு அகத்தியன் என்றும் அவர் மூலமாகவே பாண்டியர்கள் முடி சூட்டப்பட்டதாகவும் வேறு சில பாண்டியர் கல்வெட்டுகளும் செப்புகின்றன.
ஆயினும் –தசவதனன் சார்பாகச் சந்து செய்வித்தும் — என்பதற்கு இதுவரை சரியான விளக்கம் கிடைக்கவில்லை என்றே அறிஞர்கள் எழுதி வந்துள்ளனர்.

“ஒரு பாண்டியன் இராவணனைச் சமாதானம் செய்துகொள்ளும்படிச் செய்தான் என்று சாசனம் கூறுகிறது. இந்தப் புராணக் கதையின் விவரம் சரியாகத் தெரியவில்லை” – என்று பாண்டியர் செப்பேடுகள் பத்து ( தமிழ் வரலாற்றுக் கழக வெளியீடு, 1967 ) என்ற நூல் கூறும்.

‘உச்சி மேற் புலவர் கொள்’ நச்சினார்க்கினியர் எழுதிய உரையில் ஒரு சுவையான விஷயம் கூறுகிறார். இது உ.வே சாமிநாதைய்யர் பதிப்பித்த பத்துப் பாட்டு உரையில் சுருக்கமாக உள்ளது:–
“தென்னாட்டை ஆண்டு குடிகளைத் துன்புறுத்திவந்த இராவணனை, அகத்தியர் பொதியின் மலை உருகும்படி இசைபாடி இலங்கைக்குப் போக்கினரென்பது பண்டைய வரலாறு” – என்று சாமிநாதையர் குறித்துள்ளார்.
Agastya
Statue of Agastya found all over South East Asia.

“தென்னவற் பெயரிய துன் அரு துப்பின்
தொன்முது கடவுள் பின்னர் மேய
வரைத் தாழ் அருவி பொருப்பின் பொருந
– என்ற மதுரைக் காஞ்சி பாடல் வரிகளுக்கு (வரி 40-42) எழுதப்பட்ட உரை இது.

இதற்குப் பின் வேறு சில நூல்களிலும் மிகவும் அறியப்படாத செய்திகள் வருகின்றன. திருவாசகத்தில் மண்டோதரிக்காக சிவன் கடலில் நடந்த வரலாறு ஒன்றும் வருகிறது. உத்தரகோச மங்கை தல புராணம் இதை விரித்துரைக்கிறது. ஆக பாண்டியர்—அகத்தியர் உறவும், தமிழ்நாடு—இலங்கை தொடர்பும் இலக்கியத்தில் இடம் பெற்றுள்ளன.
mount_kailash_tibet_465065
Ravana lifting Kailash, Ellora Cave sculpture.

காளிதாசன் என்னும் உலக மஹா கவிஞன், அவனது ரகுவம்ச காவியத்தில் தரும் தகவலைக் கொண்டு ஆராய்கையில் பாண்டியன் – ராவணன் புதிருக்கு விடை கிடைக்கிறது.
நான் ஏற்கனவே எழுதிய பல ஆராய்ச்சிக் கட்டுரைகளில் காளிதாசன் காலம் கி.மு. முதல் நூற்றாண்டு என்றும் மாணிக்க வாசகரின் காலம், அப்பர்-சம்பந்தருக்குச் சற்று முந்தியது என்றும் ஆதாரங்களுடன் நிரூபித்துள்ளேன்.

ராவணன் அவ்வப்போது தென் இந்தியாவுக்குள் புகுந்து அட்டூழியம் செய்தது வேறு பல இடங்களிலும் வருகிறது. ராவணனை வென்று அவனை மடியில் கட்டிக் கொண்டு நாற்கடலில் நீராடி, வாலி, சந்தியா வந்தனம் செய்த செய்தி வால்மீகி ராமாயணத்தில் வருகிறது.

