By ச.நாகராஜன்
Post no. 1356; dated 19th October 2014
This article was written by my brother S Nagarajan for Tamil Magazine Bhagya:swami
‘மனம் ஒரு ட்ரங்க் பெட்டி போல! அது நன்கு பேக் செய்யப்பட்டிருந்தால் (well packed) அதனுள் எல்லாமே அடங்கி விடும். அது தவறாக பேக் செய்யப்பட்டிருந்தால் ( ill packed) அது ஒன்றுமில்லாததற்குச் சமம். – அகஸ்டஸ் வில்லியம் ஹேர்
வட அயர்லாந்தின் பிரதானமான நகரம் (Belfast) பெல்ஃபாஸ்ட்.. அதில் இருக்கும் விக்டோரியா ஸ்குயரில் 2013ஆம் ஆண்டில் டேவிட் மீட் (David Meade) என்பவர் நிகழ்த்திய சாகஸம் உலகையே வியப்பில் ஆழ்த்தி விட்டது. 29 வயதே ஆன மீட் விக்டோரியா ஸ்குயரில் உள்ள கட்டிடத்தின் இரண்டாம் மாடியின் சுவரிலிருந்து 30 அடி உயரத்தில் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருந்தார். நூற்றுக்கணக்கான பார்வையாளர்கள் இதைப் பார்த்துத் திகைத்து வியப்பில் ஆழ்ந்தனர்.
இப்படி செய்யப்படும் நிகழ்ச்சி இதுவே உலகில் முதல் தடவை எனச் சொல்கிறார் மீட். காலை எட்டு மணிக்கு அந்தரத்தில் தொங்குவதை ஆரம்பித்த மீட் பல மணி நேரம் அப்படியே தொங்கிக் கொண்டிருந்தார்.
இப்படி அந்தரத்தில் நிற்பது எகிப்தில் உள்ள பழைய கால பிரமிடுகளில் நிகழ்த்தப்பட்ட ஒன்று. ஆனால் அங்கே பூமிக்கு மேலே 3 அடி உயரத்தில் மட்டுமே நின்று காண்பிப்பர். இந்திய யோகிகளும் தரைக்குச் சிறிது மேலே அந்தரத்தில் மிதப்பது சாதாரணமாகக் காணப்படும் ஒன்று. மீடோ 30 அடி உயரத்தில் இருந்தார்.
இந்த பிரம்மாண்டமான நிகழ்ச்சிக்குப் பின்னர் மீட் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மிகவும் பிரபலமானார். பிபிசி இவரது நிகழ்ச்சிகளை ஒளிபரப்பியது. மேக் பிலீவ் (Make Believe)என்ற இவரது தொடர் மிகவும் பிரசித்தமான ஒன்று.
நிஜமாகவே இதைச் செய்கிறேனா அல்லது செய்வது போல நம்ப வைக்கிறேனா என்று மக்கள் மனதில் கேட்கும் கேள்வியின் அடிப்படையிலேயே எனது தொடரின் தலைப்பு அமைக்கப்பட்டது என்கிறார் அவர்.
உலகெங்கிலிருமிருந்து எனது நிகழ்ச்சிகளுக்குக் கிடைக்கும் வரவேற்பு என்னை பிரமிக்க வைக்கிறது என்கிறார் அவர்.
அயர்லாந்தில் தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் விரிவுரையாளராகப் பணியாற்றி சொற்பொழிவுகளை ஆற்றி வரும் மீட் ஒரு ஆராய்ச்சியாலரும் கூட. வாடிக்கையாளர் எப்படிப் பொருள்களை வாங்குகின்றனர், அதில் என்ன சைக்காலஜி அடங்கி இருக்கிறது என்பதைப் பற்றி நிறைய ஆய்வு நடத்தி உள்ள அவர் கூட்டமாகச் சேர்ந்து விட்டால் அந்தக் கூட்டத்தில் ஏற்படும் மக்களின் மனப்பான்மை பற்றியும் ஆராய்ச்சிகளை நடத்தி உள்ளார்.
இதில் அவரது மெண்டலிஸம் (mentalism) வேறு சேர்ந்து விட்டது.அவர் பேசுகின்ற இடங்களில் கூட்டத்திற்குக் கேட்கவா வேண்டும். மெண்டலிஸம் என்பது மாஜிக்கை விட வேறுபட்ட ஒன்று. சாதாரணமாக மாஜிக் நிகழ்த்துவோர் செய்யும் ஸ்டேஜ் வித்தைகளை மெண்டலிஸ்ட் செய்வதில்லை. மனத்தை மயங்க வைக்கும் வித்தைகளையே அவர்கள் காண்பிப்பர்.
உங்கள் கார்டில் உள்ள பின் கோட் நம்பரை நீங்கள் படித்தால் உங்கள் மாமியாரின் பெயரை அவர் கூறி விடுவார்! அல்லது அவரது பிறந்த தேதியைச் சரியாகக் கூறி விடுவார்! இது சாத்தியமா, என்ன! அன்றாடம் செய்து காண்பிப்பதால் இதை நம்பித் தான் ஆக வேண்டும்!
