இறந்து போனவர்களுக்கு எழுதிய கடிதங்கள்! எகிப்திய அதிசயங்கள் 21 (Post No. 3736)

Written by London swaminathan

 

Date: 18 March 2017

 

Time uploaded in London:- 18-48

 

Post No. 3736

 

Pictures are taken from various sources; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

இறந்துபோன முன்னோர்களுக்கு நீர்க்கடன் செலுத்தும் வழக்கம், ஆண்டுக்கு ஒரு முறை நினைவு கூறும் வழக்கம் அல்லது மீடியம் ஒருவர் மூலம் இறந்தோருடன் பேசும் வழக்கம் — இவை எல்லாம் உலகின் பல பகுதிகளில் உண்டு. ஆனால் எகிப்தியர்கள், இறந்தோருக்குக் கடிதம் எழுதினார்கள் என்றால் வியப்பாக இருக்கிறதல்லவா?

இதோ சில சுவையான விஷயங்கள்:–

 

நீத்தாருக்கு அவர்களுடைய உறவினர் எழுதிய கடிதங்கள், இறந்துபோனோரின் கல்லறைகளிலோ, சவப்பெட்டிகளிலோ இடப்பட்டன. இத்தகைய ஒரு கடிதம், பாரீஸிலுள்ள புகழ்பெற்ற லூவர் மியூசியத்தில் (Louvre Museum) உள்ளது. அதன் வாசகம்:

 

“இங்கே படுத்திருக்கும்,  ஓ, ஆசிரிஸின் (Chest of the Osiris) மாண்புமிகு மார்பே! (இறந்தவரின் பெயர் இது!) நான் சொல்வதைக் கேள். என்னுடைய செய்தியை அனுப்புக”

 

 

இதன் பொருள் என்னவென்றால் கடிதம் எழுதியோர், பதில் கடிதம் எதிர்பார்க்கவில்லை. ஆனால் தன்னுடைய கனவில் தோன்றி, தனது ஆசை, விருப்பத்தைப் பூர்த்தி செய்ய வேண்டும் என்பதாகும். இவ்வித நம்பிக்கை எகிப்தில், கிரேக்கர்களின் (Hellenistic Egypt)  ஆட்சிக் காலத்தில்  இருந்தது. அவர்கள் ஒரு கோவிலில் போய் தூங்குவார்கள். அப்பொழுது வரும் கனவு மூலம் அவர்களுக்கு நோய் குணமாகும் அல்லது நினைத்தது நடக்கும். குறிப்பாக இம்ஹோதேப் (மஹாதேவ் Imhotep) கோவிலில் போய்த் தூங்குவார்கள்.

 

இம்ஹோதேப் ( IMHOTEP மஹாதேவன்) என்பவர் மூன்றாவத் வம்ச ஆட்சிக்காலத்தில் வசித்த கட்டிடக் கலை நிபுணர்; கோவில் அதிகாரி. இவரது காலம் கி.மு2667- 2648. இவரை இந்தியாவின் சாணக்கியரோடு ஒப்பிடலாம். பிற்காலத்தில் நாம் வியாச மஹரிஷியைக் கடவுள் ஆக்கியது போல இமதேவனை அல்லது மஹா தேவனைக் கடவுள் ஆக்கிவிட்டனர். ஆகையால்  தான் இவருடைய கோவிலில் தூங்கி,  கனவுக்காகக் காத்திருந்தனர்.

 

ஆசிரிஸ் (OSIRIS) என்னும் கடவுள் பாதாள உலகின் அரசன். இறந்தோருக்கு நீதி வழங்கும் எம தர்மராஜன். நாம் கடவுளின் பெயர்களைச் சூட்டிக்கொள்வது போல எகிப்தியர்களும் குழந்தைகளுக்குக் கடவுளின் பெயர்களைச் சூட்டுவர். வெறும் பெயரை வைக்காமல் நாம் சிவ+ப்ரியா, கண்ண+தாசன் என்றெல்லாம் வைப்பது போல அவர்கள் ஆசிரிஸின் மார்பு, கண், பிரியன் என்றெல்லாம் பெயர் வைப்பர்!

இதுவரை 20 கடிதங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பெர்லினில் ஒரு கிண்ணத்தில் இப்படி ஒரு கடிதம் எழுதப்பட்டிருந்தது. அந்தக் கிண்ணம் இரண்டாவது உலக மஹா யுத்ததின்போது அழிந்துபோனது. அந்தக் கிண்ணத்தில் , இறந்து போனவருக்கு உணவு முதலியவற்றை வைத்து கல்லறையில் இறக்கிவிடுவர்.

 

இன்னொரு விந்தை என்னவென்றால் இந்தக் கடிதங்களில்—- அனுப்புவோர் பெயர், விலாசம் ஆகியன கூட இருக்கும். வழக்கமாக நாம் குசலம் (நலம்) விசாரிப்பதுபோல இறந்தவரையும் நலம் விசாரிப்பர். “எப்படி இருக்கிறீர்கள்? மேற்கு திசை உங்களை நன்றாகக் கவனித்துக் கொள்கிறதா? உங்கள் விருப்பங்களை நிறைவேற்றுகிறதா?”

அது என்ன மேற்குதிசை?

 

இந்துக்களுக்கு, இறந்தோர் செல்லும் திசை தெற்கு. வேதங்களிலும், சங்கத் தமிழ் நூலகளிலும், திருக்குறளிலும் இது எழுதப்பட்டுள்ளது (தென்புலத்தார்). ஆனால் எகிப்தியர்களுக்கு இறந்தோர் செல்லும் திசை சூரிய அஸ்தமன திசை யான மேற்கு.