இராமாயண முனிவர்கள் என்ற அரிய நூலில் முத்தமிழ் வித்தகர் தி.வே. கோபாலய்யர் சொல்லும் கதை இதோ:–

அகத்திய முனிவர், தமிழிலும் இசையிலும் வல்லவர் என்பது தமிழ் இலக்கியத்தில் எண்ணற்ற இடங்களில் காணக்கிடக்கிறது. “பொதிய மலையின் கண் இருந்து அவர் ராவணனை, ஆங்கு இயங்காதவாறு, கந்தருவத்தால் (இசையால்) பிணித்தார் என்று தொல்காப்பிய பாயிர உரையில் நச்சினார்க்கினியர் சொல்கிறார்.

“ராவணன் ஒரு கால் பொதியமலையில் ஒரு பாறையில் அமர்ந்த வண்ணம் நீண்ட சிந்தனையில் ஈடுபட்டிருந்தான். அவன் அங்கு வந்திருந்ததனை அறிந்த அகத்தியர் அவனால் முனிவர்களுக்குத் தீங்கு நேரலாம் என்ற நினைப்போடு யாழினை இனிமையாக வாசிக்கவே இராவணன் தங்கியிருந்த பாறை உருக, இராவணனுடைய கை, கால்கள் உருகிய பாறைத் திரவத்தில் அமிழ்ந்தன.

இந்நிலையில் அகத்தியனார் தம் யாழ் எழுவுதலை நிறுத்தவே, பாறை மீண்டும் கெட்டிப்படத் தொடங்கியது. சற்று நேரத்தில் பண்டுபோல (முன்னைப் போல) உறுதி உடையதாயிற்று. சுற்றுச் சூழலில் ஏற்பட்ட மாறுதலை உணராது நினைப்பிலேயே நெடிதும் ஆழ்ந்திருந்த இராவணனுடைய கை, கால்கள் மீண்டும் வன்மையை அடைந்த பாறைக்குள் அகப்பட்டுக் கொள்ள அவனால் எழுந்திருக்க முடியவே இல்லை. அவன் அகத்தியரை வேண்ட, அவன் அவனிடம் அப்பொதிய மலைப் பகமே இனி அவன் வருவதில்லை என்ற உறுதி மொழியைப் பெற்ற பின்னரே, அகத்தியர் மீண்டும் யாழ் எழுவிப் பாறையை உருக்கி அவனை விடுதலை செய்தார் என்ற கதை ஒன்று வழங்கி வருகிறது” –

நச்சி. உரையின் பேரில் கோபாலய்யர் சொன்ன கதை இது. வீணைக் கொடியுடைய வேந்தன் ராவணனின் வீணையும் பாறையில் சிக்கியதாகவும், இருவருக்கும் நடந்த இசைப் போட்டியின்போது இச்சம்பவம் நடந்ததாக வேறு சிலரும் கூறுவர்.
ravana-lifting-kailash

இதற்கெல்லாம் ஆதாரம் வேண்டாமா?

காளிதாசன் தரும் அரிய தகவல்
புறநானூற்றின்மிகப் பழைய பாடலிலேயே (பாடல் 2, முரஞ்சியூர் முடிநாகராயர்= நாகபூஷணம்) பொதியம்- இமயம் ஒப்புமை வருவது அகத்தியர், வட இமயத்தில் இருந்து தென் பொதியத்துக்கு வந்ததைக் காட்டும்.

காளிதாசன் ரகுவம்ச காவியத்தில் இந்துமதி சுயம்வரத்தில் ஆறு ஸ்லோகங்களில் பாண்டியன் புகழ் பாடுகிறார். அதில் முக்கியமான செய்தி – அகத்தியர் – பாண்டியர் – இராவணன் தொடர்பு ஆகும். வேறு எங்கும் கிடைக்காத இந்தச் செய்தி காளிதாசன் மூலமே கிடைக்கிறது அதுமட்டுமல்ல யாகத்திற்காக செய்த அவப்ருத ஸ்நானத்தில் ( குளியல்) பாண்டிய மன்னர்கள் எந்நேரமும் இருப்பதையும் சொல்கிறார். புற நானூற்றில் பெரிதும் போற்றப்படும் பலயாகசாலை முது குடுமிப் பெருவழுதி கி.மு. முதல் நூற்றாண்டு என்பது நிரூபணமானால் காளிதாசன் குறிப்பிடும் பாண்டியன் அவன் என்ற வரலாற்றுச் செய்தியும் கிடைக்கும்.