புவி ஈர்ப்பு விசையை எதிர்த்துச் செய்யப்படும் அந்தரத்தில் மிதக்கும் சாகஸ செயலுக்கு விஞ்ஞானம் என்ன பதில் சொல்கிறது என்பதே அனைவரது கேள்வியும். இதை எப்படிச் செய்கிறீர்கள் என்று பத்திரிக்கையாளர்கள் கேட்கும் போதெல்லாம், புன்முறுவலுடன், “ அது என்னுடனேயே ரகசியமாக இருக்கட்டும்” என்கிறார் மீட்.
யூரி கெல்லர், ஹெய்ம் கோல்டன்பெர்க், டெர்ரன் ப்ரவுன், ஜேம்ஸ் ராண்டி, அல் கொரான், ரிச்சர்ட் ஆஸ்டர்லிண்ட், மார்க் பால் உள்ளிட்ட ஏராளமானோர் மனத்தின் மூலம் மற்றவரைக் கட்டுப்படுத்தி மனோசக்தி மூலம் செய்யும் ஏராளமான சாகஸ செயல்களைச் செய்து காட்டி உலகையே வியப்பில் ஆழ்த்தினர், மீட் செய்யும் மனோ வித்தைகளைப் பார்ப்பவர்கள் அவர் ஜனங்களின் மனதைக் கட்டுப்படுத்தி விடுகிறார் என ஒரு மனதாகச் சொல்கின்றனர். இதனால் வட அயர்லாந்து ஒளிபரப்பு நிகழ்ச்சி ஒன்றிற்காக பிபிசிக்காக ஜனத்திரளைக் கட்டுப்படுத்தும் ஒரு டாகுமெண்டரி எடுக்கவும் அவர் ஒப்புக் கொண்டார். இதற்காக ஒரு பேஸ்கட்பால் குழுவை அவர் தேர்ந்தெடுத்து விளையாட்டு வீர்ர்களின் மனதைக் கட்டுப்படுத்தி விளையாட வைத்தார், பேஸ்கட்பால் விளையாடும் இரண்டு குழுவினருள் ஒரு குழுவினரை அவர்கள் விசேஷமானவர்கள், நிச்சயம் ஜெயிக்க வல்லவர்கள் என்ற நம்பிக்கையை விதைக்க அவர்கள் அபாரமாக விளையாடி வெற்றி பெற்றனர்.
பாஸிடிவ் எண்ணங்கள் எப்போதுமே நல்ல பலன்களைத் தரும் என்கிறார் மீட். பெரிய நிறுவனங்களை அணுகி அவர்களிடம் வேலை பார்ப்போரிடம் அதிகத் திறமையை எப்படி வளர்ப்பது என்பதையும் அவர் சொல்லித் தருகிறார். பொருள்களை எப்படி அடுக்கி வைப்பது என்பதில் கூட வாடிக்கையாளரைக் கவரும் ஒரு பெரும் ஆற்றல் உள்ளது என்பதை அவர் நிரூபித்துக் காட்டுகிறார்.
தனது ஆற்றல்கள் எல்லாம் தொடர்ந்த பயிற்சியின் மூலம் வந்தவை தான் என்று கூறும் அவர், இது அனைவரும் பெறக் கூடிய ஒன்று தான் என்றும் விஞ்ஞானத்தை விஞ்சிய விஷயம் எதுவும் இல்லை என்றும் உறுதிபடக் கூறுகிறார்.
எது எப்படி ஆனாலும் ஆகாயத்தில் அந்தரத்தில் தொங்குவதை எத்தனை பேரால் செய்ய முடியும்! யோசித்துப் பார்த்தால் மீட் ஒருவரால் தான் முடிகிறது. அதனால் தான் அவரை உலகம் வியப்புடன் பாராட்டுகிறது!
அறிவியல் அறிஞர் வாழ்வில் .. .
விஞ்ஞானிகளுள் ஏராளமானோருக்கு தீவிரமான கடவுள் நம்பிக்கை உண்டு.இவர்களுள் ஒருவர் நோபல் பரிசு பெற்ற இயற்பியல் விஞ்ஞானியான சார்லஸ் டவுன்ஸ் (Charles Townes). டி.டிமிட்ரோவ் என்பவர் அவரிடம்,”உங்களுக்குக் கடவுள் நம்பிக்கை உண்டா?கடவுள் இருக்கிறாரா” என்று கேட்டார். அவருக்கு டவுன்ஸ் கொடுத்த பதில் இது:” நான் கடவுள் இருக்கிறார் என்பதை உறுதியாக நம்புகிறேன்.உள்ளுணர்வு, என்னுடைய பார்வைகள், தர்க்கம் மற்றும் அறிவியல் ரீதியிலான அறிவு ஆகியவற்றின் அடிப்படையில் கடவுள் இருப்பதை நம்புகிறேன்.” (“I strongly believe in the existence of God, based on intuition, observations, logic, and also scientific knowledge.”) .
டவுன்ஸை ஆன்மீகவாதிகளும் அறிவியல் அறிஞர்களும் பாராட்டுகின்றனர்!
contact swami_48@yahoo.com
****************
You must be logged in to post a comment.