 

நாம், “அன்புள்ள நண்பா! நீ நலமா? நலம் அறிய நனி அவா” என்றெல்லாம் உபசாரத்துக்காக எழுதுகிறோம். அவர்கள் இப்படி எழுதவில்லை. உண்மையில் சீரியஸாக எழுதினர்.

 

அது எப்படித் தெரியும்?

 

மரணப் புத்தகத்தில் 148 ஆவது உச்சாடனமும் 190ஆவது உச்சாடனமும் (Spells 148 and 190 of the Book of the Dead) விரிவான விளக்கங்களை அளிக்கின்றன. அதாவது இறந்தோரின் ஆவி, அதன் நிலையை உங்களுக்குத் தெரிவிக்குமாம்.

 

பெரும்பாலான வேண்டுகோள்கள் தன்னுடைய குடும்பத்தை, தீய சக்திகளிடமிருந்து காப்பாற்ற வேணும் என்றே எழுதப்பட்டுள்ளது. பாதாள உலக நீதிமன்றத்தில் தனக்காக வாதாடும் படியும் இறந்தோருக்கு மனுப்போடுவர். லூவர் மியூசியத்திலுள்ள ஒரு கடிதம் சொல்கிறது: “இதோ பார்! நீ பூவுலகில் நல்லவனாய் இருந்தாய் ஆகையால் எமலோகத்திலும் உனக்கு நல்ல செல்வாக்கு இருக்கும்”.

 

குடும்பத்தில் யாருக்கோ பேய் பிடித்த விஷயம், சொத்துப் பிரிவினை விஷயம், தான் செய்த தவறுகள், குடும்பத்தில் யாருக்கோ குழந்தை பிறக்காத குறை என்றெல்லாம் பல்வேறு விஷயங்களை விஸ்தாரமாக எழுதுவர். சில கடிதங்கள் நாம் டெலிபோனில் அரட்டை அடிப்பது போல இருக்கும்!

 

“இதோ பார்; நீ என்னிடம் எவ்வளவு கோழிக்கறி கேட்டாய்; அப்போது நான் அன்பாகக் கொடுத்தேனே, அம்மா! இப்பொழுது உன் பிள்ளை இங்கே காயம் பட்டிருப்பதை நீ பொறுப்பாயோ? “ என்றெல்லாம் உணர்ச்சிவசமாக கடிதம் எழுதுவர்.

 

தன் சார்பில் பாதாள உலகில், ஆஸிரிஸின் நீதி மன்றத்தில் வாதாட வேண்டும் என்று மன்றாடுவர்

 

சிகாகோ மியூசியத்தில் ஒரு ஜாடி இருக்கிறது. அதிலுள்ள வாசகம்: “எனக்கு நல்ல ஆரோ க்கியமான ஆண்பிள்ளை பிறக்கட்டும்; ஏனெனில் நீ ஒரு நல்ல ஆவி”.

ஹாலந்தில் லெய்டென் மியூசியத்தில் ஒரு கடிதம் மனைவி மீது வசை மாறி பொழிகிறது. இது 19ஆவது வம்ச (19th Dynasty) காலத்திய கடிதம். பேப்பரில் (பபைரஸ் புல்) எழுதப்பட்டுள்ளது. “ஏண்டி பேயே! நீ உயீரோடிருந்தபோது நான் உன்னை எவ்வளவு நன்றாகக் கவனித்தேன்.அதையெல்லாம் மறந்துவிட்டு இப்பொழுது எனக்கு கவலையைக் கொடுத்திருக்கிறாயே? என் மனம் பரிதவிக்கிறதே! நான் உனக்கு என்னடி கெடுதல் செய்தேன்?”

இந்தக் கடைசி வாசகம் திரும்பத் திரும்ப வருகிறது. (பரிதாபத்துக்குரிய கணவன்!!)

 

எகிப்தியர் நம்பிக்கையும் இந்துக்கள் நம்பிக்கையும்

 

கிட்டத்தட்ட இந்துக்கள் திதி, சிரார்த்தம், தர்ப்பணம் செய்வது எதற்காக, அப்படிச் செய்யாவிடில் குடும்பத்தில் என்ன என்ன நிகழும் என்று சொல்வதெல்லாம் அந்தக் கடிதங்களில் காணப்படுகிறது. பித்ருக்களின் (இறந்துபோனோர்) நல்லாசி இல்லவிடில் குடும்பத்தில் பல கெடுதல்கள் வரும் என்பது இந்துக்களின் நம்பிக்கை. பிராமணர் அல்லாதோரும் கூட ஆண்டூக்கு இரு முறை ஆடி அமாவாசை, தை அமாவாசை போன்ற காலங்களில் நீர்க்கடன் செலுத்துகின்றனர். வீட்டில் இறந்துபோன தாய் தந்தையர், தாத்தா பாட்டி ஆகியோரின் படங்களை வைத்து மரியாதையுடன் வணக்கம் செலுத்துகின்றனர்.