பாண்டியன் புகழ் பாடும் முக்கிய ஸ்லோகம்:–
அஸ்த்ரம் ஹராதாப்தவதா துராபம் யேன இந்த்ரலோகாவ ஜயாய த்ருப்த:
புரா ஜனஸ்தான விமர்த்தசங்கீ சந்த்யாய லங்காதிபதி: ப்ரதஸ்தே (ரகு.6-62)

இதன் பொருள்:– தான் இல்லாத போது ஜனஸ்தானம் என்னும் இடத்தைப் பாண்டியர் அழித்துவிடுவரோ என்று பயந்த ராவணன், பரம சிவனைத் துதிபாடி பிரம்ம சிரஸ் என்ற அஸ்திரத்தைப் பெற்றுள்ள பாண்டியரோடு சமாதானம் செய்துகொண்டு இந்திரலோகத்தை வெற்றி கொள்ளப் புறப்பட்டான் (ரகுவம்சம் 6-62).

ராவணனும் பயப்படும் அளவுக்கு பாண்டியர்களின் பராக்ரமம் இருந்தது!!
_coin_of_the_Pandyas_Sri_Lanka_1st_century_CE
Pandya coin found in Sri Lanka, First Century CE

ரகுவம்சம் நாலாவது சர்க்கத்திலும் பாண்டியர்-அகத்தியர் புகழ் அடுத்தடுத்து வருகிறது. தமிழுக்கும் வெளியே இப்படி ஒரு அரிய சான்று கொடுப்பது காளிதாசனின் வடமொழிக் காப்பியம் ஒன்றே ஆகும்.
ஆக நச்சினார்க்கினியர், காளிதாசன் ஆகியோர் மூலம் பாண்டிய வம்சம் மிகப் பழமை உடையது என்பதும் ராமாயண கலத்திலேயே ராவணனை நடுங்கச் செய்தது பாண்டியர்களின் படைபலம் என்பதும் தெளிவாகிறது.

இனவெறி பரப்பும் ஆரிய—திராவிடக் கொள்கைக்கு காளிதாசனும், நச்சினார்க்கினியரும் கொடுக்கும் அடி இது, என்பதும் கவனத்திற் கொள்ளப்பட வேண்டியது. ராவணன், இலங்கையில் அரசும், தண்டகாரண்யப் பகுதியில் ஒரு ‘காலனி’யும் வைத்திருந்தான் என்பதும், அதைத் தளமாகக் கொண்டே இமயம் வரை சென்று சிவனின் கயிலாயத்தையும் அசைக்க முயற்சித்தான் என்பதும் இதனாற் பெறப்படும்!

–சுபம்–

தமிழ் முனிவர் அகஸ்தியர்

Agastya Rishi Statue from Indonesia;location-London V&A Museum.

 

By ச.நாகராஜன்

தமிழ் இலக்கணம் வகுத்த மஹரிஷி

தமிழர்களுக்கு மிகவும் பிடித்த மஹரிஷி அகத்தியர். முருகனிடமிருந்து தமிழைப் பெற்று அதற்கு இலக்கணமெல்லாம் வகுத்து தமிழைத் தமிழருக்குத் தந்த மஹரிஷி அகஸ்தியர். இவரைப் பற்றிய ஏராளமான சுவையான கதைகள் ராமாயண, மஹாபாரத இதிஹாஸங்களிலும் பதினெட்டு புராணங்களிலும் காணலாம்.

ராமருக்கு ஆதித்ய ஹ்ருதயத்தை  உபதேசித்தவர்.ஹயக்ரீவரிடமிருந்து லலிதா சஹஸ்ரநாமத்தைப் பெற்றவர். சரஸ்வதி ஸ்தோத்திரத்தை இயற்றியவர். இவரது மனைவி லோபாமுத்ரை அம்பாளின் மிக நெருங்கிய அணுக்க பக்தை.