 

இறந்து போன ஆவிகள் ஒரு கல்லறையிலிருந்து இன்னொரு கல்லறைக்கும், நாம் வசிக்கும் உலகிற்கும் கின்னரர் ரூபத்தில் (மனிதமுகம்+ பறவை உடல் = பா Ba என்று பெயர்) வரமுடியும் என்று எகிப்தியர் நம்ம்பினர். நாம் சிராத்த, திதி தினங் ளில் இறந்தோர் ஆவி வருவதாக எண்ணுகிறோம். பிராமணர்கள் வருடத்திற்கு 90 முறைக்கு மேலாகத் தர்ப்பணம் செய்ய வேண்டும். ஒவ்வொரு முறையும் தர்ப்பைப் புல்லிலான கூர்ச்சத்தை வைத்து இறந்த முன்னோரின் ஏழு தலை முறைகளை ஆவாஹனம் செய்வர் (எழுந்தருளும் படி இறைஞ்சுவர்; எள்ளும் நீரும் இரைத்த பின்னர். உங்கள் இருப்பிடத்திற்கு வந்த வழியாகவே சுகமாகத் திரும்பிச் செல்லுங்கள் என்று பக்தியோடு வேண்டுவர். ஆக இந்துக்களும் அவர்கள் இப்படி பூலோகத்துக்கு வந்து செல்ல முடியும் என்று நம்புகின்றனர். யார் யார் யாருக்கெல்லாம் உறவினர இப்படி நீத்தார் கடன் செய்ய இயலவில்லையோ அவர்களுக்கும் சேர்த்து நான் எள்ளும் நீரும் அளிக்கிறேன் என்று சொல்லி நிறைவு செய்வர். இப்படி எல்லோர் நலனுக்கும் சேர்த்துப் பிரார்த்திப்பதால் (லோகாஸ் சமஸ்தோ சுகினோ பவந்து) அந்தக் காலத்தில் மன்னர்கள் பிராமணர்களுக்கு வாரி வழங்கினர்.

எகிப்தியர், இறந்தோர் பற்றி எழுதியதை எல்லாம் வால்யூம் வால்யூமாக எழுதலாம். இன்னும் பல கட்டுரைகளில் மரணப் புத்தகம் (Book of the Dead), பேய் (Exorcism) ஓட்டல், பிரமிடுச் சுவர் வாசகங்கள் (Pyramid Texts) , மேலும் சில இறந்தோருக்கான (Letters to the Dead) கடிதங்கள் பற்றிச் சொல்லுவேன்.

 

-சுபம்–

அதிசய புத்த துறவி ஸு யுன்! – 17 (Post No.3368)

WRITTEN BY S NAGARAJAN

 

Date: 19 November 2016

 

Time uploaded in London:6-27 AM

 

Post No.3368

 

Pictures are taken from various sources; they are representational only; thanks.

 

 

 

contact; swami_48@yahoo.com

 

 

 

100 வயது வாழ்ந்த பெரியோர்

 

120 வயது வாழ்ந்த அதிசய புத்த துறவி ஸு யுன்! – 17

ச.நாகராஜன்

 

 

ஸு யுன்னுக்கு இப்போது வயது 76.

வசந்த காலம் வந்தது. ஒரு விசித்திரமான சம்பவம் நடைபெற்றது.

முன்னாள் மஞ்சு வமிசத்தின் வழி வந்த ஒரு கல்வியாளர் டெஞ்சுகானில் வசித்து வந்தார். அவர் பெயர் டிங்.

அவருக்கு மண்மாகாத கன்னிப் பெண் ஒருத்தி இருந்தாள். அவளுக்கு வயது 18.

ஒரு நாள் திடீரென்று அவள் மயங்கி விழுந்தாள். குடும்பத்தினருக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை.

அவளுக்கு நினைவு திரும்பியபோது விசித்திரமான ஆண்குரலில் அவள் பேச ஆரம்பித்தாள்.

அவள் தனது தந்தையை நோக்கி, “ ஏ, டிங், உனது செல்வாக்கின் காரணமாக என்னை அநியாயமாகக் கொள்ளைக்காரன் என்று குற்றம் சுமத்திச் சாக அடித்தாய்! டாலியில் நான் வாழ்ந்து வந்தது உனக்கு நினைவிருக்கிறதா? நான் உன்னை மரண தேவனிடம் குற்றம் சுமத்தியுள்ளேன். எட்டு வருடங்களுக்கு  முன்னால் நீ இழைத்த கொடுமைக்காகப் பழி வாங்க இப்போது இங்கு வந்துள்ளேன்!” என்றாள்.

பின்னர் ஒரு கோடாலியை எடுத்துக் கொண்டு தந்தையைத் துரத்த ஆரம்பித்தாள்.

பயந்து போன டிங் வெளியில் ஓடி ஒளிந்து கொண்டார். வீட்டிற்கே திரும்பி வரவில்லை.

ஒவ்வொரு நாளும் அந்த ஆவி அவள் மீது ஆவிர்பித்தவுடன் அவள் போக்கே மாற ஆரம்பித்தது.

வீட்டில் உள்ள எல்லோரும் பயந்தனர். அண்டை அயலாரும் கூட தொந்தரவுக்குள்ளாயினர்.

அப்போது காக்ஃபுட் மவுண்டனிலிருந்து சூ சி மற்றும் சூ கின் என்ற இரண்டு பிட்சுக்கள் டெங்சுவானுக்கு வந்திருந்தனர். அவர்கள் டிங்கின் வீட்டின் பக்கமாகச் சென்ற போது அங்கே ஒரே கூட்டமாகக் குழுமி இருந்ததைக் கண்டு என்ன விஷயம் என்று விசாரித்தனர்.

 

அந்தப் பெண் அப்போது ஆவியினால் பீடிக்கப்பட்டிருந்தாள்.

இரண்டு பிட்சுக்களும் ஆவியிடம் சென்று, “நீ இப்படி தொந்தரவு கொடுக்கக் கூடாது என்று கேட்டுக் கொள்கிறோம்” என்றனர்.

அந்த ஆவியோ, “ நீங்கள் துறவிகள். அடுத்தவர்கள் விஷயத்தில் அனாவசிய்மாக நீங்கள் தலையிடக் கூடாது” என்றது.

ஒரு துறவி கூறினார்: “உண்மை தான்! இது எனக்குச் சற்றும் சம்பந்தமில்லாத விஷயம் தான். ஆனால் என் குரு எப்போதுமே சொல்லி இருக்கிறார்- பகைக்குப் பகை என்பது எப்போதுமே நல்லதில்லை என்று! அதை உட்னடியாக முடிவுக்குக் கொண்டு வர வேண்டும். இல்லையேல் இன்னும் எல்லாம் மோசமாகி விடும்!”

அந்த ஆவி சற்று யோசித்தது. பின்னர் கேட்டது: “உங்கள் குரு யார்?”

‘சூ செங் மடாலயத்தைச் சேர்ந்த ஸு யுன் தான் எங்கள் குரு”

“அவரைப் பற்றி நான் நிறையக் கேள்விப் பட்டிருக்கிறேன். ஆனால் பார்த்ததில்லை. அவர் என்னைக் கடைத்தேற்றுவாரா?”

“அவர் எல்லோர் மீதும்  மிகுந்த தயை உள்ளவர். எல்லோரையும் க்டைத்தேற்றுவது என்ற சங்கல்பம் பூண்டவர். உனது வேண்டுகோளை அவர் எப்படி மறுப்பார்?”

அந்தத் துறவி டிங்கை சிறிது பணம் செலவழித்து அந்த ஆவிக்காக பிரார்த்தனை செய்து அதை விடுவிக்குமாறு அறிவுரை கூறினார்.

ஆனால் அந்தப் பெண்ணோ, “டிங்கின் பணம் எனக்குத் தேவை இல்லை. அவன் ஒரு கொலைகாரன்” என்றாள்.

“சரி! இந்த நகரத்து மக்கள் தங்கள் பணத்தைக் கொடுத்து உன்னை விடுவிக்க முயன்றால் அது தப்பாகாதே” என்றார் பிட்சு.

 

அந்தப் பெண் கோபமான குரலில் கூவினாள் :”இந்த எனது துக்கம் தீர்க்கப்படவில்லையானால் நான் திருப்தி அடையவே மாட்டேன். ஆனால் பகைக்கு பகை என்பது தொடர்ந்து நீண்டு கொண்டே தான் இருக்கும். ஆகவே நான் மரண தேவனிடம் என்ன செய்வது என்று கேட்டு வருகிறேன். சில நிமிடங்கள் பொறுமையாக இருங்கள்”

அந்தப் பெண் குழுமியிருந்த கூட்டத்தினரைக் கண்டு சற்று வெட்கம் அடைந்தாள்.

மறு நாள் மீண்டும் வந்த அந்த ஆவி பிட்சுக்கள் காத்திருக்காமல் சென்று விட்டதைச் சொல்லி வருத்தப்பட்டது

பிட்சுக்கள் வருத்தம் தெரிவித்து தாங்கள் நகர அலுவலகத்திற்குச் சென்று தங்கள் வேலையை முடிக்க வேண்டியிருந்தது என்று விளக்கினர்.

ஆவி கூறியது: “நான் மரணதேவனிடம் ஆலோசனை கேட்டேன். சூ ஷெங் மடாலயம் புனிதமான் இடம் என்றும் அங்கு நான் செல்லலாம் என்று மரண தேவதை கூறியது. ஆனால் ஒரு நிபந்தனை. நீங்கள் என் கூட வரவேண்டும்”

அந்தப் பெண்ணுடன் துறவிகள் இருவரும் காக்ஃபுட் மவுண்டனுக்குத் திரும்பினர்.

கூடவே பத்துப் பேர்களும் வந்தனர். அவர்கள் நடந்தது அனைத்தையும் ஸு யுன்னுக்கு விளக்கினர்.

மறு நாள் ஒரு பெரிய பீடம் ஒன்று எழுப்பப்பட்டது. விசேஷமாக சூத்ரங்கள் இசைக்கப்பட்டன.

அந்த ஆவி கடைத்தேற பிரார்த்தனை செய்யப்பட்டது.

அந்த ஆவியும் திருப்தியுற்று அகன்றது.

அன்று முதல் டிங்கின் வீட்டில் அமைதி திரும்பியது.

இதைத் தொடர்ந்து அந்த நகரத்து மக்களுக்கு இந்தச் செய்தி பரவ அவர்கள் அனைவரும் அடிக்கடி ம்டாலயத்திற்கு வர ஆர்மபித்தனர். ஸு யுன்னைத் தரிசிக்க ஆரம்பித்தனர்.

***************

 

பேயை விரட்டிய விவேகாநந்தர்! அதீத உளவியல் ஆற்றல் (Post No. 2535)

viveka namste

Written by S Nagarajan

 

Date: 13  February 2016

 

Post No. 2535

 

Time uploaded in London :–  7-07  AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; contact 

 

swami_48@yahoo.com)

 

 

 

 

ஸ்வாமி விவேகானந்தரின் அற்புத அனுபவங்களும் ஆற்றலும்! – (3)

 

ச.நாகராஜன்

 

இமயமலை கிராமம் ஒன்றில்!