 

அகத்தியரின் நாடி ஜோதிடம்

தமிழ் சித்தர்களில் மிகப் பெரும் சித்தர் அகத்தியர். அகத்தியர் பெயரால் உலவி வரும் ஏராளமான சித்த மருத்துவ நூல்கள் அவரது வைத்திய புலமையைப் பறை சாற்றும். அகத்தியர் சிறந்த ஜோதிட மஹரிஷியும் கூட. குறிப்பாக நாடி ஜோதிடத்தில் அகத்தியரின் நாடி ஜோதிடம் தனி ஒரு இடத்தைப் பிடிக்கிறது.

 

பனை ஓலைச் சுவடிகளில் உலகில் பிறக்கும் அனைவரது ஜாதகங்களும் பதிவு செய்யப்பட்டு அவர்களுக்கான பலன்களை பிறந்ததிலிருந்து இறக்கும் வரை சொல்வதோடு அவர்களின் முன் ஜென்ம வரலாறும் சுருக்கமாகக் கூறப்படுவதைக் கண்டு வியக்காதவர்களே கிடையாது.

 

நாடி ஜோதிடம் பார்க்க முதலில் ஆண் என்றால் வலது கைப் பெருவிரலும் பெண் என்றால் இடது கைப் பெருவிரலும் காட்டப்படவேண்டும். அகத்தியரின் நாடி ஜோதிட சுவடிகளில் தம்மிடம் உள்ள சுவடிகளில் குறிப்பிட்ட ஜாதகரின் ஜாதக பலன் இருக்கிறதா என்று ஜோதிடர் கண்டு பிடிப்பார். ரேகைக்கு விதவிதமான நல்ல பெயர்களும் உண்டு (முக்கமல சங்கு ரேகை என்பது போல!)முன் ஜென்மத்தில் செய்த தர்மம் (நல்ல காரியம்) எவ்வளவு, கர்மம் (தீய காரியம்) எவ்வளவு என்பது தெரிவிக்கப்படும் (தர்மம் 9 கர்மம் 1- நல்ல ஜாதகர்) இதைத் தொடர்ந்து ஜாதகரின் முன் ஜென்மமும் விளக்கப்படும். பின்னர் ஜாதகர் பிறந்த வருடம், ஜாதகம் தெளிவாகச் சொல்லப்படும். பின்னர் பலன்களும் ஆயுள் குறித்த விவரங்களும் வரும். பரிகாரம் தேவையெனில் அவையும் கூட விளக்கப்படும்.

ஆங்கிலேயர் ஒருவரின் பெயரைப் பற்றிச் சுவடி குறிப்பிடும் போது முழத்தில் பாதி இவர் பெயர் என வர அவர் ஜான் (முழத்தில் பாதி சாண்) என்று சொல்லப்பட்ட நேர்த்தியும் நாடி ஜோதிடத்தில் தான் உண்டு!

இப்படிப்பட்ட அகத்தியரின் நாடி ஜோதிடம் உள்ளிட்டவற்றை ரஷ்யர்கள் மொழிபெயர்த்து ஆய்வு செய்வது குறிப்பிடத்தக்கது.

 

ஒரு ஜாதகரின் குண நலன்கள், அவரது வெற்றிகள், தோல்விகள், மனைவி மக்கள், பதவி, நோய்கள் என அனைத்தையும் அகத்தியரின் சுவடிகள் தெரிவிக்கும் போது பிரமிப்பின் உச்சியைத் தான் எட்ட வேண்டியிருக்கும்!