 

ஸ்வாமிஜி ஒரு முறை 1898ஆம் ஆண்டில் பல்ராம் பாபுவின் வீட்டில் இருந்த போது அமானுஷ்ய சக்தி பற்றி பேச்சு திரும்பியது.அதீத உளவிய்ல ஆற்றல் பற்றி பேச ஆரம்பித்தார் ஸ்வாமிஜி.

 

 

மனதை ஒருமுகப் படுத்துவதால் சுலபமாக சில அபூர்வமான சக்திகளைப் பெறலாம் என்ற ஸ்வாமிஜியின் வார்த்தைகளைக் கேட்ட சீடர் அதனால் பிரம்மம் பற்றிய ஞானத்தை அடைய முடியுமா என்று கேட்டார்.

 

நிச்சயமாக முடியாது என்று பதிலிறுத்தார் ஸ்வாமிஜி. அப்படியானால் அப்படிப்பட்ட ஆற்றல் எங்களுக்கு வேண்டாம் என்று கூறிய சீடர், இருந்தாலும் அப்படிப்பட்ட உங்களின் சொந்த அனுபவங்களைக் கேட்க ஆசைப்படுகிறோம் என்று கூறினார்.

உடனே இமயமலையில் தனக்கு ஏற்பட்ட அனுபவம் ஒன்றைக் கூறத் தொடங்கினார் ஸ்வாமிஜி.

 

 

இமயமலைப் பகுதியில் சஞ்சாரம் செய்து கொண்டிருந்த போது ஒரு நாள் இரவு மலைப் பகுதி மக்கள் வாழும் ஒரு கிராமத்தில் தங்க நேர்ந்தது.திடீரென்று நள்ளிரவில் பெரிதாக முரசு அறையும் பேரொலியைக் கேட்ட ஸ்வாமிஜி என்ன விஷயம் என்று தான் தங்கியிருந்த வீட்டாரைக் கேட்டார்.

 

vivekananda-rock-and-valluvar

Picture of Vivekananda Rock in Kanyakumari

ஆவி வந்து பீடிக்கப்பட்ட மனிதன்

 

அதற்கு அவர் அந்த கிராமத்தில் ஒருவர் மீது நல்ல ஆவி ஒன்று ஆவிர்ப்பித்து இருப்பதாக பதில் கூறினார்.

ஆவல் உந்த சத்தம் வந்த இடத்திற்கு கூட வந்தவர்களுடன் ஸ்வாமிஜி சென்றார்.

 

அங்கு ஏராளமான மக்கள் கூட்டம் குழுமி இருந்தது. அதில் நடுவே உயரமான மனிதர் ஒருவர் இருந்தார். நீண்ட தலைமுடி அவருக்கு! அவரைச் சுட்டிக் காட்டி அவரிடம் தான் ஒரு தேவதை ஆவிர்ப்பித்து இருப்பதாகச் சொன்னார்கள்.

 

அங்கு ஒரு கோடாலி தீயில் நன்கு பழுக்கக் காய வைக்கப்பட்டிருந்தது. அக்னியில் இருந்து சிவப்பாக மாறி இருந்த அந்க்த கோடாலியை எடுத்து அவர் தன் உடம்பு மீதும் தலை முடி மீதும் வைத்தார்.

 

ஆச்சரியத்திலும் ஆச்சரியம். அந்தப் பழுக்கக் காய்ச்சிய கோடாலி அவர் மீது எந்த தீப் புண்ணையும் ஏற்படுத்தவில்லை. அவர் முடியிலும் எந்த பாதிப்பும் இல்லை. அவர் வலியினால் துடிக்கவும் இல்லை,

 

மௌனமாக வாயடைத்துப் போனார் ஸ்வாமிஜி.

 

அப்போது அந்த கிராமத் தலைவன் அவரிடம் வந்து, “ஸ்வாமிஜி! தயவு செய்து இந்த தேவதையை நீங்கள் தான் போக்க வேண்டும், சற்று கருணை காட்டுங்கள்” என்று வேண்டிக் கொண்டான். என்ன செய்வதென்று ஒரு கணம் ஸ்வாமிஜி திகைத்துப் போனார்.

 

ஆனால் ஏதேனும் செய்ய வேண்டும் என்ற கருணை உள்ளத்துடன் ஆவியால் பிடிக்கப்பட்டிருந்த அந்த மனிதனை அணுகினார். அங்கு சென்றவுடன் அந்தப் பழுக்கக் காய்ச்சிய கோடாலியை சோதிக்க எண்ணம் கொண்டு அதைத் தொட்டார்.  அவர் கை தீப்புண்ணால் சிவந்தது. அப்போது அந்தக் கோடாலி சற்று குளிர்ந்து சிவப்பு நிறத்தை இழந்து தான் இருந்தது. அதற்கே அவ்வளவு சூடு!!

 

 

கோடாலியில் ஏதாவது இருக்கும் என்ற ஸ்வாமிஜியின் எண்ணம் காற்றில் பறந்து போனது – கையில் ஏற்பட்ட தீப்புண்ணால்!

இருந்தாலும் அந்த புண்ணான கையுடன் அந்த  மனிதனின் தலை மீது கை வைத்து ஒரு ஜபத்தை உச்சரித்தார் ஸ்வாமிஜி.

என்ன ஆச்சரியம்! பத்து பன்னிரெண்டு நிமிடங்களில் அந்த தேவதை அவனை விட்டு நீங்க, அவன் சுய உணர்வைப் பெற்றான்.

 

உடனே அங்கு குழுமி இருந்த அனைவரும் பரவசம் அடைந்து ஸ்வாமிஜியை விழுந்து வணங்கினர்.

 

அடடா! அவர்களின் பக்தியைக் கண்ட ஸ்வாமிஜி திகைத்துப் போனார்.

 

அவர்களுக்கு ஒரு தெய்வீக மனிதராக அவர் ஆகி விட்டார்.

என்ன நடந்தது என்று ஸ்வாமிஜிக்குப் புரியவில்லை..

ஆகவே மௌனமாக தன்னுடன் வந்தவருடன் வீட்டிற்குத் திரும்பினார்.

கையில் பட்ட தீக்காயத்துடனும் என்ன நடந்திருக்கும் என்ற எண்ணத்துடனும் படுக்கையில் படுத்த ஸ்வாமிஜிக்கு உறங்கவே முடியவில்லை.

 

உடம்பில் பழுக்கக் காய்ச்சிய கோடாலியை வைத்துக் கொண்ட அந்த மனிதனை நினைத்த போது ஸ்வாமிஜிக்கு ஷேக்ஸ்பியரின் வரிகள் தாம் நினைவுக்கு வந்தன:

 

“THERE ARE MORE THINGS IN HEAVEN AND EARTH,

HORATIO, THAN ARE DREAMT OF YOUR PHILOSOPHY”

 

ஸ்வாமிஜி பேச்சை நிறுத்த பிரமித்துப் போயிருந்த சீடர், “ஸ்வாமிஜி பின்னால் எப்போதாவது அந்த மர்மத்தை நீங்கள் விடுவிக்க முடிந்ததா?” என்று கேட்டார்.

 

 

“இல்லை” என்று பதிலிறுத்தவர், இப்போது தான் சட்டென்று அது என் நினைவுக்கு வந்தது. அதை உங்களிடம் சொல்கிறேன்” என்றார்.

 

பிறகு தொடர்ந்தார்: “ஆனால் ராமகிருஷ்ணர் இந்த மாதிரி சித்திகளை ஒரு போதும் ஆதரித்ததில்லை.இப்படி மனதை வேறு ஒரு பக்கம் செலுத்துவதாலெல்லாம் மெய்ப்பொருளை அறியவே முடியாது என்று கூறி இருக்கிறார்”

 

ஸ்வாமிஜி தொடர்ந்து மேலை நாடுகளில் இப்படிப்பட்ட அற்புதங்களுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் பற்றிப் பேசலானார்.

அற்புதங்கள் தொடரும்

 

குறிப்பு: மனதின் அபூர்வ ஆற்றல்கள் பற்றி முழுவதுமாக அறியவும் மேற் கூறிய சம்பவத்தை ஆங்கிலத்தில் படிக்கவும்,

“TALKS WITH SWAMI VIVEKANANDA “ (RAMAKRISHNA MUTT) என்ற புத்தகத்தைப் பார்க்கலாம் 500 பக்கங்கள் அடங்கியுள்ள இந்த நூலில் ஸ்வாமிஜி பல விஷயங்களைத் தெளிவு பட விளக்குகிறார். மேலே உள்ள சம்பவம் 110ஆம் பக்கத்தில் இடம் பெற்றுள்ளது.

 

-Subham–

 

தமிழில் பூதம்! பேய்!! பிசாசு!!!

ghost

 

சங்கத் தமிழ் இலக்கியத்தில் பூதம், பேய், பிசாசுகள் பற்றி நிறையவே செய்திகள் உள்ளன. ஆராய்ச்சிக் கட்டுரை எழுதி டாக்டர் பட்டம் வாங்கும் அளவுக்கு இருக்கின்றன. 2000 ஆண்டுகளுக்கு முன் ஒரு சமுதாயம் எப்படி இருக்க முடியுமோ அப்படித்தான் தமிழ் சமுதாயமும் இருந்ததது. கிரேக்க நாட்டு தத்துவ ஞானி சாக்ரடீஸ் கூட, மரண தண்டணை நிறை வேறுவதற்கு முன்னால் மறக்காமல் தனது மதக் காணிக்கையைச் செலுத்தும்படி உயிர்த் தோழனிடம் வேண்டிக்கொண்டார். ஒரு கோழி அடித்துக் கும்பிட அனுப்பினார் ஆருயிர்த் தோழனை!! சாக்ரடீஸ் பெயரில் அதிக அன்பு பூண்ட நமது பகுத்தறிவுகளும் திராவிடங்களும் கவனிக்க வேண்டிய விஷயம் இது!

 

((இலக்கியத் திருடர்களுக்கு அன்பான வேண்டுகோள். பெருமளவு நேரத்தைச் செலவிட்டு செய்திகளைச் சேகரித்து எனது ஆரய்ச்சியையும் சேர்த்து வெளியிடும் கட்டுரைகளை வேறு இடத்தில் பயன் படுத்துவோர் எனது பெயரையும் சேர்த்துப் போட்டால் தமிழ் மொழி வளரும். தமிழ்த்தாய் உங்களை நெஞ்சார வாழ்த்துவாள்.))