 

அகத்தியரின் பிறப்பு

அகத்தியரைப் பற்றிய பிறப்பு பற்றி மஹாபாரதம் ஆதி பர்வம் கூறுவதைச் சுருக்கமாகப் பார்க்கலாம்:

பிரம்மாவினுடைய புத்திரர் மரீசி. மரீசியினுடைய புத்திரர் காஸ்யபர். காஸ்யபருக்கு தக்ஷப்ராஜாபதியின் புத்திரியாகிய அதிதி என்பவளிடத்தில் பன்னிரெண்டு புத்திரர்கள் ஜனித்தார்கள். அவர்களுக்கு பன்னிரெண்டு ஆதித்தியர்கள் என்று பெயர். அப்பன்னிருவரில் மித்திரர் என்பவர் ஒருவர். அந்த மஹாத்மாவுக்கு ஊர்வசியின் காரணமாக விந்து வெளியேற அதைக் கும்பத்தில் ஏந்தினார்.அதிலிருந்து அகஸ்தியர் உண்டானார். இந்தக் காரணத்தினால் அவருக்கு கும்ப சம்பவர் என்றும் பெயருண்டு.

Statue of Agastya from Prambanan, Indonesia (Wikipedia picture)

 

அகத்தியரின் மனைவி

அவரது மனைவி லோபாமுத்ரை பற்றிய கதையும் ஒன்று உண்டு. ஒரு சமயம் இவரது முன்னோர்கள் குழியில் தலை கீழாகத் தொங்கிக் கொண்டிருப்பதைக் கண்டு அதன் காரணத்தை அகஸ்தியர் வினவ அவர்கள்,”உனக்குக் குழந்தைகள் இல்லாததால் இப்படி இருக்கிறோம்” என்று பதில் தந்தனர். இதனால் நல்ல மனைவியைத் தேடி அலைந்த அகஸ்தியர் யாரும் அகப்படாததால் ஜீவராசிகளின் சகல நல்ல அம்சங்களையும் ஒருங்கு திரட்டி ஒரு அழகான பெண்ணை சிருஷ்டித்தார். அந்தச் சமயம் விதர்ப்ப தேசத்து அரசன் குழந்தை வேண்டி தவித்துக் கொண்டிருந்தான். அவனிடம் அந்த சிசுவை மகளாகும் படி அகஸ்தியர் அனுக்ரஹித்தார். நாளுக்கு நாள் அந்தக் குழந்தை அழகுடன் மிளிர்ந்து வளர்ந்தது. அவளுக்கு அந்தணர்கள் லோபாமுத்திரை என்று பெயரிட்டனர். அவளையே தனக்கு கன்னிகாதானம் செய்விக்கும்படி விதர்ப்ப ராஜனைக் கேட்க அவனும் சம்மதித்தான்.அகஸ்தியருக்கும் லோபாமுத்ரைக்கும் திருதா

ஸ்யூ என்ற புத்திரர் ஜெனித்தார்.இப்படி ஒரு சத்புத்திரன் பிறந்ததால் அகஸ்தியரின் முன்னோர்கள் தாம் விரும்பிய நற்கதியை அடைந்தனர்.

பார்வதிக்கும் பரமேஸ்வரனுக்கும் நடந்த விவாஹத்தின் போது தேவர்கள் அனைவரும் ஹிமகிரியில் கூட வடகோடி உயர்ந்து தென்கோடி தாழ்ந்தது. அதை சரிப்படுத்த ஈஸ்வரன் அகஸ்தியரைத் தென் திசைக்கு அனுப்ப அன்றிலிருந்து அகஸ்தியர் பொதியமலை வாசியானார். இந்த விருத்தாந்தத்தை ஸ்கந்த புராணம் விரிவாகக் கூறுகிறது.

ஆக இப்படி அகஸ்தியரைப் பற்றிய ஏராளமான தகவல்களை நமது புராணங்களிலும் ஜோதிட நூல்களிலும் சித்த மருத்துவ நூல்களிலும் நாம் படித்து அகத்தியரின் பெருமையை உணரலாம்.

************

My brother S NAGARAJAN is writing a series about all the Great Seers (Rishis) of India. He has already written about the 27 stars and other topics in Astrology. It is all based on science or Hindu scriptures.Next article is about Varahamihira in two parts. All his articles are in Tamil. If you need English translation, please let us know.