 

**1.பேய்க்குப் பலியிடுதல்—

’பெருங் களிற்று யானையொடு அருங்கலம் தராஅர்

மெய்பனி கூரா அணங்கெனப் பராவலின்

பலிகொண்டு பெயரும் பாசம் போலத்’’–(பதிற்று.71-23);

பொருள்: தனக்கிடும் பலியினை ஏற்றுக்கொண்டு பலியிட்டவரின் உயிரைக் கவராது செல்லும் பேய் போல, நீயும் நினக்கிடும் திறையைப் பெற்றுக்கொண்டு பகைவரின் உயிரைக் கவராது செல்கிறாய். (பாசம்=பேய்)

 

 

**2.சுடுகாட்டில் கண்ணுக்குத் தெரியாத பேய்கள் உலவியதாக நம்பினர்:

வாய்வன் காக்கையும் கூகையும் கூடிப்

பேஎய் ஆயமொடு பெட்டாங்கு வழங்கும் காடு (புறம்.238)

நரிகளும் பேயொடு சேர்ந்து பிணங்களை உண்டன: (புறம்.373)

பிணம் தின்னும் பேய்கள்: (புறம்.369) பதிற்று.67

 

ghost 2

**3.போர்க்களத்தின் நடுவே சில பேய்கள் ஆட, அதனைக் காணும் பொருட்டுப் பல பேய்கள் ஆங்கே நிறைந்திருக்கும்– பதிற்று.35

 

**4. பேய் மகள்— (சிறுபாண்.196-197)

எரிமறிந் தன்ன நாவி னிலங்கெயிற்றுக், கருமறிக்காதிற் கவையடிப் பேய்மக, ணிணனுண்டு சிரித்த தோற்றம் போலப், பிணனுகைத்துச் சிவந்த பேருகிர்ப் பணைத்தா, ளண்ணல் யானை

பொருள்: மேல் நோக்கி எரிகின்ற நெருப்புச் சாய்ந்தாலொத்த நாவினையும், வெள்யாட்டுமறிகளை அணிந்த காதினையும், கவைத்த அடியினுமுடைய பேய்மகள்

 

**5.பேய் மகளிர்— (மதுரை.25-28, 162-163)

பலியை பேய் ஏற்றல்— மதுரை.க்க்காஞ்சி & மணி. 7-84

னிணம்வாய்ப்பெய்த பேய்மளி

ரிணையொலியிமிழ் துணங்கைச்சீர்ப்

பொருள்: பிணங்களையுடைய கொம்புகளையுடையனவாய்ப் பட்ட ஆனையினுடைய திரளின் நிணத்தைத்தின்ற பேய்மகளிருடைய துணங்கை

பொருள் : வரிகள் 161-163: சான்றோர் இருந்த பெரிய அம்பலங்களில் இரட்டையான அடிகளையும் கடிய பார்வைகளையும் உடைய பேயாகிய மகளிர் உலவியாட.

 

**6. இறந்த வீரரின் குருதியைத் தலையில் தடவித் தலைவாரும் பேய்: புறம்.62

‘’பொருது ஆண்டு ஒழிந்த மைந்தர் புண் தொட்டு,

குருதிச் செங்கைக் கூந்தல் தீட்டி,

நிறம்கிளர் உருவின் பேஎய்ப் பெண்டிர்’’

 

**7. பேய்கள் சவாரி: பேய் மகள் கழுதூர்தல்— பதிற்று.13-15— கழுது என்னும் வகைப்பேய் மீது இன்னொரு பெண் பேய் சவாரி செய்யும்—பேயின் தலை முடி பிளவு பட்டிருக்கும்—தலை விரித்தாடும் பேய்கள்

கவைத் தலை பேய்மகள் கழுதூர்ந்து இயங்க

ஊரிய நெருஞ்சி நீறாடு பறந்தலை

 

ghost_council_of_orzhova_by_velinov-d5moyq4

**8.கொல்லன் பட்டறையில்/தெருவில் ஊசி விற்றது போல என்று தமிழில் ஒரு பழமொழி உண்டு (To carry coals to Newcastle). இதற்கு இணையாக பெருங்காட்டுக் கொற்றிக்குப் பேய் நொடித்தாங்கு என்று ஒரு பழமொழியும் உண்டு. அதாவது எல்லாம் தெரிந்த காட்டில் இருக்கும் தெய்வமான கொற்றவைக்கு பேய் என்ன சொல்லிக் கொடுக்க முடியும்? இந்த பேய் பற்றிய பழமொழியை கலித்தொகையில் காணலாம்.

பெருங்காட்டுக் கொற்றிக்குப் பேய் நொடித்தாங்கு (கலி.86-8)

**9. சங்க இலக்கிய கலைக்களஞ்சியம் புறநானூறு. பழந்தமிழர் வாழ்வைப் படம் பிடித்துக் காட்டும் நூல். இதில் பேய் பற்றி 62-4, 238-4, 356-3, 359-4, 369-15, 370-25, 371-26 பாடல்களில் வருகிறது.

 

**10.சங்க இலக்கிய காலத்துக்குப் பின் வந்த மணிமேகலையில் ஆறு வகை உயிரினங்களில் ஒன்றாக பேயும் கூறப்படுகிறது.

 

**11. நற்றிணையில் பேய்கள்: போரில் பெரும் புண்ணுற்று இறவாது கிடப்போரை நரி முதலியன தீண்டாவண்ணம் பேய் காத்து நிற்றலாகிய  புறப்பொருட் கருத்தும் நற்றிணை உவமையில் வைதுக் கூறப்பட்டுள்ளது.

நள்ளிரவில் பேய்கள் உலாவும் என்ற தமிழர் நம்பிக்கையை பாடல்கள்  319, 255 ல் படிக்கலாம்:

கழுதுகால் கிளர ஊர்மடிந்தற்றே (255)

அணங்கு கால் கிளறும் (319)

கழுது, அணங்கு=பேய்

 

 

**12.நள்ளிரவில் பேய்கூடத் தூங்கும் என்ற கருத்து பிற்காகால இலக்கியமான திருவிளையாடல் புராணத்திலும் நளவெண்பாவில் வருகிறது.

அணங்கு என்பதை பேய் என்பதைவிட மரம், நீர்நிலைகள், மலை ஆகியவற்றில் உறையும் பெண் தேவதை (யக்ஷி) என்றே சொல்லவேண்டும்.

 

**13.Ghost , Ghoul என்ற ஆங்கிலச் சொற்கள் தமிழ் சொற்களுக்கு மிகவும் நெருங்கியவை. கூளி= ஆங்கிலம் Ghoul , கழுது= ஆங்கிலம் Ghost

 

**13. ஐயவி என்னும் வெண் கடுகை புகைத்தால் பேய் முதலிய தீய சக்திகள் நெருங்கா என்ற கருத்து நாடு முழுதும் இருந்ததை அறிகிறோம் ( ஐயவி புகைத்தல் புறம் 98-15, 281-4, 296-2,342-9.இந்தக் கருத்து நாட்டின் வடபகுதியிலும் நிலவியது.

 

**14.என் அம்மா சொன்ன பேய்: சிறு வயதில் என் அம்மா என் எழுத்தைப் பார்த்துவிட்டு, ‘’ இப்படி பேச்சக்காலும் பேச்சக்கையுமா எழுதாத. வாத்தியார் மார்க் போடமாட்டார் என்று சொல்லுவார். இதற்கு எனக்கு அர்த்தம் தெரியாது. காரைக்கால் அம்மையார் (பேயார்) பதிகங்களைப் படித்த பின்னர்தான், அவர் பேய் பற்றி வருணித்தவைகலைப் படித்தபின்னர் தான், இதற்கு அர்த்தம் புரிந்தது.

பேய்ச்சியின் கால் போலும், பேய்ச்சியின் கை போலும், கோரமாக எழுதாதே, அழகாக எழுது என்பதே உதன் பொருள்.

 

**15.கலிங்கத்துப் பரணி, கந்தசஷ்டிக் கவசத்திலும் பேய்கள் பற்றிய செய்திகள் உள்ளன. அவற்றின் விளக்க உரையில் காண்க.

ghosts1

**16.இறந்த உறவினரின் ஆவிகள் தன்னைப் பின் தொடர்ந்து வந்ததாகவும் ஒரு முறை கோவிலில் கடுமையான பிரார்த்தனை செய்தபின்னர் அவை வரவே இல்லை என்றும் சுவாமி விவேகநந்தர் அவரது சம்பாஷணைகள் புத்தகத்தில் கூறியுள்ளார்.

 

**17.பரணர் பாடிய பேய்கள்:

பரணர் என்னும் சங்கப் புலவர் பாடிய பாடல்களில், ‘’பேய்கள் பிணம் தின்னும்’’, ‘’நடு இரவில் இயங்கும்’’, ‘’பலி கொடுத்தால் பணி செய்யும்’’, ‘’பேய்மகள் பற்றிய பிணம்’’ ‘,’கழுது வழங்கு யாமம்’’, ‘’ஊட்டரு மரபின் அஞ்சுவரு பேய்’’ என்ற கருத்துக்கள் வருவதையும் காண்க.

பரணர் சொல்லும் மிஞிலி கதையிலும் பேய் வருகிறது. ஆய் எயினனுக்கும் மிஞிலிக்கும் மோதல் மூண்டது. எயினனோடு நடக்கும் போரில் எனக்கு வெற்றி தேடித் தருவையின் நினக்கு பெரும்பலி தருவேன் எனப் பாழி நகர்ப் பேயைப் பரவிப் போர்க்களம் புகுந்தான். மிஞிலி  வென்றான் என்ற செய்தியைப் பரணர் பாடுகிறார்.

 

திருக்குறளில் பேய்கள்

திருக்குறளிலும் பேய்கள் உண்டு. ஏற்கனவே திருவள்ளுவரும் ராமகிருஷ்ண பரமஹம்சரும் சொன்ன ‘பேய் காத்த செல்வம்’ கதையை எழுதியுள்ளேன்.

 

அருஞ்செவ்வி இன்னாமுகத்தான் பெருஞ்செல்வம்

பேஎய்கண் டன்னது உடைத்து (565)

 

உலகத்தார் உண்டென்பது இல்லென்பான் வையத்து

அலகையா வைக்கப்படும் (650)

அலகை=பேய்

 

Please read the following articles in English or Tamil: நான் முன்னர் எழுதி வெளியிட்ட பேய்க் கட்டுரைகளையும் படிக்கவும்:

1.வள்ளுவர் சொன்ன பேய்க்கதை 2). தமிழ்நாட்டை உலுக்கிய பேய்  3.காரைக்கால் அம்மையாருடன் 60 வினாடி பேட்டி 4.Indus Seals: Gods or Ghosts? 5..சிந்து சமவெளியில் பேய் முத்திரை 6. Tamil Ghost that killed 72 people 7.தமிழ் பூதமும் கிரேக்க பூதமும் 8.டெல்பி ஆரூடமும் குறிசொல்வோரும்

 

உதவிய நூல்கள்: 1.பரணர்—கா.கோவிந்தன் 2.தமிழர் நாகரீகமும் பண்பாடும் –ஆ.தட்சிணாமூர்த்தி 3.தமிழ் சொற்றொடர் அகராதி —வீ.ஜே.செல்வராசு 4.சங்க இலக்கியம் 5.திருக்குறள்

swami_48@yahoo.com